​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 19 May 2022

சித்தன் அருள் - 1137 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​"கேளுங்கள் முனிவர்களே:  பரமாத்மா கருடனுக்கு நித்திய சிரார்த்தத்தைப்  பற்றியும், புண்ணிய தீர்த்த ஸ்தலயாத்திரையை பற்றிச் சொல்லி முடிந்ததும், கருடன், பகவானை நோக்கி, " சர்வேசா! ஆசௌசம் என்பது யாது? அதைப் பற்றி அடியேனுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்"  என்று பிரார்த்தனை செய்தான்.

ஆதிநாயகன், கருடனை நோக்கிக் கூறலானார்:

"ஓ! வைனதேயா!  பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும் அவனது தாயாதிகளுக்கு பத்து நாட்கள் வரையில் ஆசௌசம் உண்டு.  ஆசௌசமுடையவர்கள் ஓமங்களையும் தேவதா ஆராதனைகளையும் செய்ய கூடாது.  ஆசௌசமுடையவர்கள் வீட்டில், அந்தத் தீட்டு நீங்கும் வரையில் யாருமே உணவருந்தக் கூடாது.  நெருப்பில் வீழ்ந்து இறந்தவனுக்கும் சிங்கம்,புலி முதலிய மிருகங்களால் இறந்தவனுக்கும், நாடுவிட்டு நாடு சென்றபோது வேறு ஊரில் இறந்தவனுக்கும், உடனே கருமம் செய்யக் கூடாது.  ஆகையால், அந்தக் கிரியைகளைச் செய்ய துவங்குகிற நாள் முதல் அவனது குடும்பத்திலுள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆசௌசம் உண்டாகும்.  ஒருவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும். அரசனுக்கும் தவஞ்செய்யும் பூசுரனுக்கும் மகவேள்விகளைச் செய்யும் விப்பிரனுக்கும், அவர்களது தாயத்தார் இறந்தால் ஆசௌசம் இல்லை.  ஒருவனுக்குப் பெண் பிறந்தால் அதன் தாயத்தாருக்கு ஆசௌசம் இல்லை.  பெற்ற தாய்க்கு மட்டும் பத்து நாட்கள் ஆசௌசம் உள்ளது என்பதும்,   தந்தைக்கு ஸநானம்  மட்டுமே போதுமானது என்பதும் சிலரது அபிப்ராயம்.  திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும்   யாகஞ்செய்யும் காலத்திலும் உற்சவம் செய்வதற்காகக் கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும்  ஆசௌசம் நேர்ந்தால், அந்த ஆசௌசம் அந்தத் தொழிலில் முனைந்துள்ளவர்களுக்கு அந்தக் காலங்களில் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தின் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்த ஆசௌசத்தோடு பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தாருக்கு நிவர்த்தியாகும்.  ஆசௌசம் வருவதற்கு முன்னதாகவே பிரமணருக்குத் தானம் கொடுக்க உத்தேசித்துள்ளவற்றை ஆசௌசம் வந்த பிறகு கொடுக்கலாம்.  அவற்றைப் பிராமணர்களும் வாங்கலாம்.  பசுக்களையும் பிராமணர்களையும் மங்கையரையும் பாதுகாக்கும் விஷயத்திலும்,  யுத்த பூமியிலும் ஒருவன் தன் உயிரை இழந்தால், அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே ஆசௌசம் உண்டு.  ஆசௌசமே இல்லையென்றும் ஸ்நானம் செய்தாலே போதும் என்று சொல்பவர்களும் உண்டு!"  என்று திருமால் கூறியருளினார்.

கருடன் மாதவப் பெருமாளை நோக்கி ,  " ஜெகத்ரக்ஷகரே!  துன்மரணம் அடைந்தவன் என்ன கதியை அடைகிறான்? அவனுக்கு எவ்விதமான கர்மம் செய்யத்தக்கது?  இதை எனக்குக் கூற வேண்டும்" என்று வேண்டினான்.  

ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் கூறலானார் :

"கருடா! காலால் தாண்டியதாலும் கழுத்தில் சுறுக்கிட்டுக் கொண்டதாலேனும் விஷம் அருந்தியேனும் அக்கினியில் விழுந்தும் வைரத்தைப் பொடி செய்து உண்டேனும், பறவைகளின் அலகினாலும் எருதுகள் முட்டியேனும், ஜலத்தில் விழுந்தேனும் நாய் நரிகள் கடித்தேனும், மடிந்தவர்களும் குஷ்ட ரோகத்தினாலும் தேகத்தில் புழுவுண்டாகி இறந்தவனும், பிராமண வைணவர்கள், மிலேச்சர்கள், சண்டாளர்கள் இவர்களில் யாராலேனும் அடிபட்டு மரணமடைந்தவனும் இடி விழுந்து இறந்தவனும்,  மரம் வீழ்ந்து மடிந்தவனும், சூத்திர மங்கையர், ஆடை வெளுக்கும் வண்ணாத்தி இவர்களை தீண்டிவிட்டு, ஸ்நானம் செய்யாமல் மரித்தவனும் நற்கதியடைய மாட்டார்கள்.  அவர்கள் நரகத்தையே அடைவார்கள்.   அவ்வாறு மரித்தவரைச் சார்ந்தவருக்கு ஆசௌசம் இல்லை. அவர்களுக்காக உடனடியாகக் கிருத்தியங்களைச் செய்ய வேண்டியதுமில்லை.  நாராயணபலியைச் செய்த பிறகே கருமங்களைச் செய்யலாம்.  துன்மரணத்தையடைந்தவன், அவன் பிராமணனாயின் ஆறு மாதங்களுக்குப் பிறகும், அவன் க்ஷத்திரியனாயின் இரண்டு மாதங்களுக்குப் பிறகும், வைசியனாயின் பதினைந்து நாட்களுக்குப் பிறகும், சூத்திரனாயின் அவன் இறந்தவுடனேயும் அவரவர்க்குரிய கர்மங்களைச் செய்ய வேண்டும்.    கங்காதீர்த்ததிலாவது, யமுனா தீர்த்தத்திலாவது நைமிசாரணியத்தலாவது புஷ்கார ஷேத்திரத்திலாவது, அரசமர நிழலிலாவது, மாட்டுக் கொட்டிலிலாவது, இல்லத்திலாவது நாராயணபலியைச் செய்தல் வேண்டும்.

"வேத மந்திரங்களால், பகவானை ஸ்தோத்திரம் செய்து, ஆராதனை செய்து, தெற்கு முகமாக இருந்து கொண்டு, சங்கு, சக்கர பீதாம்பரம் தரித்தவராயும், நித்தியராயும், சர்வாந்தர்யாமியாகியும், திவ்விய மங்கள விக்கிரக அனந்த கல்யாண குண விஸ்வரூபராகியும் இருக்கும் ஸ்வாமீ மரித்தவனுக்குத் தேவரீரே நற்கதி கொடுக்க  வேண்டும்!" என்று அந்தப் பகவானைப்  பிரார்த்தனை செய்து, தியானஞ்செய்து, பக்தியுடன் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து,  தானிய தானம் கொடுத்து பிண்ட தர்ப்பணம் முதலியவற்றைச் செய்தல் வேண்டும்.  அவ்வாறு செய்த தினத்திற்கு மறுதினம், சுவர்ணத்தினால் ஸ்ரீவிஷ்ணு பிரதிமை ஒன்றையும் தாமிரத்தினால் ருத்திரப் பிரதிமை ஒன்றையும் வெள்ளியினால் பிரமாவின் பிரதிமை ஒன்றையும் இரும்பினால் யமனுடைய பிரதிமை ஒன்றையுஞ் செய்வித்து,   மேற்கில் ஸ்ரீவிஷ்ணுவையும் கிழக்கில் பிரமனையும் தெற்கில் யமனையும் வடக்கில் ருத்திரனையும் மத்தியில் மரித்தவனையும் வைத்துப் பூஜித்து,  ஐந்து கும்பங்கள் வைத்து, அவற்றில் நவரத்தினங்கள் பெய்து, பூணூல் சாற்றி, அலங்காரஞ் செய்து, மேலே சொன்ன ஐந்து தேவர்களையும் குறித்து  சிரார்த்தம் செய்து, பிண்டம் வைத்து, எட்டு வகைத் தானங்களையும் செய்து, செப்புப் பாத்திரத்தில் திலதமும் ஹிரண்யமும் வைத்துத் தானம் வழங்கி, ரிக் வேதம் உணர்ந்தவருக்குப் பயிரோடு கூடிய பூதானத்தையும், யஜுர் வேதம் ஓதியவருக்குக் கன்றுடன் கூடிய பசுவையும் சாமவேதம் ஓதியவருக்கு சம்பா நெல்லும் கொடுக்க வேண்டும்.  முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளினால், மரித்தவனது உடலைப் போலப் பிரதிமை ஒன்றையும் செய்ய வேண்டும்.

"கருடா! அந்த முன்னூற்று அறுபது காம்புகளுக்கும் விவரம் சொல்லுகிறேன்!" கேட்பாயாக.

சிரசுக்கு நாற்பதும், கழுத்துக்குப் பத்தும், மார்புக்கு இருபதும் , வயிற்றுக்கு இருபதும், இரு கரங்களுக்கு நூறும், இடைக்கு இருபதும் , தொடைகளுக்கு நூறும் , முழந்தாள்களுக்கு முப்பதும், இனக் குறிக்கு நாலும் , விருஷணங்களுக்கு ஆறும், கால்களுக்குப் பத்தும் வைத்து, மீண்டும் சிரசுக்குத் தேங்காயும் முகத்துக்குப் பஞ்சரத்தினமும்,நாவுக்கு வாழைப் பழமும், மூக்கிற்கு எட்பூவும்,  காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும்,  தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்கு சவுரியும், தோலுக்கு கிருஷ்ணாஜீனமும் (மான் தோல்) ஸ்தனப் பிரதேசத்துக்கு குன்றியும், நாபிக்குத் தாமரைப் பூவும் விருக்ஷணங்களுக்கு பனங்காய்களையும் வைத்து, சந்தன புஷ்பங்களால் அலங்காரஞ் செய்து, சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்களைச் செய்ய வேண்டும்.  இவ்வாறு செய்தால் துன் மரணம் அடைந்தவன் நற்கதியை அடைவான்.  இவ்விதமாகக் கர்மம் செய்யும் புத்திரனுக்குப் பத்து நாட்களும் மற்ற தாயத்தார்களுக்கு மூன்று தினமும் ஆசௌசம் உண்டு!".

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்...........தொடரும்!

No comments:

Post a Comment