​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 4 February 2023

சித்தன் அருள் - 1284 - ஜீவநாடி பொது வாக்கு - 1 (31/01/2023)


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தொகுப்பு "1279"இல் "அகத்தியரிடம் கேட்க வேண்டிய கேள்வி" என்கிற தலைப்பில், உங்களுக்கு ஏதேனும் பொதுவாக்குக்கான கேள்வி இருந்தால் அனுப்பித்தர கேட்டிருந்தேன். இதுவரை சுமார் 80 கேள்விகள் வந்தது. அதில், முதல் கட்டமாக 42 கேள்விகளுக்கு அகத்தியப்பெருமான், காக புஜண்டர், பாம்பாட்டி சித்தர்கள் போன்றோர் நாடியில் வந்து ஒரு சில கேள்விகளுக்கு பதில் தந்து, வேறு சில கேள்விகளுக்கு திட்டியும் பதில் அளித்தார்கள். திட்டுகிற விதமாக கேள்வி கேட்டவர்கள் வருத்தமடைய வேண்டாம். அவரவர் கேள்வி கேட்டது தெரியும் என்பதால் பெயரை மறைத்து வெளியிடுகிறேன். முதல் 20 கேள்வியம் பதிலும் இப்பொழுது தருகிறேன். [தட்டச்சு பிழைகள் இருந்தால், சுட்டி காட்டவும்].

1.  மிருகங்கள், பறவைகள் போன்றவைகளுக்கு அந்தகரணங்கள் நான்கும் உண்டா? அவை அவைகளை எவ்வாறு பயன் படுத்துகின்றன? என்று அருள வேண்டும்.

அப்பனே! எதை சொல்ல. நிச்சயம் இல்லை. எது என்று அறிய! அறிய! அவ் ஆன்மாவும், பல வகைகளிலும் வாக்குகள் செப்பிவிட்டேன் அப்பனே! இத்தனை வருடங்கள் அவ் ஆன்மா பூமியில் பிறந்து அனுபவிக்க வேண்டும் என்று கூட. ஆனால், அவ் ஆன்மா சரீரத்தை மட்டும் மாற்றிக்கொண்டே இருக்கும். பின் உதாரணமாக 200/300 ஆண்டுகள் வாழவேண்டும் என்றால், உடம்பும் ஒத்து வராது. அவ் ஆன்மா, சமயத்தில் மாற்றிக்கொண்டே இருக்கும். 5 வருடங்கள் அல்லது 4 வருடங்கள் ஆக ஒரு ஜீவா ராசியாக இருந்தால் அப்பொழுது அதன் பயனை அடைந்து விடும், முக்தியும் (சிலவேளை) அடைந்து விடும். அதாவது, இறைவன் பாதையிலே, பின் காலடியில் சேர்ந்துவிடும் அவ் ஆன்மா. இரண்டு ஆண்டுகள் மீதம் இருக்கவே, மீண்டும் அவ் ஆன்மா வந்து, பின்னர் இறைவனிடத்தில் சென்று விடும். அவ் ஆன்மாவுக்கு விதி முடிந்த பின்பு எப்படியாவது இறைவன், தன்பால், அழைத்து விடுவான் அப்பனே. இதை புரிந்து கொண்டால் நன்று!

2. கதிர்காம முருகன் பற்றி தெரியவேண்டும்.? கருவறையில் நடப்பது வேல் வழிபாடா அல்லது சிலை வழிபாடா?திரை இட்டிருக்க காரணம் என்ன?அங்கு பக்தர்களுக்காக கொடுக்கப்படும் "வேலின்" மகத்துவங்கள் மற்றும் அதை வழிபடும் முறைகள்?

அப்பனே! எது என்று அறிய! அறிய! ஒருநாள், இவந்தனையும் அங்கே செல்லச் சொல் அப்பனே! இத்திருத்தலத்தில், பல விஷயங்களையும், பின் மருந்தும் சொல்வான் அப்பனே! ஆனால் அப்பனே! பின் எங்கோ இருந்து, இத்தலத்தின் சிறப்புகளை அங்கே இருந்து செப்பினால் தான், அதன் மதிப்பும்/அதிகாரமும் ஓங்கி நிற்கும் அப்பனே! முருகன் வள்ளி தெய்வயானையுடன், அத் திருத்தலத்தில் இருக்கின்றான், பல ஞானியர்களும் இருக்கின்றார்கள். மாதத்தில் ஒரு நாள் தேவர்களும், முனிவர்களும் அங்கு படை எடுப்பார்கள். நிச்சயம் ஒரு நாள் இச்சுவடி அங்கு செல்லும். அப்பொழுது யான் தெரிவிக்கின்றேன், அனைவருக்கும் கூட.

3. வள்ளலார் அருளிய செவ்வாய் கிழமை விரதம் பற்றி குருநாதர் அருளில் அறிய ஆவல்.
அப்பனே, பொதுவாக விரதம் என்றாலே, புலன்களை கட்டுப்படுத்துவது என்று பொருள். ஆனால், எவரும் கட்டுப்படுத்துவது இல்லை அப்பா! ஒரு வேளை உணவு மட்டும் உண்ணாமல் இருப்பது கூட தெரியாமல் செய்து வருகிறார்கள். அப்பனே! மங்கள வாரம் (செவ்வாய் கிழமை) எது என்று அறிந்து, அதிலிருந்து 7வது நாளில், ராமலிங்க அடிகளார் அவர் இடத்தில் (வடலூர்) தங்கியிருப்பார், இதன் சூட்ச்சுமம் பிறகு உரைக்கின்றேன், கடை நாளில்.

4. அன்பின் உருவாக கண்ணப்பர். நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!! நில்லு கண்ணப்ப!!! இறையின் அற்புதம் 6 நாள். இங்கு 6 நாள் என கணக்கில் இறை நிகழ்த்திய அருள்நிலை பற்றி அறிய வேண்டி பணிகின்றோம்

அவனுக்கு பல நாமங்கள். இறை, அவன் செயலில் நெகிழ்ந்து, இரண்டாவது கண்ணை எடுக்கப் போகும் பொழுது, "அது கண் அப்பா,அது கண் அப்பா!" என்று கூறி தடுத்து ஆட்க்கொண்டது. 

5. இச்சா சக்தி, கிரியா சக்தி . முன்னது அன்பில். பின்னது செயலில். இரண்டில் எதன் மூலம் பக்தி செலுத்தி எளிதாக அருள் பெறுவது என உணர்த்துங்கள் குருநாதா!

அப்பனே! எது என்று அறிய! அறிய! இதற்கு யான் பதிலளிக்க வேண்டும் எனில், ஒரு மண்டலம் வரை, அமைதியாக, தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும் அப்பனே! புலன்களை கட்டுப்படுத்த வேண்டும் அப்பனே! அப்படி செய்தால் தான் இதை புரிந்து கொள்ள முடியும் அப்பனே! அப்படி செய்தால் தான் இந்த சக்தி அதிகரிக்கும் அப்பனே! இதை செப்பினால் காடுகளாக அலய வேண்டும். அங்கு சென்றால் தான் இதை உணர முடியும். பைத்தியமாகிவிடுவான். இதை எடுத்துரைத்தால், அவந்தனுக்கு உலகத்திலுள்ளது அத்தனையும் மறந்து விடும் அப்பனே. இறைவன்தான் மெய் என்று உணர்ந்து கொள்வான் அப்பனே! மனிதர்கள் முதல் வகுப்பில் இருக்கின்றார்கள். இதை கடைசி வகுப்பில் சொல்லுகின்றேன். பூஜ்ஜியத்திலிருந்து ஒன்றுக்கு வந்து, இரண்டு, மூன்று என ஒவ்வொரு வகுப்பாக முடித்து கடைசி வகுப்புக்கு வரட்டும். பணம் பொருட்களுக்கு காத்திருக்கிறான். ஆகவே, இதற்கும் பொறுத்திருக்கத்தான் வேண்டும். இந்த கேள்வியை யார் கேட்டார்களோ, அவனை, அடிக்கடி அண்ணாமலையை வலம் வரச்சொல். போதுமானது. அப்பொழுது தெரியும், அவந்தனுக்கு. என்னவென்று.

6. வேல்மாறல் பாராயணம் பற்றி குரு மொழியில் கேட்க விழைகின்றோம்!
அப்பனே! எதை என்று அறிய! அறிய! ஆறுபடை வீட்டில் முருகன். ஐந்துக்குள்ளே இருக்கின்றான் அப்பனே! முருகன். அப்பனே, அவ் ஐந்து தத்துவத்தை புரிந்து கொண்டால், ஆறாவது படை அனுகிரகமாக கிட்டிவிடும் அப்பனே. மனிதன் ஒன்றாவது வகுப்பில் இருக்கின்றான். அதிலிருந்து 10வது வகுப்பு வந்து தேறட்டும். அனைத்தும் கிட்டும். ஆனால் பிறகு சொல்கின்றேன். இந்த கேள்விக்கான பதிலை உணர்வதற்கு கூட சில நிலைகளை அடைய வேண்டும். எதுவுமே செய்யாமல், அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவேண்டும் என்று அலைகின்றான் மனிதன் அப்பனே! இன்றைய மனிதர்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள் அப்பனே! ஒன்றும் தெரியாமல் கடைசியில்,இறைவனை நோக்கி செல்லவேண்டும் என்றிருக்கிறார்கள் அப்பனே. படிப்படியாக செல்வதுதான் உத்தமம். இவை எல்லாம் மேன்மையான கேள்விகள். இப்படி கேட்டதும் தவறு என்பேன் அப்பனே! பின்னர் இதன் விளக்கத்தை தருகின்றேன் அப்பனே! இதை புரிந்து கொண்டால் நன்று.

7. 1008 லிங்கம் புதுச்சேரி மணவெளி எந்த சித்தரால் உருவாக்கப்பட்டது?

இதன் சூட்ச்சுமத்தை அங்கே வந்து உரைக்கின்றேன், அப்படி செய்தால் தான், மக்களுக்கும் புரியும் என்பேன். இவ் நாடி அங்கும் செல்லும் என்பேன், அப்பனே!

8. இரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்புகளை கரைக்க ஏதேனும் மருந்து அருள வேண்டும்!

நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே! எதை என்று அறிய!அறிய! நடை பயிற்சி, சிரசாசனம், தனுர் ஆசனம், சக்கராசனம், இவைகளை எல்லாம் செய்து கொண்டே வந்தால் இவை எல்லாம் அண்டாது என்பேன் அப்பனே. அப்பிணி வந்த பின் செய்தால், பெரியவர்கள் சொல்வார்கள், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா என்று! இளவயதில் கூட பலவகையான மூலிகை சாற்றை நீரில் கலந்து கொடுத்துவிட்டால் எந்நோயும் அண்டாது. கணவன் ஓடோடி அலைகின்றான், பணத்தை சேர்க்க. அதே போல் தாயவளும் அலைகின்றாள் பணத்தை சேர்க்க. ஆனாலும் கடைசியில் பார்த்தால், அக்காசுகளை வேறொருவனிடத்தில் கொடுத்து விடுகிறார்கள். அப்பனே! ஒன்றும் லாபமில்லை அப்பனே! இவை எல்லாம் தெரிந்து கொண்டால்தான் நன்று.   யாங்கள் பல திருத்தலங்களை உருவாக்கியுள்ளோம். அத்திருத்தலங்கள் எல்லாம் சென்று, அந்த சக்திகளை உள்வாங்கி, சமூகத்தில் பரப்பி விடுங்கள். இந்த கேள்வியை கேட்டவன் மட்டுமல்ல, அனைத்து சேய்களுக்கும், இது பொருந்தும். இப்புவியில் பிறந்தாலே கர்மாதான் காரணம். இப்புவியிலே பிறந்தாலே, கட்டங்கள்தான். ஆகவே, பல ஆத்மாக்களுக்கும் உரைத்தோம், உதவிக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆகவே, அப்பனே! யங்கள் போராடிக்கொண்டு இருக்கின்றோம். அனைத்தையும் மாற்றுவோம், இதையும் கூட.

[அடியேனுக்கு, இந்த விஷயத்தில், இதற்கு முன் உரைத்த ஒரு முறையை கூறுகிறேன். ஒரு சிறிய துண்டு தோல் சீவிய இஞ்சி, சாறு பிழிந்து விலக்கப்பட்ட எலுமிச்சை கனி அரை மூடி (சிறிது சிறிதாக சீவி, இரண்டையும், ஒரு 100 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து, 50 மில்லியாக நீர் வற்றியதும், காலையில், முதலில், வெறும் வயிற்றில், 1 மாதம் குடித்து வருக. உடலில் எங்கு கொழுப்பு இருந்தாலும் கரைந்து விடும். உணவில் கட்டுப்பாடு (கொழுப்புள்ள ஆகாரத்தை தவிர்க்க) வேண்டும். இதனுடன், தினமும், 45 நிமிடம் நடை பயிற்சி. பின்னர் சென்று பரிசோதித்தால் பல அடைப்புகளும் விலகி, இருப்பதை காணலாம்.

ஒரு நாளில், பல முறை ம்ருத சஞ்சீவனி முத்திரையில் (15 நிமிடம்) அமர்வது மிகுந்த பயன் அளிக்கும்.]

9. குழந்தை பேறு அமைய பொதுவான பரிகாரம் சொல்லுங்கள்!

ஏற்கனவே , இதை பற்றி பல இடங்களில் உரைத்துவிட்டோம். அதை தேடி கண்டு கொள்க!

10. கோவில்களில் முடி காணிக்கை கொடுப்பதை பற்றி, அதன் தாத்பர்யம் என்ன?

இதை பற்றி யான் எதை சொல்ல அப்பனே! மனிதர்கள் இதை நம்பப் போவதில்லை. புஜண்ட முனி இது பற்றி உரைப்பான்.

புசுண்டர் வாக்கு:-

இதிலிருந்து மனிதன் எவ்வளவு சுயநலக்காரன் என்பது புரிகின்றது. ஏன், மனிதன் இறைவனிருக்கும் இடத்திற்கு சென்று, "இறைவா! யான் ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்துவேன், எவ்வுயிரையும் கொல்ல மாட்டேன் என்று கூறக் கூடாது? ஆனால், தன் சுய நலத்திற்காக அனைத்தும் செய்பவன் மனிதன். மனிதன் திருடன். எதை என்று அறிய! இந்த கேள்வியை கேட்டானே, அவனை ஒரு திருத்தலத்திற்கு சென்று, பிக்ஷை எடுத்து, குறைந்தது ஒரு பத்து ஏழை எளியோருக்கு அன்னத்தை இடச்சொல், அவ் பைத்தியக்காரனுக்கு, ஏதாவது ஒரு பைத்தியக்காரன் வந்து நிச்சயமாய் உதவி புரிவான்.

11.கடுகு எண்ணெயில் வீட்டிலும்/கோவில்களிலும் விளக்கேற்றலாமா?

அறிவுள்ளவன். மிகுந்த அறிவுள்ளவன், புசுண்ட முனி பேசுகின்றேன். புத்தி கெட்ட மனிதனே, அனைத்தும் தெரிந்து கொண்டும், அவன்தன் முட்டாளா. அவனை யான் என்னவென்று கூறுவது. அவன் மனிதனா? மிருகமா? மிருகங்களுக்கு கூட சில விஷயங்கள் தெரியும். ஆனால், மனிதனுக்கு தெரியாமல் போய்விட்டதே!

12.ஒருவர் இறந்தபின் அவருக்காக செய்யப்படுகிற கிரியைகள், உண்மையிலேயே இறந்த ஆத்மாவிற்கு போய் சேருமா? இல்லை உடலை எரித்து மீதியை நதியில் கரைப்பதுடன் நிறுத்திக் கொள்ளலாமா? ஏன் கேட்கிறேன் என்றால், 13 நாட்களுக்கு இறந்தவரின் குடும்பம் சடங்கை நடத்த, படுகிற சிரமங்கள் ஏராளம்! இந்த 13 நாட்களில் புரோகிதர்களும், அவரின் உதவியாளர்களும் அந்த குடும்பத்திலிருந்து கறந்து விடவேண்டும் என்று ஆடுகிற ஆட்டத்தை பார்த்தால், போதும் என்றாகிவிடுகிறது!

அப்பனே! எதை என்று அறிய! அறிய! அப்பனே! அகத்தியன் பேசுகின்றேன். ஒரு ஆத்மா, ஒரு வருடத்திற்கு பந்த பாசங்களுடன் அலையும். அந்த ஆத்மாவுக்கு, தன் நிலைமை புரிவதற்கு ஒரு வருடம் ஆகும் என்பேன் அப்பனே! ஒரு வருடம் கழித்துத்தான், அதற்கு, மனித ரூபம் உண்டா, இல்லை மற்ற ரூபங்களா என்று இறைவன் முடிவெடுப்பான். ஒரு ஆன்மா, எத்தனை வருடங்கள் வாழ வேண்டும் என்று கூட முன்னரே உரைத்துவிட்டேன். அவ் ஆன்மா, பூலோகத்தில் பிறந்துவிட்டால், எதைச் செய்தாலும் லாபம் இல்லை அப்பனே. முக்தி பெற்றுவிட்டால், அவர்களுக்கு செய்தால், நிச்சயம் அவர்களை சென்றடையும், அப்பனே! ஆனால் முத்திக்கு எப்படி செல்வது என்பது கூட யாருக்கும் தெரியாது. இதில் தான் சூட்ச்சுமம் மறைந்துள்ளது மகனே! அவ் ரகசியத்தை அவனிடத்தில் கூறுகின்றேன் ஒருநாள்.

13.உலகத்தில் நிலவும் அசாதாரண நிலைமை மாறி சகஜமான நிலமை அடைய வேண்டும்!

அப்பனே! எது என்று அறிய! அறிய! புசுண்டன் வந்து இதற்கு வாக்கு செப்புவான்.

புசுண்டர் வாக்கு:-

மனித முட்டாளே, மனிதத் திருடன், முதலில் மனிதன் திருந்தட்டும். அதாவது, மனிதனின் செயல்கள் எல்லை மீறிக்கொண்டே இருக்கின்றது. அதனால், ஏதாவது, கட்டங்களை கொடுத்து, கொடுத்துத்தான் மனிதனை, மனிதனாக்குவோம். பின்புதான் இதைப் பற்றி யோசிப்போம். ஆனால் மனிதனும், அனைத்தும் தெரிந்தும் தெரியாதவன்போல் நடிக்கின்றானே! அவன், மகா பெரிய நடிகன், மகா பெரிய திருடன்.

14. தோப்புக்கரணத்தைப் பற்றி கூறவும் ஐயா

அப்பனே! தோப்புக்கரணம் இட்டால் அனைத்து வியாதிகளும் சென்று விடும் அப்பனே! பின் அனைத்து உறுப்புக்களுக்கும் பலம் வரும், என்பேன் அப்பனே! நோய்களே வளராது என்பேன் அப்பனே! இளமையிலிருந்து, முதுமை வரை, 48 தோப்புக்கரணம், ஒரு நாளைக்கு இட்டால், அப்பனே, இளமையுடன் வாழலாம் அப்பனே! இவை எல்லாம் தெரியாமல் போனதிற்கு...... இன்னும் சொல்லுகின்றேன் அப்பனே! பொறுத்திருந்தால்!

15. ஐயா வீட்டில் ஒருவர் இறந்தால் 6 மாத காலம் 1 வருட காலம் மலைக் கோவிலுக்கும் போகக் கூடாது என்று கூறுகின்றனர் விளக்கம் கூறுங்கள்.

மனிதனுக்கு, ஆசைகள், பாசங்கள் விட்டு விடுவதில்லை. அதனால், மலையேறும் பொழுது, அவ் பாசத்தினால், அப்பனே, யோசித்துக்கொண்டே நடப்பான். அவன்தனும், ஏறும் பொழுது, ஏதாவது யோசனையில், சறுக்கி விழுந்து விடுவான்.  இதுதான் சங்கதி.

16. ஒரு யுகம் என்பது எத்தனை வருடங்கள்?

அப்பனே! அனைத்தும் தெரிந்து கொண்டு, கேட்பது தவறு என்பேன் அப்பனே. அவனை என்னிடத்தில் நேரடியாக கேட்கச்சொல். அவனுக்கு சரியான பதிலடி கொடுக்கின்றேன், அப்பனே!

17. ஐயா, இந்த கலியுகத்தில்  சுத்த சைவ நெறியை   ( ஜீவ காருண்யம் ) உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க கூடிய  சூழ்நிலை  ஏற்படுமா ?

நிச்சயம் ஏற்படும் என்பேன் அப்பனே! ஏன் என்றால், ஈசன் கட்டத்தை அள்ளி தரப்போகின்றான். அப்பொழுது புரியும்.

18.  அமெரிக்கா போன்ற நாடுகள் மிக விரைவில் அழிந்து இந்தியா போன்ற நாடுகள் மிக சக்திவாய்ந்த நாடாக மாறும் என்று கேள்வி படுகிறேன். இது எப்போது நடக்கும் அல்லது மிக விரைவில் நடக்குமா.

எதை என்று அறிய! அறிய! தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும், மற்றவர்கள் அழிய வேண்டும் என்று எண்ணுகின்றானே! இவன் மிகப்பெரிய திருடனப்பா.

19. நடப்பது அனைத்தும் ஈசன் சித்தம் என்றும், எள்ளளவும் அவனின் கணக்கு நடந்து ஏறும் என்பது உண்மை நிலை. இதுவே அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் விதியாகும். இதை, ஈசன் நம் எண்ணத்தில் இருத்தி மதி வழியாய் நம் கதியை நடத்தி வருகிறார்.அப்படி இருக்க, தனி ஆன்மாவின் முயற்சி தான் என்ன?

ஒரு ஆத்மா முயற்சி எடுத்தால் அனைத்தும் சாதித்து விடுமா என்ன? இறைவன் இட்ட கணக்கு, மனிதனால் மாற்ற முடியாது. ஆனால் மனிதன் இட்ட கணக்கை இறைவனால் மாற்ற முடியும் என்பேன். ஆன்மாக்கள் எல்லாம் எவ்வாறு கேள்விகள் கேட்பார்கள் என்று கூட. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இத்தனை ஆண்டுகள் என்று கூட. உடம்பால் தவறு செய்தால், அடுத்த ஆண்டுகளில கட்டங்கள் படும் என்பேன். அதாவது, இப்பொழுது யான் சொன்னாலும், எவருக்கும் புரியாதப்பா. அதாவது, பின் சித்தன் போக்கு, பைத்தியம் போக்கு. இதை உணர்ந்து கொண்டால், நீ பைத்தியம் ஆக வேண்டும் என்றால், சித்தனிடத்தில் வாருங்கள். பைத்தியம் ஆக்கிவிட்டு, அனைத்தும் தெரிந்துவிட்டு நீ ஓய்ந்துவிடலாம் அப்பனே. பலபேர் அப்படி நுழைந்து தான் பைத்தியம் ஆகி இருக்கின்றார்கள் அப்பனே!

விதியை அனுபவிப்பது யார்?  மரணத்திற்கு பின் வாசனைகளை சுமப்பது யார்? உயிருக்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேற்றுமை என்ன? நம் செயல்களால் வரும் பிறவிகளில் பாதிக்கபட வேண்டிய ஆன்மாக்கள், நம் நற்கதியால் பிறவாநிலை பெற்றால், அவர்கள் எப்படி கழிப்பார்கள்? விதி அனுபவித்து கழிக்க வேண்டும் என்பது நியதி.

இதற்கு பாம்பாட்டி சித்தர் பதிலளித்தார்.

ஆடு பாம்பே, ஆடு பாம்பே, மனதில் எந்த குறை, ஆடு பாம்பே. ஆடியபின், ஆட்டம் எடுத்து ஓடு பாம்பே. ஓடிய பின் மண்ணில் நுழைந்தால், பின் எங்கிருந்து வரும் பாம்பே. வரும் பாம்பே, நின்றது, நிற்காமல் ஓடு பாம்பே, நின்ற பின் நிற்காமல் ஆகிவிடும் பாம்பே. ஆடிய பின் அடங்கிவிட்டால், மோக்ஷம், மோக்ஷம் இல்லை என்றால், மீண்டும் ஆடு பாம்பே. ஆடு, ஆடு, கடைசியில், ஒன்றுக்கும் உதவாது ஆடு பாம்பே. இந்த விளக்கத்தை தெரிந்து கொண்டவன், மிக்க உயர்ந்தவன். பின் சரியாக உணராதவன், ஆடு பாம்பாகி, பின் அகத்தியரிடம் வரட்டும், சொல்வான் பாம்பே.

20. பழங்காலம் முதல் தற்காலம் வரை மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி ஏமாற்றி இயற்கை வளம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களுக்கும் துன்பம் நேருகிறது. பணம் என்ற ஒன்றை வைத்து வணிகம் உலகை இயக்குகிறது. இதற்கு என்ன செய்ய? கடுமையான சட்டங்கள் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அழிக்கிறது உலகம் நல் வழியில் அமைதியாக இருக்க மக்கள் என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

இதற்கு வழிபாடுகள் இல்லையப்பா. மனிதனே அனைத்திற்கும் காரணம். உலகம், இயற்கை வளம் அழிந்து கொண்டு செல்கிறது. ஈசன் எங்கு கை வைத்தால், அனைத்தும் ஆடும் என்பது கூட அவந்தனுக்கும் தெரியும் அப்பனே. அவ்வளவு சுலபத்தில் ஈசன் விட்டு விடுவானா என்ன அப்பனே! அதனால், கடமையை செய்தே வாருங்கள்! பலனை எதிர் பார்க்காதீர்கள் என்று கூட சொல்லியிருக்கின்றார்கள் அப்பனே! மறந்து விட்டீர்களா என்ன? நேர்மையை கடை பிடியுங்கள் அப்பனே! அதன் பலனை நாங்களே கொடுப்போம். உணவை உண்ணுகின்றீர்களே அப்பனே! அதை சரியாக செய்கின்றீர்கள் அப்பனே. அதன் கடமையை, இறைவன் தான் கொடுக்க வேண்டும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. அகத்தீசாய நம 🙇‍♂️🙏 நன்றி ஐயா

    ReplyDelete
  2. வணக்கம் எப்படி பார்த்தாலும் அதர்மிகளே நன்றாக வாழ்கிறார்கள் உண்மைக்கே என்றும் வேதனையை தருகிறான் அதர்மவான்கள் தனது வாழ்நாளில் 95 சதவிகிதம் அதர்மம் இழைத்து சுகமாக வாழ்ந்து விட்டு கடைசி இரண்டு வருடங்கள் மட்டும் கஷ்டத்தை அனுபவித்து விட்டு மாண்டு விடுகிறார்கள் ஆனால் நல்லவனோ தனது வாழ்க்கையை இழந்து இளமையிலேயை இழந்து பணத்தை இழந்து தனது வாழ்நாளில் 95 சதவிகிதம் கஷ்டத்தை அனுபவித்து விட்டு 5 சதம் சந்தோசத்தை அனுபவித்தால் அந்த வாழ்க்கை வாழ்வதற்கு மாண்டே போய் விடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து இதற்கு குருநாதர் என்ன பதிலளிக்க போகிறாரோ

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete