​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 1 December 2013

கோடகநல்லூர் - ஒரு அன்பரின் அனுபவம்!

[கோடகநல்லூர் - பச்சைவண்ணப் பெருமாள் கோவில்]

அகத்தியர் அடியவர் திரு வேங்கடரமணனும் அவரது மனைவி திருமதி அலமேலு வெங்கடரமணன் அவர்களும் சென்னையில் வசிக்கிறார்கள். அவர்கள் இருவரும் 14/11/2013 அன்று கோடகநல்லுரில் பச்சை வண்ணன் பெருமாளை தரிசித்து, தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள மனமுவந்து முன் வந்துள்ளனர். அதை அவர் பகிர்ந்து கொண்டபடியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷியின் அருளுடன், 14/11/2013 அன்று கோடகநல்லூரில் உறையும் பச்சை வண்ணப் பெருமானின் தரிசனத்துக்காக நானும் எனது மனைவியும் 11/11/2013 அன்று சென்னையில் இருந்து கிளம்பினோம். 12/11/2013 அன்று மதுரையை அடைந்து உறவினர் வீட்டில் தங்கிவிட்டு 13/11/2013 அன்று காலை 08.30 மணிக்கு மதுரையைவிட்டு திருநெல்வேலிக்கு கிளம்பினோம்.  

​திருநெல்வேலிக்கு, என் வாழ்க்கையில் முதன் முறையாக செல்கிறேன். மதியம் 12 மணிக்கு திருநெல்வேலியை அடைந்து, அருகிலுள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு, கோடகநல்லூர் செல்ல, நடுக்கல்லூர் என்கிற நிறுத்தத்தில் இறங்கினோம்.

நடுக்கல்லூரிலிருந்து, நடந்தே கோடகநல்லூர் செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினோம். ஒரு முன் அறிமுகமும் இல்லாத ஊர். ஒன்றரை கிலோமீட்டர் நடந்ததும் ஊரை அடைந்தோம்.

கோடகநல்லூர், ஒரு அழகிய சின்ன கிராமம். தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்து செல்கிறது.  நிறைய வீடுகள் பூட்டியே கிடந்தது. ஒருவரும் அங்கு வசிக்கவில்லை என்று தோன்றியது. 

அறிமுகம் இல்லாத ஊர்.  யாரையும் தெரியாது. தங்குகிற ​அறை வசதி இல்லாத ஊர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டேன். ஏதாவது விசாரிக்கலாம் என்றால், வீதியில் ஒருவரை கூட வெளியே காணவில்லை. அகத்திய பெருமானை மனதால் பிரார்த்தித்து "அய்யா! ஏதாவது ஒரு வழி காட்டுங்களேன்" என்றேன். 

பிரார்த்தித்து அப்படியே நின்று கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ வந்த ஒரு பசுவானது என் அருகில் வந்து பார்த்துவிட்டு, "ம்மா" என்று அழைத்தபடி நடந்து சென்றது. ஏதோ ஒரு உந்துதலில் நானும் மனைவியும் அதன் பின்னர் நடக்கத் தொடங்கினோம். நேராக நடந்த பசுவானது, கிழக்கு தெரு பக்கமாக சென்று சிவன் கோவிலை அடைந்தது.

ஒரு வீட்டின் முன் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தது. யாரோ வெளியில் நிற்பதை உணர்ந்த ஒரு பெண்மணி வெளியே வந்தார்.  பசு நிற்பதையும், கூடவே நாங்கள் இருவரும் நிற்பதை கண்டு, அமைதியாக 

"என்ன வேண்டும்?" என வினாவினார்.

நான் என்னையும் என் மனைவியையும் அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னை பற்றிய முழு தகவலையும் தெரிவித்து, அந்த ஊருக்கு வந்த காரணத்தை தெளிவு படுத்திய போது, அந்த பெண்மணியே ஆச்சரியமடைந்து விட்டாள். ஆம்! அவர்களுக்கே 14/11ன் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. அனைத்தையும் கேட்ட பொழுது அந்தப் பெண்மணி, இலவசமாக தங்கும் இடம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

இத்தனையும் பேசி முடித்து திரும்பி பார்க்கையில், எங்களை அழைத்து வந்த பசுவை காணவில்லை. மறைந்து போயிருந்தது. ஆச்சரியத்துடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். ஏதோ ஒரு திருவிளையாடல் அகத்தியப் பெருமான் நடத்துகிறார் என்று உணர முடிந்தது.

சிறிது நேர ஆசுவாசத்துக்குப் பின், தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

தாமிரபரணி கரையை தொட்டு ஓடிக்கொண்டிருந்தாள். நீரின் மேல் புறம் கலங்கலாக காணப்பட்டாலும், குளிக்கும் போது இதமாக இருந்தது. சுகமான குளியல், பின்னர் வீட்டிற்கு வந்து தயாராகி சிவ பெருமானை வணங்க கோயிலுக்கு சென்றோம். நல்ல தரிசனம். அமைதியான சூழ்நிலை. நிறைய நேரம் அவர் சன்னதியில் மனம் ஒன்றி த்யானம் செய்துவிட்டு மாலை 6.30 மணிக்கு பச்சை வண்ணப் பெருமானை தரிசிக்க கோயிலுக்கு சென்றோம்.

மின்சாரம் இல்லாததால், எங்கும் ஒரே இருட்டு. வெளிச்சம் இருந்தால் கண்களும், மனமும் எல்லாவற்றையும் விழுங்கிவிட நினைக்கும். சற்று யோசித்துப் பாருங்கள்! பச்சை வண்ணன் இருக்கும் இடத்தில் மட்டும் ஜோதியால் அலங்காரம் வெளிச்சத்தை இறைத்துக் கொண்டிருந்தது. அவரை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. அவர் கண்கள் கூட நம்மை உற்றுப்பார்த்து, "வாடா! இங்கே!" என்று அதிகார அன்புடன் அழைப்பது போல் இருந்தது. ஒரு நொடியில் எல்லாவற்றையும் இழந்து, மறந்து, அவர் பாதத்தில் புதைந்து கிடந்தது, என்னால் விவரிக்க முடியாத ஒரு அற்புத அனுபவம். எங்கும் அமைதி, அதை தவிர வேறு ஒன்றும் இல்லாத நிலை. என்ன கேட்கத் தோன்றும்? மனம் ஒன்றி நாங்கள் நின்று கொண்டே இருந்தோம். இது நிச்சயமாக அகத்தியர் அருளால் தான் நடக்கிறது என்பது தெளிவாகியது. குழந்தையின் பசிக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று தாய்க்குத்தானே தெரியும்! தாயாய் இருந்து, அந்த தந்தை, அன்று எங்களை ப்ரஹன் மாதரிடம் கொண்டுவிட்டான் என்று தெளிவுபட புரிந்தது.

மறுநாள் 14/11/2013. எல்லா தெய்வங்களும் ஒன்று கூடி இருந்து மனமகிழ்ந்து இருந்த நாள், இருந்த இடம். ஒரு நிமிடம் யோசித்த போதே, உடலெங்கும் புல்லரித்துப் போனது. விடியற்காலை, சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து, தாமிரபரணியில் நீராடிவிட்டு, தாமிரபரணி தாய்க்கு நன்றி சொல்லும்விதமாக, வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு வைத்து, கரையோரம் பூசை செய்தோம். மிக திருப்தியாக இருந்தது. ஆற்றின் கரையில் இருக்கும் பிள்ளையாருக்கும் பூசை செய்து பின், எங்கள் எளிய பூசையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.

​காலை 9 மணிக்கு கோயிலுக்குள் சென்ற நாங்கள், மதியம் 2.30 மணி வரை அங்கேயே இருந்து அனைத்துவிதமான, அபிஷேகம், பூசைகளை கண்டு மனம் குளிர்ந்தோம். அத்தனையும் நடந்த பின் நாங்கள் உணர்ந்தது ஒன்று தான். "இந்த ஜென்மம் எடுத்ததற்கான காரணத்தை, செய்ய வேண்டிய கடமையை, அகத்தியப் பெருமானும், ப்ரஹன் மாதரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றி தந்துவிட்டார்கள். ஆசி புரிந்துவிட்டார்கள். இனி ஒன்றும் வாழ்க்கையில் ஆவதர்க்கில்லை" என்று புரிந்தது. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த அருள் என்று உணர்ந்து இருந்தோம்.

கோவில் அர்ச்சகருக்கு அத்தனை ஆச்சரியம். இத்தனை கூட்டம் வந்து அவர் பார்த்ததில்லை போல். அவருக்கே, இந்த கூட்டத்திற்கான காரணத்தை, வந்தவர்கள்தான் விளக்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கோவிலிலேயே மதிய உணவு கிடைத்தது.

தங்க ஓரிடம் தந்து, குளிக்க ஓரிடம் தந்து, அருள் பெற கோவிலை தந்து, பசியாற அன்னமும் தந்து, மனதையும், உடலையும் பச்சை வண்ணனும், அகத்தியரும், லோபாமுத்ரா தாயும் ஆட்க் கொண்டுவிட்டார்கள் என்று சொன்னால், மிகையாகாது.

மறுநாள் காலை (15/11/2013) விடியற்காலையில் எழுந்து, தாமிரபரணியில் முதல்நாள் நீராடிய இடத்தில், குளிக்கச் சென்றோம். அங்கு பொதுவாகவே யாரும் குளிப்பதில்லை.

முதல் நாள் நாங்கள் விட்டுச் சென்ற மஞ்சள் துண்டு மட்டும் அங்கிருந்தது. அதுவும் மஞ்சள் பூசி குளித்துவிட்டு மீதம் விட்டு வைத்தது போல். யாரும் இங்கு வந்து குளிக்கமாட்டார்கள். அப்படியிருக்க, அந்த மஞ்சள் துண்டு உபயோகப் படுத்தப் பட்டிருந்தது, எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை வரவழைத்தது. ஆகா! தாமிர பரணி தாயே நாங்கள் வைத்த மஞ்சள் துண்டை எடுத்து குளித்திருக்கிறாள் என்று தோன்றியது.  அப்படிப்பட்ட மிச்சத்தை விட்டுவிடலாமா? கூடாது. அதை பத்திரமாக  வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம்.

எங்கள் அனுபவம் ஒன்றைதான் உணர்த்தியது. சித்தர்கள் வாக்கை நம்புவோர் நிச்சயமாக அவர் அருள் பெறுவார். சரியான தேடல்தான் நல்ல அனுபவங்களை தரும். ஆசியை பெற்றுத்தரும். ஒரு அடி அவர்களை நோக்கி முன் வைக்க, அவர்கள் கை கொடுத்து நம்மை தூக்கி விடுவார்கள்.

எல்லாவற்றையும் அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்து,

அன்புடன்

வேங்கடரமணன்
அலமேலு வேங்கடரமணன்