​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 11 October 2018

சித்தன் அருள் - 770 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"எத்தனையோ நல்ல விஷயங்களை, மிக எளிதாக உலகம் உய்யுற, மனிதன் மேம்பட வேண்டி கூறினீர்கள். இத்தனையையும் அல்லது இவற்றில் நிறைய விஷயங்களை ஒருவன் தன் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால், நிச்சயமாக சித்த மார்கத்தில் உயர்வான நிலையை அடைய முடியும். இல்லையா?" என்றேன்.

"நிச்சயமாக உயர் நிலையை அடைய முடியும். ஆனால், அந்த ஒருவன், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை பொருத்து இருக்கும். மனிதனை ஆட்டிப் படைப்பது, அவன் பௌதீக விஷயங்களில் செலுத்தும் கவனமும், அவற்றின் மீது வைக்கும் பற்றும் தான். சற்று முன் அவன் வசம் இருந்தது, அடுத்த நொடி இல்லாமல் போனால், மிகவே பதற்றமடைகிறான். அதற்கு காரணம், அது இருந்தால்தான், தன்னால் அடுத்த நிமிடம் வாழ்க்கையை நடத்த முடியும் என்கிற, அதை சார்ந்த மன நிலைதான். தெளிவுக்காக, ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்" எனக்கூறி சற்று யோசித்தார், பெரியவர்.

"10 மணிக்கு இருந்த ஒருவரை "அப்பா" அல்லது "அம்மா" என்றழைத்த மனிதன், 10.05க்கு அவர் உயிர் நீத்தால், பின்னர் அந்த உடலை "பிணமாகத்தான்" பார்க்கிறான். இல்லையா?"

"உண்மை! அவன் அப்படி அழைக்காவிடினும், அவனை சுற்றி இருக்கும் சமூகம் "எத்தனை மணிக்கு உடம்பை எடுக்க போறீங்க? என்றுதான் கேள்வி கேட்கும். என்னடா இது, என் தகப்பனை இவர்கள் இப்படி பேசுகிறார்களே, என்று கூட மனம் வருத்தப்படும்" என்றேன்.

"ஹ்ம்ம்! அதுதான் உண்மை. அன்று வரை வாழ்ந்த பொழுது, அந்த ஆத்மா, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தி, தன்னை அண்டியவரை கனிவுடன் அரவணைத்து, சென்றிருந்தால், அதனால் விளையும் புண்ணியத்துடன் மேல் நிலைகளுக்கு செல்லும், என்பதே உண்மை. இதைத்தான், சித்த மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக "எல்லோரும் பத்தே கால்" என சுருக்கமாக கூறுவோம்" என நிறுத்தினார்.

அந்த "பத்தேகால்" என்கிற வார்த்தை சுருக்கென என்னுள் புதைந்தது. மேலும் தெளிவாக வேண்டி அவரிடமே கேள்வியை எழுப்பினேன்.

"அதென்ன பத்தேகால்! சற்று விளக்குங்களேன்!" என்றேன்.

"இங்கு உறையும் அனைத்து ஜீவன்களுமே, "பத்தேகால்". உயிர் பிரிந்து வெற்றுடலான பின் மயானத்தில் எரித்தால் மிச்சம் கிடைப்பது, அந்த கால மதிப்பில் பத்து ரூபாய் மண் பானைக்குள் கால் கலமாகத்தான் இருக்கும். இதில் என்ன, உயிருடன் இருக்கும் பொழுது, நான், எனது, என் சொந்தம், சுற்றம், ஜாதி, வர்ணம் போன்றவை. ஒவ்வொருவரும் இதை உணரவேண்டும். அரசனே ஆயினும், ஆண்டியாயினும் "கால் கலம்" தான் மிஞ்சும். வாழும் போதே இதை உணர்ந்தவன், மிக பாக்கியசாலி. ஏன் என்றால், அவனிடம் நிம்மதி குடி கொண்டுவிடும், பற்றறுப்பது எத்தனை எளிது என உணருவான். சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலை அமையும், பதற்றம் போய்விடும், சித்தம் நிலைக்கும். அவனுக்கு, அது முதல் வாழ்க்கையே, ஒரு நல்ல தவமாக மாறிவிடும். தனியான பயிற்சிகள் அவனுக்கு தேவை இல்லை. பத்து மணிக்கு கோடீஸ்வரனாக இருந்தவன், எதை கொண்டுவந்தான்? 10.05க்கு பிணமானபின், எதை கொண்டு போகிறான்?  பௌதீகமாக எதுவுமே இல்லை என்பதே உண்மை. பின்னர் எதற்கு இந்த இரைச்சலான வாழ்க்கை வாழுகிறான், மனிதன்" என்றார்.

"இது முற்றிலும் உண்மை. ஆனால், ஒரு மனிதன் வாழ்வதே, வரும்கால தலைமுறைக்கு வேண்டித்தானே. அவர்களுக்காக சேமித்து வைக்க வேண்டும் என்பது, மனித வாழ்க்கையின் நியாயமான எண்ணம்தானே?" என்று எதிர் கேள்வி போட்டேன்.

"உண்மைதான். அதில் ஒன்றும் தவறில்லை. சேர்வதின் மீது வைக்கும் பற்றுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பற்று, இறைவன் மீது வைக்க வேண்டிய கோணத்திலிருந்து விலகி, சொத்தின் மீது அடங்காத ஆசையாய் போன பொழுது, அவன் செயல்களில் இருந்த தர்மம், அதர்மமாக மாறிப்போகிறது. பின்னர் அவன் மனநிலையே மாறி, எவன் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. இதிலிருந்து, கலிபுருஷன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து எப்படி ஒருவனை கெடுக்கிறான் என்பது தெளிவாக புரியும்." என்று நிறுத்தினார். 

அடியேன், அமைதியாக அமர்ந்து, அவர் கூறியது உண்மை என்று உணரத்தொடங்கினேன்.

"ஆகவே, மனிதன் மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினால், முதலில், தன்னை இழக்க வேண்டும். இழப்பு என்று இங்கு கூறியது உடலை அல்ல. "நான்/எனது" என்கிற நினைப்பை. அது ஒருநிலை. அந்த நிலையை, எத்தனை சிரமங்கள் இருப்பினும், விடாது பிடிவாதமாக தொடர்ந்து சென்று ஒருவன் ஏறிவிட்டால், அந்த முதல் படியில் சோர்ந்து அமர்ந்திருந்தாலும், சித்தபெருமக்கள் வந்து கைநீட்டி, தூக்கிவிட்டு, அடுத்த நிலைக்கு அழைத்து செல்வார்கள். பின்னர் வாழ்க்கை இன்பமயமாகிவிடும், என்பதே உண்மை."

"பிரார்த்தனையை விட மிக உயர்ந்த ஒரு விஷயம் இவ்வுலகில் இல்லை", என சித்தர்களும், உங்களை போன்றவர்களும் உரைத்துள்ளார்கள். எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே. ஒன்று விட்டு ஒன்று என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், மேற் சொன்ன கூற்று, இந்த கலியுகத்துக்கு பொருந்தாதா?" என்றேன்.

சற்று நேரம், முகவாயை கையில் தாங்கி பிடித்தபடி இருந்தவர், ஒரு புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.

"இது எல்லா யுகத்துக்கும் பொருந்தும், வாசகம்தான். பிரார்த்தனை பலிக்காத அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், மனிதனுக்கு வெறுப்புதான் வருகிறது. ஆனால், அவன் செய்த தவறை, சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. ஒன்று, சில சூழ்நிலைகள், இறைவனால் விதிக்கப்பட்ட கடமைகள் என்று உணராதது. இரண்டு, பிரார்த்தனையை சரியான முறையில் சமர்ப்பிக்காதது. மூன்று, விதி விலகி இடம் கொடுக்காதது. இவை தான் காரணம். விதி விலகாததும், கடமைகள் என்று உணராததும் ஆன சூழ்நிலைகள், சத விகிதத்தில் மிக குறைவு. 5% என வைத்துக் கொள்ளலாம். மீதி 95%மும் பிரார்த்தனையில் உள்ள தவறுதான் காரணம். உதாரணமாக, முன்னரே கூறினேன், "நான்/எனது" போன்ற உறவுமுறைகளை உண்மையாகவே ஆழ் மனதிலிருந்து விலக்கி, எல்லாமே உன்னுடையது, எல்லோருமே உன் குழந்தைகள் என்கிற உண்மையான தாத்பர்யத்துடன் சமர்ப்பித்தால், இறைவன் நிச்சயம் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவான். ஆனால், சிறிதளவு கூட, அந்த பிரார்த்தனையில், ஒரு பழுதும் இருக்கக்கூடாது. சோதனைகள் வரலாம், துவண்டுவிடக்கூடாது. முயற்சி செய்து பார்! உனக்கு விளங்கும்" என்றார். [பின்னர் ஒருமுறை, அவகாசம் கிடைத்தவுடன், இந்த பெரியவர் சொன்ன, இந்த கூற்றை பரிசோதித்து பார்த்தேன்! கிடைத்த அனுபவத்தை கண்டு அசந்து போனேன். அதை இன்னொரு சமயத்தில் தொகுத்து தருகிறேன்.]

"நேரம், காலம், சூழ்நிலை" இவை மூன்றும் அடங்கியதை சித்தர்கள் "நிமித்தம்" என்பார்கள். கேள்விப்பட்டிருக்கிறாயோ?" என்றார்.

"ஆம்! கேள்விப்பட்டிருக்கிறேன்! நிமித்தம், ஒரு சாஸ்த்திரமாயிற்றே! ஜோதிடத்தின் அங்கமாயிற்றே!" என்றேன்.

"சோதிடத்தின் ஒரு அங்கமாகவும் இதைக் கூறலாம்! சோதிடமின்றியும், நிமித்தம், தனித்தும் இயங்கும். இதை புரிந்து கொள்ள, கேள்வியை உள்ளுக்குள்ளே கேட்டுவிட்டு, சித்தம் நிலைத்து, அமைதியாக அமர்ந்து, சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தாலே போதும், எனத்தெரியுமா?" என்றார்.

"அட! அப்படியா?" என்றேன்.

"ஆம்! ஆனால், கேள்விக்கான பதில் கிடைக்கும் பொழுது, அது சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், ஏற்றுக் கொள்கிற மனநிலை இருந்தால், அதன்படி நடந்து கொள்ள தயாராக இருந்தால், அந்த நிமித்தத்தை உரைக்கிற சக்தியானது, நிரந்தரமாக அந்த ஒருவனிடம் தங்கிவிடும். பின்னர் அவன் பொய் பேசமாட்டான், ஆசைப்பட மாட்டான், கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்ளமாட்டான்" என்றார்.

"ஒரே ஒரு எளிய "நிமித்த" சூழ்நிலையை கூறுங்களேன்" என்றேன்.

சித்தன் அருள்................ தொடரும்!

11 comments:

  1. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி

    எல்லாம் இறை அருள்....

    இயன்ற வரை இறை வழியில் வாழ்ந்து வருகின்றோம்....

    கிடைப்பதற்கு அரிய அருள்... அகத்தியர் அய்யன் தங்கள் மூலம் தருகிறார்...

    நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஐயா... பஞ்சதாயன பூசை என்பது என்ன, எப்படி வழிபடுவது...

    ReplyDelete
    Replies
    1. தினமும் விநாயகப் பெருமான், சூரிய பகவான், சிவபெருமான், சக்தி, நாராயணர் இவர்களை ஒரே நேரத்தில் பூசை செய்வது பஞ்சத்தாயான பூசை. அவரவர்களுக்குரிய சங்கல்பம், மந்திரம், அபிஷேக அகங்காரம், நிவேதனம் இவை மாறுபடும். இங்கு தேடிப்பார்த்தால், முருகர் இருக்க மாட்டார். தேடுங்களேன், அவர் எங்கே போனார் என்று.

      Delete
    2. எங்கேயும் தேட வேண்டாம். மேற்சொன்ன தெய்வங்கள் ஐவருக்கும் பூசை செய்தால் குருவின் குருவான சுப்ரமணியரை நீங்கள் செயத பூசை நேரிடையாக போய் சேரும்.

      சித்தன் அருளில் வந்த விளக்கம் உங்கள் மேலான பார்வைக்கு

      ஒரு மனிதன் நித்தியம் செய்ய வேண்டிய "பஞ்சதாயன பூசை"யில் குறிப்பிடப்படுகிற தெய்வங்கள் ஐந்து. அவை, கணபதி, சூரியன், சிவன், அம்பாள், விஷ்ணு. இதில் சுப்ரமண்யரின் பெயர் இடம் பெறவில்லை. அதெப்படி சுப்ரமண்யர் இல்லாமல் ஒரு பூசையை நிறைவு செய்ய முடியும்?" என்ற கேள்வி உதித்தது.

      இதற்கு தந்த விடை ஆச்சர்யமாக இருந்தது.
      சூரியன் பூசை - எல்லாவற்றையும் அருளும்.
      கணபதி பூசை - எல்லா விக்னங்களையும் விலக்கும்.
      சிவன் பூசை - ஞானத்தை அருளும்.
      அம்பாள் பூசை - மேற்சொன்ன அனைத்தையும் அனுபவிக்க, உடலுக்குள் சக்தியாக இருந்து அருளும்.
      விஷ்ணு பூசை - எந்த இழப்பும், பாதிப்பும் இன்றி பாதுகாத்து மேற் சொன்னவைகளை அனுபவிக்க வைக்கும்.
      இந்த ஐந்து பேருக்கும் செய்கிற பூசை கடைசியில் பிரம்ம ஞானத்திடம் செல்லும்!

      அந்த பிரம்ம ஞானமே "சுப்பிரமணியர்".

      இவர்கள் அனைவருக்கும் செய்கிற பூசை சுப்ரமண்யரை சென்று சேரும்.
      சுப்ரமண்யரை மட்டும் பூசை செய்தால், இவர்கள் அனைவரையும் பூசை செய்த பலன் கிட்டும்.

      Delete
    3. ivar vallipadum ,murugan vallipade.sariya ayya?

      Delete
    4. மிகவும் சரி.உங்களுடைய அனைத்து நல்ல செயல்களிலும் அவர்கள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

      Delete
    5. https://siththanarul.blogspot.com/2016/01/blog-post_2.html Subramaniyar poojai arumai vilakkam link

      Delete
    6. அருள்மிகு முருகப்பெருமானே பிரம்ம ஞானம் இந்த அருள் உணர்த்தியது தாங்கள்

      Delete
  3. மதிப்புக்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்.

    நாங்கள் செய்த பாக்கியம் இந்த பொக்கிஷமான ஞானத்தை அறிவதற்கு.

    இறைவனுக்கு நன்றி. அகத்தியர் பெருமானுக்கும் நன்றி.

    தங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கி.

    நன்றி அய்யா.

    மு. மோகன்ராஜ்

    ReplyDelete
  4. ஐயா... முருகப்பெருமான் மற்றும் சுப்ரமணியர் இறைவனை வழிபாடு முறைகள் ஒன்றா அல்லது வேறுபடுமா?

    ReplyDelete