​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 3 October 2022

சித்தன் அருள் - 1194 - சித்தனின் சிகிர்ச்சை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒரு வியாழக்கிழமை அகத்தியப்பெருமானின் கோவிலுக்கு சென்ற பொழுது, அடியேனின் நண்பர் ஒருவர் மருத்துவமனையில் சிகிர்ச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக, கோவில் பூஜாரி தகவல் தரவே, என்ன விஷயம், என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு, அகத்தியப்பெருமானின் சன்னதி முன்பு நின்று, "நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவர் உங்களின் சிறந்த அடியவர்! எந்த பிரச்சனையும் இன்றி நலமாக வீடு திரும்ப வேண்டும். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு!" என்று கூறிவிட்டு, பூஜாரி, பிற நண்பர்கள் சூழ மருத்துவமனைக்கு சென்றோம்.

ஐந்து பேர்கள், உள்ளே விடுவார்களா என்கிற சந்தேகம். அடியேன், "பார்த்துவிடலாம் அதையும்" என்று விறுவிறுவென உள்ளே சென்று, லிப்ட்டில் ஏறி செல்ல யாரும் மறுப்பதற்கு அங்கு இல்லை. எட்டாவது மாடியில் முன்பே அறிமுகமான நர்ஸ் அமர்ந்திருக்க, நண்பரை பார்ப்பதுமிக எளிதாகி போனது.

நண்பர், அடியேன் வருவேனென்று எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்துடன் எழுந்து அமர்ந்தார். உண்மையான பிரச்சினை என்ன என்று விசாரிக்க, அது சைனஸ் என தெரிய வந்த பொழுது, மனம் சற்று நிம்மதி அடைந்தது. உண்மையிலேயே அவருக்கு வேறொரு மிக பெரிய உடல் பிரச்சனை உண்டு. ஆம், முன்னரேயே முதுகு எலும்பில் பிரச்சினை வர, இரண்டு விலா எலும்புகளை அறுவை சிகிர்ச்சை செய்து மாற்றியுள்ளனர். அந்த இடத்து வேதனை, அவரை அடிக்கடி வந்து வருத்தும். இம்முறை அதுவல்ல என உணர்ந்து, சற்று நேரம் பேசிவிட்டு, "இன்னும் மூன்று நாட்களில் சரியாகிவிடும், வீட்டுக்கு போய்விடலாம். நன்றாக ஓய்வு எடுத்துக்குங்க என்று கூறிவிட்டு, கோவில் பிரசாதத்தை கொடுத்துவிட்டு அனைவரும் கிளம்பினோம்.

மூன்றாவது நாளில், மருத்துவமனையை விட்டு கிளம்பும் பொழுது, வந்த நோய் குணமாகிட, முன் பிரச்சினையான இடுப்பு வலி விஸ்வரூபம் எடுத்து வந்தது. அவரால் அசைய முடியவில்லை, படுக்கையில் சாய்ந்துவிட்டார். எழுந்திருக்கவும் முடியாமல் போயிற்று.

அவரை வீட்டுக்கு விடுவிக்க வந்த மருத்துவர்கள், இதென்ன புதிய பிரச்சினை என விசாரிக்க, "வேண்டாம்! என்னை விட்டுவிடுங்கள்! வீட்டிற்கு போகிறேன், இது தானே சரியாகும்" எனக்கூறி வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டில் தனி அறையில், படுக்கையில் கிடந்தபடி, விஷயத்தை கூறி ஒரு ஒலிநாடாவை அடியேனுக்கு அனுப்பினார். அதில் நாடியில் அகத்தியரிடம், மேலும் அறுவை சிகிர்ச்சை தேவையா என கேட்டு சொல்ல முடியுமா என கேட்டிருந்தார்.

அடியேன் அன்றைய இரவே திரு.ஜானகிராமனுக்கு, நடந்தவைகளை ஒரு ஒலிநாடாவாக்கி அனுப்பி, அகத்தியப்பெருமானின் அருள் வாக்கை பெற்று தரும்படி வேண்டினேன்.

அகத்தியப்பெருமான் தன் சேய்களிடத்து அன்பு நிறைந்தவராயிற்றே, மறுநாள் காலையிலேயே பதில் வந்தது.

"இரு தினங்களில் வேதனை விலகும், பதினோரு நாட்களில் வழி பிறக்கும்" என்றார்.

அந்த பதிலை நண்பருக்கு அனுப்ப, அவருக்கு பாதி புரிந்தது, மீதிக்கு கேள்வியுடன் அடியேனை தொடர்பு கொண்டார். விரிவாக உரைத்த பொழுது "ஆஹா! அப்படியா அர்த்தம். என்ன வேதனை இருந்தாலும், நான் எந்த மருத்துவரையும் சென்று பார்க்க போவதில்லை. இரு தினங்கள் தானே வலியை பொறுத்துக் கொள்கிறேன். அப்பா வந்து எப்படியாவது சரி பண்ணிக்கொடுத்தால் போதும்" என்றார்.

"சரி! அப்படியே நல்லது நடக்கட்டும்!" என வாழ்த்திவிட்டு, அகத்தியப்பெருமானிடம் "சொன்னபடி நடத்திக் கொடுத்திடுங்கோ!" எனவும், நன்றியையும் கூறினேன்.

ஏதோ ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று மனம் கூறியது, ஆனால் "சித்தர்கள் சிகிர்ச்சையை" அன்றே இரவு தொடங்கிவிடுவார்கள் என அடியேன் எதிர்பார்க்கவில்லை.

சித்தன் அருள்...............தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete