​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 25 April 2013

சித்தன் அருள் - 121


"மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சை ஒன்றைச் செய்யப் போகிறேன்.  இதற்கு அகத்தியர் அருள் வேண்டும்" என்று கேட்டார், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு இளம் மருத்துவர் ஒருவர்.

"நல்ல விஷயம்தான் செய்யப் போகிறீர்கள்.  நல்ல படியாக வெற்றி பெறும்.  கவலைப்பட வேண்டாம்" என்று பொதுவாக அந்த மருத்துவரை நான் வாழ்த்தினேன்.

"உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகத்தை தந்தாலும், அகத்தியர் நாடியையும் ஒரு தடவை படியுங்களேன்" என்று மறுபடியும் கேட்டுக் கொண்டதின் பேரில், அகத்தியரின் நாடியைப் புரட்டினேன்.

சில பிரார்த்தனைகளைச் செய்யச் சொல்லி "இதைச் செய்து விட்டு கீறல் வைத்தியத்தைச் செய் வெற்றி பெறுவாய்" என்று அகத்தியர் நாடியில் உரைத்தார்.

சந்தோஷப்பட்டாலும், "நான் தைரியமாக இறங்கிச் செய்யலாமா?" என்று மீண்டும் கேட்ட பொழுது அவர் மீது எனக்கே எரிச்சல் வந்தது.

"எத்தனை தடவைகள், எத்தனை முறைகளில் கேள்வி கேட்டாலும், அகத்தியர் பதில் ஒன்றுதான்" என்று சட்டென்று நானே பதில் கூறினேன்.

இந்த பதில் என்னிடமிருந்து வந்ததால், அந்த மருத்துவருக்கு என் மீது சற்று வருத்தம்தான்.  பதில் பேசவில்லை.  மௌனமானார்.

"என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  அந்த நாட்டில் இந்த ஆபரேஷன் வெற்றி பெற்றால் நான் பணிபுரியும் அந்த மருத்துவமனைக்கு பெயரும், புகழும் அதிகமாகும்.  உலகத்திலிருக்கும் பலரும் அங்கு ஓடி வருவார்கள். அது தோல்வி அடைந்தால், எனக்கு பெருத்த அவமானம்.  அந்த மருத்துவமனையின் பெயரும் கெட்டு விடும்.  அதனால் தான், அகத்தியரிடமிருந்து மறுபடியும் நல்ல வரத்தை வாங்கித் தாருங்கள்" என்று நிதானமாகக் கேட்டார்.

ஏதோ பிரச்சினை இருக்கிறது.  இல்லையென்றால் மறுபடியும் அதே கேள்வியை இவர் கேட்க மாட்டார் என்று அப்போதுதான் எனக்கு தெளிவாக புரிந்தது.

ஆதலால் மறுபடியும் அகத்தியர் நாடியைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன்.

"அகத்தியன் அருள்வாக்குத் தந்தாலும் கீறல் வைத்தியம் செய்யும் பொது ஏதேனும் தடைகள் வராமலிருக்க யாமே பக்க பலமாக இருந்து அந்த மருத்துவச் சிகிர்ச்சையை வெற்றி பெற வைப்போம்.  இன்று முதல் காலையிலும், மாலையிலும் தப்பாது ஐம்பத்து நான்கு முறை வைத்தீஸ்வரம் புகழ் பாடும் காயத்ரி மந்திரத்தை சொல்லி வா" என்று அகத்தியர் அழுத்தம் திருத்தமாக உத்தரவு போல் அருள் வாக்கு சொன்னார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான் அந்த மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியே ஏற்பட்டது.  சந்தோஷமாக புறப்பட்டுப் சென்றார்.

லண்டனில் அறுவைச் சிகிர்ச்சை முறையை மூன்றாண்டுகள் கற்றதோடு பிற நாடுகளுக்கும் சென்று கீறல் ச்கிர்ச்சையை சிலகாலம் தங்கிக் கற்றவர் எதற்காக என்னிடம் வந்து அருள் வாக்கு கேட்க வேண்டும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

மருத்துவர்கள் யாரும் ஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைப்பது கிடையாது.  விஞ்சான வளர்ச்சியை அன்றாடம் கற்றுக் கொண்டு அதுவே உண்மை என்று ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள்.  தங்கள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

அப்படிப்பட்ட அறிவியல் துறையை சேர்ந்த மருத்துவர் ஒருவர், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து அகத்தியர் அருள் வாக்கைக் கேட்டு, மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சையை செய்யப் போகிறார் என்றால், அவருக்கு அகத்தியர் மீது அளவு கடந்த பக்தி இருக்கும் என்றே எண்ணத் தோன்றியது.

சொந்த நாட்டிற்கு சென்றதும் அந்த மருத்துவரிடமிருந்து ஒரு செய்தி எனக்கு வந்தது.

"சார்! இன்னும் மூன்று நாளில் அந்த ஆபரேஷன் நடக்கப் போகிறது.  இன்று எனக்கு திடீரென்று கை, கால்கள் நடுங்க ஆரம்பித்திருக்கிறது.  விரல்களில் நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த நடுக்கம் பயத்தால் இல்லை.  நரம்பு சமபந்தமான பிரச்சினையால் ஏற்பட்டிருக்கிறது.  மற்ற டாக்டர்களிடம் காட்டி மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.  நாளை காலைக்குள் எனக்கு குணமாக வேண்டும்.  அகத்தியரிடம் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

அகத்தியர் சாதாரணமாக வாக்கு கொடுக்கமாட்டார்.  ஏற்கனவே நல்ல வாக்கு கொடுத்திருக்கும் போது ஏன் இப்படி பயப்படுகிறார்.  மனுஷனுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை போலிருக்கு என்றுதான் என்னால் எண்ண முடிந்தது.

நான் தைரியம் சொல்லி, அகத்தியரை வேண்டி  "தைரியமாக காரியத்தில் இறங்குங்கள் எப்படியும் நல்லபடியாக ஜெயித்து விடுவீர்கள்" என்று வாயளவில் உற்சாகத்தை ஊட்டினேன்.  இருந்தும், என்னவோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன்.

மூன்றாம் நாள் காலை.

என் மனதிற்குள் ஒரு எண்ணம்.  அந்த இளம் மருத்துவரின் நரம்புத் தளர்ச்சி சரியாகி இந்நேரம் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும்.  அது வெற்றி பெற்றதும் அந்த மருத்துவர் நிச்சயம் எனக்கு செய்தியைச் சொல்வார் என காத்திருந்தேன்.

மாலை வரை ஆகியும் அவரிடமிருந்து எந்த விதமான செய்தியும் வரவில்லை.  பொதுவாக இப்படி நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருந்து பழக்கமில்லை.  எது நடந்தாலும் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று விட்டு விடுவேன்.

ஆனால்....

இந்த மருத்துவர் விஷயத்தில் மட்டும் மனதிற்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.  எதற்கும் அகத்தியரிடம் என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கேட்கலாம் என்று உந்துதல் ஏற்பட்டது.

நாடியைப் பிரித்தால், அங்கு அகத்தியரைக் காணவில்லை.  எத்தனை முறை பிரார்த்தித்தும் அவர் அருள் வாக்கு சொல்ல வரவே இல்லை.

பொதுவாக நாடி பார்க்கும் முன்பு பிரார்த்தனை செய்து கொள்வேன்.  ஒளி வடிவமாக நாடியில் ஏதாவது பதில் சொல்வார்.  அதை அப்படியே யார், நாடியைப் படிக்க வந்திருக்கிறார்களோ, அவர்களிடம் மறைக்காமல் கூறிவிடுவேன்.

ஆனால் இப்போது நாடியைப் பிரித்தால் வெறும் பனை ஓலைச்சுவடி மட்டும் இருந்தது.  அகத்தியரின் ஒளி வடிவான தமிழ் வார்த்தைகளைக் காணவில்லை.

என்ன ஆயிற்று அகத்தியருக்கு? ஏன் வரவில்லை என்பதை விட அந்த மருத்துவர் ஆபரேஷன் செய்து வெற்றி பெற்றாரா? இல்லை அங்கு ஆபரேஷன் நடக்கவில்லையா? என்ற கவலைதான் எனக்கு அதிகமாகியது.

அகத்தியர் இப்படி காணாமல் போவது எனக்கு ஆச்சரியமில்லை.  ஏனெனில் பல சம்பவங்கள் இதே போல் நடந்திருக்கிறது.  காரணம் நானும் சில சமயம் தவறைச் செய்திருக்கிறேன்.

இன்றைக்கு நான் எந்த விதத் தவறும் செய்யவில்லை.  ஜீவனாக இருந்து என்னுடன் தினமும் பேசியவர், இப்போது வரவில்லை என்கிறபோது ஏதோ ஒன்று அங்கு நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.

நாளைய பொழுது நல்லபடியாக விடியட்டும் என்று பிரார்த்தனையை செய்து விட்டு நாடிக்கட்டை மூடிவிட்டேன்.

அன்றிரவு முழுவதும் அந்த மருத்துவரை பற்றியே பலத்த சிந்தனை இருந்ததால் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிற்று.

மறுநாள் விடியற்காலை............

காலை ஐந்து மணி இருக்கும்.  வெளிநாட்டிலிருந்து அந்த மருத்துவர் பேசினார். "நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விட்டது.  ஆனால் நான் ஆபரேஷன் தியேட்டருக்குள் போனதுதான் தெரியும்.  எட்டு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.  யார் யாரோ வந்து உதவி செய்தார்கள்.  நான் ஆபரேஷன் செய்ததாக என்னுடன் இருந்த மற்ற டாக்டர்கள், நர்சுகள் சொன்னார்கள்.  ஆனால், அங்கு நான் நானாக இல்லை.  ஏதோ ஒரு "சக்தி" என் உடலுக்குள் புகுந்து கொண்டு விறு விருப்பாக செயல்பட்டது.  அவ்வளவுதான்.  ஆபரேஷன் வெற்றி அடைந்து விட்டது.  இது என்னவென்று துளியும் எனக்கு விளங்கவில்லை.  அகத்தியரைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டதும் எனக்கு உடலெங்கும் வியர்த்து விட்டது.

"உங்கள் கை நரம்புகள் எப்படி இருக்கிறது?"  நான் கேட்டேன்.

"இன்னும் நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது.  இதுவரை இப்படியொரு விரல் நடுக்கம் எனக்கு வந்ததில்லை.  இப்போதுதான் வந்திருக்கிறது.  இந்த நடுக்கத்தோடு எந்த டாக்டரும் இவ்வளவு பெரிய அறுவை சிகிற்சையை செய்ய முடியாது.  என்னால் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை.  கேட்டு சொல்லுங்கள்" என்றார் அவர்.

இந்த செய்தி எனக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்தது.

இனியும் தாமதிக்கக் கூடாது என்பதால் அவசர, அவசரமாக அகத்தியர் ஜீவநாடியைப் பிரித்தேன்.

"வெளிநாட்டில் கீறல் வைத்தியம் செய்து கொண்ட அவன், முற்பிறவியில் கொல்லிமலைக் காட்டில் எனக்கு அன்றாடம் பால் அபிஷேகம் செய்து மனம் குளிர வைத்தவன்.  அவன் இப்போது கர்மவினையால் கஷ்டப்படுகிறான்.  அவனது உடல் நோய் தீர வேண்டும் என்றால் கீறல் வைத்தியம் அவசியம் தேவை என்பதை உணர்ந்தேன்.

வெளி நாட்டிலிருந்து எனது ஜீவநாடி பார்க்க வந்த இளம் மருத்துவனுக்கும் அன்றைக்கு யாம் வாக்குறுதி கொடுத்தோம்.  அந்த வாக்குறுதியை யாம் காப்பாற்ற வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டோம்.

அதே சமயம் நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய முடியாத அந்த இளம் மருத்துவனையும் காப்பாற்றினால் தான் அவனுக்கு வேலை நிரந்தரம் ஆகும்.  மருத்துவமனைக்கும் பெயர், புகழ் அதிகமாகும்.

எனவே இதெல்லாம் வைத்து திட்டமிட்டேன்.  திருமூலரைத் துணைக்கு வைத்து, அந்த மருத்துவர் உடலில் யாம் புகுந்தோம்.  கீறல் வைத்தியம் செய்தோம், வெற்றியாயிற்று.

திருமூலர் என்னை மிக பத்திரமாக அந்த இளம் மருத்துவன் உடலில் இருந்து மீட்டான்.  அதுவரை அந்த மருத்துவனது ஆன்மாவை திருமூலர் தன கையில் பத்திரமாக வைத்து மீண்டும் அவனிடமே கொடுத்து விட்டான்.  இது தானடா நடந்தது அங்கு" என்று அதிர்ச்சி வைத்தியத்தை எனக்குத் தந்தார்.

அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து நான் மீளவே வெகுநாளாயிற்று..

(இதை படித்த நீங்களும் தானே?)

சித்தன் அருள்.................. தொடரும்!