​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 4 June 2020

சித்தன் அருள் - 868 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


விரல் நுனியில் முடிவு பெறும் நரம்பு மண்டலத்தை, விதவிதமான முத்திரைகள் வழி, தூண்டிவிட்டு அதனுடன் சித்தர்கள் கூறிய மந்திரங்களை, குறிப்பிட்ட அளவு சரியான முறையில் ஜபம் பண்ண, அவர்கள் அருளிய விஷயங்கள் எளிதில் கைவல்யமாகும். தன்வந்தரி சித்தர் கூறிய முறையை பார்ப்போம்.   தன்வந்திரி சித்தர் தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்கிற நூலில் யோக முத்திரைகள் பற்றி கூறுகிறார்.

"சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்
சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று
பக்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே
பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று
வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி
வேதாந்த பூரணமாய் விளங்கு முக்தி"

யோக முத்திரைகளில் பல வகை இருந்தாலும் தனித்துவமான சிறந்த முத்திரைகள் ஆறு உள்ளன. இவற்றை தவறாது செய்பவர்களுக்கு பிறவித் துன்பம் நீங்கி வேதாந்த பூரணமாய் முக்தி நிலை கிட்டும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை, வரிசை தவறாமல், பிரம்ம முகூர்த்தத்தில், ஒரு முத்திரைக்கு ஏழு நிமிடங்கள் வீதம் மொத்தமாக நாற்பத்தி இரண்டு நிமிடங்கள் செய்தல் வேண்டும். இந்த யோக முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிராதானமாக உள்ளது என்று பின்வருமாறு விளக்குகிறார்.

"முத்தியுள்ள கரத்தின் விரல் மகிமைதன்னை
முக்கியமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலால் நிற்கும்
பதிவாக அடுத்த விரல் தர்ச்சினையாமைந்தா
சித்தமுள்ள நடுவிரல்தான் மத்திமையாநிற்கும்
திறமான பவுத்திரந்தான் அனாமிகையாய்நிற்கும்
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டிகையாய்நிற்கும்
சுகமாக இதையறிந்து முத்திரையுஞ் செய்யே"

பெருவிரலை ”அங்குட்டம்” என்றும், அதற்கு அடுத்த விரலை ”தர்ச்சினை” என்றும், நடுவிரலை ”மத்திமை” என்றும், பவுத்திர விரலை  (மோதிர விரல்) ”அனாமிகை” என்றும், சுண்டு விரலை ”கனுட்டிகை” என்றும், இவற்றை உணர்ந்து முத்திரையை செய்யவேண்டும் என்கிறார். கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது. இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார். அத்துடன் இவற்றை பிரம்ம முகூர்த்தத்தில், தூய, அமைதியான அறையினில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, உடலை தளர்த்தி, இரண்டு கைகளையும் முழங்கால்கள் மீது தளர்வாய் வைத்து முத்திரை பிடித்து அதற்கான மந்திரங்களை மனதில் செபித்தல் வேண்டும்.அத்துடன் இந்த முத்திரைகளை செய்ய தொடங்கும் போது...

"சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்திபதிவாக
இருகரமும் ஒன்றாய்க் கூட்டிசுத்தமுடன்
லாடவிழி கண்ணின் நேரேதொழுது மனம் 
நினைத்தபடி சுத்தமாக முக்தியுடன் வரங்கொடுக்க
வேண்டுமென்று மோனமுடன் மனோன்மணியை தியானம்பண்ணே"

சித்தி பெற செய்யும் முத்திரைகளுக்கு மூலாதாரமாய் உள்ள சிவாய குரு முத்திரையைச் செய்யவேண்டும். புருவ மத்திக்கு சமீபமாக இருகரங்களையும் ஒன்றாகக் குவித்து கண்களை மூடிக் கொண்டு "முக்தியுடன் வரங்கள் வேண்டும்" என்று மனதால் மனோன்மணி தாயை வேண்டிக் கொண்டு அந்த ஆறு முத்திரைகளையும் செய்ய தொடங்க வெண்டும் என்று சொல்கிறார்.


மோகினி முத்திரை:-

"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும் (அம்மை, அப்பன்), பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும், சித்தியாகும் என்கிறார்.


சோபினி முத்திரை:-

"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

திருவினி முத்திரை:-

"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.

சித்தன் அருள்...................... தொடரும்!

4 comments:

  1. இன்று 04/06/20 வைகாசி விசாகம் முருகன் அருள் பெற்று அனைத்து விதமான நோய்கள் நீங்கி அருள்பாலிக்க இறைவனின் இடம் வேண்டுகிறேன்... ஓம் முருகா போற்றி

    ReplyDelete
  2. Vanakam ayya intha matham Thiruvona nakasthram endru ullatu Ayya.sri lopamudra samata agastiyar thiruvadi saranam.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், சித்தன் அருள் வலைப்பூ முதல் பக்கத்திலேயே போட்டிருக்கிறேன், இந்த வருட நாட்கள் என்று. சற்று நிமிர்ந்து பாருங்கள்.

      Delete