​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 8 November 2014

அடியவர்கள் ஒன்றுகூடி அருள் பெற்ற கோடகநல்லூர் - 04/11/2014 - 3

கோடகநல்லூர் அனுபவம் தொடர்கிறது!



தலைமுதல் கால்வரை பூக்களால் அலங்காரம் செய்துகொண்டு பெருமாள் நிற்பதை கண்டதும் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது என்பதே உண்மை. அடடா! நாம் அவர் பாதத்தில் இருக்கும் ஒரு சின்ன பூவாக  இருந்திருக்கலாம், என்று தோன்றியது.

பெருமாளுக்கு, நிவேதனம் செய்விக்கப்பட்டது. பின்னர், அர்ச்சகர், பெருமாளுக்கு தீபாராதனை காட்டிய பின், தேசிகர் சுவாமிக்கு அவர் சன்னதியில் தீபாராதனை காட்டினார். அதன் பின்னர் நேராக வெளியில் அமர்ந்திருக்கும், கருடாழ்வாருக்கு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. பெருமாளுக்கு தமிழில் சாற்றுமுறை சொல்லப்பட்டது. எல்லோர் கவனமும், பெருமாள் மீது இருக்க, மறுபடியும் தீபாராதனை காட்டி அர்ச்சகர் பக்தர்களுக்கு அளித்தார். பின்னர் துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. அபிஷேகம் ஏற்பாடு செய்திருந்ததால், பெருமாளின் சார்பாக எதிர் மரியாதை செய்வார்கள், கோவிலில். என்னை அழைத்தார்கள். நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து, அதை, அன்றைய தினம் கூட உதவியாக இருந்து நடத்திக் கொடுத்த ஒரு வயதான பெரியவருக்கு செய்யச் சொன்னேன். அவரும் வாங்கிக் கொண்டார்.

ஏதாவது மரியாதை வாங்கித்தான் ஆகவேண்டும் என்று அர்ச்சகர் நிர்பந்திக்க, சரி என்று சொன்னேன். அவர் தேசிகர் சன்னதியிலிருந்து பூ மாலை எடுத்து வந்து கழுத்தில் போடப் போனார். அதை தடுத்து நிறுத்தி, கையில் வாங்கிக் கொண்டேன். குருவின் அருளும் கிடைத்துவிட்டது என்று தோன்றியது. திரும்பி பெருமாளை பார்க்க ஜகஜோதியாக புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தார்.

இதற்கிடையில், இரண்டு வில்லையும், 10 ரூபாய் கட்டையும் பூசாரி உள்ளிருந்து துளசி பிரசாதத்துடன் கொண்டு வந்தார். பணத்தை நான் வாங்கிக் கொண்டேன். முதல் ரூபாயை எடுத்து பெருமாள் கையில் கொடுக்கச் சொன்னேன். அதன்படியே அர்ச்சகரும், பெருமாள் கையில் அதை வைத்தார். பின்னர் நரசிம்ஹர் வில்லை, திரு மணிகண்டன் என்கிற என் நண்பர், தம்பதி சமேதராக உள்வந்து நின்று வாங்கிக் கொண்டார். கிருஷ்ணர் வில்லை திரு ஸ்ரீதரன் என்பவர் அர்ச்சகரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்பாடா! ஒரு வழியாக பெருமாள் பாதத்தில் வைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டியதை பச்சைவண்ணன் நடத்திக் கொடுத்துவிட்டார் என்று திருப்தி அடைந்தேன். 

இனி நடக்க வேண்டிய விஷயங்களுக்குதான் நிறைய நண்பர்களின் உதவி தேவை என்று தோன்றியது. சென்னையிலிருந்து வந்த திரு மணிகண்டன் என்கிற அம்பாள் கோவில் பூசாரி, 500 பேப்பர் கப் கொண்டு வந்திருந்தார். வெளியே மண்டபத்தில் நான்கு வகை பிரசாதத்தையும் வைத்து, அவர்கள் நான்கு பேரை கொண்டு, அனைத்து பக்தர்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். ஐந்தாவதாக, என் நண்பர் திரு மணிகண்டனை நிறுத்தி, அவர் கையில் அந்த ரூபாய் கட்டை கொடுத்து 

"ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு, பெரியவர்களுக்கு மட்டும் இதை கொடுங்கள் என்றேன். யாருக்கும் "786" என்கிற எண்ணின் மகத்துவம் புரியவில்லை. என் நண்பர்களுக்கு தெரியும். அதனால் இந்த ரூபாய் பெருமாள் கையிலிருந்து உங்களுக்கு பரிசு, பத்திரமாக வீட்டில் பூசை அறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி கொடுக்கச் சொன்னேன். அவரும் அதன் படியே செய்தார்.

உண்மையிலேயே அன்று அங்கு வந்திருந்த பக்தர்களை, அடியவர்களை ரொம்பவும் மெச்சத்தான் வேண்டும். அனைவரும் அமைதியாக நீண்ட வரிசையில் நின்று, பொறுமையாக தன் முறை வரும் பொழுது சென்று பிரசாதம் வாங்கி, பணத்தையும் பெற்றுக் கொண்டு சென்றார்கள். ஒரு சிறு துளி சத்தம், கூச்சல், குழப்பம், உந்துதல் எதுவுமே இல்லை.   எல்லோர் மனதிலும், முகத்திலும் அமைதியும், திருப்தியும் இருந்ததை உணர முடிந்தது. அகத்தியப் பெருமானும், தெய்வங்களும், முனிவர்களும், எல்லோரையும் அன்று நன்றாக ஆசிர்வதித்தார்கள் என்று ஒவ்வொருவரின் முகமும் காட்டிக் கொடுத்தது.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில், இறை அருளும், சித்தர்கள் அருளும் நிறையவே கிடைத்ததை உணர்ந்துள்ளேன். பெருமைக்காக சொல்லவில்லை. பல அறிய விஷயங்கள், பொருட்கள் நிறையவே கிடைத்துள்ளது. அப்படி கிடைக்கும் பொழுதெல்லாம், அதை மற்றவர்களுடன், அவர்கள் நலனுக்காக பங்கு போட்டு கொடுப்பது என் இயல்பு. கிடைத்ததை சேர்த்துவைத்து, சரியான தருணத்தில் முடிந்த அளவுக்கு நிறைய பேருக்கு கொடுக்க வேண்டும் என்று என் வசம் வைத்திருந்ததுதான், 
  1. க்ரௌஞ்சகிரி முருகர் கோவில் பிரசாதம். இதைப்பற்றி சற்று விளக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்பொழுது அதன் மகத்துவம்  புரியும். இந்த கோவில், கர்நாடக மாநிலத்தில், செண்டூர் என்றழைக்கப்படும் ஒரு கிராமத்துக்கு அருகிலுள்ள மலை மேல் உள்ளது. மலைமேல் சென்று அடைவது என்பது சற்று சரமம் தான். ஏன் என்றால் எங்கும் ஒரே சகதிக்காடு, முட்டுவரை இருக்கும். வண்டியில் தான் செல்ல வேண்டும். அந்த மலை மேல் முருகர் இருக்கும் பொழுது, பார்வதி தாயானவள், முருகருக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்று தீர்மானித்து பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள். முருகரிடம் கேட்டபொழுது, முடியாது என்று மறுத்துவிட வாக்குவாதம் வந்துள்ளது. தாயையே வேண்டாம் என்று கூறிவிட, அப்படியானால் நான் கொடுத்த தாய்பால்தானே உன் உடலில் உள்ளது அது மட்டும் உனக்கு எதற்கு என்று அம்மா கேட்க்க, அதுவும் தேவை இல்லை என்று அத்தனை பாலையும் முருகர் கக்கி  விடுகிறார்.அது மிகப் பெரிய  குன்றாக வளர்ந்து உள்ளது. அந்த குன்றிலிருந்து சிறு சிறு கற்களாக வெட்டி எடுத்து, அம்பாள் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருப்பார்கள். யார் போய் கேட்டாலும் எடுத்துக்  கொள்ள அனுமதிப்பார்கள். நான் 4 கட்டிகளை எடுத்து கொண்டு வந்து எல்லோருக்கும் சாப்பிட கொடுத்தேன். அதில் கொஞ்சம் மிச்சம் இருந்தது.அதை, 04/11/2014 அன்று அகத்தியர் உத்தரவால் கோடகநல்லூர் வந்து செல்கிற அடியவர்களுக்கு (நான் பார்க்க முடிந்த பக்தர்கள்) அவர்கள் விருப்ப பட்டால் கொடுக்கலாம் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். கேட்டவர்கள் எல்லோருக்கும், ஒரு சிறு துளி அளவு சாப்பிட கொடுக்க முடிந்தது. அனைவரும், சாப்பிட்டபின் முதலில் விபூதி வாசனையும் பின்னர் சற்று நேரம் கழிந்த பின் பால் வாசனையும் வருவதாக சொன்னார்கள். நான் உணர்ந்ததை உண்டவர்கள் உணர்ந்தது, அவர்களுக்கும் முருகனின் அருள் உள்ளது என்று உணர்ந்தேன்.
  2. ஓதியப்பர் பிறந்த நாள் அன்று, ஒதிமலையில் அபிஷேகம் செய்த எண்ணை என்னிடம் கொஞ்சம் இருந்தது. அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணை சேர்த்து ஒரு பாட்டில் அளவு கொண்டு போயிருந்தேன். அதையும் விதிக்கப்பட்ட அனைவரும் வாங்கி சென்றனர். இந்த எண்ணையின் மகத்துவம் பற்றி ஏற்கனவே "சித்தன் அருளில்" இந்த வருட பிறந்தநாள் தொகுப்பில் சொல்லப்பட்டுள்ளது.
  3. அதன் பிறகு, என்னிடம் இருந்த பழனிமலை தண்டாயுதபாணியின் மார்பில் சார்த்திய சந்தானம் கொஞ்சம் இருந்தது. அதையும் ஒரு 15 பேர் வந்து வாங்கி சென்றனர்.
இவை அனைத்தையும் கொடுக்க முடிகிற சூழ்நிலையை உருவாக்கி தாருங்கள் பெருமாளே, எல்லோர் மனதிலயும் அன்று திருப்தியை விதையுங்கள், எல்லோரும் ஷேமமாக வந்து உங்கள் தரிசனம், அருள் பெற்று செல்ல வேண்டும், உங்கள் பிரசாதம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருடைய பாபத்தையும் தாமிரபரணி ஸ்நானம் அன்று துடைத்து களைந்திட வேண்டும், இனியேனும் எல்லோரும் நலமாக வாழ, சித்தர்கள் அருள், வழி நடத்தல் கிடைத்திட அருள வேண்டும், என்ற வேண்டுதல்களை எல்லாம்...................................

அன்றைய தினம் கோடகநல்லூரில் இறைவனும், சித்தர்களும் அருளியதை கண்ணாரக் கண்டுகளிக்கிற ஒரு பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. இதை அங்கேயே உணர்ந்தவர்கள் எத்தனை பேர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், உணர விட்டுப் போனவர்கள் இனி வரும் நாட்களில் அவர்கள் வாழ்க்கையில் வருகிற நல்ல திருப்பு முனைகளை அடையும் பொழுது உணருவார்கள்.

அனைத்தையும் முன் தகவலாக தந்த திரு கார்த்திகேயனுக்கும், "சித்தன் அருள்" வலைப்பூவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு,

எல்லோரும் ஷேமமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

வணக்கம்.

பின் குறிப்பு:- தட்டச்சு பிழைகளை மன்னித்தருள வேண்டும்!

5 comments:

  1. Aiya,

    Thank you for your involved commitment and sharing these divine details with everyone. Could you please tell us the significance of the number 786 ? Thanks.

    AUM

    V Venkatesh

    ReplyDelete
  2. அனைவருக்கும் பிரசாதத்தை பகிர வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மகத்தானது. 786 என்ற நம்பரில் உள்ள மகத்துவம் என்ன? விளக்கவும். Thank you

    ReplyDelete
  3. Sir, It is so wonderful to read your journey details and dharshans. Thank you for sharing.

    Om Agatheesaya namaha

    ReplyDelete
  4. Agathiyarin arulal enaku indha baghyam kidaithulladhu. avar arulal naan inghe pathivu seiya virumbugiraen

    ReplyDelete
  5. அய்யா,
    நான் க்ரௌஞ்சகிரி முருகர் கோவில் தரிசனம் செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து செல்லும் வழி , போன் நம்பர் மற்றும் விரிவான தகவல்கள் த்ரும்படி வேண்டுகிறேன்

    நன்றி

    Jhothi

    ReplyDelete