வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஒரு சில மாதங்களுக்கு முன் உங்கள் அனைவரிடமும் அகத்தியப்பெருமானிடம் கேட்க பொதுவான கேள்விகளை அனுப்பி தருமாறு, "சித்தன் அருள்" வலைப்பூவில் கேட்டிருந்தது ஞாபகம் இருக்கும். உங்களில் நிறையபேர் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை அனுப்பியிருந்தீர்கள்! அத்தனையையும் சேர்த்து வைத்து, அந்த நேரத்துக்காக காத்திருந்தேன்.
நேற்று (18/02/2026, புதன்கிழமை) அன்று அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து அனைத்து கேள்விகளையும் கேட்கிற வாய்ப்பு அமைந்தது. மிக சிறந்த நான்கு மணிநேர விவாத போராட்டத்தில், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். சில வேளையில் ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்க, அதிலிருந்து வேறு கேள்வி பிறக்க, மறுபடியும் பதில் கூற, மேலும் கேள்வி கேட்க, "உங்கள் விருப்பம்" என்கிற கேள்வி பதில் பகுதி நீண்டு சென்றது!
சரி! இனி நீங்கள் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும் இனி வரும் நாட்களில், தட்டச்சு செய்கிற நேரத்தை பொறுத்து, சித்தன் அருள் வலைப்பூவில் வெளியிடுகிறேன். (தட்டச்சில் வருகிற தவறுகளை சுட்டி காட்டுக) அவரவர் கேள்வி வரும் வரை பொறுமையாக படித்து வர வேண்டுகிறேன்.
சில கேள்விகளுக்கு சூட்சுமமான பதில்களும் உள்ளது. மனதிருத்தி படித்து உங்கள் வாழ்க்கையில் அவற்றை நடை முறை படுத்தி அவர் அருள் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
இனி கேள்வி பதில் பகுதிக்கு செல்வோம்!
அடியேன்: குருநாதருக்கு நமஸ்காரம், வணக்கம்! இத்தனை கேள்விகளும் என் நண்பர்கள், உங்கள் அடியவர்கள் அனுப்பி தந்தது. இதில் என் பங்கு என்பது மிக குறைவு, கேள்விகளை கேட்பது மட்டும்.
குருநாதர்: அப்பனே! நிச்சயம் சொல்வது என் கடமை, போதுமா அப்பா?
அடியேன்: ஆதலால், கோபப்படாதீர்கள்!
குருநாதர்: கேட்கட்டும் அப்பனே!
அடியேன்: கேள்விகள் எல்லாம் எக்கச்செக்கமாகத்தான் இருக்கு. அதை அடியேன் வாசித்து பார்த்துவிட்டேன்.
1. குருநாதா! அகத்தியர் சித்தர் அப்பா! இந்த உலகத்தில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் சுத்த சைவத்தை , ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்க கூடிய சூழல் எப்போது ஏற்படும். ஐயனே!
அப்பனே, நிச்சயம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது அப்பனே! அப்பனே, பல மூத்தவர்கள், அனைத்தும் சொன்னார்கள் அப்பனே! கடைபிடித்தார்களா? என்ன அப்பனே! கடை பிடிக்கவில்லை அப்பா! இதை கேட்பது சாதாரணமானது. மனதில் உண்மை இருந்தால் பல வழிகளிலும் கூட, அனைத்து வேத புத்தகங்களிலும் இருப்பதை பலருக்கும் தெரிவித்தால், புண்ணியமாகிவிடும் இவர்களுக்கு.
2. குருநாதா மக்கள் குடிக்கின்ற தண்ணீரில் ரசாயனங்கள் கலந்து வருகிறது.ரசாயன குடிநீரை தான் உபயோக படுத்தி வருகிறோம். சுத்தமான குடிநீராக உபயோகப்படுத்த தீர்வு கூறுங்கள் குருநாதா!
குருநாதர்: அப்பனே! இதை பற்றி கூறிவிட்டேன். எத்தனை முறை அறிவிப்பது. அதிகாலை தன்னில், எலுமிச்சை, நெல்லிக்கனி, இன்னும் எத்தனை எத்தனை நல்ல கனிகளை நீரில் இட்டு அதிகாலையில் உண்ணுக அப்பனே! மீண்டும் இதைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
3. அடியேன் ஒரு கோசாலை நிர்வகித்து வருகிறேன். இடம் போதவில்லை. ஆதலால், ஒரு இடம் வாடகைக்கோ, வாங்குவதற்கோ கிடைக்க வேண்டும். அதற்கு அகத்தியப்பெருமானின் அருள் வேண்டும்!
குருநாதர்: அப்பனே! நிச்சயம் வழி காட்டி விடுகின்றேன் அப்பனே! உண்மையாக இருந்தால் வழி காட்டுகிறேன். பொய்யாக இருந்தால் அடிப்பேன்! அவ்வளவுதான், வரும் காலத்தில் அப்பனே!
4. வணக்கம் ஐயா! தற்கொலை செய்து கொள்ளும் ஆத்மாக்களின் நிலையை பற்றிக் கூறவும் ஐயா அவர்களுக்கு எவ்வாறு மறுபிறவி கிடைக்கும் ஐயா! தயவு கூர்ந்து விளக்கம் அளிக்கவும் ஐயா நன்றிகள்!
குருநாதர்: அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவற்றின் விரிவாக்கம் கூற வேண்டுமானால், நிச்சயம், ஒரு நாள் ஆகிவிடும். ஆனாலும், இது பற்றி இப்பொழுது இல்லை அப்பனே!. நிச்சயமாக ஓரிடத்தில் இது பற்றி விரிவாக உரைக்கின்றேன் அப்பனே!
5. ஓம் அகத்தீசாய நம ! குருவே சரணம்! குரு அருளால், ஜீவநாடி வாக்குகளை வாட்ஸப், youtube, Blog வழியாக பரப்ப தொடங்கியிருக்கிறேன். ஆனால் சித்தர் பெருமக்கள் வாக்குகளை எடுத்து பரப்பும் அளவுக்கு எனக்கு தகுதியிருக்கிறதா என்று சில சமயம் தோன்றுகிறது. இருந்தாலும் குருவருளால் எபபடியோ தொடங்கிவிட்டேன். அதை எந்த தடங்கலும், தவறும் இல்லாமல் தொடர தங்கள் (அகத்திய பெருமானின்) ஆசிகள் வேண்டும்.
குருநாதர்: அப்பனே! எங்கள் அருள் இருந்தால் தான் இவை எல்லாம் செய்ய முடியும் அப்பனே! எமது அருள் இன்றி இவை எல்லாம் வெளியாகுமா அப்பனே! நீயே இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லு! அனைத்தும் ஒன்றே! எங்கள் அனுமதி இன்றி ஒரு அணுவும் அசையாது என்பேன் அப்பனே!
6. தந்தையே பணிவான வணக்கங்கள். தந்தையே திண்டுக்கல் மாவட்டத்தில் தாங்கள் உருவாக்கிய அகஸ்தியர் விநாயகர் கோயில் அகஸ்தியர் தெப்பம் உள்ளது. சமீபத்தில் திருப்பணி நடைபெற்றது. அங்கு தினமும் வந்து செல்கிறீர்களா தந்தையே. தங்கள் உருவம் நிழற்குடை இல்லாமல் வெட்ட வெளியில் தெப்பத்திற்கு முன் இருக்கிறது தந்தையே. மனது கேட்கவில்லை. தங்களுக்கு நிழற்குடை அமைக்க வழி செய்யுங்கள் தந்தையே. நன்றி தந்தையே. ஓம் அகத்தீசாய நம
குருநாதர்: நிச்சயம் உண்டு! நாங்கள் வசதியான வாழ்க்கையை விரும்புவதில்லை. அப்பனே! நீயே கூறு! எங்களுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதில்லை. தர்மம் நிலை நாட்டப்பட்ட வேண்டும்! நிச்சயம் உங்களுக்கு பாசம் இருந்தால், எதையாவது செய்து கொள்ளுங்கள், அவ்வளவுதான்.
7. அகத்தியர் சுவாமியை தயவுசெய்து அவர் நம் கைகளை விட்டு விலகக்கூடாது என்றும், எல்லாப் பிறவிகளிலும் அதை எப்போதும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் நமக்கு இருக்கும் ஒரே வேண்டுகோள், சுவாமி நம்முடன் இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குருநாதர்: அதர்மம், கை ஓங்கி இருக்கும் பொழுது, யார் யார் வழி எடுத்துரைக்க வேண்டுமோ, நிச்சயம் எடுத்துரைப்போம். தர்மம் தலை கீழாக போய்விட்டது, எல்லை மீறி. அதனால் தான் வந்து பதிலளிக்கின்றோம். இன்னும் சித்தர்கள் வருவார்கள், கவலை இல்லை.
8. அகத்தீசன் அப்பனே! இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்து ஜீவ ராசிகள் உயிர் ஆத்மாக்கள் முக்தி, மோட்சம், பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும். தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்.
குருநாதர்: வாழ்க்கையே துன்பமாக இருந்தால் தான் முக்தி, மோட்சம், பிறவி இல்லா நிலை கிடைக்கும். ஆனாலும், கஷ்டங்கள் வந்து விட்டாலே, இறைவா, இறைவா என்று ஓடுகிறீர்கள். வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தவன் மட்டுமே, முக்தி அடைவான். மீதி எல்லாம், மீண்டும், மீண்டும் ஆசைகள், பேராசைகள் பட்டு, மீண்டும் மீண்டும் பிறவிகள் பெற்று ... இவைகளை பற்றி பின்னர் எடுத்துரைக்கின்றேன். உள்ளத்துள் ஆசைகள் இருந்தால், இறைவன் என்று காந்தத்தில் ஒட்டாது. இவை எல்லாம் கடைசி பாடங்கள், முதலிலேயே கேட்கின்றார்கள்.
9. சித்தர்கள் கூற்றின்படி தமிழ் வருட பிறப்பு சித்திரையா அல்லது தை மாதமா?
குருநாதர்: சித்திரை என்று ஏன் சொல்கின்றோம்? நீங்கள் அனைவரும் பின் கூறுங்கள்.
அடியவர்: சித்தர்கள் இதை உணர்ந்து (நல்ல தொடக்கத்துக்கு) செய்ய வேண்டியதை செய்வதினால்.
குருநாதர்: யாங்களே, இதை முதலில் கண்டுபிடித்துள்ளோம்.
அடியவர்: நீங்கள் என்னதான் கூற வருகிறீர்கள், அதை முதலில் சொல்லுங்கள்!
குருநாதர்: அப்பனே! "சித்" என்றால் என்ன?
அடியவர்: சித்தம் என்பது பொருள்.
குருநாதர்: அப்பனே! "சி!" என்பது எதனை குறிக்கின்றது?
அடியவர்: "சிவம்"
குருநாதர்: சிவன் தான் உலகம். பலத்த சப்தத்துடன் "ஓம்" என்று ஒலிக்கக்கூடியது சித்திரை தான். சூரியனும், பலமாக உச்சத்தில் இருப்பது சித்திரையே! அதனால் தான் வருட முதல் என்பது சித்திரையே!
10. ஒவ்வோரு மனிதனும் தான் சேர்த்து உள்ள புண்ணியம்/பாவ கணக்கை அறிந்து கொள்ள வழிமுறை இருந்தால் கூறவும்!
குருநாதர்: இப்பொழுது இல்லை, நேரில் வரச்சொல்.
அடியவர்: ஈஸியா ஒரு வழி சொல்றது! ஜுரம் வந்தால் தெர்மா மீட்டர் வைத்து பார்க்கிறோம், BP ஏறிவிட்டால் கருவி வைத்து பார்க்கிறோம். அது போல் ஒரு வழி சொல்லலாமே!
குருநாதர்: இவை எல்லாம் புதுமையான விதத்தில் சொல்ல வேண்டியவை. பொறுத்திருந்து பார்க்கச்சொல், அதில் வரும், இதற்கான பதில் அப்பனே!
11. எப்பொழுதும் நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல வார்த்தை மூலம் நல்ல வாழ்க்கை அமைத்து கொள்ள வழி கூறவும்!
குருநாதர்: ஆணும், பெண்ணும் சமம் என்று எப்பொழுது நினைக்கிறார்களோ, அப்பொழுதே இவை நடக்கும்! எல்லா உயிரும் ஒன்று என நினைக்க வேண்டும்!
12. முற்காலம், நிகழ்காலம் செய்த அனைத்து பாபங்கள் முற்றிலும் குறைத்து, அதிக புண்ணியம் ஈட்ட எல்லா மனிதனாலும் செய்ய கூடிய தினமும் செய்ய கூடிய, எளிய வழி கூறவும்.
குருநாதர்: புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்றால், நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்கள் இருக்க வேண்டும். அப்புண்ணியம், பாபம் இரண்டும் இறைவனிடத்தில் தான். புண்ணியங்கள் செய்ய, புண்ணியத்தை இறைவன் தான் வழங்க வேண்டும் என பல வாக்குகளில் உரைத்துவிட்டேன். இப்பொழுது 20%த்தில் புண்ணியம் சென்று கொண்டிருக்கிறது. பொறுமையாக இருந்தால் தக்க காலத்தில் இதை பற்றி உரைப்போம்.
13. அனைத்து மனிதர்களும் செய்யும் தொழிலினால்/ வேலையினால் உடல் அரோக்கியதிற்கு பாதிப்பு என்று தெரிந்தும் பல அழுத்தங்களை உள்வாங்கி கொண்டு பணத்தினால் பற்று கொண்டு. வேலை/ தொழில் மாற முடியாமல் செய்து வாழ்கின்றார்கள். மாற்று வாய்ப்பு ஏற்பட என்ன செய்ய வேண்டும்?
குருநாதர்: நிச்சயம்! அதையே இழக்க செய்யப்போகிறான் இறைவன். என்ன செய்யப்போகிறீர்கள்?
அடியவர்: அதற்கு முன், நிறய திருஒடுக்கு ஏற்பாடு செய்யுங்கள், எல்லோருக்கும் கொடுப்பதற்கு!
குருநாதர்: அப்பா! அந்நிலை வரக்கூடாது என்று தான் இவை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்!
அடியவர்: அருள் வாங்கி, நடந்து கோடிக்கணக்கான சம்பாதித்தவனெல்லாம், திருவோட்டை தரும் பொழுது அதையும் வைத்துக் கொள்ளதான் வேண்டும்!
குருநாதர்: அப்பா! இப்பொழுது சொன்னேனே! புண்ணியம் செய்வதற்கும், இறைவனே புண்ணியங்கள் தர வேண்டும்! அப்படி இன்றி, யானும் புண்ணியம் செய்கின்றேன் என்று மனிதன் நினைத்தால், புண்ணியம் செய்ய முடியாது. கடைசி காலத்தில், நான் புண்ணியம் செய்தேனே என்று பிதத்ருவான்! என்ன புண்ணியம் செய்தாய்?
அடியவர்: என்ன புண்ணியம் செய்தாயா? நீங்கள் என்ன சொன்னீர்களோ, அது எவ்வளவு புரிஞ்சுதோ அந்த அளவுக்கு புண்ணியம் செய்கிறான்!
குருநாதர்: அனைத்தும் இறைவனையே சாரும்!
அடியவர்: என்ன இது! நீங்கள் சொல்வதை பார்த்தால், பிறந்த குழந்தை கல்யாண சாப்பாட்டை சாப்பிட முடியுமா?
குருநாதர்: நிச்சயம் தாய் நினைத்தால் முடியும்!
அடியவர்: அதெல்லாம் முடியாது!
குருநாதர்: குழந்தை பிறந்தவுடன், உணவை இலையில் இட்டு, நீ கையால் தொட்டு குழந்தையின் நாக்கில் தீட்டினாலே போதுமே, முடிந்து விட்டதே!
அடியவர்: அதெப்படி? ஒரு இலையில், பாயாசத்துடன் முழு சாப்பாடு போட்டு சாப்பிட சொல்ல வேண்டும்! இப்போது சொல்லுங்கள்!
குருநாதர்: ஒரு சிலர் அதிகமாக உட்கொள்கிறார்கள், ஒரு சிலர் குறைவாக உட்கொள்கிறார்கள், இது ஏனப்பா?
அடியவர்: அவரவர் தேவைக்கு அவரவர் சாப்பிடுகிறார்கள்! அவ்வளவுதான்!
குருநாதர்: அவ்வளவுதான் அப்பா!
அடியவர்: அந்த இடத்தில்தான் அடியேன் சொல்ல வருகிறேன்! அந்த குழந்தை குறிப்பிட்ட வயதை அடைந்தபின் தான் அந்த உணவை முழுமையாக உண்ண முடியும்!
குருநாதர்: பாபம் என்று தெரிகின்றது, அதை செய்வாயா? தடுப்பாயா? அல்லது நினைக்க மாட்டாயா?
அடியவர்: நினைக்கவே மாட்டேன்! அவ்வளவுதான்.
குருநாதர்: புரிகின்றதா இப்பொழுது?
அடியவர்: அடியேன் கூற வருவது என்னவென்றால், மனிதன் இப்பொழுது இருக்கும் நிலைமை என்பது பிறந்த குழந்தையின் நிலைமையில் இருக்கிறான். வந்தாகிவிட்டது. 60, 70 வயதாகிவிட்டது. இன்னமும் போகட்டும், இன்னமும் போகட்டும் என்று கூறி, கூட்டி சென்று மலைக்கு மேல் அழைத்து சென்று உருட்டி விடுகிறீர்கள்.
குருநாதர்: அப்பனே! விதியை வெல்ல முடியுமா என்ன?
அடியவர்: விதியை வெல்ல முடியாது, அது உண்மை தான். நான் ஒத்துக்கொள்கிறேன், இல்லை என்கிலை. அதற்கான கேள்வி பின்னாடி வருகிறது. அது வரும்போது பேசுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
