​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 30 August 2023

சித்தன் அருள் - 1421 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


நாட்கள் மெதுவாக நகர்ந்தது. அனைத்து சலனமும் நின்று போனதால், வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே, கூடுதல் நேரம் அமர்ந்து யோகா மூச்சுப்பயிற்சி செய்வது, உடலில் அதனால் வரும் மாற்றங்களை கவனித்து, பின்னர் நேரம் கிடைக்கும் பொழுது யோகா ஆச்சர்யனிடம் சந்தேகங்களை கேட்டறிவது என்று நேரத்தை கடத்தினார்.

இப்படி சென்று கொண்டிருந்த நிலையில், வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பித்தால் என்ன! என்ற எண்ணம் உதித்தது. ஆனால், அதற்கு உடலில் எந்த நோயும் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் வேண்டும். கடைசி முறையாக மருத்துவமனை இவரை பரிசோதித்து, இனி ஒன்றும் செய்வதிற்கில்லை என்று கொடுத்த பரிசோதனை முடிவுகளும், மருத்துவ சான்றிதழ்களும் அவர் கையிலிருந்தது. அதில் முடிவுகள் இவருக்கு எதிராக 30 நாட்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. வாசித்த பொழுது உள்ளே சற்று பதட்டம் வந்தாலும், சுதாகரித்து, மிகப்பெரிய மருத்துவமனையிலேயே பரிசோதனைக்கு செல்லலாம் என தீர்மானித்து, பாரதத்தின் முதல் தர மருத்துவ மனை ஆனா எய்ம்ஸ் ஐ தேர்வு செய்து சென்றார்.

இவரது கடைசி ரிப்போர்ட்டை வாசித்த மருத்துவர்கள், அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்தனர். ஒவ்வொரு பரிசோதனை முடிவும் வர வர அவர்களுக்கு வியப்பும், ஆச்சரியமும் தான் மேலோங்கியது. கடைசி ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்த எந்தவித பாதிப்பும் உடலுள் எங்கும் இல்லாமல் இருந்தது. எதற்கும் தலை முதல் கால் வரை எடுக்கும் முழு உடல் பெட் ஸ்கேன் என்கிற பரிசோதனையையும் எடுத்துவிடலாம் என இவரை கொண்டு சென்றனர்.

இவர் உடல் நிலையை கேள்விப்பட்ட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு பெரிய குழு ஸ்கேன் எடுக்கும் பொழுது கூட இருந்து, அவர் உடலின் உள்ளுறுப்புகளை உன்னிப்பாக கவனித்தது. முடிவு, "உடலுள் ஒரு குறையும் இல்லை" என்று சான்றிதழ் கொடுத்தது.

முதலில் ஒரு மருத்துவர், "நீங்கள் இத்தனை நாட்களாக என்ன மருத்துவ முறையை தொடர்ந்தீர்கள்?" என்று வினவ, முன் ரிப்போர்ட்டில் சொன்ன அலோபதி மருத்துவ முறைதான் என்று கூறினார்.

அவரது ரத்தம் சம்பந்தமான முடிவை வாசித்து, "இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்கள், இந்த மருந்துகளை சாப்பிட்டிருந்தால், உங்கள் தற்போதைய ரிப்போர்ட், இப்படி இருக்காது. உண்மையை சொல்லுங்கள்" என்று வற்புறுத்த அனைவரும் இவரை சூழ்ந்தனர்.

அதே பதிலை மறுபடியும் அவர்களுக்கு தெரிவிக்கவே, அனைவரும் சோர்ந்து போயினர்.

"இல்லை நண்பரே! உங்கள் தற்போதைய பரிசோதனை முடிவுகளின் படி, இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த நிலைக்கு மாறியிருப்பார் என்று எங்களால் நம்ப முடியவில்லை. என்னவகை மருத்துவ முறை, யாரிடம் எடுத்தீர்கள் என்று தான் கேட்க்கிறோம். ஏன் என்றால் அதே முறையை இங்கு பலருக்கும் நாங்கள் பரிந்துரைக்கலாமே, பலரும் காப்பாற்றப் படுவார்களே!" என்று கேட்டனர்.

இது ரகசியமாக இருக்க வேண்டும், இதிலுள்ள ஆபத்துக்கள் என்ன என்று முன்னரே அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாலும், அவர் எந்த காரணம் கொண்டும் காட்டிக் கொடுக்க கூடாது என தீர்மானித்து, "நான் தினமும் யோகா செய்து வருகிறேன்!" என்று மட்டும் கூறினார்.

யோகா என்று கேட்ட மருத்துவர்கள், விவரிக்க கேட்க, அதை பற்றி சொல்லத் தெரியாது, ஆனால், சுவாசப்பயிற்சியும், ஆசனங்களும் கற்று தினமும் செய்து வருகிறேன். அதனால் உடல் நலமாக இருக்கிறேன், என்று கூறி முடித்தார்.

எவ்வளவோ முறை, ஏதேதோ முறையில் கேட்டுப்பார்த்தும், யாரிடம் கற்றேன் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பதே உண்மை. அதன் பின்னர் வெளி நாட்டில் அவருக்கு வேலை கிடைத்து, அங்கிருந்தே கிளம்பி சென்று விட்டார். சொந்த ஊர் பக்கம் வரவே இல்லை.

இதே போல், "கார்டியோ மயோபதி" என்று ஒரு இருதயம் சம்பந்தமான நோய் உள்ளது. இதற்கு அலோபதி மருத்துவர்கள், தினமும் மாத்திரைகள் போட்டு வாருங்கள், இதற்கு தீர்வு கிடையாது. உண்டெனில் மரணம்தான் என்பர். அதாவது, நுரையீரலை சுற்றி இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அதனை விரிவடைய விடாமல் அழுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இருதயம் தன் ரத்தத்தை வெளியே தள்ளும் சக்தியை மெதுவாக இழக்கும். அதன் பின் பிற உடல் உறுப்புகளுக்கு ரத்தம் போய் சேராமல், செயலிழக்க, இருதயம் திடீர் என நின்று விடும். அப்படிப்பட்ட ஒரு நோயாளிக்கு யோகாவின் ஸ்வாசப்பயிற்சி மட்டும் எடுத்து, அவர் இன்றும் நலமாக வாழ்ந்து வருகிறார். ஸ்வாசப்பயிற்சி தொடங்கும் போது 30% இருந்த அவர் இருதய துடிப்பின் அழுத்தம், ஒரே மாதத்தில் 80%க்கு சென்றது. ஒரு மருத்துவக்குழுவே அவரை பரிசோதித்து வியந்தது.

மேலும் கொரோனா பாதிப்பு சமயத்தில் அரசாங்க உத்யோகத்தில் இருந்த பலரும், பொது மக்கள் பணிக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டி வந்தது. அதில் மத்திய அரசு வேலையில் இருக்கும் அதிகாரி ஒருவர் மூன்று முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளி வந்தார். மூன்றாவது முறை பாதிக்கப்பட்டபின் அவரால் ஆக்சிஜென் சிலிண்டரின் உதவி இன்றி சுவாசிக்கவோ, எங்கேனும் செல்லவோ முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. அவருக்கு கை பிடித்து நாடி பார்த்து, உடலின் ஆதார சக்ராக்கள் அனைத்தையும் திறந்து சரிபண்ணி விட, அவர் மயங்கி விழுந்து விட்டார். இவர் கைத்தாங்கலாக அவரை பிடித்து அமர செய்து மூன்றே நிமிடத்தில் நினைவு வர ஒரு எளிய மூச்சு பயிற்சியை சொல்லிக்கொடுத்து "தினமும் செய்யுங்கள்" என்று அனுப்பி வைத்தார். அந்த நொடிக்குப்பின் இன்று வரை, ஆக்சிஜென் சிலிண்டர் தேவை இல்லாமல் போயிற்று. விடை பெற்றவர்கள், மறுநாளே, பழனி, திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருப்பதி என புண்ணிய தலயாத்திரையும், திருவண்ணாமலையில் கிரிவலமும் (ஆக்சிஜென் சிலிண்டர் இன்றி) செய்ததும் ஆச்சரியமாக இருந்தது.

அடியவர்களே! நம் பாரதத்தின் சித்தர்கள், ரிஷிகள், சாதுக்கள் கற்பித்த யோகா முறைகள், ஸ்வாசப்பயிற்சிகள், ஆசனங்கள் போன்றவை, எத்தனை மகத்தானது என்பது ஒரு புறம் அறிய முடிந்தாலும், அனைத்திலும் அவர்கள் கண்டுபிடித்து, உள்புகுத்தி வைத்திருப்பது அதிர்வலைகள்தான். மனித உடலுக்கு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் சக்தி நிறையவே உண்டு. அப்படிப்பட்ட உடலுக்கு சரியான அதிர்வலைகளை, சரியான கால அளவு உணவாக ஊட்டிவர குறை விலகி நலமாகும்.

இத்துடன் இந்த தொகுப்பு நிறைவு பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  2. ஐயா அதிர்வினைகளும் தசவாயுக்களும் இந்த பதிவில் 837, 841 போன்ற பழைய பதிவின் audio message கிடைக்கவில்லை. எவ்வாறு எடுப்பது ஐயா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்​!

      அந்த பதிவில் வடமொழி சொற்கள் அதிகம் இருப்பதால் ஆடியோ வரவில்லையோ என்னவோ! ஒருமுறை நேரடியாக வாசித்து விடுங்களேன்!

      அக்னிலிங்கம்!

      Delete