​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 27 September 2018

சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>> இந்த வருடம் - கோடகநல்லூர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தாமிரபரணி புஷ்கரம், விருச்சிக ராசிக்கு குரு என்கிற வியாழ பகவான் இடம் பெயர்ந்தபின், இந்த வருடம் அக்டோபர் மாதம் 12ம் தியதி முதல் 24ம் தியதி வரை மிகச்சிறப்பாக கொண்டாட, ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு வருகிறது. குரு ஒரு முறை 12 ராசிகளை கடந்து வரும் போது ஒவ்வொரு நதியில் தங்கி செல்வதாக புராணங்கள் கூறுகின்றது. இந்த முறை, அவர் சாந்நித்யம் தாமிரபரணி நதியில். தாமிரபரணி புராணமே, அவர் வருவதை, அவர் அருள்வதை பற்றி மிகச்சிறப்பாக உரைக்கிறது. இந்த வாய்ப்பு 144 வருடங்களுக்கு ஒரு முறை தான் தாமிரபரணி நதிக்கே கிடைக்கிறது. உலகத்தில், எந்த நதிக்கும் கிடைக்காத, மிக உயர்ந்த ஸ்தானத்தை, சிவபெருமான் தாமிரபரணி நதிக்கு அளித்துள்ளார். அப்படிப்பட்ட உயர்ந்த நதியில், குருவருள் கூடும் பொழுது, அது இன்னும் மிகப் பெரிய பாக்கியத்தைத்தான் மனிதர்களுக்கு அருளும்.


போன வாரம், கோடகநல்லூர் பெருமாளின் புரட்டாசி முதல் சனிக்கிழமை கருடோத்சவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. அப்பொழுது அக்டோபர் 14ம் நியதி, ஞாயிற்று கிழமை அன்று ப்ரஹன்மாதவர் பெருமாள் சார்பாக, ஹோமம், பூசை முதலியவை, தாமிரபரணி நதிக்கு செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். 


பெருமாள் அன்றைய தினம் தீர்த்தவாரிக்காக தாமிரபரணி நதிக்கு வருவார் என்ற தகவலும் கிடைத்தது. விடுமுறை நாளாக இருப்பதாலும், 144 வருடங்களுக்கு ஒரு முறை அனைவருக்கும் கிடைக்கிற வாய்ப்பாகவும், நாம் வாழும் இந்த காலத்திலேயே இப்பெரும் பாக்கியம் கிடைத்திருப்பதால், அனைவரும் சென்று தாமிரபரணி, வியாழ பகவான், ப்ரஹன் மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, நீளா தாயாரின் அருளை பெறவும், இந்த வாய்ப்பை உபயோகித்து கொள்ள வேண்டுகிறேன். எல்லோரும் அருள் பெற்று க்ஷேமமாக வாழவும் வேண்டிக்கொள்கிறேன்.


சரி! இங்கு இன்னொரு விஷயம் என்னவென்றால், தாமிரபரணி புஷ்காரம் நடக்கும் (அக்டோபர் 12-24 தியாதிக்குள்ளேயே) அந்தநாள்>>இந்த வருடம் என்கிற அகத்தியப் பெருமான் நடத்தும் பெருமாளின் பூசை, 22ம் தியதி திங்கட்கிழமை அன்று வருகிறது என்பதையும் நினைவு படுத்துகிறேன். அதற்கும் அனைவரையும், அகத்தியப் பெருமான், ப்ரஹன்மாதவர் பெருமாள் சார்பாகவும், "சித்தன் அருள்" வலைப்பூ சார்பாகவும் வருகை தந்து, அவர்கள் அருள் பெறவும் வேண்டிக்கொள்கிறேன். இந்த வருட அகத்தியப் பெருமானின் கோடகநல்லூர் விழாவை, குருநாதர் எப்படி எல்லாம் அமைத்து நடத்தி தரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எல்லாம் அவர் செயல் அன்றி வேறெதுவும் இல்லை என்பதே, உண்மை.

முதல் சனிக்கிழமை புரட்டாசி கருட சேவையின் பொழுது மிக இனிமையான ஒரு அனுபவம் கிடைத்தது. அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருள பண்ணும் பொழுது, வாயில் கதவை சார்த்திவைத்து, திடீரென்று திறப்பார்கள். அப்பொழுது பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்படும். அந்த நேரத்தில் யார் என்ன வேண்டினாலும், அது பெருமாளால் அருளப்படும் என்கிற ஒரு பேச்சு வழக்கு உண்டு. அது உண்மையா? என்று ஒரு சிறு சோதனை வைத்து தெரிந்து கொள்ள வேண்டும், என்ற அவா அடியேனுக்கு வந்தது. கதவு சார்த்தியிருந்த நேரம், ஐந்து விண்ணப்பங்களை தயாரித்து, திறக்கும் முன்னரே, பெருமாளை நினைத்து அவர் பாதத்தில் சமர்ப்பித்தேன்.

1.  தாமிரபரணி புஷ்கரம் உங்கள் அருளால், உங்கள் சேய்களின் பங்குபெறுதலுடன் இனிதே நடக்க வேண்டும்.
2.  அங்கு வரும், வர நினைத்து வர முடியாமல் போகிறவர்களுக்கும், அன்றைய உங்கள் சார்பான பூசையின் புண்ணியம் சென்று சேரவேண்டும்.
3.  லோகம் மிக இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாக சித்தர்கள் உரைக்கிறார்கள். அஷ்ட திக்கும் தங்கள் அருள் சூழ்ந்து நின்று, அனைத்து ஜீவன்களையும், காப்பாற்ற வேண்டும்.
4.  தாங்களுக்கு, ஐப்பசி மாதம், திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அகத்தியப் பெருமான் நடத்துகிற பூசை, இந்த வருடமும், மிக மிக சிறப்பாக அமைய வேண்டும்.
5.  அன்றைய தினம் அங்கு வரும் அகத்தியரின் சேய்களையும், மனதால் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, வர முடியாமல் போகிற சேய்களையும் தாங்களே அருளவேண்டும்.

என யோசித்து முடிக்கவும், கதவு திறக்கப்பட்டது, கற்பூர ஆரத்தி பெருமாளுக்கு காட்டப்பட்டது. மிக அழகான அலங்கார தோற்றம். அட! என பூரித்துப் போனேன். ஒரு நிமிடம் கூர்ந்து பார்க்க, பெருமாள் அவர் கையில் வெற்றிலை பாக்கு, தாம்பூலத்தை மடித்து வைத்து, கை உயர்த்தி நிற்கும் கோலம். 

[கருட வாகனன் படத்தை பெரிது ஆக்கி பார்த்தால் "பெருமாளின் வலதுகை தாம்பூலம்" தெளிவாக தெரியும். உங்களுக்கு "பெருமாள் வலதுகை தாம்பூல" தரிசன பாக்கியமாவது கிடைக்கட்டும்.]

அதைக் கண்டதும், திடீரென்று ஒரு எண்ணம். அதையும் அவரிடம் சமர்ப்பித்தேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! அடியேனுக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு.

மனதுள் பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன்! "சரி! நான் சமர்ப்பித்த ஐந்து விண்ணப்பங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு, அருள்வதானால், அதற்கு அடையாளமாக, உங்கள் கையில் இருக்கும் தாம்பூலம், அடியேன் கைக்கு வரவேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை! அடியேன் யாரிடமும் இதை கூற மாட்டேன், குறிப்பாக, அர்ச்சகரிடம் கேட்க மாட்டேன். உங்கள் உத்தரவால், அவர் கூப்பிட்டு தரவேண்டும். அப்படி கிடைத்தால் உங்களை சம்மதிக்கிறேன்! நீங்கள் எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திக் கொடுப்பீர்கள், விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள் என நம்புகிறன்" என கூறிவிட்டு, கருடவாகனத்தில் உலா சென்ற பெருமாளை பின் தொடர்ந்து நடந்தேன். அவர் ஊரெல்லாம் சுற்றி, அனைவருக்கும் அருள் பாலித்து, அனைவரின் நிவேதனங்களையும் ஏற்றுக்கொண்டு கோவிலுக்கு திரும்பிய பொழுது நடு இரவு மணி 1.30 ஆகிவிட்டது. பின்னர் பூசை முடிந்து, பெருமாளின் அலங்காரத்தை, திரை போட்டு கலைக்கத் தொடங்கினார், அர்ச்சகர். அந்த நேரத்தில் ஒரு 5 பேர்கள்தான் இருந்தனர். அதில் அடியேனும் ஒருவன்.

சிரித்து பேசிக்கொண்டிருந்தபடியே, பெருமாளின் அலங்காரத்தை கலைத்துக் கொண்டிருந்த அர்ச்சகர், ஒரு நிமிடம் மௌனமானார். கண்ணை மூடினார். அப்படியே "ஹ்ம்ம்" என்றார், யாரிடமோ பதில் உரைப்பது போல்.

மீண்டும் ஒரு நிமிடம் கழிந்தபின், திடீரென, பெருமாள் கையிலிருந்த தாம்பூலத்தை உருவியவர், "சுவாமி! இங்கு வாருங்கள்!" என அடியேனை அழைத்தார்.

"என்ன வேண்டும்!" என்று கேட்டபடி அருகில் சென்ற அடியேனிடம்,

"இந்தாருங்கள்! இந்த தாம்பூலத்தை, பெருமாள், உங்களுக்கு குடுக்கச் சொன்னார்!" என்று அடியேனிடம் ஒப்படைத்தார். கூடவே பெருமாளுக்கு சாற்றிய இரண்டு மாலைகளை "ஒன்னு முருகருக்கு! ஒன்னு அகத்தியருக்கு போடச் சொன்னார்" என்று கொடுத்தார்.

எல்லாவற்றையும் கையில் வாங்கிக்கொண்டு, பெருமாளை ஒரு நிமிடம் பார்த்தேன்.

"மிக்க நன்றி! இது போதும் உங்கள் உத்தரவாதத்திற்கு!" என்று மனதுள் நினைத்தபடி, இரவு 3 மணிக்கு ஒரு உறவினரின் வீட்டுக்கு வந்து சேர்ந்து, முதல் வேலையாக மாலைகளை பாத்திரப்படுத்தியபின், (பின்னர் அந்த மாலைகள் எங்கு சென்று சேரவேண்டுமோ அங்கு சென்று சேர்ந்தது) ஒரு வெற்றிலையை எடுத்து, தாம்பூலம் போட்டேன். அருமை என சொல்வது கூட மிக மிக குறைத்த நிலை. அப்படி பிரமாதமாக இருந்தது, அந்த வெற்றிலை தாம்பூலம்.

ஆகவே, அகத்தியர் அடியவர்களே! தாமிரபரணி புஷ்கர விழாவிற்கும், அந்தநாள்>>இந்த வருடத்திற்கும் சேர்த்து, பெருமாளும், அகத்தியரும், கோடகநல்லூரில், திரைமறைவில் என்னாவோ செய்து கொண்டிருக்கிறார்கள், என நினைக்கிறேன்.


இந்த தொகுப்பை, ஒரு முன்னறிவிப்பு அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும். இனி வரும் அனைத்து சனிக்கிழமை கருட சேவையிலும், அங்கு சென்று பெருமாளுடன் இருக்கலாம், என்று நினைக்கிறேன், அடியேன். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!