​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 June 2013

சித்தன் அருள் - 128

ஆன்மீகத்தில் கரை சேர பக்தி செய்வது ஒரு வழி.  அந்த பக்தியை, பூசை, த்யானம் போன்ற முறைகளால் செய்யலாம். பூசை முறைகள் பலவிதப்படும். உருவ வழிபாடு, யந்திர, தந்திர வழிபாட்டு முறைகள் என பிரிக்கலாம். இவற்றுள், யந்திர வழிபாடு என்பது சற்று ஆபத்தானது என்பது அகத்தியரின் கூற்று.  ஒருவருக்காக யந்திரம் தயார் செய்தால், அது அவர் வசிக்கும் வீட்டில் யாகம் அல்லது பூசை செய்து, நாள் நட்சத்திரம், நேரம் பார்த்து, மிக சுத்தமான முறையில் சூழ்நிலை அமைய உருவாக்கப்படவேண்டும்.  தற்காலத்தில் யந்திரங்கள் என்பது, எங்கே எப்படி தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது என்று அறிந்தால், எத்தனை ஆபத்தான விஷயம் இது என்பது புரியும்.  "யந்திரப் பைத்தியமே" ஏற்பட்டு, அதினால் வாழ்க்கையை தொலைத்து நின்ற ஒருவரை கரை ஏற்றி விட்ட அகத்தியரின் அருளை இன்று பார்ப்போம். 

பக்தி நிறைந்த உருவத்துடன் என் முன் வந்து நின்ற அந்தப் பெரியவரைப் பார்த்த பொழுது எனக்கு அவரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் தோன்றியது.  நெற்றியில் நிறைய விபூதி, நடுவில் அழகாக குங்குமம், மெல்லிய ஜவ்வாது வாசனை தவழ, அவர் உருவத்தில், உடுத்தியிருந்த உடையில் எளிமை, என அத்தனை நேர்த்தி.

சுமார் அறுபது வயதைத் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கூடவே தன மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அவரது தோற்றத்துக்கும், அவர் செயலுக்கும் நிறைய முரண் இருந்தது, பின்னர் தான் தெரியவந்தது.

அவரே பேசினார்.

"பகவான் எனக்கு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.  ஆனால் நிம்மதியைக் கொடுக்கவில்லை.  மூத்த பெண்ணை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தேன்.  அவளது தாம்பத்திய வாழ்க்கை சரியில்லை.  வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

இரண்டாவது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.  பல வருஷம் ஆகியும் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவளும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டாள்.

மூன்றாவது, பையன் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.  சட்டென்று ஒருநாள், காலேஜுக்கு போக மாட்டேன் என்று சொல்லி தன படிப்பை நிறுத்தி விட்டான்.  ஏன் என்று கேட்டால், தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறான்.  வீட்டை விட்டு வெளியே போக மறுக்கிறான்.

சதா சர்வ காலமும் தூங்கி வழிகிறான்.  பல்லைக்கூடத் தேய்ப்பதில்லை. எப்பொழுது அவனுக்கு தோன்றுகிறதோ அன்றைக்குத் தான் குளிக்கிறான். சோப்பு போட்டும் குளிப்பதில்லை.  துர்நாற்றம் வீசுகிறது.  இவனையும் திருத்த வேண்டும் என் மகள்களது இல்லற வாழ்க்கையும் நல்லபடியாக மாற வேண்டும்.  அகத்தியரை நம்பித்தான் வந்திருக்கிறேன்.  நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தன குடும்பக் கதையை வேதனையுடன் சொன்னார்.

"யாரிடமாவது இதற்கான காரணம் என்ன என்று கேட்டு அதற்குரிய பரிகாரங்களை செய்தீர்களா?" 

"செய்தோம்.  ஆனால் எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை.  அதனால் தான் கடைசி முறையாக இங்கு வந்திருக்கிறோம்" என்றார் விரக்தியோடு அந்தப் பெரியவர்.

"பரிகாரங்கள் செய்து அலுத்துப்  போனோம் பரிகாரங்களை தவிர மற்ற எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்.  நாங்கள் செய்கிறோம்" என்று முதன் முறையாக பேசினார், அந்த நபரின் மனைவி.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஆனாலும், எனக்கு இந்த வார்த்தை ஏதோ மாதிரியாக சரியில்லை என்று தோன்றியது.

"அம்மா.. அகத்தியரை ஜோதிடராக எண்ணிப் பார்க்கிறீர்கள்.  இது தவறு. அவரை அருள்வாக்கு தரும் ஞானியாக எண்ணிப் பாருங்கள்.  உங்கள் பிரச்சினைக்கு அகத்தியர் என்ன வாக்கு தருகிறாரோ அதை ஏற்று செயல் படுங்கள்.  உங்கள் இஷ்டத்திற்கோ, என் இஷ்டத்திற்கோ அகத்தியர் பேசுவதில்லை, நடப்பதில்லை" என்றேன்.

"அகத்தியர் நாடி சோதிடம் என்று தானே சொன்னார்கள்.  அதனால் தான் கேட்டேன்" என்றார் அந்த பெண்மணி.

"இவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக பேச வேண்டும்" என்று எண்ணிக் கொண்டேன்.

ஒன்றும் சொல்லாமல் நாடியைப் புரட்டிப் பார்த்தேன்.

"இன்னவன் வீட்டின் பூசை அறையில் வைத்திருக்கும் யந்திரங்களில் இரண்டு பழுதுபட்டிருக்கிறது.  இதை என்றைக்கு வாங்கிக் கொண்டு வைத்தானோ அன்று முதல் மன நிம்மதி இல்லாமல் போயிற்று.  அந்த யந்திரங்களை தூக்கி ஏறிந்து விட்டால், இத்தகைய குடும்ப கஷ்டம் ஏற்படாது" என்று நான்கே வாக்கியங்களில் அகத்திய பெருமான் சொல்லி முடித்துக் கொண்டார்.

இதைச் சொன்னதும் வந்த அந்த பெரிய தம்பதிகளின் முகத்தில் ஈயாடவில்லை.

"என்னிடம் பூசை அறையில் ஏகப்பட்ட யந்திரங்கள் இருக்கிறது.  அதில் எது "தோஷம் உள்ளது" என்று சொன்னால் அதை மாத்திரம் தூக்கி எறிந்து விடலாமே" என்றார் அவர்.

"முறைப்படி பூசை பண்ணாமல், யந்திரம் தீட்டுப்படாமல் இருக்க, வெள்ளி அல்லது தங்க மூலம் பூசாமல் இருந்தால் அந்த யந்திரத்தை அல்லது செப்புத்தகட்டைத் தூக்கி எறிந்து  விடுங்கள்" என்றேன் நான்.

"என்னிடம் ஏறத்தாழ பன்னிரெண்டு செப்புத் தகடுகள் இருக்கின்றன.  எல்லாமே பூசை செய்யப்பட்டவை". என்றார் அவர்

"பூசை என்றால் எப்படி?" என்று வினவினேன்.

"ஜோதிடர் மூலம் சொல்லி கோவிலில் பூஜை செய்யப்பட்டுக் கொடுத்தவை" என்றார்.

"முதலில் கோவிலில் பூஜை செய்வதே தவறு.  அவரவர்கள் வீட்டில் தான் பூஜை செய்ய வேண்டும்.  கோவிலில் பூஜை செய்வது இரண்டாம் பட்சம்" என்றேன்.

"வீட்டில் செய்ய வசதி இல்லாவிட்டால் என்ன செய்வது?" என்று பதில் கேள்வி கேட்டார் அவர்.

"நியாயமான கேள்விதான்.  இதை அகத்தியரிடமே கேட்டு விடுவோம்" என்று மறுபடியும் நாடியைப் புரட்டினேன்.

"எந்திரங்களை அல்லது செப்புத் தகட்டினை பூசைக்கு பயன்படுத்தும் முன்னர் அதைப் பயன்படுத்துவோர் உடல் சுத்தம், மன சுத்தமாக இருக்க வேண்டும்.  வடகிழக்குப் பார்த்து அமர வேண்டும்.  அவர்களுக்கோ அல்லது பூஜை செய்பவர்களுக்கோ எந்த விதமான தீட்டும் இருக்ககூடாது.  மந்திரங்களை தெளிவாக அவசரப்படாமல் சொல்ல வேண்டும்.  அழுக்கு வேஷ்டி, வஸ்த்திரங்களை பயன் படுத்தக் கூடாது.

இரண்டாவது கண்ட கண்ட செப்புத் தகட்டினை வைத்து பூஜை செய்யக்கூடாது.  வீட்டில் ஒன்றிரண்டு செப்புத் தகடுகள் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.  இரண்டிற்கு மேற்பட்ட செப்புத் தகடுகள் இருந்தால், அது குடும்ப நிம்மதியைக் கெடுத்து விடும்.  இவன் வீட்டில் வைக்கப்பட்ட அத்தனை செப்புத் தகடுகளும் முறையில்லாமல் பூஜை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டவை.

என்றைக்கு மூன்று செப்புத் தகடுகளை இவன் வீட்டில் வைத்து பூஜை செய்து வர ஆரம்பித்தானோ அன்றைக்கே இவன் குடும்பத்திற்கு சோதனைகள் வர ஆரம்பித்து விட்டது.  முறைப்படி வீட்டில் யாகம் வைத்துப் பண்ணாத எந்த செப்புத்தகடுகளும் பயனற்றவை.  இந்த தப்பை இவன் செய்திருப்பதால் குடும்பத்தில் இத்தனை சோதனை" என்றார் அகத்தியர்.

மேலும் அவர் கூறும் பொது "தவறான முறையில் பூஜை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட சுதர்சன யந்திரம் வைத்து என்றைக்கு வீட்டில் பூஜை செய்ய ஆரம்பித்தானோ அன்று முதல் இவனது ஒரே மகன் சித்தம் கலங்கி போனான்.  துஷ்ட தேவதைகளிடம் மாட்டிக்கொண்டான்.  மற்ற இரு பெண்கள் வீட்டில் "தீட்டு" அதிகமாக பட்டதாலும் அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனைகள் ஏற்பட்டது" என்று முடித்தார்.

வந்தவருக்கு இதைக் கேட்டதும் முகம் இருண்டு போயிற்று.

யார் எந்த செப்புத் தகட்டைக் கொண்டு தந்தாலும் உடனே வாங்கிக் கொண்டு பூஜை அறையில் ஆணியடித்து சட்டென்று மாட்டிக் கொள்வார்.  இவருக்கு "யந்திரப் பைத்தியம்" என்று பெயர், என்று தெரிய வந்தது.

மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் எந்திரம் எதுவாக இருந்தாலும் வாங்குவார்  "இந்த செப்புத் தகட்டை வைத்து கொண்டால் கோடீஸ்வரர் ஆகலாம்.  கடன் தொல்லை விலகும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.  நீண்ட நாள் வியாதித் தொல்லை தீரும் என்று யார் சொன்னாலும் அதை நம்பிக்கையுடன் வாங்குவார், என்று பின்னர் தெரிந்தது.

"அகத்தியர் சொன்னபடி எல்லாம் செய்துவிட்டு வாருங்கள்.  அருமையான செய்தி கிடைக்கும்.  எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்" என்று அனுப்பி வைத்தேன்.

ஆனாலும் அவர் முகத்தில் ஏதோ கவலை இருப்பது தெரிந்தது. "ஒரு வேளை அகத்தியர் யந்திர விஷயத்தைப் பற்றிச் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ" என்று என் உள் மனதில் தோன்றியது.  சரி! என்று விட்டுவிட்டேன்.

அடுத்த சில மாதங்கள் வரை அந்த தம்பதிகளை சந்திக்கவே இல்லை.  ஏதோ நல்லபடியாக குடும்பம் முன்னேறியிருக்கும் என்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் மாலை -

அந்தப் பெரியவர் தன குடும்பம், மகன், மகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.  சந்தோஷம் அவர்கள் முகத்தில் பரவியிருந்தது.

வந்தவர், வயது வித்யாசம் கூடப் பார்க்காமல் சட்டென்று என் காலில் விழுந்து "நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.  அகத்தியர் கிட்டே சொல்லி மன்னிக்கச் சொல்லுங்கள்" என்றார்.

"என்ன தப்பு செய்தீர்கள்?"

"அகத்தியர் அருள் வாக்கை நம்பாமல் இன்னொருவரிடம் அகத்தியர் சொல்வது உண்மையா? என்று கேட்டேன்.  பரிகாரங்கள் நிறைய சொல்லியிருநதால் எனக்கு நம்பிக்கை வந்திருக்கும்.  பரிகாரம் ஒன்றே ஒன்று மட்டும் நீங்கள் சொன்னதால் மனம் உடைந்து போய் அந்த நபரிடம் சென்றேன்.

அவரோ கட கடவென்று சிரித்து "அகத்தியர் ஜீவ நாடியில் சொன்னதாக "அவன்" சொல்கிறான்.  அதை நம்பாதே.  அவருக்கே சவால் விடும்படி ஒரு பெரிய ஹோமம் செய்து பிரம்மாண்டமான "யந்திரம்" ஒன்றைச் செய்து தருகிறேன் என்று சொல்லி, பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.  அவர் கொடுத்த செப்புத் தகட்டை மறுபடியும் வீட்டு பூஜை அறையில் வைத்தேன்.  இது நான் செய்த மிகப் பெரிய தவறு.

அடுத்த சில மணி நேரத்தில் வந்த செய்திகள், நடந்த சம்பவங்கள், சில தேவை இல்லாத மரணங்கள் என்னைத் திகைக்க வைத்தன.  என் மனைவியோ கோபத்தில் என் வீட்டு பூசை அறையில் இருந்த அத்தனை செப்புத் தகடுகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டாள்.

எனக்கு, முதலில் என் மனைவி மீது கோபம் தான் ஏற்பட்டது.  ஆனால் அத்தனைச் செப்புத்தகடும் கிணற்றில் விழுந்த பின்னர் ஒன்றரை மாதங்களில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

முப்பது ஆண்டுகளாக இல்லாத சந்தோஷம் இப்போது கிடைத்துள்ளது. இப்பொழுதுதான் என் இல்லற வாழ்க்கை நல்லபடியாக மாறிவிட்டது. இரண்டாவது பெண் கருவுற்று இருப்பதாக சொல்கிறாள்.

இதை விட ஆச்சரியம் என் பையன் சித்த ப்ரம்மையிலிருந்து விடுபட்டு மற்றவர்களைப் போல்  நல்ல மனநிலைக்கு வந்து விட்டான்.  மறுபடியும் கல்லூரிக்கு படிக்க செல்கிறான்" என்றார்.

தொடர்கதையை சொல்வது போல் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைச் சொன்னார்.

நான் மவுனமாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு இப்படிச் சொல்கிறவர்கள் நாளைக்கு யார் பேச்சைக் கேட்டும் திசைமாறிப் போகலாம் என்றுதான் நினைக்கத் தோன்றிற்று.

அகத்தியரே! இவர்களை காப்பாற்றுங்கள் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

இந்த தொகுப்பை வாசிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யந்திரங்களை வீட்டில் வைத்துக் கொள்ளும் முன் சற்று யோசிக்கவும். தேவையா?உண்மையான பக்தியையும், பிரார்த்தனையையும் விட உயர்ந்த்தது இந்த உலகில் எதுவும் இல்லை. ஏன் என்றால் எந்திர ரகசியங்கள் அனைத்தும் தெரிந்தவர் என்று அகத்தியரை தவிர வேறு ஒருவர் இங்கு இல்லை என்பது நிச்சயம்.

சித்தன் அருள்................. தொடரும்!

10 comments:

  1. குரு அகத்தியர் நேரில் வந்து காட்சி கொடுப்பது போல் உள்ளது....மிக்க நன்றி சாமிராஜன்

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  3. Hi,
    Just a suggestion / Request,
    Would you be able to change the background image
    with other photo (pothigai malai agathiyar image). If not, Pls send that podhigai malai Agathiyar Rishi pics to me pls.

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  5. Backround very very nice Mr.Karthikeyan

    ReplyDelete
  6. Very nice background picture sir. Thank you

    ReplyDelete
  7. ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

    தங்களின் புதிய வடிவமைப்பு சற்குருநாதர் புதிய படம் மிகவும் உயிருட்டமாக உள்ளது. பார்த்து மெய் சிலிர்த்து போனேன். இந்த படத்தை தயவு செய்து மாற்ற வேண்டாம்.
    மிக அருமையான பதிப்பு. சற்குருவை முழுமையாக சரண் அடைந்தால், பிறவிக்கடலை எளிதாக கடக்கலாம். மிக்க நன்றி.

    ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete