​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 8 July 2024

சித்தன் அருள் - 1643 - திரும்பி பார்ப்போம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியப்பெருமான் அருளால், ஒரு சில விஷயங்களை பற்றி யோசிக்கையில், முன்னர் அளித்த ஒரு தொகுப்பில் சித்த மார்க்கத்தின் சில நல்லுரைகள் நினைவுக்கு வந்தது.

முன்னரே வாசித்தவர்கள், அதில் எத்தனை விஷயங்களை உள்ளுணர்ந்து, தம் வாழ்வில் நடை முறை படுத்தியுள்ளார்கள் என்றறியவும், வாசிக்காதவர்கள் உணர்ந்து முன் செல்லவும், மறுபடியும் அவர் அருளால் பிரசுரிக்கிறேன்! இயன்றால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். தெளிவு பெற கேள்வியை கேளுங்கள்.
  • இலக்கணமே, குறளாயிற்று! 
  • தன் பசி, தன் வேதனை உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு பசிக்கும், வலிக்கும் என்று உணர முடியும்.
  • தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.
  • வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும்.
  • உணர்வை கட்டிப்போட்டு, உயர்ந்த நிலைக்கு வழிமாற்று. ஆனால் எதையும் கட்டிப்போட்டு வளர்க்காதே! அது உனக்கு நீயே சேர்த்துக்கொள்ளும் எதிர்கால சிறைவாசம்!
  • சேர்த்துக் கொண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம் வெளிப்படுவது போல், இறைவன் உன்னுள்ளே தோன்றுவான்.
  • அன்னம் தானமாயினும், அது நாராயண சேவை! ஆத்மா நீங்கிய உடல் அக்னிக்கு கொடுக்கினும், அது சிவபெருமான் சேவை.
  • இவ்வுலகில், நிலையானது என ஒன்றில்லை, இறைவதனைத்தவிர.
  • எண்ணம் இலை மறை காயாய் இருந்தாலும், இறை வாசம் இருந்தால்தான், கனியும்.
  • பஞ்சதாயன பூசையில் சுப்ரமணியன் எங்கு போனான் என்று தேடுபவனுக்கு, "பராபரம்" எளிதில் காட்டப்படும்!
  • சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்கை, ஒன்று சேரும்!
  • நெல்மணியாய் விளைந்து நில், பவ்யமாய் வளைந்து நில். உன்னுள்ளே "அரிசிவமாய்" இறைவன் இருப்பான்.
  • எங்கும், இனிப்பே கசப்பானது, காரமே, புளிப்பானது.
  • வியாதிக்குள் கர்மா மறைந்திருப்பதுபோல், பசிக்குள் கர்மா தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்ம தகனம் நடக்கிறது.
"சரி! "தலை கீழ் லிங்கத்தைப்" பற்றி பார்ப்போம்!"  என்றார்.

"சிவயோகிகள், த்யானத்தில் அமர்ந்து, தங்கள் சஹஸ்ராரத்தில் இறைவன் திருவடியை தியானித்து இருப்பர். தியானத்தின் உச்சநிலையில், திருவடி மறைந்து ஒரு லிங்க ரூபமாக மாறும். மேலும் தொடர்ந்து த்யானத்தில் அமர்ந்திருக்க, அந்த லிங்கமானது, அவரின் உள் பாகத்தை நோக்கி, மெதுவாக திரும்பும். இதை "விளைதல்" என்றும் கூறலாம். பயிர் விளைந்து நெல் மணி தோன்றும் பொழுதுதானே தலை சாய்க்கத் தொடங்கும். அதுபோல் தவத்தின் வலிமை கூடக்கூட, இறைவனே மனம் கனிந்து, தன்னை தவசியின் பக்கம் திருப்பிக்கொள்கிறார் எனலாம். ஒரு காலத்தில், அந்த லிங்கம் "தலை கீழ் லிங்கமாக" முழுமையாக மாறியபின், அதிலிருந்து ஒரு நாழிகைக்கு, ஒரு சொட்டு என ஒரு அமிர்தம் அந்த உடலுக்குள் மழைத்துளி போல் வீழும். அந்த அமிர்தம் வீழ்ந்து, வீழ்ந்து, அந்த உடல் மிக மிக சுத்தமாகும். உடல் முழுவதும் அந்த அமிர்தம் பரவிவிட்டால், பின்னர் அவனுக்கு, சுவாசிக்க, காற்று கூட தேவை இல்லை. இதை முடிந்தால் முயற்சி செய்துபார் என சொல்லாமல், சொல்வதுதான் நீ பார்த்த ஸ்தூல "தலைகீழ் லிங்கம்". உன்னால் முடிந்தால் த்யானத்தில், சூக்ஷுமத்தில் "தலை கீழ் லிங்கத்தை" பார்க்க முயற்சி செய்து பார்" என மிகப் பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக, எளிதாகக் கூறினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete