​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 21 May 2022

சித்தன் அருள் - 1138 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!



​​புராணிகரான சூதமாமுனிவர்,  சௌனகாதி முனிவர்களை நோக்கி, "மறந்து புறந்தொழாத வைணவ ஆசார, நைமிசாரணிய வாசிகளே!" என்று கூறலானார்.

சர்வக்ஞரான பெருமான், கருடனை நோக்கிக் கூறியது:

"வைனதேயா! விருஷோற்சர்க்கத்தைப் பற்றிய வேறொரு வகையையும் சொல்லுகிறேன்" கேள்.

"முன்பு சொன்ன தினங்களில் ஒரு நாள், ஸ்தல சுத்தி செய்த பிறகு, அக்கினிப் பிரதிஷ்டை செய்து, ஒரே நிறமாக உள்ள காளைக்கன்று ஒன்றையும் அதற்குச் சிறிதான கிடாரிக் கன்று ஒன்றையும் கொண்டு வந்து அவ்விரண்டையும் மஞ்சள் நீராட்டி ஆடையாபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்து விடுத்து,  நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து, வெள்ளி, நிலம், உதககும்பம், ஆடைகள் ஆகியவற்றைத் தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவார்கள்.  இதற்கு காமிய விருஷோற் சர்க்கம் '  என்று பெயர்".  

"வைனதேயா! மரித்த பிறகும் ஒரு ஜீவன் இன்ப துன்பமடைவதற்கும், மரிப்பதற்கு முன்பும் இன்ப துன்பம் பெறுவதற்கும் அந்த ஜீவன் செய்த நல்வினை, தீவினைகளே காரணமாகும்.  ஜீவர்கள் பலராக இருக்க ஒரு ஜன்மத்தினால் ஒரு ஜீவனால் செய்யப்பட்ட கர்மம் தன்னைச் செய்தவன் இன்னவன்தான் என்று எப்படி அறிந்து, மறு ஜன்மத்தில் அவனை எப்படிப் போய்ச் சேரும் என்று உனக்கு ஒரு ஐயம் தோன்றக் கூடும். இதில் சந்தேகம் வேண்டாம்.  ஓரிடத்தில் பசுக்கள் கூட்டமாகவும் மந்தை மந்தையாகவும் இருக்கிறதென்றாலும் , அந்தப் பசு கூட்டத்தில் பல பசுக்கள் இருந்தாலும், அந்த மந்தையிலுள்ள ஒரு கன்று, தன்னை ஈன்ற பசுவையே  அடைவது போலவே, கர்மமும் தன்னைச் செய்தவன் எவனோ அவனைத் தவற விடாமல், அவனையே சென்றடையும்.  வைனதேயா!  பூதானம் செய்வதை விட உயர்ந்த உத்தமமான தானம் வேறில்லை.  உண்மை பேசுவதை விடப் புண்ணியம் வேறில்லை.  பொய் பேசுவதையும், பொய்ப் பத்திரம் எழுதுவதையும் விடப் பாவம் வேறில்லை.  பூமி முதற் கடவுளாகிய ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சம்பந்தியாதலாலும் சுரபிகள், சூரியனுடைய திருக்குமாரத்திகளாகையாலும் சுவர்ணம் அக்னியின் மகாவாதலாலும் அம்மூன்றையும் தானம் செய்வோர் அம்மூன்று உலகங்களையும் அடைபவர்களாகித் தான் தானம் செய்த பயன்களையடைவார்கள்.  ஒரு பசுவின் தோலின் அளவு பூதானம் செய்தால், அவன் மஹாபாபத்திலிருந்து நீங்குவான்.  பூமியைத் தானம் கொடுத்துவிட்டு, அதற்குப் பிறகு அவாவினால் அந்தத் தானம் கொடுத்தப் பூமியை அபகரிக்க முயன்றவனும், தானம் கொடுத்த பூமியின் பயனைத் தானம் பெற்றவன் அடையாமல் கொடுத்தவனும், தானம் கொடுத்த நிலத்தின் பேரில் ஒருவன் வழக்கிட்டால் தானம் வழங்கியவனுக்கு உதவி செய்தவனும் பிரளயகாலம், வரையில் நரகவாசம் செய்வார்கள்.

ஒருவன், ஒரு தொழிலைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது அந்தத் தொழிலைக் கெடுத்தவன் ஆயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்தையடைவான்.  ஒருவனுக்கு ஒரு ஜீவன் உபாயத்தைச் செய்து கொடுத்தவன் லக்ஷம் கோதானம் செய்த பயனையடைவான்.  நூறு பசுக்களைத் தானம் செய்வதை விட ஒரு பசுவைக் கோல் கொண்டு ஒச்சாமலும் களவாடாமலும் இருப்பதே நல்லது. ஒருவன் ஒரு பசுவைக் கொன்று விட்டு, நூறு பசுக்களைத் தானம் செய்தாலுங்கூட, பசுவைக் கொன்ற பாவமே மேலாகும்.  ஒருவன் நல்ல ஒழுக்க சீலனாய் நான்மறைகளைப் பயின்ற ஓர் உத்தமப் பிராமணனை வழிபாட்டு, கிருத கிருத்தியங்களில் அவனுக்குச் சிந்தனைத் துன்பமில்லாமல் செய்பவன் அசுவமேத யாகம் செய்வதை விடப் பயன் அடைவான்.  அவன் யாகஞ் செய்தால், தேவர்கள் திருப்தியடையாமல் அசுரர்கள் உளம் உவப்பர். யாகத்தால், பிரத்தியட்சனாகிய பூசுரன் உவப்படைகிறான்.  அரசன் அந்தணருடைய பொருளை அபகரித்துச் சதுரங்கச் சேனைகளைச் சேர்த்து யுத்தம் செய்தால், அந்த சேனை யுத்த பூமியில் ஒருங்கே மடியும்.   தன்னாலாவது தனது முன்னோர்களாலாவது விப்பிரனுக்குத் தானமாக கொடுத்த பொருளை, எக்காரணத்தாலும் அபரிக்கலாகாது.   அதனை எந்தக் காரணத்தாலாவது அபகரித்தவன், நூற்றுப் பதினாயிரம் ஆண்டுகள் மலத்தில் கிருமியாகப் பிறந்து அதிலேயே உழல்வான்.  பொருள் மீதுள்ள ஆசையால் கபடமாக நட்புக் கொண்டு, அந்தணர்க்குரியதை அபகரித்தவன், நெடுங்காலம் நரகத்தில் உழல்வான். இரும்புப் பொடியையோ, கருங்கற் பொடியையோ, விஷத்தையோ உண்டு, ஒரு வினையால் ஜீரணம் செய்து கொண்டாலும் கொள்ளலாம்.  பிராமணர் பொருளையுண்டு, ஜீரணம் செய்ததற்கு மூவுலகிலும் ஒரு வினையும் இல்லை.  தெய்வத்தின் பொருளை அபகரித்தாலும்  வேதியரது பொருளை அபகரித்தாலும் அந்த விப்பிரரை அவமதித்தாலும், அவ்வாறு செய்தவனின் குலம் நாசமடையும்.  சாஸ்திரப் பயிற்சியும் உத்தம ஒழுக்கமுடைய உத்தமப் பிராமணனை பிறர் ஆராதித்து வரும்போது, அவற்றைச் சிறிதும் அறியாத நிலையில் அந்தப் பிராமணனை அவமதித்தால் தோஷமில்லை.  சத்பிராமணனுக்குத் தானம் கொடுப்பது யாகத்தீயில் தேவர்களுக்கு ஆகுதி கொடுப்பதை ஒக்கும்.  அசத்தான  பிராமணனுக்குக் கொடுப்பது சாம்பலில் ஆகுதி செய்வதை ஒக்கும். சங்கராந்தி புண்ணிய காலத்தில் தான தர்மங்களைச் செய்தால் அவற்றை ஆதித்தன் அளவில்லாமல் விருத்தி செய்வான்.  இரு பிறப்பாளருக்குரிய ஆறு தொழில்களில் ஓதுவித்தாலும் யாகம் செய்வித்தலும் தானம் ஏற்றலும் ஆகிய மூன்று தொழில்களில் தானம் வாங்குதலில் தோஷம் இல்லை.  வாங்குவதால் உண்டாகும் பாபம், ஸ்நான ஜபங்களால் நிவர்த்தியாகும்.  மற்ற இரண்டினால் வருகின்ற பாவம் நிவர்த்தியாவது என்பது அரிது.  ஒழுக்கத்திலிருந்து நீங்காமலும்  பரான்னம் புசிக்காமலும் உள்ள பிராமணன் கடல் சூழ்ந்த பூமி முழுவதையும் தானமாக வாங்கினாலும் அவன் தோஷத்திற்கு உட்படாமல், தானம் கொடுத்தவனுக்கு விசேஷ பயன்கள் ஏற்படச் செய்வான்.

வாசுதேவன், விநுதையின் மகனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:

"வைனதேயா!,  நான்கு வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது வரையில் குழந்தைகள் செய்கின்ற பாவங்கள் அக்குழந்தைகளின் பெற்றோரையே சேரும்.  தாய் தந்தையர் இல்லையென்றால் அக்குழந்தைகளை  ரட்சிப்பவர்களைச் சாரும்.  அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.  பாபஞ்செய்யும் குழந்தைகளுக்குப் பாபமில்லை.  குழந்தைகளை அரசன் தண்டிக்கக்கூடாது. இது நிற்க.

"பிணியால் பீடிக்கப்பட்டு, ஸ்நானம் செய்ய முடியாமல் இருப்பவனுக்கு ஆசௌசம்  நேர்ந்தால் ஆசௌசம் இல்லாத ஒருவன் பத்தரவர்த்தி ஸ்நானம் செய்து, ஓராவர்த்தி அவனைத் தீண்டி, மீண்டும் அவ்வாறு பத்ரவர்த்தி ஸ்நானம் செய்து பத்தரவர்த்தி தீண்டுவானாயின், அவன் சுத்தனாகிறான்.  பகவான் இல்லையென்று பிதற்றுவோன் யாவனோ, அவன் மஹாபாபியாவான்.   அவனுக்கும் துன்மரணம் அடைந்தவனுக்கும் உத்தரக்கிரியை செய்ய வேண்டியதில்லை. அவ்வாறு இறந்தவன் யாகம்   செய்தவன், அக்கினியைத் தண்ணீரிலும் ஒளபாசனத்தை  நாற்சந்தியிலும் எறிய வேண்டும்.  பிறகு, வருஷம் முடியும் சமயத்தில் தயையுடைய அவன் மகன் சுக்கிலபக்ஷ ஏகாதசியில் ஸ்ரீவிஷ்ணுவையும் யமனையும் ஆராதித்து, மரித்தவனைக் குறித்து பத்து பிண்டங்களைப் போட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு, நதி, அல்லது நீர்நிலைக்குச் சென்று அவற்றைப் புனலில் போட்டு தெற்குமுகமாக நின்று, மரித்தவனுடைய பெயரை மூன்று முறைகள் இரைந்து சொல்லி விட்டு, நீராடி வீட்டுக்குச் சென்று உபவாசம் இருந்து, மறுநாள் வேதசாஸ்திரம் ஓதிய  ஏழு அல்லது ஐந்து பிராமணர்களை வரித்து, மத்தியான்னத்தில், வடக்கு முகமாக அவர்களை ஆசனத்தில் உட்கார வைத்து, ஆராதித்து, பீதாக ஆடைப்பிரானைப் பூஜித்து, அவ்வந்தணர்களுக்குப் போஜனம் செய்வித்து, ஸ்ரீவிஷ்ணுவுக்கும், பிரமனுக்கும் உருத்திரனுக்கும் தூதர்களுடன் வந்த யமனுக்கும், மரித்தவனுக்கும் கிரமமாக ஐந்து பிண்டம் வைத்து இறந்தவனுடைய பெயரையும் கோத்திரத்தையும் சொல்லி, ஸ்ரீவிஷ்ணு நாமங்களையுச்சரித்து, மாய்ந்தவன் பிதுரர்களுடன் சேராததால், அவனது ஐந்தாம் பிண்டத்தை எடுத்து அகற்றி, பிறகு நமஸ்கரித்து, தானங்களைக்  கொடுத்து, மேலே சொன்ன பிராமணர்களில் மரித்தவனின் ஸ்தானத்தில் இருப்பவனுக்கு அதிக தக்ஷிணை கொடுத்து, பகவான் திருப்தியடைந்து சுபிட்சிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அவ்வந்தணர்களைப் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து, பிறகு தெற்கு முகமாக இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று புத்திரனுக்கு மனவிருப்பம் இருந்தால், சுவர்ணத்தில் சர்ப்பஞ் செய்து, சாஸ்திரம் விதித்துள்ளபடி, யாவும் செய்யலாம்" என்றார் திருமால்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

No comments:

Post a Comment