வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஒருமுறை நாடியில் அகத்தியப்பெருமானிடம் ஒரு அடியவரால் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
"கருடபுராணத்தை வீட்டில் வாசிக்கலாமா? பொதுவாக இதை இறந்தவர் இல்லத்திலும், ஒரு சில கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வாசிக்கிறார்களே! ஏன் இதை வீட்டில் சாதாரணமாக வாசித்து, பிறருக்கும் சொல்லக்கூடாது?"
இதற்கு பதிலளித்த நம் குருநாதர்,
"கருடபுராணம் என்பது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில், வாழும்போது செய்யக்கூடாத செயல்கள், குற்றங்கள் அப்படி செய்தால் அதற்கான தண்டனைகள் எது என தெளிவாக உரைக்கின்ற ஒரு நூல். இதை ஸ்ரீமன் நாராயணன், கருட பகவானுக்கு உரைத்து, கருட பகவானிடம், வியாசர் போன்ற மகரிஷிகள், முனிவர்கள் வழி இப்பூவுலகுக்கு, மனிதர்களுக்கு கிடைக்க வழி வகுத்தார். இதை ஒரு மனிதன் வாழும்போது படித்து, தன் குற்றங்களை திருத்திக் கொண்டு, நேர்மையாக வாழ்ந்து, தன் கர்மாவை குறைத்துக் கொள்ள வேண்டும். இருக்கும் பொழுது, அத்தனை தவறுகளையும் செய்து பாபத்தை சேர்த்துக் கொண்டவன் போனபின் இதை படித்து என்ன புண்ணியம்? ஆகவே, தாராளமாக, "கருடபுராணத்தை" யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வாசிக்கலாம்" என்று உரைத்தார்.
இதை கேட்டது முதல், கருட புராணத்தில் உள்ள உண்மைகளை தொகுத்து, "அகத்திய பெருமானின் சித்தன் அருளில்" வழங்க வேண்டும் என்ற அவா வந்தது. பல தேடல்கள், பெரியவர்கள் பலரிடம் பேசி கிடைத்த தகவல்கள் போன்றவற்றின் தொகுப்பாக இந்த தொடரை எழுதலாம் என்று எண்ணம்.
கடந்த ஒரு வருடமாக, அந்த கிருமி பரவலின் காரணமாக, மனித குலமே பல கேள்விக்குறியை சுமந்து எங்கெங்கோ அலைவதை நாம் காண்கிறோம். ஊரு விட்டு ஊரு வந்து, பிழைப்புக்காக வந்தவர்கள், தன் இடம் சேர சிரமப்பட்டதையும், உணவின்றி, வருமானமின்றி, இருந்த வேலையையும் இழந்து தவித்து, ஒரு தேசம் விட்டு ஒரு தேசம் செல்ல தடை விதிக்கப்பட்டு, அனைத்து புண்ணிய செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, வியாதியால் ஒரு பக்கம் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட, அந்த கிருமியால் இறந்து போனவர்கள், குடும்பத்தார் இன்றி, முறையாக சடங்குகள் செய்யப்படாமல், அனாதையாக தகனம் செய்யப்பட்டு, இரண்டு நாட்களுக்கு பின் பத்து ரூபாய் மண்கலத்தில், கால் கலம் எலும்பும் சாம்பலும், வீட்டுக்கு, அரசாங்கத்தால் கொண்டு தரப்பட்டு, "இனி உங்கள் சம்பிரதாயப்படி என்ன சடங்கு உண்டோ அதை மிக குறைந்த ஆட்கள் இருக்க, நடத்திக்கொள்ளுங்கள்" என்ற கட்டளையுடன், ஒரு மனிதனின் வாழ்க்கை நொடியில் தலை கீழாக மாறியதை,
நீங்கள் எத்தனை பேர் கண்டு உணர்ந்தீர்கள் என தெரியாது.
அடியேனுக்கு, அப்படிப்பட்ட அனுபவத்தையும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலையில் ஒரு மூலையில் பிடித்து அமர்த்தி வேடிக்கை பார்க்க சொன்ன நிலையும் அமைந்தது.
அகத்தியப்பெருமானின் நாடியில் கேட்ட பொழுது, "மனிதன் சம்பாதித்த பாபத்தின் அளவு அணை உயரம் கடந்த பொழுது, கோபமுற்ற இறைவன்தான் அழிப்பதற்கே முடிவு செய்தான். பிரார்த்தனை இன்றி, வேறு ஒன்றினாலும் இனி இதை தடுப்பது கடினம்" என்று குருநாதர் உத்தரவளித்தார். அவர் விரிவாக கூறியதில் சில விஷயங்கள் புரிந்தது. சிலவற்றை பொறுத்திருந்து கவனிக்கச் சொன்னார். பார்த்த பொழுது புரிந்த ஒரு விஷயம்,
"மனிதத்திற்கு தன்னுயிரைப் போல் பிற உயிர்களை நினைக்கத் தெரியவில்லை. தான் வாழ எவ்வுயிரையும் கொல்வதும், தின்பதும், தன் மகிழ்ச்சிக்காக துன்புறுத்துவதும், எதையும் செய்வதும், சொந்த பாபக்கணக்கு எவ்வளவு வேகமாக ஏறுகிறது என்கிற யோசனை இன்மையும்தான் காரணம்" என புரிந்தது.
இன்னும் மனிதம் திருந்தவில்லை என்பதும் தெளிவாயிற்று.
சித்தர்களை குருநாதர் என்று அழைக்கின்றவர்கள் கூட, பிற ஜீவன்களை துன்புறுத்துவதையும், மனதையும் செயல்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் வாழ்வதையும் காண முடிந்தது, கேட்க முடிந்தது. இதைப்பற்றி, ஏற்கனவே, இந்த வலை தொகுப்பில், "தவறாக வாழ்கிறவர்கள், ஜீவ காருண்யம் இல்லாதவர்கள் தயவு செய்து, சித்த மார்கத்துக்குள் வராதீர்கள்" என பெரியவர்களே வேண்டுதலை வைத்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.
ஆகவே,
இது நேரம், நல்லதை உரைத்துவிடுவோம், புரிந்து கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும், திருந்தட்டும். இவ்வுலகுக்கு செய்ய வேண்டிய நம் கடமையை முடித்துவிடுவோம், என தீர்மானித்தேன்.
ஆகவே, இறைவன் தன் வாயால் உரைத்த "நல்லவை/கெட்டவைகள்" எது, அதன் விளைவு என்ன, என்ன தண்டனை எதனால் வழங்கப்படும் என்பதை சுருக்கமாக, அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அவர் அனுமதியுடன் தொகுத்து வழங்குகிறேன்.
அனைத்தும், ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.............தொடரும்!
