​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 12 October 2016

சித்தன் அருள் - 468 - அந்த நாள் >>>>> இந்த வருடம் - கோடகநல்லூர்!

[ கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாள் ]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கோடகநல்லூரில் இறைவனும் சித்தர்களும் நிகழ்த்திய பல்வேறு நிகழ்ச்சிகளை உட்கொண்ட அதே முஹூர்த்தம், அந்த நாள் இந்த வருடம் என்கிற தொகுப்பில் 12/11/2016 சனிக்கிழமை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அகத்திய பெருமான் நாடியில் வந்து உரைத்தபொழுது, உண்மையில் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில், சுக்ல பக்க்ஷ திரயோதசி திதியில் இந்த நிகழ்வுகள் நடந்தது, என்றார்.

சோதனையாக, இந்தவருடம், நட்சத்திரமும், திதியும் இரண்டு நாட்களாக பிரிந்து போனது. நட்சத்திரத்தை எடுத்தால், திதி இருக்காது. திதியை எடுத்தால் நட்சத்திரமிருக்காது. ஒரே குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். எதை தெரிவு செய்வது என்று புரியவில்லை. எல்லோரும் ஐப்பசி மாதம், உத்திரட்டாதியை நினைவில் கொண்டிருக்க, திதி இல்லாமல் அந்த முகூர்த்தம் தெரிவு செய்தால் சரியாக இருக்குமா?  இல்லை அதுதான் சரியான முகூர்த்தமா? என்று கேள்விகள் எழும்பத்தொடங்கியது. விடை கண்டுபிடிக்க அகத்திய பெருமானைத்தான் நாடவேண்டி வந்தது.

"இதற்கு ஒரு விடை கிடைக்க செய்ய வேண்டும். எங்கள் சிற்றறிவுக்கு எதுவும் புலப்படவில்லை. விளக்க வேண்டும்" என்று அகத்திய பெருமானை வேண்டிக்கொண்டேன்.

இரண்டு தினங்களில், அவரிடம், அவரது அடியவரால் கேள்வி எழுப்பப்பட மிகத் தெளிவாக பதில் வந்தது.

"தெய்வீக விஷயங்களுக்கு "திதிக்குத்தான்" முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆகவே, இந்த முறை சனிக்கிழமை அன்று அந்த முகூர்த்தம் வருகிறது. அதையே எடுத்துக் கொள்ள சொல்" என்றார்.

அதன் பின்னர் தான் உங்கள் அனைவருக்கும் அந்த நாள் தெரிவிக்கப்பட்டது.

ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்ள, சுருக்கமாக அந்த நாளில் அங்கு நடந்த நிகழ்ச்சிகளை தெரிவிக்கிறேன்.

  • 6000 ஆண்டுகள் அகத்திய பெருமான், இந்த கோவிலை சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.
  • பக்கத்தில் ஒரு நந்தவனத்தில் குடிகொண்ட "பரப்பிரம்மம் என்கிற வேங்கடவருக்கு" அகத்திய பெருமான் அபிஷேகம் செய்த நாள் அது. அதை நினைவு கூறுகிற எண்ணத்தில்தான் அந்த நாளை நமக்கு குறித்துக் கொடுத்தார்.
  • சித்தர்கள் மட்டுமல்ல, முனிவர்கள், மகா முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இறைவனை வழிபட்ட நல்ல நாள் இது.
  • தாமிரபரணி நதிக்கரையை லோபாமுத்திரையாக மாற்றிய நாள், இந்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
  • பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் தங்கள் உரிமையை அகத்திய பெருமானுக்கு பகிர்ந்து, தாரை வார்த்துக் கொடுத்த நாள்.
  • பெருமாளின் அடியேன் "கருடன்" விஸ்வரூபமெடுத்து, முனிவரின் குழந்தையின் உடலில் ஏறிய விஷத்தை எடுத்த நாள். எனவே இது ராகு கேது தோஷத்திற்கான பரிகார ஸ்தலமாக உள்ளது.
  • அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள், அகத்திய பெருமான் அருளுகிற நாள்.

இந்த வருடமும் பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை, பூசை, நிவேதனம் என்பவை அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அனைத்து அகத்தியர் அடியவர்களையும், அன்றைய தினம், அங்கு சென்று, இறைவன், அகத்தியப் பெருமான் அருள் பெற்று செல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

[ இந்த தொகுப்பு, அகத்தியர் அடியவர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், ஞாபகப்படுத்துவதற்காகவும் வேண்டி தரப்பட்டுள்ளது. ]

1 comment: