​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 November 2020

சித்தன் அருள் - 959 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர், திருச்சி!

'உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்' என்றெல்லாம்  பாடி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அப்படி ஆலயமாகப் பொலிவு பெற்று இருக்க வேண்டிய நம் உடம்பு சுணக்கமுற்றால் என்னாவது? பழக்க வழக்கங்கள்தான் நம் உடம்பு சுணக்கமுறுவதற்குக் காரணம் என்றால், நம்மால் மாற்றிக் கொள்ள இயலும். கர்மவினை காரணம் என்றால், அவற்றை எங்கே போய் கழிப்பது?

உள்ளத்துப் பிணிகளைப் போக்குபவை ஆலயங்கள். அதே நேரம், நம் உடற்பிணிகளுக்கும் நல்மருந்தாகி, நம் பிணிகளைப் போக்கி, ஆரோக்கியமுடன் திகழச் செய்யும் திருத்தலங்களும் நிறைய உண்டு.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு சுத்தரத்தினேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பாளின் திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி.இந்தக் கோயிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்.

அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். கொள்ளை அழகுடன் அருட்காட்சி தரும் இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார்.   இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என்று நம்பிக்கை.

பஞ்சநதனக் கல்லால் ஆன இங்குள்ள நடராஜர் பல்வேறு வகையான நோய்களையும் போக்கக்கூடிய வரப்பிரசாதி. குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் அறவே போக்கி அருள்பவர். இதற்கு நேரடி சாட்சியாக, இங்கே வந்து வழிபட்டு, தங்கள் சிறுநீரகப் பிரச்னையிலிருந்து விடுபட்டு, அனுபவபூர்வமாகப் பலன் பெற்ற பலரை நீங்கள் இங்கே பார்க்கலாம்’’

பரிகார பூஜை செய்யும் முறை:-

சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கோயிலிலேயே கிடைக்கும் வெட்டிவேரை ஒரு கிலோ அளவில் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகக் கோத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர், அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, கோயிலில் அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை (5 லிட்டர் கொள்ளளவு உள்ள) ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தீர்த்தம் எத்தனை நாட்களானாலும் கெடவே கெடாது என்பது சிறப்பு.

வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் நிரப்பி, அதில் வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து அந்தத் தீர்த்தத்தில் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேர்த் துண்டை எடுத்துவிட்டு, அந்த தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டும் வீட்டு விலக்காகும் நாட்களில், இந்தத் தீர்த்தத்தைப் பருகக் கூடாது. 48 நாட்கள் முடிந்ததும், அந்த வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும்.

சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து தரும் மருத்துவன் இத்தலத்தின் இறைவனான ஆடல்வல்லான். ஒருமுறை, நாமும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஐயன் சுத்த ரத்தினேஸ்வரரையும், நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வரம் பெற்று வருவோம்.

பார்ப்பதற்கு கருங்கல்லை போன்று தோற்றம் இருந்தாலும் சில தருணங்களில் அந்தக் கல்லானது கரு நீலமாகவும், கரும்பச்சை வண்ணத்திலும் கூட காட்சி தரும். பல கோடி சூரியனின் சக்தியை உள்ளடக்கிய கல்லாக இது சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சநதன பாறையின் மற்றொரு சிறப்பை கேட்டால் எவராலும் நம்ப முடியாது. இந்தப் பாறையில் இறைவனின் திரு உருவத்தை எவராலும் உளியால் செதுக்க முடியாது என்றும், இறைவனின் திருவுருவம் தானாகவே உருவாகும் என்றும், வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் காணமுடியாத பஞ்சநதன கல்லில் உருவான சிலைதான் ஊட்டத்தூர் நடராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டத்தூரின் மேற்கு திசையில் அமைந்திருக்கும் சோளேஸ்வரம் கோவிலுக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருகை தருவார். ஒருசமயம் மன்னரின் வருகைக்காக, பாதையை சரி செய்யும் சமயத்தில் மண்வெட்டியால் புல்லை வெட்டும் போது, ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. பயந்துபோன தொழிலாளிகள் இந்த செய்தியை மன்னனிடம் தெரிவித்தனர். அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்தை கண்டுபிடித்து, செய்த பாவத்திற்காக மன்னிப்பும் கேட்டு, அந்த லிங்கத்திற்கு ஊட்டத்தூரில் ரத்தினேசுவரர் திருக்கோவிலை கட்டினார் ராஜராஜ சோழ மன்னர். இன்றும் இத்திருத்தலத்தில் வீட்டிலிருக்கும் லிங்கத்தின் நெற்றியில் வடு தென்படுவது குறிப்பிடத்தக்கது.

புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

5 comments:

  1. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. ஆடல் வல்லனே அற்புதனே நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரா ஏகனே அநேகனே எம் அம்மையே அப்பனே நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம் ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி

    ReplyDelete