​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 1 November 2016

சித்தன் அருள் - 488 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

பொதுவாக, தவறுகள் பல செய்து வாழ்ந்த ஆத்மாக்கள், கடைசி காலத்தில் பிதற்றுவதும், மனம் வருந்துவதும் ஒருபுறமிருக்க, பாவம் செய்த ஆன்மாக்களுக்கு அந்திமகாலம் என்பது கடுமையாகத்தான் இருக்கும். அதே சமயம் நல்லா ஆன்மாக்களுக்கும், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பாவங்களையும் எடுத்துவிட இறைவன் விரும்பினால், அவர்களின் அந்திமக்காலமும் வேதனை தன்னை தரக்கூடியதாகத்தான் இருக்கும். இந்த இரண்டில் எது என்பதை, இறைவன்தான் தேர்ந்தெடுக்கிறார். எனவே, சுகமான மரணம் நிகழ்ந்து விட்டால், அவன் புண்ணிய ஆத்மா என்றும், மிக்க கொடூரமான மரணம் நடந்தால், அவன் பாவ ஆத்மா என்றும் மனிதன் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எத்தனையோ சூட்ச்சுமக் கணக்குகள் இறைவனால் வகுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, பகுக்கப்பட்டு, பெருக்கப்பட்டு, பிறகுதான், கழிக்கப்படுகிறது.