வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நீண்ட வருடங்களுக்கு பின், சமீபத்தில், ஒரு புண்ணியத்தல யாத்திரையாக, திருவண்ணாமலை சென்றிருந்தேன். அகத்தியப்பெருமானின் அருளினால், மிக மிக அருமையான யாத்திரையாக அமைந்தது. அன்றையதினம், முதன் முறையாக அகத்தியர் ஆஸ்ரமம் செல்லும் வாய்ப்பும் கிட்டியது. உள்ளே நுழைந்ததும், திகட்டாத அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை சமேதராக, அன்றைய யாகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, பின்னர், தம்பதி சமேதராக அமர்ந்திருந்தார். அருமை, அவ்வளவு அருமையான தரிசனம் என்றுதான் கூறவேண்டும். அதிலும், அகத்தியப் பெருமான், தன் இடது கைவிரல்களால், லோபாமுத்திரை தாயாரை சன்னமாக தட்டி கூப்பிட்டு, "இங்க பார்! யார் வரான்னு! நான் சொன்னேனே, அவன் வருகிறான் பார்" என்று தாயாரின் கவனத்தை நம் பக்கம் திருப்புவது போல், நிறைந்த அன்புடன், அமர்ந்திருந்த கோலம். இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. அந்த இடத்தை விட்டு விலகவே மனமில்லை. அப்படி அருமையான சூழ்நிலை. நிறைய புகைப்படங்களை எடுத்து சேர்த்துக் கொண்டேன்.
அதில் ஒன்றை, உங்கள் அனைவருக்காகவும், கீழே தருகிறேன். அந்த அன்பு நிறைந்த சூழ்நிலையை உணர விரும்புபவர், படத்தை பெரிதாக்கி, அகத்தியர் விழிகளையும், தாயாரின் கனிவான பார்வையையும், பாருங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!
