​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 15 July 2021

சித்தன் அருள் - 1012 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


ஸ்ரீமன் நாராயணர் கருடனை நோக்கி கூறலானார்.

"உலகில் எண்பத்துநாலு லட்சம் யோனி பேதங்கள் உள்ளன. அவை, அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம் என்று நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு வகையில், அண்டசம் என்ற வகையில், முட்டையிலிருந்து 21 லட்சம் பறவைகள் தோன்றின. பூமியிலிருந்து தோன்றினவாகிய உற்பிச வகையில் இருபத்தியொரு லட்சம் மரம், செடி, கொடி முதலிய தாவர வகைகள் தோன்றின. கர்பப்பையிலிருந்து தோன்றுவதான, சராயுசம் என்ற வகையில், இருபத்தியொரு லட்சம் மனிதர் முதலானவர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் என்ற வகையில் இருபத்தியொரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.

பிறவிகள் அனைத்திலும், மானிடப்பிறவி கிடைப்பது, அரிதிலும் அரிது. அந்த மனிதப்பிறவியே, புண்ணியப் பிறவி ஆகும். 

  1. பொருள்களை பார்ப்பதற்குரிய கண்களும், 
  2. விஷயங்களை கேட்பதற்குரிய காதுகளும், 
  3. இனிமையை உணரவதற்குரிய நாக்கும், 
  4. வாசனைகளை அறிவதற்குரிய நாசியும், 
  5. காமம் உய்ப்பதற்குரிய உடலும் 
  6. நன்மை தீமைகளை பகுத்து உணர்வதற்கு, உணர்வும் இருப்பதால்,
மனிடப்பிறவியே சிறப்புடையது.

உணவு, உறக்கம். அச்சம், புணர்ச்சி, ஆகியவை அனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் உரிய இயற்கையாக உள்ளன. ஞானம் மட்டும், எல்லா உயிர்களுக்கும், பொதுவானது அல்ல.

கிருஷ்ணசாரம் என்கிற கருப்பு நிறமுடைய மான்கள், எந்த பூமியில் வசிக்கின்றனவோ, அந்த பூமியே புண்ணிய பூமி ஆகும். அந்த பூமியில் தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் பூஜிப்பவர்களுக்கு, நன்மைகள் மிகவும் உண்டாகும். அந்த புண்ணிய பூமியிலேதான் முப்பத்து முக்கோடி தேவர்களின் சாந்நித்தியம் எப்போதும் இருக்கும்.

பூத, பிரேத, பைசா சாதிகளில் ஆவி உருவம் மட்டுமே உண்டு. அவற்றில் தேகம் பெற்ற ஜீவர்கள், சிறப்புடையவர்கள். அந்த ஜீவர்களில், பசு, பட்சி பிறவிகள் எடுத்து, சிறிது அறிவோடு ஜீவிக்கும் தேகிகள், சிறப்புடையன. அவற்றை விட, மனிதர் சிறப்புடையவர்கள். மனிதர்களில், தாம் உணர்ந்த வழியில் நிலையாக நிற்பவர்கள் இன்னும் சிறப்புடையவர்கள். அவர்களை விட, பிரம்ம ஞானம் அடைந்தவர்கள், இன்னம் அதிக சிறப்புடையவர்கள்.

பல கோடி பிறவிகளாலேயே அடையப்படுவனவாகிய, சொர்க மோக்ஷங்களை அடைவதற்கு, மானிடப்பிறவியே, காரணமாக இருக்கின்றது. அத்தகைய மானிடப் பிறவியை அடைந்து, நல்ல வினைகளை செய்து, நல்ல உலகத்தை அடையாமல், நரலோகத்தில் தள்ளக்கூடிய, தீய செயல்களை புரிந்து, உயர்ந்த மானிடப் பிறவியையே வீணாக்குபவர்கள்தான், உலகில் மிகப்பலராக இருக்கிறார்கள். புண்ணியத்தால் அடைந்த அந்த மானிடப் பிறவியால், பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத்தானே வஞ்சனை செய்து கொள்பவர்கள் ஆவார்கள்.

மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை எனப்படும் இம்மூன்று ஆசைகளால் மயக்கமுற்று, செய்யத்தகாதவற்றை செய்து, தன் மனசாட்ச்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீய செயல்களை செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ அவன், மிருங்களுக்கு ஒப்பானவன். அவனை விட தீயவன் ஒருவனும் இல்லை.

ஆசை பெருக்கத்தால், ஆசையானது, பேராசை ஆகுமே அல்லாமல், அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழ்வும், வளராது. பேராசையால் திணிக்கப்பட்ட மனிதன், தன் பேராசை மிக்க மனத்தாலேயே, இவ்வளவு, அவ்வளவு என, அளவு எதுவும் இல்லாமல் யாவுமே நிறைய கிடைத்தாலும் "இன்னும் வேண்டும்! இதை விட அதிகம் வேண்டும்" என்று அலைவானே தவிர, தனக்கு கிடைத்ததை கொண்டு ஒரு பொழுதும் திருப்தி அடையமாட்டான். அத்தகையவனுக்கு ஒரு நூறு பொன் கிடைத்தால் அதை கொண்டு திருப்தி அடைய மாட்டான். ஆயிரம் பொன் வேண்டும் என்று இச்சிப்பான். அந்த இச்சைக்காக அற நெறிகளை மீறுவான். மனசாட்சியை மீறுவான். இந்நிலையில் அவனுக்கு ஆயிரம் பொன் கிடைத்தால், அத்தோடும் திருப்தி அடையமாட்டான். ஆயிரம் பொன் அடைந்தவன், லட்சம் பொன்னை இச்சிப்பான். லட்சம் பொன்னை அடைந்தவன் கோடி பொன்னை இச்சிப்பான். கோடிப் பொன் அடைந்தவன், ஒரு தேசத்தின் ஒரு பகுதியை தனதாக்கி கொள்ள இச்சிப்பான். பிறகு அரசனாக விரும்புவான். அரசனான பின் புவி முழுவதற்கும் ஏக சக்ராதிபதியாக விரும்புவான். அவ்வாறு, சக்கரவர்த்தியான பிறகோ, அப்போதும் ஆசை விடாமல், தேவனாக வேண்டுமென இச்சிப்பான். தேவனான உடன் தேவேந்திரன் ஆவதற்கு இச்சிப்பான். இவ்விதமாக இச்சையானது மேலும் மேலும் பெருகுமே அன்றி, ஒரு அளவோடு அது நிற்பதில்லை. இந்த இச்சையானது, பொருள் ஆசையாக இருப்பது, மண்ணாசையாக மாறும். மண்ணாசை வளர வளர, பெண்ணாசை வளரும். இந்த மூன்று ஆசைகளும், மனதில் பெருகப்பெருக அவன் மனித தன்மையையே இழந்துவிடுவான். குழப்பத்துக்கு ஆளாவான். அறிவு சரிவர வேலை செய்யாமல் ஆசை உணர்வே அதிகமாவதால், தன் ஆசை நிறைவேற தான் அடைய இச்சிக்கும் பொன்னுக்கும், மண்ணுக்கும், பெண்ணுக்குமாக சுயநலக்காரனாக மாறுவான். அக்கிரமக்காரனாக பலருக்கும் துரோகம் செய்து, தன் ஆசைகளை நிறைவேற்றுவதில், வெறியனாகி விடுவான்.

அவனது ஆசைகள் வளருகிற அந்த அளவுக்கு அவன் வாழும் காலம் நீடிப்பதில்லை. மேலும் இத்தகைய இச்சையை ஒழிக்காதவன், கண்டவருக்கெல்லாம் கரம் குவிப்பான். பிறரால் இகழப்படுவான். இறுதியில், இறந்த பிறகு, நரகத்துக்கே ஆளாவான்.

சித்தன் அருள்....................தொடரும்!

1 comment:

  1. Very nice post Ayya. Very difficult for man to think "It is enough", very true.
    Om Agatheesaya Namah!

    ReplyDelete