​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 3 April 2022

சித்தன் அருள் - 1106 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயண மூர்த்தியானவர் கருடாழ்வானை நோக்கிக் கூறலானார்:

"ஓ காசிப  புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி நான் சொல்லப் போவதையும் கேட்பாயாக. பூர்வஜன்மத்தில் செய்த பாபத்தின்னாலேயே உலகில் பிறவியெடுத்த ஜீவன் மரிக்கிறான் .  கர்ப்பதிலேயே  கருவானது சிதைந்து விட்டால், ஒரு கிரியையும் செய்ய வேண்டுவதில்லை.  ஐந்து வயதுக்குட்பட்டு இறந்தால், சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து, ஊர்க் குழந்தைகளுக்கு, பால், பாயாசம், போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும்.  குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களைச் செய்யலாம்.  விருஷோற்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்திற்காகச் செய்ய வேண்டியதில்லை.  மரித்தவன் பாலகனாயினும் இளைஞனாயினும்  விருத்தனாயினும் உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.  மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங்குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும்  இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும்.  பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும் மூன்று வயது வரையில் பாலகன் என்றும் ஆறு வயது வரையில் குமரன் என்றும் ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்று சொல்ல வேண்டியதென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வைனதேயனே!  பிறந்த பதினாறு மாதம் வரையில் சிசுவென்றும் இருபத்தேழு மாதங்கள் வரையில் பாலன்  என்றும் ஐந்து வயது வரையில் குமரன் என்றும் ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்றும் பதினாறு வயது வரையில் கைசோரன் என்றும் சொல்வதுண்டு.  கடைக் குலத்தில் பிறந்த எந்த ஜாதியாரும் பூணுலை அணியாலாகாது.  பிரம, க்ஷத்திரிய. வைசியரே பூணுல் அணிதல் வேண்டும்.  ஐந்து வயது நிறைந்தும் பூணுல் புண்டேனும்,  பூணாமலேனும் ஒருவன் இறப்பானாகில் அவனைக் குறித்து அதிக மந்திரங்களைச் சொல்லாமல், பத்து நாட்களுக்குப் பிண்டம் போட வேண்டும். அவ்வாறு இறப்பவனுக்கு உடலொடங்கூடிய வாழ்வும், பெற்றோரோடு ஸ்நேகமும், விஷயங்களில் உடன்பாடும், மற்றவையும் சிறிது காலமேயாகையால், கிரியைகளும் குறைவாயிற்று.  ஐந்து வயதுக்கு மேல், பன்னிரண்டு வயதிற்குள்ளேனும் அல்லது பன்னிரண்டு வயது நிரம்பியேனும்  மரித்து விட்டால் விருஷோற்சனம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.  ஆனால் சபிண்டீகரணம் செய்யலாகாது.  பால், தயிர், வெல்லம் முதலியவற்றைச் சேர்த்துப் பிண்டம் போடல் வேண்டும்.   குடம், குடை, தீபம் முதலியவற்றைத் தானம் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யாவிட்டால் இறந்தவன், மறுபிறவியில் உலகத்தில் மரமாகத் தோன்றுவான்.  அந்த மரம் நெல் குத்தும் உலக்கை செய்யப் பயன்பட்டு விடும்.  பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால், மரித்தவன் மறுஜன்மத்தில்  நல்ல குலத்தில்  பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான்.  நல்ல புத்திரனையும் பெறுவான்.  தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜனித்தல் உண்மை!  ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால் அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும்.  ஒருவன் தனக்குத் தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்லுகிறது.  

"சூரியன் ஒருவனே உளன்; சந்திரனும் ஒருவனேதான்.  தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து, அவற்றின் உள்ளே பார்த்தால், ஒவ்வொரு குடத்திலும் பகற்பொழுதில் சூரியனும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனும் தோன்றுவது போல, ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாகப் பிறக்கிறான். ஆகையாலேயேதான் பெரும்பாலான பிள்ளைகள், தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகிறார்கள்.  ஆயினும் குருடனுக்குக் குருட்டுப் பிள்ளையும், உமைக்கு உமைப்பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஓன்று, தனயனுக்கும் பொருந்தியிருக்கும்" என்றார் திருமால்.  

கருட பகவான், பரம பதியை வணங்கித் தொழுது துதித்து, "ஜெகந்நாதா! உலகில் தன புத்திரன் என்றும் தன் மனைவி வயிற்றில் பிறந்த புத்திரன் என்றும், புத்திரர்கள் பத்து வகையினராக இருக்கிறார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.  ஒருவன், விலைமகளைப் புணர்ந்து, ஒரு புத்திரனைப் பெற்றான் என்றால் அந்தப் புத்திரன் அவனுக்குக் கர்மம் செய்யலாமா? அவ்வாறு அந்த விலைமகளுக்குப் பிறந்த பிள்ளை அவனுக்குக் கருமஞ் செய்தால், அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? ஒருவனுக்குப் பிள்ளையே பிறக்காமல் பெண் மட்டுமே பிறந்திருக்கிறாள். அந்தப் பெண்வயிற்றுப் புத்திரனும் இலன். அவன் மரித்தால் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும்? இவற்றை விளக்கியருள வேண்டும்".  என்று கேட்டான், பக்தவத்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்:

புள்ளரசே!  ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் 'புத் ' என்ற நகரத்தை அந்த ஜன்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்குமே புத்திரன் பிறந்தால் அவன் குலத்துப் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.  ஒருவனுக்குப் பத்துப் புத்திரர்கள் பிறந்தார்கள் என்றால்  அவர்களில் முதல் மகனே அதாவது தலைச்சனே தன் தந்தை  மரித்தால், அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்யக் கடமைப்பட்டவன். உரிமையும் உடையவன். மற்ற ஒன்பது புத்திரரும்  அவனது இகலோக வாழ்வுக்குச் சாதகமாவார்களேயன்றிப் பரலோக சாதகத்துக்கு முற்றிலும் உரியவராக மாட்டார்கள்.  தனக்குத் தன் மனைவியின் வயிற்றில் பிறந்த புத்திரன் தான் மரித்த காலத்தில் செய்யத்தக்க செய்கடன் எல்லாம் செய்யத்தக்கவன்.  செய்யக் கடமைப்பட்டவனும் ஆவான்.  மற்ற புத்திரர்கள் இருந்தால் இவரும், இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்ததிகளையுமே செய்யக்கடவர்.   ஒருவன், தனக்குப் பௌத்திரன் பிறந்து

அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பனாகில் இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான்.  கொள்பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதை விட நல்லுலகையடைவான்.பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன், அந்தப் பெண்ணுக்கு விலை கொடாமல், திருத்துழாயோடு  (துளசி) அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல், அந்தப் புத்திரன் தன் குலத்து இருபத்தொரு தலைமுறையினரையும் கரையேற்றுவான். அவ்வாறு பிறந்த புத்திரனே தாய் தந்தையருக்குக் கர்மஞ் செய்யத் தக்க உரிமையுடையவன்.  ஒருவன் மரித்தால் அவனுடைய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம்.  அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தை செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின் செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன், தன்னைப் பெற்றவனைக் குறித்தன்று அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது. காமக் கிழத்தியின் புத்திரராயினும் அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்து தானங்களை செய்யலாம். ஆனால் அந்தணருக்குப் போஜனம் முதலியன செய்விக்கலாகாது. போஜனத்தின் பொருட்டு அரிசி முதலியவற்றைக் கொடுக்கலாம்.  அதைக் கொடுக்காமல், சொந்த மனைவிக்குப் பிறந்த மகனைப் போலவே தன்னை நினைத்துக் கர்மங்களைச் செய்யலாகாது. 

"சற்புத்திறன் தீர்த்த யாத்திரை செய்யலாம். தனது பிதுரரைக் குறித்து, அன்ன  ரூபமாயும் ஆமை ரூபமாயும் ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தத்தைச் செய்யலாம்.  வேசி புத்திரன் தீர்த்த யாத்திரை செய்யின், அன்ன ரூபம் தவிர மற்ற இரண்டு ரூபங்களில் எந்த ரூபிசிரார்த்ததையும்  செய்யலாம். சூத்திர மரபில் எந்த ஜாதியாராயினும் அன்ன ரூபமாய்ச் சிரார்த்தம் செய்தால், செய்தவனும் சாப்பிட்ட பிராமணனும் பிதுர்த்தேவரும் நரகமடைவது போல, வேசி புத்திரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின், அவனும் சாப்பிட்ட பிராமணனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள்.

"பறவையரசே!  ஒரு பார்பனிக்கும், பிராமணன் மகளுக்கும் சந்யாசிக்கும் பிறந்த புத்திரனும், பிரம்மகுல மங்கைக்கும் சூத்திரனுக்கும் பிறந்த புத்திரனும், சகோதிரத்தில் மணஞ் செய்து கொண்டவருக்குப் பிறந்த புத்திரனும் சண்டாளராவர்.   ஒருவன் தன்னுடைய ஜாதியிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவள் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால் மக்கள் அனைவரும் சற்புத்திறனையே பெறுதல் வேண்டும் !" என்றார் திருமால்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!​

3 comments:

  1. அருஞ்சொற்பொருள்
    ===================

    விருத்தன் - முதியவர்

    உதககும்ப தானம் - ஒரு குடத்தில் நீர் நிறைத்து உதககும்ப தானம் செய்தல் வேண்டும். அதாவது நீர் நிரம்பிய குடத்தை தானம் செய்வது.

    விருஷோற்சனம் - இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற காரியங்கள்

    சபிண்டீகரணம் - இறந்தவரை பிதிர் தேவர்களோடு சேர்ப்பதற்காக பிண்டமிட்டு செய்யப்படும் கிரியை சபிண்டீகரணம் ஆகும். ( பிண்டம் என்பது அரிசிமா, எள், உழுந்து, பால், தேன், பழம், சர்க்கரை போன்ற பொருட்களால் செய்யப்பட்ட உருண்டையாகும் )

    சற்புத்திரன் - நற்குண நற்செய்கையுள்ள புதல்வன்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா இதில் பெண்களை பெற்றவர் மரித்தார் எனில் மகள் வழிப் பேரன் அவருக்கு பிதுர்கடன்களை செய்யலாமா என்ற கேள்விக்கு பதில் உள்ளதா. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete