​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 6 February 2017

சித்தன் அருள் - 587 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

சாஸ்திரங்களிலும், பூஜா முறைகளிலும், யாகங்களிலும், இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால், அப்படி நீக்கினாலும், அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வரவேண்டும் என்றால், அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக்கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத, சுகத்தைத் தராத, நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும், எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே, ஒரு சிரார்த்தம் என்றால், திதி என்றால், அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும், காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத்தான் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால், அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு "நான் காய்கறிதான் வாங்கித் தருவேன்" என்று இவன் கூற, அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே, அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மன நிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும், மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு, கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்திரங்களை மனிதன் சுய நலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை. "தர்மம் செய்" என்றால் மட்டும், "இன்று வெள்ளிக் கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய்க்கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன்" என்று, தருவதற்கு, ஆயிரம் சட்ட, திட்டங்களைக் கூறுகின்ற மனிதன், பெறுவதற்கு எந்த சட்ட, திட்டமாவது போடுகிறானா? "வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம்" என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமைதானே மகாலக்ஷ்மிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம், பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய்விட்டது. இஃதொப்ப நிலையிலே, ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படிக் கேட்கிறான்? என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா? என்றுதான் கேட்கிறான். "நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம, காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா? என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? "நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால், தேவையற்ற அபவாதம்தான் வரும், எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத்தரும்" என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகிவிட்டார்கள். எனவே நல்லதை, தர்மத்தை, சத்தியத்தை விட்டுக்கொடுக்காமல், பொது நலத்தை, பொது சேவையை விட்டுக்கொடுக்காமல், ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும், சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தியரின் திருவடிகள் சரணம் சரணம்....

    ReplyDelete