​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 27 September 2023

சித்தன் அருள் - 1439 - அகத்தியப்பெருமானுடன் ஒரு சில அனுபவங்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் அடியேனுக்கு தருகிற வேலைகளில் மிக முக்கியமானது, அவரின் "சித்தன் அருள்" வலைப்பூவை நிர்வகித்து உங்களிடம் அவர் அருளை கொண்டு சேர்ப்பது. அதை அடியேன் அவருக்கு செய்கிற நித்திய பூஜையாக செய்து வருகிறேன். இதுவரை சொன்னது வெகு சொற்பம். அதுவும் அவர் அருளால்.

அடியேன் பார்த்து வந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் சற்றே வேகமாக நிறைய விஷயங்களை தட்டச்சு செய்து சித்தன் அருளில் பதிவிட எண்ணிய பொழுது ஒரு சில நாட்களில், கண் பார்வை மிக மிக குறைந்து போய் எழுத்துக்கள் எதுவும் தெரியாமலே போய்விட்டது. கண்ணுக்கு என்னவாயிற்று என்று ஒரு மருத்துவரை அணுகி பரிசோதித்ததில் இரு கண்ணிலும் புரை ஏற்பட்டு பார்வை மறைத்திருப்பது தெரிய வந்தது. மருத்துவரோ அறுவை சிகிர்சைதான் செய்ய வேண்டும் என்றார்.

கண் பார்வை ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். அதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், அவனின் நம்பிக்கை, தைரியம், சுயசார்பு இவை மிகவும் பாதிக்கப்படும். அனைத்திற்கும் பிறரை சார்ந்திருக்கிற நிலைமை வந்துவிடும். பிறர் உதவியை நாடும் பொழுது, என்னதான் உறவுகளாக இருந்தாலும், ஒரு அளவுக்குமேல் அவர்களுக்கும் வெறுப்பு வந்துவிடும்.

அறுவை சிகிர்ச்சை செய்து கொள்ளலாமா? வேண்டாமா? எந்த மருத்துவர் சிறப்பானவர், எவ்வளவு செலவழித்து சிகிர்ச்சை எடுத்துக் கொண்டாலும், பலனளிக்க வேண்டும், போன்ற எண்ணம் எல்லாம் அடியேனை சூழ்ந்தது. அந்த நேரத்தில், என் நண்பரின் தகப்பனாருக்கு, இதே கண் அறுவை சிகிர்ச்சை செய்ய, அது எந்த பலனையும் கொடுக்காமல் போனது. இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்வது என யோசித்து, அகத்தியப்பெருமானிடம் கேட்டுவிடுவோம் என்று திரு.ஜானகிராமனை அழைக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அவரை அழைத்த போது, எங்கோ வட இந்தியாவில் பயணித்துக் கொண்டிருந்தார். விஷயத்தை கூறி, அடுத்து எங்கேனும் அமர்ந்து நாடி வாசிக்கும் பொழுது,

அடியேன் அறுவை சிகிர்ச்சை எடுத்துக்கொள்ளலாமா? என்று அவர் வாக்கை வாங்கித்தரும்படி வேண்டிக்கொண்டேன்.

அன்று மாலையே அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு கிடைத்தது.

"அறுவை சிகிர்ச்சை செய்து கொள்! எல்லாம் அதற்குப்பின் நலமாகும். உனக்கு சிகிர்ச்சை செய்யும் மருத்துவன், மிகுந்த கைப்புண்ணியம் உள்ளவன். அவன் சொல்கிறபடி நடந்துகொள். அறுவை சிகிர்ச்சையின் பொழுது, அங்கு யாம் இருப்போம். எல்லாம் நலமாகும்!" என்றார்.

அகத்தியப்பெருமானே யாம் இருப்போம் என்று கூறியபின் எதை பற்றியும் அடியேன் சிந்தித்து குழப்பமடைவதில்லை. ஏன் என்றால் அப்படிப்பட்ட அனுபவங்கள் அவர் பல நேரங்களில் அடியேனுக்கு தந்துள்ளார். 

அந்த மருத்துவரோ, அடியேனின் பெற்றோர்களுக்கு மிக சிறப்பாக அறுவை சிகிர்சை செய்து பார்வையை திருப்பி கொடுத்தவர். அறுவை சிகிர்ச்சை அன்று காலை 7 மணிக்கு முதலில் வரச்சொன்னவர், மறுபடி கூப்பிட்டு "9 மணிக்கு வாருங்கள், இரு வயதானவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு முடித்து விடுகிறேன்" என்று மாற்றினார். சரி! என 9 மணிக்கு சென்ற பொழுது, "உங்களுக்கு கடைசியில் பண்ணுகிறேன். மேலும் இரு வயதானவர்கள் வந்திருக்கிறார்கள்" என மாற்றி வைத்தார்.

நீங்க எத்தனை தடவை மாற்றினாலும், அறுவை சிகிர்சை செய்யப்போவது அகத்தியப்பெருமான், அவர் நினைத்த நேரத்துக்கு தான் நடக்கும், என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

மற்றவர்களுக்கெல்லாம் 20-30 நிமிடங்களில் அறுவை சிகிர்ச்சை செய்தவர், அடியேனுக்கு ஒரு மணிநேரம் எடுத்து பல முறை கண் உள்ளுக்குள் சுத்தம் செய்து, சிகிர்சை செய்தார். மறுநாளே அவர் வீட்டுக்கு சென்று, கட்டவிழ்த்து வாசிக்க சொன்ன பொழுது, எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தது. அகத்தியப்பெருமானுக்கு நன்றி சொன்னேன்.

அந்த மருத்துவருக்கு அறுவை சிகிர்ச்சை அன்று என்ன நடந்தது என்று புரியவில்லை. ஆறாவது அறுவை சிகிர்ச்சை செய்த பின்னும், மிக தெளிவாக, அசதி இன்றி தெம்பாக இருந்தார் என கூறினார். நன்றி கூறி, அமைதியாக கேட்டுக் கொண்டேன்.

இத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும், வேறொரு விஷயத்துக்காக அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து பேசவேண்டி வந்தது. அகத்தியப்பெருமான் கூறிய பதில் அடியேனுக்கு, மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

கண் பார்வை பாதிக்கப்பட்டதும், திடீர் என ஒரு எண்ணம் உதித்தது. அடியேனுக்கு இயலாமல் போன பொழுது, சித்தன் அருள் வலைப்பூவை பற்றி யோசிக்கவே இல்லையே. அதை அகத்திய பெருமான் கைகாட்டுகிற வேறு யாரிடமாவது ஒப்படைக்கவோ, அல்லது அவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வது பற்றியோ யோசிக்கவே இல்லையே, இதை இப்படி விடக்கூடாது. இது இவ்வுலகுக்கு பிரயோசனப்பட வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும். அப்படிப்பட்டவர் குருநாதர் தேர்ந்தெடுப்பவராக இருக்க வேண்டும். ஆகவே அவரிடம் கேட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்.

உண்மையாகவே, அடியேனின் நண்பர்களிடம் கூறுவது என்னவென்றால், யாரேனும் ஒருவர் வந்து, "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ தான் என் வாழ்க்கையை செம்மையாக வாழ உதவியது. நான் அகத்தியப்பெருமானுக்கு மிக மிக கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினால், அடியேனுக்கு குருநாதர் தந்த வேலையை சிறப்பாக செய்துள்ளேன் என்ற திருப்தியில் ஓய்வு பெற்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன். ஆனால் இன்று வரை ஒருவர் கூட அப்படி உரைக்கவில்லை.

அகத்தியப்பெருமானிடம் நாடியில் இந்த கேள்வியை கொண்டு சென்று கேட்ட பொழுது அவர் தந்த பதில் அதிர்ச்சிகரமாக இருந்தது.

"இல்லையப்பா! வேண்டாம்! என் பார்வையில் ஒருவர் கூட சரியில்லை. இங்கு உரைப்பதை வாசிக்கும் ஒருவரும் எளிய விஷயங்களைக்கூட தன் வாழ்க்கையில் நடை முறைப் படுத்துவதில்லை. அனைவருக்கும், செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், பதவி வேண்டும், தலைமைத்துவம் வேண்டும், நாடி வேண்டும், சமூகத்தில் உயர்ந்த நிலைமை வேண்டும், தான் செய்வது சரியா தவறா என்று கூட கவனிக்க மனதில்லாதவர்கள். அடுத்தவர் செய்கிற நல்ல விஷயங்களில் பொறாமை கொள்கிறார்கள். தான் நினைப்பதை அடைய, வாமாச்சாரத்தில் சென்று விழுகிறார்கள். அனைவர் மனதிலும் இவைதான் நிற்கிறதே தவிர, ஒரு குவளை பாலுக்குள், ஒரு துளி விஷமே கெடுதல் என்று யாரும் நினைப்பதில்லை. மேலும் கூறினால் மனவருத்தம்தான் மனிதனுக்கு மிஞ்சும். யாமும்/சித்தர்களும் இன்றும் நம்பிக்கையை கைவிடாமல் மனிதனுக்காக இறைவனிடம் வாதம் புரிகிறோம்.

உன் பார்வையை திருப்பி தந்துவிட்டேன். தொடர்ந்து செய்! பின்னர் வரும் காலத்தில் பார்க்கலாம்! ஆசிகள்! " என முடித்துக் கொண்டார்.

இத்தனை வருடம் அகத்தியப்பெருமானின் அடியவராக இருந்து அவர் வாக்குகளை வலைப்பூ வழி அனைவருக்கும் தந்தும் "ஒருவர் கூட அவர் வைத்த பரிட்ச்சையில் தேர்வடையவில்லையா?" என்ற வருத்தத்துடன் இந்த அனுபவ தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. அகத்தீசாய நம 🙇‍♂️ நன்றி ஐயா 🙏

    ReplyDelete
  2. என்னை போன்றவர்கள் பரீட்சை எழுவதுவதற்கே தகுதி அற்றவர்கள்.. மனது சுத்தமில்லாமல் சித்தன் அருள் கிடைப்பது இல்லை. ஏன் இப்படிபட்ட கர்மவினையோடு பிறந்தோம் என்று தோன்றுகிறது..

    அகத்தியரும் முருகனும் வழிநடத்த வேண்டும் என்று வேண்டுவது தவிர வேறு எந்த வழியும் இல்லை,🙏🙏

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      ஒருவரும் தன்னை இப்படி தாழ்வாக நினைக்க கூடாது என அகத்தியப்பெருமான் பல முறை உரைத்துள்ளார். அவர் தருகிற ஒவ்வொரு வாய்ப்பையும், வாழ்க்கையின் பல தேடல்களில் வசதியாக மறந்து, நேரமின்மை, குடும்ப சூழ்நிலை என்றெல்லாம் தவிர்த்து விடுவது அவரவர் தவறு. எதிர்பார்ப்பின்றி அவர் உத்தரவை என்று நிறைவேற்றுகிறோமோ, அன்று முதல் அவர் வைக்கும் பரீட்ச்சையில் தேர்வடைகிறோம் என்று அர்த்தம். இன்று சம்பாதித்தது, அவர் அழைத்ததால் கைவிட்டு போகிறதா, போகட்டும் என்று இருக்கிற மனநிலை வேண்டும். அடுத்த நிமிடம், அவர் பார்த்துக்கொள்வார் என்று தைரியத்துடன் இருங்கள். நிச்சயம் அவர் இறங்கி வந்து வழி நடத்துவார்.

      அனைத்து தொகுப்பிலும் அடியேன் தெரிவிக்க நினைப்பது, "உங்களாலும் முடியும்". உங்கள் கேள்விக்கு அவர் ஏதேனும் ஒரு வழியில் பதில் சொல்வார். நலம் பெறுக, நம்பிக்கையுடன், அவர் அருளால்.

      Delete
    2. தங்கள் பொன்னான வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கின்றது.
      என்னை தாழ்வாக நினைக்கவில்லை, எனது உண்மை நிலையை அறிந்து வைத்துள்ளேன். அதற்காக அகத்தியர் ஐயா என்னை கைவிட்டு விட்டார் என்று கூறவில்லை.

      அகத்திய பெருமான் ஒரு வாகில் கூறியது.. மனது சுத்தமில்லை என்றால் நாங்கள் அருகிலும் வர மாட்டோம் என்று. இதுதான் பரீட்சையில் பங்கு பெற அடிப்படை தகுதி.

      பல முறை நான் கண்டங்கள் இருந்து தப்பியது தெய்வ செயலே குரு அருளாலே என்றும் நம்புகின்றேன். ஆனால் என்ன, இது எல்லாம் தூரத்தில் இருந்தே அருள் பெறுவது. சூரியனின் வெளிச்சம் புல் பூண்டுக்கும் எந்த பேதமில்லாமல் கிடைப்பது போல.

      அகத்தியர் ஐயா ஜீவ நாடி மூலம் எனக்கு தெரிவித்தது - நான் உனது நண்பன். என்ன ஒரு பாக்கியம், கோடி நன்றிகள் அகத்தியருக்கு. 🙏🙏🙏

      அவர் எப்போது நீயும் என் சேய் என்று கூறுவார் என்று சித்தம் சிவமாக வேண்டும் ஒரு தூசி நான்.

      Delete
  3. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    அய்யனின் திருப்பாதம் களை தொட்டு வணங்குகிறேன் மன்னித்துவிடுங்கள் இன்னும் அதிகமாக முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  4. Sorry Sir.Agree not done well. Will do properly further with his blessings🙏

    ReplyDelete
  5. Agathiyar enakku pala narpalangalai koduthullar, Enakku guru Agathiar aasigal irundhal indha poruppai naan etrukolla thayar.Om agatheesaya namaha

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete