​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 April 2022

சித்தன் அருள் - 1118 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​​கருடன், திருமாலைப் பணிந்து, " சர்வேசா! தங்கள் இதுவரை கூறிய விஷயங்களை மிகவும் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்.  இது போதாது.  கருமங்களைச் செய்யும்போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தைக் கோமயத்தால் ஏன் மெழுக வேண்டும்?  பிதுரர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எள்ளையும் தர்ப்பைப் புற்களையும் உபயோகிப்பானேன்? கட்டிலில் படுத்துறங்கியபடியே இறந்தவனும் உப்பரிகையில் மாய்ந்தவனும் நற்கதியை அடையமாட்டான் என்று தேவரீர் முன்பு ஒரு சமயம் கூறியிருக்கிறீர்கள்.   அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில எப்படி இறத்தல் வேண்டும்?  தானங்களையெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும்?  அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு   ஏற்படும் பயன்கள் யாது?  இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும்!" என்று பிரார்த்தித்தான்.

கருடாழ்வான், அவ்வாறு வேண்டியதும், பரமகாருண்யனான ஸ்ரீபுருஷோத்மன், கருடனை நோக்கிக் கூறலானார்:

"வைனதேயா ! நல்ல கேள்வி!  இந்தக் கேள்வியைக் கேட்டது சரியானதுதான்.  மாய்ந்தவனைக் குறித்துச் செய்ய வேண்டியவற்றையெல்லாம் விளக்கமாகக் கூறுகிறேன்.  நீயும் கவனமாகக் கேட்பாயாக.  புத்திரனைப் பெறாதவனுக்கு எந்தவுலத்திலும் இன்பம் இல்லை.  இகத்திலும் பரத்திலும் இன்பத்தைப் பெற வேண்டும் என்று இச்சிப்பவன், நிச்சயமாகக் கருமமும் தவமும் செய்த நற்புத்திரனைப் பெறவே வேண்டும்.  தர்மமும் தவமும் செய்யவில்லையென்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரியாது.   அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரப்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும்.  கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது.  நல்லதொரு நன்மகனை பெற்றவனே, எல்லாவுலகங்களிலும் நன்மையை அடைவான்.

"வைனதேயா! கருமங்களை செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே, ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை திருவலகால் துடைத்துச் சுத்தம் செய்து, கோமயத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும்.  அவ்வாறு சுத்தஞ் செய்யாமல் கிரியைகளைச் செய்தால், அரக்கரும், பூதங்களும் பிரேதங்களும்  பைசாசங்களும் அங்கு வந்து அக்கருமங்களை அங்கு செய்யவிடாமலும், அக்கருமங்களை முற்றுப் பெற முடியாதவாறும் தடுத்து நிறுத்தி விடும்.  சுத்தம் செய்த ஸ்தலத்தில் கருமம் செய்யத் துவங்கினால், தேவர்கள் அவ்விடம் வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள்.  மரித்தவன் தானே. அவனுக்குச் செய்யும் கர்மங்களை எங்கு செய்தால்தான் என்ன?  என்று எண்ணி, மரித்தவனுக்குத் தூய்மை செய்யாத இடத்தில் கர்மங்களைச் செய்தால், அக்கருமங்களைச் செய்ததனாலடையும்  பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு, இறந்தவன் நரகத்தையே அடைய நேரிடும்.

'எள்' என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும் .  அந்த எள் இரு வகைப் படும். கருப்பு எள். வெள்ளை எள் என்ற இருவகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும்  தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். அதாவது சிறப்புடையதாக அமையும்.  சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால், பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.  சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புல், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று!   அந்தத் தர்ப்பையின் இரு கடையிலும் பிரமனும் சிவனும், அதன் நடுவே, ஸ்ரீஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் முதலிய கர்மங்களெதையும் செய்யலாகாது.  பிராமணருக்கும்  மந்திரத்திற்கும் தர்ப்பைக்கும் அக்கினிக்கும் திருத்துழாக்கும் நிர்மாலிய தோஷமில்லை.  ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம்.  ஏகாதசி விரதமும் திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும் பசுவும் பிராமண பக்தியும் ஸ்ரீஹரியின் சரணமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தைத் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும்.   இறக்கும் நிலையை அடைந்தவன், கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்தலத்தில், சூசைப் புல்லை பரப்பி, அதன் மீது எள்ளை இறைத்து , அந்தத் தர்ப்பைப் புல்லணையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் திருத்துழாயையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயாரப்  புகன்ற வண்ணம் மடிவானாகில், அவன் அயனரனாதியருக்கும்  அரிதாகிய நிரதிசய இன்ப வீடாகிய நமது உலகத்தை வந்தடைவான்.  மாய்பவன் , தர்ப்ப சயனத்தில் குப்புறபடுக்கலாகாது.  முதுகு கீழுறவே சயனஞ் செய்தல் வேண்டும்.  உயிர் நீங்கும் முன்பே திருத்துழையோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதிய தானங்களையெல்லாம் கொடுத்து விடவேண்டும்.  அவற்றில் உப்பைத் தானம் செய்வது மிகவும் சிறப்பாகும்.  உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும்.  ஆகையால் அதற்கு மகிமை அதிகம்.  மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்க லோகத்தை அடைவான்!" என்றார் திருமால். 

திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். "கருடா! தானங்களைச் செய்ய வேண்டிய முறைகளையும், அத்தானங்களால்   ஏற்படும் பயன்களையும் கூறுகிறேன்: கேள்.

"தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகாதானம்  என்ற பெயரைப் பெற்றது.  அறப்படி வாழ்ந்து அறங்களையே  புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூணூலுக்குப் பருத்தியே ஏதுவானது.  சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் அவர்களுடைய மானத்தைக் காப்பதற்குரிய ஆடைகளையணிவதற்கும்  பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும்.  பருத்தித் தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரமருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள்.  பருத்தி தானஞ் செய்தவனது வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடையவனாய்,  மஹா பலசாலியாய்,  உலகாளும் அரசனாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து,  யாவரும் போற்றிப் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். திலதானமும், கோதானமும்,  பூமிதானமும், சுவர்ணதானமும் , தானிய தானமும் செய்தால், மகா பாபங்கள் அனைத்தும் உடனே விலகி விடும்.  திலாதானமும் கோதானமும் சிறப்பான தானங்களாகும்.  அவ்விரண்டு தானங்களும் மிகக்கொடிய பாவங்களையும் நசிக்கச் செய்வன.  ஆகையால் இந்தத் தானங்களைச் சாதாரண, சாமானிய பிராமணர்களுக்குக் கொடுக்கலாகாது. உத்தம பிராமணருக்கே இவ்விரண்டு தானங்களையும் வழங்க வேண்டும். மங்கையருக்கும் தனக்குவேண்டியவருக்கும்  அம்மூன்றையும்  உத்தேசமாகக் கொடுக்கலாமே தவிரத் தானமாகக் கொடுக்கலாகாது.  தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும்.  கிரகண புண்ணிய காலமும் தானம் செய்வதற்குச் சிறந்ததுதான்.  ஓ வைனதேயா!  எந்த மனிதனும் தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழும்காலத்திலேயே தனக்கான தான தருமங்களைச் செய்து கொள்வது நல்லது.  அவ்வாறு தானஞ் செய்ய விரும்புவோனுக்குப் புத்திரன் இருந்தால் அவனிடம் தான் தனக்காகத் தானம் செய்ய விரும்புவதைச் சொல்லி,அவனுடைய ஒப்புதலைப் பெற்ற பிறகே தானத்தைச் செய்தல் வேண்டும்.   ஒருவன் மரிக்கும் காலத்தில் திலத்தையும், இரும்பையும் லவணத்தையும்  பருத்தியையும், தானியத்தையையும்,  பொன்னையும், பூமியையும், கோவையும் தானம் செய்தால் மிகவும் விசேஷமாகும்.எள்ளையும்,  இரும்பையும் தானம் செய்தால் மிகவும் விசேஷமாகும்.  எள்ளையும், இரும்பையும் தானம் செய்தால், யமதர்மன் மகிழ்ச்சியடைவான்.  லவணத்தானம்  செய்தால் இறப்பவனுக்கு யமனிடத்தில் பயம் உண்டாகாது.  பருத்தித் தானத்தைச் செய்தால் யமதூதர்களிடத்தில் பயம் உண்டாகாது.  பருத்தி தானத்திற்கு முன்புச் சொன்னதை தவிர, இந்தப் பயனும் உண்டு.  தானியங்களைத் தானம் செய்தால், கூற்றுவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள்.  சுவர்ணதானத்திற்கும், கோதானத்திற்கும் பாபங்களையெல்லாம் நசிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு  என்று முன்னமேயே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.  மரணமடையும் நிலையை அடைந்தவன், நம்மையே தியானித்து, நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் அவன் நிரதிசய இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தையடைவான்.  தந்தை இறந்த பிறகு அவனுடைய புத்திரன், கயா சிரார்த்தம் செய்வதைவிட தந்தை இறக்கும் சமயத்தில் அவன் தன் தந்தையின் அருகிலேயே நெருக்கியிருந்து தான தருமங்களைச் செய்வதே உத்தமமாகும்.  கூடாரமும், முசலமும், சூரிகையும், இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாகும்.  பொதுவாக கூறவேண்டுமானால் அவனது ஆயுதங்கள் அனைத்துமே இரும்பாலானவைகள்.  அதனால் தான் ஒருவன் மரிக்கும் காலத்தில் இரும்பை தானம் செய்தால் யமன் மகிழ்வான் என்று   சொன்னேன்.  எவன் இறக்கும் போது எவனுடைய கிரகத்தில் இரும்பு தானம் செய்யப்படுகிறதோ, அந்த கிரகத்தில் யமதூதர்கள் அடி வைக்கவும் அஞ்சுவார்கள்.  இறப்பவன் யாராயினும் இரும்புதானம் செய்தல் வேண்டும்.  அந்தத் தானத்தைச் செய்தால் காண்டாமிருகன், ஒளதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தியடைவார்கள்.

"வைனதேயா!  ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுமுள்ள உறுப்புகளில் பிரும்மருத்திர இந்திராதி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் இருக்கிறார்கள்.  தாயும், தந்தையும், குருவும், சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீவிஷ்ணுவேயன்றி மற்றோருவருமில்லை.  "சர்வம் விஷ்ணு மயம் ஜகத்" என்ற அருள் வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா ?   நிலம், நீர், நெருப்பும், காற்று, ஆகாயம், சுவர்ணம், தானியம், தேன் , நெய், பசு, யாகம், அந்தணர், அஜசங்கர இந்திராதி தேவர்கள் யாவுமே விஷ்ணு மயமேயாகும்.  ஒன்றைக் கொடுப்பவனும் வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயன்றி வேறொன்றும் இல்லை.  ஜீவர்கள் பூர்வத்தில் செய்த கர்மத்தை அனுசரித்துப் பாப புண்ணியங்களில் அவர்களது புத்தியை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியஞ் செய்தவன் சுவர்க்கம் அடைவான்.  பாபம் செய்தவன் நரகத்தை அடைவான்." 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................... தொடரும்!

2 comments:

  1. கோவில் திருப்பணிக்கு பணம் கொடுக்கும் போது பார்த்து செய்யவும். தாங்கள் கொடுக்கும் பணம் எவ்வாறு செலவு செய்ய படுகிறது என்று பாருங்கள். ஏமாற்றம் அடையாதீர்கள். பொருட்கள் கல் மணல் சிலைகள் என்று வாங்கி கொடுங்கள். பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள். ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள்.

    ReplyDelete
  2. PLEASE RESUME ENGLISH GNANABOOMI ASAP.It doesnt make any sense to close it as siddhas messages are for all the seekers all over the world.There is no respose from the blogger for previous requests too.Do let us know the valid reason behind it.

    ReplyDelete