​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 12 September 2022

சித்தன் அருள் - 1182 - அகத்தியப் பெருமானின் வாக்குகள்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் அருளிய வாக்குகள், பல நேரங்களில் சுருக்கமாக இருக்கும். ஆனால், அவற்றை விவரிக்க நினைத்தால் மிகப் பெரிய விஷயமாக மாறும். அப்படி அவரில் நின்று வெளி வந்த ஒரு சில வாக்குகள் உங்களுக்கு நினைவு படுத்துவதற்கு (யாருக்கோ), கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • "நடக்கட்டும் நம்புகிறோம்" - மனிதர் வாக்கு!  "நம்புங்கள் நடக்கும்" - சித்தர் வாக்கு.
  • திடமாய் உழைத்தும் வெற்றி இழந்திடின் தோற்றுப்போ! கர்ம பாரம் கரைந்திடும்.
  • தேவைக்காக இறைவனை தேடாமல், தேவையே நீதான் இறைவா என்றிரு.
  • இறைவனுக்கு நன்றி சொன்னால், அதுவே குருதக்ஷிணையாகும்.
  • பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதை புரிந்துகொள்ளும் சக்தி உனக்கேதடா.
  • நல்லவனாய் இல்லாவிடினும், நல்லதை செய்யாவிடினும், கெட்டவனாய் வாழ்ந்திடாதே, கெடுதலை செய்யாதே.
  • மனமது செம்மையானால், மந்திரம் ஜெபிக்கவேண்டா!
  • இருப்பதில் கொடுப்பது சிறப்பு. இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.
  • நல்ல விஷயங்களை செய்து வந்தால், யாமே அவனை தேடி செல்வோம்.
  • சமூகத்தில் இறையருள் நிலைக்கவே, பண்டிகைகளும் தான தர்மமும்.
  • நலம் எண்ணி, நலம் உரைத்து, நலம் செய்ய, நலமே நடக்கும்.
  • தர்மத்தின் வழி செல்லச் செல்ல, கர்மத்தின் வலி குறையுமப்பா.
  • பொது நலமும், சத்தியமும், நற்சிந்தனையும் கொண்டு வாழ்கின்ற மனிதனுக்கு, எல்லா நாழிகையும் சுப நாழிகை தான்.
  • செய்கின்ற தர்மங்கள், ஒருவனின் இறையருளை கூட்டி, ஜென்ம பாபத்தை கழித்து, புண்ணியத்தை பெருக்கி, தேவை அற்றதை, வகுத்து வைக்கும்.
  • இழக்க இழக்கத்தான் ஒரு மனிதன் பெறுகிறான்.
  • பிறரை நிம்மதியாக வாழ வைத்தால், ஒருவன் நிம்மதியாக வாழலாம்.
  • ஒரு மனிதன், தன் இதயத்தை தவிர இறைவனுக்கு கொடுப்பதற்க்கென்று வேறெதுவும் இல்லை.
  • மனிதர்களிடம் பேசுவதே சித்தர்கள் செய்யும் பாபம்.
  • ஒருவன் செய்கின்ற பாபங்கள்தான் தசா,புக்தி,அந்தரமாக, ஏழரை சனியாக வருகிறது. இறைவன் அதனுள் சாட்சியாகத்தான் இருக்கிறார்.
  • எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து விடு. இறைவனே உன்னை தேடி வருவார்.
  • பிறருக்கு ஈவதெல்லாம், ஒரு மனிதன் தனக்குத் தானே ஈவதாகும்.
  • குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக்கூடாது. சிஷ்டியனை தேடித்தான் குரு வரவேண்டும்.
  • காசியில் இறந்தால் முக்தி என்பது தவறு. காசி எனும் புருவமத்தியில் மனதை நிறுத்தி இருந்தால் முக்தி என்பதே சரி.
  • "நான்" என்ற தனித்தன்மை ஒழிந்தபின் அங்கே சித்தன் முளைக்கிறான்.
  • தவறை செய்கின்ற மனிதனுக்கு இருக்கும் மனஉறுதி, நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் போகின்றது?
  • மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரைபோல் அன்றி மழைக்கால கூரை போல் இருக்கவேண்டும்.
  • எந்த மந்திரமும், கவசமும் சுயநலம் இன்றி, பொது நலத்துக்காக கூறினால், பலமடங்கு உடன் பலனளிக்கும்.
  • சவத்தை, சிவமாக்கத்தான் தினமும் காலை நீராடல்.
  • உள் அதிர்வு மனிதனை உணர்த்தும், உள் அமைதி சிவத்தை உணர்த்தும்.
  • சொத்து சேர மனிதனுள் அகம்பாவம், சித்தம் சேர மனிதனுள் சிவபாவம்.
  • புண்ணியம் சேர்ப்பதால், கர்மாக்கள் நீற்றுப்போகும்!
  • இறை பாதத்தில் பூவிட, இறை சேர்ந்தோர் ஆசீர்வதிப்பர்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்............... தொடரும்!

1 comment: