"நாங்கள் எங்கள் மகனை தள்ளி நின்று பார்த்துவிட்டு வரவே விரும்பினோம். இருமுறை முயன்றோம், இரண்டு முறையும் மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. என் மகன் எங்களுக்கு மீண்டும் கிடைப்பானா சுவாமி!" என்று கண்ணீர் விட்டு கதறிக் கேட்டனர்.
இவர்கள் மனதில் இருந்த அவ நம்பிக்கையை புரிந்துகொண்ட அந்தப் பெரியவர், "பையன் உங்களுடையவன் தான், ஆனால் அவனுக்கு இறைவன் நிறைய பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறான். அதைச் செய்து முடிக்கும் வரை, நீங்கள் அவனைப் பார்ப்பது நல்லதல்ல" என்றார்.
"அப்படி என்றால் அவனைப் பார்க்க, பேச முடியாதா?" என்றனர்.
"முடியும். அவனுக்கும் உங்கள் மனம் தெரியும். உங்கள் குறையை தீர்ப்பான், அவன் ஒரு தேச சஞ்சாரியாகவே அலைவான். ஆதிசங்கரர் போல் இவனையும் விட்டுவிடுங்கள். இவனால் பலருக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகிறது. பாசம், பந்தம் எல்லாம் இனி அவனுக்கு இல்லை" என்றார் அந்தப் பெரியவர்.
இதைக் கேட்டதும், குலுங்கிக் குலுங்கி அழுதனர்.
கண்ணை திறந்து பார்த்த பொழுது, அந்தப் பெரியவர், கோவிலின் கருவறைக்குள் நுழைந்து கொண்டிருப்பது தெரிந்தது. பிறகு அவரைக் காணவே இல்லை.
இந்த அதிசய சம்பவத்தை இந்த விளையாட்டுச் சித்தரின் பெற்றோர் யார்கிட்டே சொன்னாலும் நம்பவே இல்லை. கேலியாகவும், மிகவும் கிண்டலாகவும் பேசினர். இவர்களுக்கு ஏதோ பித்துப் பிடித்த்திருக்கிறது என்று புண்படுத்திக் கூறினர்.
கருவறைக்குள் நுழைந்தவர் சாட்சாத் சிவபெருமான்தான் என்று விளையாட்டுச் சித்தரின் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது.
சிவபெருமானே தங்களுக்கு, தங்கள் பையன் பற்றிக் கூறி அவனது எதிர்காலத்தைப் பற்றி விளக்கி, ஞானத்தை போதித்ததை கண்டு சந்தோஷப்பட்டாலும், தங்களிடமிருந்த ஒரே மகன் தன்னைவிட்டு விலகிவிட்டானே, என்ற கவலையில் அப்படியே மயங்கி கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.
இரவு நேரம். திடீரென்று கண் விழித்துப் பார்த்தபோது, அவர்களைத் தேடி, விளையாட்டுச் சித்தர் வருகிறார். "அப்பா! அம்மா!" என்று அவர்களைக் கட்டித் தழுவிக் கொள்கிறான்.
"எங்களை விட்டுப் போய்விடாதே" என்று அவன் கையை பிடித்து வாஞ்சையுடன் அணைத்து அவனது தாய் கெஞ்சுகிறாள்.
"இல்லையம்மா., இல்லை, ஒரு போதும் பிரிய மாட்டேன். எப்போது நீ என்னை நினைக்கிறாயோ அப்போது, "சித்தா, " என்று கூப்பிடு. சாப்பாட்டில் அன்னம் போட்டு, எனக்கு பிடித்தமான பால் பாயாசத்தை வைத்துவிடு. நானே வந்து அதை ஆசையோடு சாப்பிட்டுப் போகிறேன். அதற்கப்புறம், நான் வெளியில் விளையாட போய் விடுவேன், சரிதானே?" என்கிறான் அந்த சித்தப் பையன்.
"சரிடா கண்ணு சரி! நான் உனக்காக தினமும் பால் பாயசம் தட்டில் வைத்துக் கூப்பிடுவேன். நீ மறக்காமல் வந்து சப்பிடணம்" என்றாள் அவனது தாய்.
அப்பா கேட்கிறார் அவனிடம் "நாங்கள் உன்னை காணாமல் சிவன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய போனபோது எங்கள் தற்கொலையை தடுத்து நிறுத்தி, உன்னைப்பற்றிச் சொன்ன பெரியவர் யார்?"
"இந்தக் கருவறையில் குடி கொண்டிருக்கும் சிவபெருமான்தான்."
"அப்படியா? அப்படியென்றால், இன்று மாலையில் உன்னைப்பற்றி சொல்லி கருவறைக்குள் புகுந்தவர்?"
"அதே சிவபெருமான்தான். அவரருளால்தான் நான் சித்தி பெற்றேன்" என்றவன், "நீங்கள் இருவரும் ஏன் இந்தக் கோயில் திண்ணையில் படுத்துக் கிடக்கிறீர்கள்? பிரம்ம முகூர்த்தம் வந்துவிட்டது. வீட்டிற்கு போங்கள்! உங்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல், சிவபெருமான் அருகிலிருந்து பார்த்துக் கொள்வார்" என்ற விளையாட்டுச் சித்தர், பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு, வீட்டினுள் கொண்டு விடுகிறான். பிறகு அவனை காணவில்லை.
கண் திறந்து பார்த்த பொழுது, அந்தப் பெற்றோர்கள், உண்மையில் தங்கள் வீட்டில் இருப்பதை உணர்ந்தனர். தங்களை கோயில் திண்ணையிலிருந்து இங்கு கொண்டு வந்தது, தங்கள் மகன்தான், தங்களிடமே சித்துவிளயாட்டை செய்திருக்கிறான், என்பதை உணர்ந்தனர். அன்று முதல் அவர்கள் தங்கள் பையனை சித்தனாகவே கண்டனர்.
அன்றைக்கு மதியம் பால் பாயாசம் செய்து தட்டில் வைத்து, "அப்பா சித்தா, வந்து சாப்பிடு" என்று குரல் கொடுத்தாள் அந்த விளையாட்டுச் சித்தரின் தாய்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த பால் பாயாசத்தை யாரோ உறிஞ்சி சாப்பிட்டுவிட்டுப் போவது போல் ஓர் உணர்வு.
வந்தது தன மகன்தான் என்பதை உளமார உணர்ந்துகொண்ட அந்த தாய், அவனுக்காக ஒவ்வொரு நாளும் பால் பாயாசம் செய்து தட்டில் வைத்து, அவனை கூப்பிடுவாள்.
விளையாட்டுச் சித்தர் தாயின் அன்புக்கு பணிந்து தான் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இன்று வரை விளையாட்டுச் சித்தரின் குடும்பத்தில் அப்படியொரு நிகழ்வு தினமும் நிகழ்ந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.
இதிலென்ன ஆச்சரியமெனில், சித்ரா பௌர்ணமி அன்று மேளதாளம் பூர்ண கும்பத்தோடு உள்ளூர் கோயிலுக்கு ராஜ கோஷத்தோடு அழைத்து வரப்பட்ட விளையாட்டுச் சித்தர், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோருக்கு அருளாசி வழங்கினானே தவிர, பாசத்தோடு நெருங்கி வரவும் இல்லை, பேசவும் இல்லை.
யார் அன்றைக்கு "துஷ்டப்பிள்ளை" என்று சொன்னார்களோ, குருகூலத்தில் சேர்க்க மறுத்தார்களோ, அவர்களே விளையாட்டுச் சித்தரை பல்லக்கில் தூக்கிக் கொண்டு வந்தது ஆச்சரியம்.
இன்றைக்கு பல்வேறு அதிசயங்களை விளையாட்டுச் சித்தர் செய்து கொண்டு வருவது உண்மை.
சித்தன் அருள்................ தொடரும்!
