​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 12 December 2014

அகத்தியப் பெருமான் அருளிய அனுபவம்!


அகத்தியப் பெருமான் அருளி, திரு கார்த்திகேயன் அவர்களால் தொகுக்கப்பட்டு நம் முன் உலாவரும் "சித்தன் அருள்" தொகுப்பை வாசித்தவர்களுக்கு, அவரவர் கண் முன் நடக்கிற சில விஷயங்கள், அகத்தியரால் அருளப் பெறுகிறது, என்று சிலவேளை திண்ணமாக உணர முடியும். 

ஆன்மீகத்திலும், எங்கோ நோக்கி சென்ற வாழ்க்கையை, தன் அருள் அன்பினால் கட்டிப்போட்டு, நிறைய நல்ல விஷயங்களை செய்ய வைத்து, நம்மையும் திகட்டிட வைக்க, அவரால் தான் முடியும், என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி உணர்ந்த பல அனுபவங்களில் ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லா வியாழக்கிழமையும் வரும் சித்தன் அருளை அதிகாலையிலேயே படித்துவிட்டு, வீட்டுக்கு சற்று தொலைவில் இருக்கும் அகத்தியர் கோயிலுக்கு சென்று அவரை வணங்கி அருள் வேண்டி வருவேன். என் இரு நண்பர்களும் உடன்வர, ஒரு நண்பரின் காரில் சென்று வருவோம். போகமுடியாத பட்சத்தில், என் நண்பர்களை சென்று வரச்சொல்லிவிட்டு, அன்று மாலை நான் மட்டும் சென்று தரிசனம் செய்து வருவேன். இது எத்தனையோ வருடங்களாக நடக்கின்ற ஒன்று. அப்படி காரில் செல்லும் பொழுது, அகத்தியர் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடத்தும் அதிசயங்களை மனதில் அசை போட்டு, "ஹ்ம்ம்! நமக்கும், இதே போல் ஏதேனும் அருளை அகத்தியப் பெருமான் வழங்கினால் சந்தோஷப் பாடலாமே," என்று பலமுறை நினைத்தது உண்டு.

இறைவனே நம் முன் தோன்றி "என்ன வேண்டும் உனக்கு?" என்று கேட்டாலும், மிகத் தெளிவாக இருந்து கேட்க வேண்டும், என்று என் நண்பர்களிடம் அடிக்கடி கூறிவருவேன். இறைவன் அருளால், த்யானத்தில் அமர்வதில் தான் எனக்கு மிகுந்த விருப்பம். ஆம்! த்யானத்தில் இருக்கும் அமைதி தான் ஒருவரை மேன்மை படுத்தும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

அப்படி ஒரு முறை த்யானத்தில் இருக்கும் பொழுது "அகத்தியப் பெருமானிடம்" "தாங்கள் அருள் வேண்டும்! அதை உணரவும் வேண்டும். அதற்கு அனுமதி அளியுங்கள்" என்று வேண்டிக் கொண்டேன்.

கேட்கும் பொழுது ஆத்மார்த்தமாக கேட்டுவிட்டு, பின்னர் அதை மறந்துவிடும் ஒரு பழக்கம் எனக்கு உண்டு. அது போல், இந்த வேண்டுதலையும், அவர் பாதத்தில் சமர்பித்தப்பின் இயற்கையாக மறந்து போனேன்.

மாதங்கள் பல ஓடின. இந்த கால அளவில் பல புண்ணிய இடங்களுக்கும் சென்று, இறைவனை தரிசித்து, த்யானத்தில் இருக்கும் பொழுது அகத்தியரிடம் "அருள் வேண்டும்" என்று மட்டும் எளிதாக கூறுவேன்.

ஒரு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி. எப்போதும் போல் எழுந்து சித்தன் அருள் தொகுப்பு வந்துவிட்டதா என்று பார்த்து, அதை படித்த பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத மெல்லிய உணர்வு பரவிற்று. இன்று ஏதோ ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்று உள்மனம் கூறியது. படித்து முடித்தபின், குளித்து விட்டு, மந்திர ஜெபத்துடன் த்யானத்தில் அமர்ந்தேன்.

சற்று நேர எளிய போராட்டத்துக்குப் பின் மனம், உடல், உணர்வு எல்லாம் அடி பணிந்து அமைதியாயிற்று. ஒரு நாழிகை அதே மோன நிலையில் அமர்ந்திருக்கும் பொழுது, சற்று சன்னமாக யாரோ வலது செவிக்கருகில் வந்து  "இன்று அபிஷேகம் ஏற்றுக்கொள்ள நான் அங்கு வருவேன்! அபிஷேகத்துக்கு முன் அங்கு நிலவும் சூழ்நிலையையும், அபிஷேகத்தின் போது என் உருவச்சிலையையும் நன்றாக கவனி" என்று கூறுவது போல் கேட்டது.

த்யானம் கலைத்து வெளியே வந்த நான் "அட! இது பெரியவர் தான்! நமக்கு (நண்பர்களையும் சேர்த்து) தெரிவிக்க வேண்டியதை சொல்லி போயுள்ள்ளர். ஹ்ம்ம் அமைதியாக இருப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என தீர்மானித்தேன்.

சற்று நிமிடத்தில், மழை மிகுந்த இரைச்சலோடு பெய்யத் தொடங்கியது. சரிதான் இன்று நிறைய ஆட்டம் இருக்கும் போல என்று நினைத்தேன்.

என்னை பொருத்தவரை, மழை இன்றி சூழ்நிலை இருந்தால், எளிதாக நினைக்கிற இடத்துக்கு போய் வந்துவிடலாம், என்று நினைப்பவன். ஆனால் அப்பொழுது பெய்த மழை வேறு ஒரு விஷயத்துக்காக என்று பின்னர் புரிந்தது.

செய்தியை உள்வைத்துக் கொண்டு, பூசையை தொடங்கும் பணிகளில் அமர்ந்தேன்.  மனம் அமைதியாக இருந்தது. உன்னிப்பாக ஒவ்வொரு நிமிடமும் இருந்தேன். இன்னும் ஏதேனும் உத்தரவு வரும் என்றால் கவனிக்க வேண்டுமே. 

நான் செல்கிற அந்தக் கோவிலை பற்றி சொல்லவேண்டும். என் வீட்டிலிருந்து 30 நிமிடம் பயணம் செய்கிற தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் வாகனங்களின் நெரிசல் அதிகம் உள்ள வழியாகத்தான் போக வேண்டும். கோவிலில், அகத்தியப் பெருமான் லோபா முத்திரையுடன் ஒரு சன்னதியில் நின்ற கோலத்தில் இருப்பார். கணபதி, நாகராஜர், கிருஷ்ணர், ஓதியப்பர், நவக்ரகங்கள் இவர்களுக்கு தனித்தனி சன்னதி இவரை சுற்றி இருக்கும். காலை 5.30க்கு கோவில் திறக்கப்பட்டு 6 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

நிர்மால்யம், அபிஷேகம், அலங்காரம், பூசை இவைகளை 6 மணிக்கு போனால் பார்த்துவிட்டு, 6.30க்குள் பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பிவிடலாம். இது எப்பொழுதும் உள்ள சாதாரண சூழ்நிலை. அதனால், எப்பொழுதும் நாங்கள் 5 மணி 15 நிமிடங்களுக்கே எப்பொழுதும் புறப்பட்டுவிடுவோம்.

அன்று காலை 5.40 மணி ஆயிற்று. நண்பரை காணவில்லை. மெல்லிதாக கோபம் தலைக்கு ஏறிற்று. ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டிய நிமித்தத்தில், கோபப்பட்டு அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்து, அகத்தியப் பெருமானின் பாதத்தையே த்யானித்துக் கொண்டிருந்தேன். நண்பர் வரும் பொழுது வரட்டும். சீக்கிரம் வா என்று கூப்பிடப்போவதில்லை என்று தீர்மானித்தேன். எனெக்கென்னவோ, என் நம்பிக்கையை, பழகும் முறையை எப்படி கையாளுகிறேன் என்று அகத்தியப் பெருமான் சோதனை பண்ணுகிறாரோ என்ற எண்ணம்.

காலை மணி 5.50. நண்பர் வந்து சேர்ந்தார், நிறைய "மன்னிக்கவும்" வார்த்தைகளுடன். நான் எதுவும் பேசாமல், என் கையிலிருந்த பையை அவரிடம் கொடுத்து காரில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.

கிளம்பும் பொழுது மணி 5.55. நம்பிக்கை இழக்கவில்லை. 

ஆனால் அந்த கோவிலின் பொதுவான நிகழ்ச்சிகள் படி 6 மணிக்கு அபிஷேகம் ஆகிவிடும். 6.30க்குள் பூசை முடிந்துவிடும். எப்படி அகத்தியர் அபிஷேகத்தை, அவர் சாந்நித்யத்தை நாம் உணர முடியும்? அவரே நினைத்து ஏதேனும் அதிசயத்தை நடத்தினால் தான் உண்டு. எல்லாம் உங்கள் செயல் என்று அவர் பாதத்தில் வைத்துவிட்டு கிளம்பினோம்.

நல்ல மழை பெய்திருந்ததால், செல்லும் வழி எங்கும் மிக சுத்தமாக ஆக்கப் பட்டிருந்தது. என் வீடு முதல் அகத்தியர் கோவில் செல்வது வரை எந்த வாகன நெரிசலும் இல்லை. இங்கு மழை பெய்தாலே, எல்லோரும் அடங்கிவிடுவார்கள். யாரும் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வர மாட்டார்கள். பெய்த மழை, காற்றில் குளிர்ச்சியை ஊட்டியிருந்தது. என் மனமோ கவலை இன்றி அமைதியாக இருந்தது. வண்டியின் பின் இருக்கையில் கால் மடக்கி அமர்ந்து, த்யானத்தில் அமர்ந்தேன். எங்கே போனேன் என்று எனக்கே தெரியாது.

கோவிலை அடைந்து, நண்பர் உலுக்கிய பொழுதுதான் நிகழ் காலத்திற்கு வந்த நான், நன்றாக பொழுது புலர்ந்துவிட்டதை கண்டேன். மணியை பார்த்தால் 6.30 என்றது.

வேறு எதையும் யோசிக்காமல், "சரி நடப்பதை பார்ப்போம்" என்று நினைத்து கோவிலுக்குள் சென்று பார்த்தால், சன்னதி திறந்து, விளக்கேற்றி இருந்தது. அபிஷேகம் இன்னும் நடக்கவில்லை என்பதை அகத்தியர் சன்னதியில் அவர் முன் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த தண்ணீர் உணர்த்தியது. யாரும் அங்கு இல்லை. ஆச்சரியப் படாமல் அங்கு நிலவிய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்தேன். மேலாளர் வந்து "பூசாரி இன்னும் வரவில்லை. நான் தான் சன்னதியை திறந்து வைத்தேன். சற்று பொறுங்கள்! இப்பொழுது அவர் வந்து அபிஷேகம் செய்துவிடுவார்" என்று கூறிச்சென்றார்.

அகத்தியர் சன்னதிக்கு எதிரே ஒரு மண்டபம். பூசை சாமான்களை அங்குதான் வைப்பார்கள். அதற்கும், அகத்தியர் சன்னதிக்கும் இடையில் ஒரு சின்ன வழி உண்டு. அங்கிருந்துதான் அகத்தியர் சன்னதிக்கு ஏறுகிற "படி" தொடங்கும். நான் அங்கே போய் நின்று அகத்தியரை தரிசனம் செய்து "வந்துவிட்டேன்! அருள வேண்டியது உங்கள் முறை." என்று கூறிவிட்டு  மண்டபத்தில் இடுப்பை சாய்த்தபடி அங்கேயே நின்றேன்.

கூட வந்த நண்பர்கள் மண்டபத்துக்கு பின் பக்கத்தில் நின்று தரிசனம் செய்தனர். நண்பர்களிடம் வந்த செய்தியை பற்றி எதுவுமே நான் சொல்லவில்லை. நடக்கும் பொழுது புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.

சற்று நேரத்தில், தாமதமாகிப் போனதை உணர்ந்து, அரக்கபரக்க பூசாரி ஓடி வந்தார்.

சன்னதிக்குள் சென்று, அபிஷேகத்துக்கு முன் உள்ள மந்திரங்களை பூசாரி சொல்லத் தொடங்க, அந்தரத்திலிருந்து "அடர்த்தியான" காற்று (ஒன்று) கீழிறங்கி, நண்பர்களை தாண்டி மண்டபத்தில் ஏறி, என் வலது பக்கம் வழியாக சன்னதிக்குள் மெதுவாக நடந்து சென்று ஏறியது. கூடவே, நல்ல நறுமண விபூதி, கொழுந்து, பன்னீர், மஞ்சள் வாசனைகளும் என்னை கடந்து சன்னதிக்குள் சென்றது.

நான் அசைவின்றி அப்படியே அகத்தியர் சிலையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.

10 comments:

  1. Vanakkam karthi ,
    I am getting arul on every thursday. Now the arul is possible for all days.
    No doubt this is our guruji,s ashirvathams! My special thanks to you.
    Guruve potri potri!

    Anbudan s.v.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு வெங்கடேசன் அவர்களே!

      இந்த தொகுப்பை வழங்கியது ஒரு அகத்தியர் அடியவர்; என் நண்பர். அவரும் இந்த வலைப்பூவில், இனி பல விஷயங்களை தொகுத்து தருவார்.

      கார்த்திகேயன்

      Delete
  2. அகத்தியரின் அருள் எனக்கு கிடைக்குமா ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக கிடைக்கும். ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் அவரிடம் வேண்டும்!

      Delete
  3. Naadi jothidamla solra visayangal ellam unmaya nadakuma???

    ReplyDelete
    Replies
    1. நடப்பது இறைவன் செயலால். அதில் என்ன சந்தேகம்? நம்பிக்கை தான் ஒருவரை முன்னேற்றும்.

      Delete
  4. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  5. ayya
    vanakkam, jeeva nadi parkkum place engu ullathu entru thayavu panni therivithal enkalukkum uthaviyaka iruukkum

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலும், கல்லாரிலும் நாடி படிக்கிறார்கள். அந்த விவரங்களை சித்தன் அருள் வலைப்பூவில் வலது பக்கத்தில் தந்துள்ளேனே! சற்று பாருங்கள்.

      Delete
  6. இந்த கோயில் எங்கே உள்ளது ?

    ReplyDelete