​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 16 May 2022

சித்தன் அருள் - 1135 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


ஆதிமத்யாந்தரஹிதரான ஸ்ரீமந்நாராயணரை, கருடாழ்வான் வணங்கி, "ஜெகதீசா! நித்திய சிரார்த்தம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும்?  அதை விளக்கியருள வேண்டும்"  என்று வினவினான்.  அதற்கு அறவாழியந்தணன் புள்ளரசனை நோக்கிக் கூறலானார்:

"வைனதேயா! நாள் தோறும் ஒரு சத் பிராமணனுக்குப் போஜனம் செய்வித்து அன்னத்தையும் புனலையும் ஒரு கடத்தில் நிறைத்து, அதை அவ்வேதியனுக்குத் தானமாக கொடுக்கவேண்டும். இத்தகைய விதத்தில் நித்திய சிரார்த்தம் செய்வதால் மாய்ந்த ஜீவன், இன்பமடைவான். ஓராண்டுக்குக் காலம் வரையில் அந்த ஜீவனை யமபுரம் வரையில் வழி நடத்திச் செல்லும் யமகிங்கரர்கள் அந்தச் சிரார்த்ததால் திருப்தியடைவார்கள். அதனால் அவர்கள் ஜீவனுக்கு நன்மை செய்வார்கள். ஒருவன் இறந்த பன்னிரண்டாம் நாளன்று இறந்தவனைக் குறித்து சங்கற்பப் பூர்வகமாய் பன்னிரண்டு கடங்களைத் தானஞ் செய்ய வேண்டும். தரித்திரனாக இருந்தால் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்து பெரிதான ஒரு கடத்தையும் சித்திரகுப்தனைக் குறித்து ஒரு கடத்தையும் தானம் கொடுக்க வேண்டும்!"  என்று திருமால் கூறினார்.

அதைக் கேட்டதும் கருடன் அவரை வணங்கி, "பரமபத நாதரே! மோக்ஷமும் சுவர்க்கமும் எந்தெந்த க்ஷேத்திரத்தில் மரித்தால் கிடைக்கும்? எத்தகைய கர்மங்களைச் செய்தால், அவை இரண்டும் கிடைக்கும்?  அதை அடியேனுக்கு அறிவிக்க வேண்டும்!"  என்று வேண்டினான்.

ஸ்ரீவைகுண்டநாதாப் பெருமாள், கருடாழ்வானை நோக்கிக் கூறலானார்:

"வைனதேயா!  அயோத்தி, மதுரை, மாயா , காசி, அவந்திகா, துவாரகா என்ற சப்தபுரிகளில் ஏதாவது ஒன்றில் மரிப்பவன் நிரதிசய இன்பவீடாகிய நம்முலகை அடைவான். சந்நியாசிரமம் பெற்று மரித்தவனும் ஸ்ரீவிஷ்ணு பக்தி செய்து மரிப்பவனும் ஸ்ரீராம கிருஷ்ணாதி நாமங்களைச் சொல்லிக் கொண்டே மரிப்பவனும் பேரின்ப வீட்டை அடைகின்றனர். திருத்துழாய் பயிரிட்டவனும் அதற்குப் புனல் பாய்ச்சுகிறவனும் பாபம் நீங்கி நல்ல உலகத்தை அடைகிறார்கள். பசுவுக்கும் அந்தணருக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து நேரிட்டபோது தன்னுயிரை இழக்கத் துணிந்தோனும் அவர்களை எவன் ஒருவன் ரட்சிக்கிறானோ அவன் இறுதியில் தேவர்களெல்லாம் எதிர்கொள்ளச் சுவர்க்கலோகத்தை அடைவான்.  ஸ்ரீரங்கம், காசி, குருக்ஷேத்திரம்,  பிருகுக்ஷேத்திரம், பிரபாசதீர்த்தம், ஸ்ரீகாஞ்சி, திருபுஷ்கரம்,  பூதேஸ்வரம் ஆகிய புனித நகரங்களில் மாண்டவன் மோட்சமடைவான்.  ஏழு அல்லது எட்டு வயதுள்ள கன்னிகையை மணம் புரிந்தவனும் வேத சாஸ்திரங்களை உணர்ந்தவனும், கன்னிகை, பூமி, கிருகம், பசு திகம், யானை இவற்றைத் தானம் கொடுத்தவனும் சுவர்க்கம் அடைவான்.  கிணறு, நடைவாவி, குளம், தேவாலயம் முதலியவற்றைப் புதுப்பித்தவர்கள் அவற்றை முன்பே உண்டாக்கியவர்களை விட அதிக புண்ணியத்தை அடைந்து விண்ணுலகை அடைவார்கள்.  குசைபுல்லால் வீடு கட்டித் தானம் செய்த எவனும், விருஷோற்சர்க்கம் செய்தவனும் சுவர்க்கம் அடைவார்கள்!"  என்றார்  திருமால்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்! 

2 comments:

  1. திருத்துழாய் என அழைக்கப்படுவது மேன்மையான துளசி செடியாகும்

    ReplyDelete
  2. Please help with nadi contacts of meenakshi nadi at thiruvannamali and thamarai Selvan aiya appointment sir

    ReplyDelete