​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 17 February 2017

சித்தன் அருள் - 596 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக சிலசமயம் சிலவிதமான வாக்குகளை யாங்கள் கூறுகிறோம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதோ, எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதோ அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகொள்ள இயலும். பக்குவமற்ற, பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனர்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. இறைவனருளாலே எத்தனையோவிதமான பாவங்களின் தாக்கத்தால் பிறவிகள் எடுத்த ஆத்மாக்களுக்கு எத்தனையோவிதமான வழிமுறைகள் இருந்தாலும், பாவங்கள் நீங்கவேண்டும், அதே சமயம் அந்த பாவங்கள் மீண்டும் பற்றிவிடக்கூடாது என்பதை மட்டும் மையமாகக்கொண்டு இறைவனருளாலே இஃதொப்ப ஜீவ அருள் ஓலையிலே யாம் எத்தனையோவிதமான நுணுக்கமான வாக்குகளைக் கூறியிருக்கிறோம். சுருக்கமாக "அதை செய், இதை செய்" என்று கூறாமல் "தர்மத்தை பிடித்துக்கொள், அஃது பாவத்திலிருந்து உன்னை விடுவிக்கும்" என்று பலமுறை பலருக்கு பலமாகக் கூறியிருக்கிறோம். ஆனாலும் பலரில் சிலருக்கும், சிலரில் சிலருக்கும் அந்த சிலரில் சிலருக்குமேதான் மதியில் பட்டு அந்த வழியில் வருவதற்கு விதி அனுமதி தந்திருக்கிறது, என்பதே மெய்யிலும் மெய்யாகும். இன்னும் எத்தனையோவிதமான உண்மைகளை நாங்கள் வெளிப்படையாகக் கூறுவது என்பது அத்தனை நாகரீகமாக இராது. எனவே. யாங்கள் மௌன தவத்தை தொடர்வதே இறைவன் இட்ட கட்டளையாக இருக்கிறது.

இறைவன் அருளாலே விதி வலிமையாக இருக்கும்பொழுது இறைவனே தோன்றி வழிகாட்டினாலும் அது மாந்தர்களின் செவியில் ஏறாதப்பா. எனவே இத்தருணம் எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை யாங்கள் கூறி உன் மூலமாக சிலருக்கு விளங்க வைக்கலாம் என்றாலும்கூட அதுவும் விதிவழி ஏற்புடையதாக இராது. எனவே, நேர்மையான பிரார்த்தனைகளை, உண்மையான தர்மத்தினை, கூடுமானவரை சத்தியத்தினை கடைபிடிப்பதை, தவிர இத்தருணம் வேறுவழி ஏதுமில்லையப்பா.

2 comments:

  1. அகத்தியருக்கு விதியை மாற்றும் வல்லமை உள்ளது . ஆனால் அதற்கும் கூட ஒரு புண்ணியம் வேண்டும் சித்தர்களை நம்பவேண்டும் . குறிப்பாக தீய வழியில் செல்வதை தவிர்த்து மனதை கட்டுபடுத்த வேண்டும். எல்லாவற்றிகும் எல்ல்லோருக்கும் ஒரு எல்லை உண்டு அது மனிதனாக இருந்தாலும் சரி இறையையாக இருபினும் சரி . அதை மீறும்போது தான் பிரச்சனை வருகிறது ......

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete