"இனி சொல்வதை கவனமாக குறித்துக்கொள். எந்த ஒரு விஷயத்தையும் "மனம் உவந்து" பிறருக்கு கொடுத்தால்தான் அது அவர்களை சென்று சேர்ந்தாலும், பலனளிக்கும். ஏனோ, தானோவென்று, கொடுப்பது எதுவும், அது சென்று சேர வேண்டிய நிலையை அடைவதில்லை. இறைவனிடம் பிரார்த்தனை வைத்தாலும், பல முறை அது நிறைவேறாமல் போகக் காரணமே, "சொல்லிட்டாங்க! அதுனால செய்கிறேன். நிறைவேற்றிக்கொடு" என்கிற மனப்பான்மையுடன் 99% மனிதர்களும் நினைத்துக் கொள்வதுதான். மனிதனை சொல்லிக் குற்றமில்லை. அவனோ கலியின் பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பௌதீக விஷயங்களை பார்த்து, நம்பி, அதன் வழியே நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதையும் செய்வதில்லை. உலக பௌதீக விஷயங்களில் உடன் பலன் கிடைக்கும் என்று உணர்ந்தால், எத்தனை வேகமாக, நம்பிக்கையுடன் செய்கிறானோ, அந்த நம்பிக்கையுடன் இனி கூறுபவற்றை செய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."
"நீ செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தால் என்ன செய்வாய்?"
"கோவில் உள் சென்று இறைவனை, தரிசித்து, பிரார்த்தனை செய்து செல்வேன்" என்றேன் நான்.
"நீ வழியே செல்லும் பொழுது, இறங்கி, உள்சென்று இறைவனை தரிசிக்க நேரமில்லை, என வைத்துக்கொள். அப்பொழுது, உன் பிரார்த்தனை சூழ்நிலை எப்படி இருக்கும்? என்றார்.
இவர் எது வழியோ வந்து என்னை கவ்வ வருகிறார், என புரிந்தது.
"அப்படிப்பட்ட நிலையில், கோவிலின் வெளியே நின்று, மனதால் இறைவன் பாதத்தை, உருவத்தை தியானித்து "எல்லா ஜீவன்களையும் காப்பாற்றி, அருள் புரியுங்கள் இறைவனே" என வேண்டிக்கொள்வேன்" என்றேன்.
"பரவாயில்லை! நல்ல வேண்டுதல்தான். இருப்பினும், அப்பொழுது, அங்கு நீ பிரார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா? இல்லை, கவனித்ததுண்டா?" என்றார்.
"ஒரு சிலவேளை, அப்படி பிரார்த்திக்கும் பொழுது, என்னைப் போல் ஒரு மனித உருவம், இறைவன் காலடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில், இது என் மனம் உள்ளுக்குள்ளே அப்படி ஒரு உருவத்தை தோற்றுவிக்கிறது. உண்மையாகவே அப்படியெல்லாம் கிடையாது" என எண்ணிக்கொண்டு சென்றுவிடுவேன்.
சற்று நேரம் என் கண்களையே உற்று நோக்கிய படி இருந்தார், அந்த பெரியவர்.
பின்னர், அந்த உற்று நோக்கலை கலைத்துவிட்டு, மற்ற பெரியவர்களை பார்த்தபின், சிரித்தபடியே "நீ பார்த்தாயே அந்த உருவம்தான் எத்தனையோ சூக்ஷ்ம உடல்களில் ஒரு உடல். இங்கு மனதுள் நினைப்பதை அங்கே பதிவு செய்து கொள்ள காத்திருக்கும் உடல். நீ எங்கு சென்றாலும், உன்னை தொடரும் உடல்.
அங்கே பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.
சற்று நேர இடைவெளிக்கு பின் "ஒரு கோவிலில், இறைவன் பாதத்தில் விழுந்து சூக்ஷும உடல் சரணடைவதை பார்க்கும் பொழுது, "நீங்கள் எவ்வுரு கொண்டு, எங்கெல்லாம் கோவில்களில் அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கெல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இதே நேரத்தில் உங்களை வணங்குகிறது. அதன் வழி அடியேனின் நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன். அத்தனை உடல்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுங்கள். மறுபிறப்பு வேண்டாம்" என வேண்டி பல உடல்களை இறைவனிடம் திருப்பி ஒப்படைத்து விடலாமே! இல்லையா?" என்றார்.
"அட! ஆமாம்! மிக எளிய யோசனை ஆயிற்றே! இது மட்டும் உண்மையாயின், மனிதனுக்கு வாழ்க்கை பயணத்தை கடப்பது மிக எளிதாயிற்றே. இத்தனை சண்டை, சச்சரவு, வாழ்வதற்கு போட்டி என, நிறைவேறாத ஆசைகளை, வாசனைகளாக சேர்த்து வைத்து துன்பப்பட வேண்டாமே!" என்றேன்.
"மனிதனுடைய சந்தேக எண்ணம், நம்பிக்கையின்மை, இதெல்லாம் சாத்தியமா! என்கிற அவநம்பிக்கை, வெளியுலக விஷயங்களில் உள்ள ஆர்வம், ஆசை போன்றவைதான் அவனுக்கு தடையாக உள்ளது. இந்த மாதிரி எளிய விஷயங்களை கூட தனிப்பட்ட முறையில் நடை முறைப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிலை தான் காரணம்".
"சரி! யாரோ ஒருவர் இதை நம்பி நடை முறைப்படுத்தித்தான் பார்த்து விடுவோமே என்று இறங்கினால், அவரை அந்த இறையே சோதிக்க நினைக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.
"இறை சோதனை மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து செல்ல வழியையும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி பயமுறுத்துகிறீர்களே! அப்புறம் எப்படி ஒரு சாதாரண மனிதன் இந்த வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்லை என்று எப்படி நீங்கள் குறை கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் கேள்வியை எழுப்பினேன்.
"எல்லாம், எளிதாக, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் நினைக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிலையை அடைந்தவர்கள், எப்படிப்பட்ட சோதனைகளை கடந்து வந்தவர்கள் என உனக்கு புரியாது. அவர்கள் அனைவரையும், இறைவன் சோதித்து, திசை திருப்பி, புடம்போட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.
"நீரில் மூழ்கினும், நஞ்சு என்னை தீண்டினும், நாமம் உரைப்பது "நமச்சிவாயமே" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம் கொடுத்துள்ளான் இறைவன். அந்த சோதனையில் ஒரு மிகச் சிறு அளவு சோதனை வைத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த தேர்வை எழுத மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், கேள்வி கேட்பதற்கே அருகதையற்றவர்கள்", என மிக நிதானமாக, தெளிவாக கூறினார்.
அமைதியாக இருந்த என் மனதில் "சரிதான்! போச்சுடா! தவறாக ஏதாவது பேசிவிட்டோமோ?" என்று தோன்றியது.
இதை அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வரலாம்! தவறில்லை! முறை தவறி விடக்கூடாது, உரையாடலை தொடருவோம்" என சூழ்நிலையை சுமுகப்படுத்தி, மேலும் "அந்த இறை சோதனை ஆபத்தையும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.
சித்தன் அருள்................... தொடரும்!
