​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 2 September 2020

சித்தன் அருள் - 900 - ஆலயங்களும் விநோதமும் - மகாதேவர் கோவில், வைக்கம், கோட்டயம், கேரள மாநிலம்!


​ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த ​​விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாதபுரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை "வியாக்ரபாதர் மேடை" என்று அழைக்கிறார்கள்.

​ஆதரவற்ற, ஏழை பிராமணர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் வீட்டுக்கு முன் அமர்ந்திருக்கையில், இன்னொரு பிராமணர் வந்து, "நான் இங்கே அமர்ந்து சிறிது நேரம் ஜபம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். வந்தவரை அனுமதித்து , அவர் ஜபம் முடிந்தபின், தன் இயலாமையை, ஆதரவற்ற ஏழ்மையை கூறி மனம் திறந்துள்ளார். அதற்கு வந்தவர் "நீ உடனேயே போய், திருவிதாம்கூர் மகாராஜாவை பார்! வழி கிடைக்கும்" என்றுரைத்து கிளம்பி சென்றார்.

இவரும் வந்தவர் சொன்னார் என்பதற்காக, மறுநாள், நம்பிக்கையின்றி மகாராஜாவை போய் பார்க்க, மிகுந்த மரியாதைகளுடன் இவரை ராஜா உபசரித்து வரவேற்றார். முதல்நாள் இரவில், மகாராஜாவின் கனவில் தோன்றிய இறைவன் "என் வைக்கம் கோவிலில், "கட்டியம்" கூறப்படுவதில்லை. ஆகவே, நாளை ஒரு பிராமணர் உன்னை பார்க்க வருவார். அவரிடம் 5 அடிஉயர மரத்தடியில், வெள்ளி பதிக்கப்பெற்று, அதன் மேல் நந்தி தேவர் அமர்ந்திருக்கும் நிலையில் உருவாக்கி அவரிடம் கொடுத்து, தினமும் நடக்கும் "அத்தாழ பலிபூஜையின்" பொழுது, அவரை, அந்த தடியில் இருக்கும் நந்தி தேவர் என்னை பார்த்திருக்கும் நிலையில், இவர் கண்ணை மூடிக்கொண்டு கோவிலை நான்கு முறை மந்திர ஜெபம் செய்து நடந்து வரச்சொல்" என உத்தரவு வந்தது. மஹாராஜாவும், இறைவன் உத்தரவை சிரம் மேற்கொண்டு செய்து, வந்தவருக்கு மாதாமாதம் சம்பளமும் கொடுக்க உத்தரவிட்டார்.

இன்றும், தினமும் இரவில் நடக்கும் பூசையின் பொழுது, உலாவரும் இறைவனை பார்த்து கண்ணை மூடியபடி நடந்து, தோளில் அந்த 5 அடிஉயர நந்திதேவர் பதித்த வெள்ளித்தடியை சுமந்தபடி, ஒருவர் மந்திர ஜபம் செய்தபடி வருகிறார். இறைவன் உத்தரவால் உருவாக்கப்பட்ட அந்த வெள்ளித்தடியை காண்பதே இவ்வாழ்வின் பெரும் பாக்கியம்.

இரவு நடைபெறும் பூஜையை "அத்தாழ பூஜை" என்பார். இந்த பூஜை முடிவுறும் தருவாயில், பூஜாரி வெளியே வந்து "அத்தாழம் கழிக்கான் ஆரெங்கிலும் உண்டோ?" என் சத்தமாக கேட்பார். "இன்னும் இரவு சாப்பாடு சாப்பிட யாரவது இருக்கிறீர்களா?" என்பதே இதன் பொருள்.

பூஜையில் கலந்து கொள்ளும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, அமைதியாக நிற்பர். பூஜாரி உள்ளே சென்று இறைவன் முன்னின்று "அத்தாழம் கழிக்கான் ஆரும் இல்லா!" என சிவபெருமானிடம் உரைத்துவிட்டு, சந்நிதானத்தை மூடிவிடுவார். அன்றைய தினம் நிறைவு பெரும்.

இன்றுவரை, ஒருவர் கூட பூஜாரி கேட்கும் பொழுது, "நான் இருக்கிறேன்" என்று கூறியதில்லை. ஏன் எனில், அப்படி யாராவது கூறினால், உடன் கோவில் முழுவதும் சுத்தம் செய்து, பூசைகளை மறுபடியும் ஆரம்பித்து, "உள்ளேன் அய்யா" என்று சொன்னவருக்கு உணவளித்து, மறுபடியும் பலிபூஜை செய்து, மறுபடியும் "அத்தாழம் கழிக்கான் ஆரெங்கிலும் உண்டோ?" என கேட்டு யாரும் இல்லை என்றால்தான் கோவில் நடையை சார்த்தலாம். இது இறைவன் உத்தரவு.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது? அத்தாழ பூஜையை அமைதியாக நின்று தரிசித்து, பலிபூஜையின் பொழுது, இறைவன் உத்தரவால் உருவாக்கப்பட்ட, அந்த வெள்ளித்தடியை சுமந்தபடி ஒருவர் மந்திரம் ஜெபித்து செல்வதை கண்குளிர காண்பதே, மிகப் பெரிய பாக்கியம்!

 ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்..................... தொடரும்!

4 comments:

  1. Ohm Agtheeswaraya Namaha,
    Everyday starting with valuable information and also make us to note it and follow when we are visiting the respective temple. Thank you so much sir.

    ReplyDelete
  2. Aum Agastheeshaya Namaha

    Thankyou also for providing such wonderful information Aiyya, also if you could light up about the other Two Shiva Lingam and its prominence that would be greatful.

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. ஓம் மூத்தோனே போற்றி. ஓம் ஓதிமலை ஆண்டவர் போற்றி.ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி.
    அய்யா வணக்கம் , அந்த காலங்களில் இறையே அரசர் கணவில் வந்து யாரூக்கு உதவிட வேண்டும் என்று குறிப்பிட்டார். இக் காலத்தில் நாம் இதனை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும். இறை ஒருவரை தேர்வு செய்து நம்மிடம் அனுப்பியுள்ளார் என்று தெரிந்து கொள்ள முடியுமா.

    ReplyDelete