​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 January 2015

சித்தன் அருள் - 206 - நவக்ரகங்கள் - சூரியன்


நாடியில் அகத்தியப் பெருமான் வந்து பலருக்கும் பரிகாரங்கள் சொல்கிற பொழுது நவக்ரகங்களை பற்றி நிறைய விஷயங்கள் பெருமையாக சொல்லியுள்ளார். அவற்றில், மிகச் சிறந்த விஷயம் என்பது, எல்லா கிரகங்களும் தாங்களுக்கு இறைவனால் இடப்பட்ட வேலையை மிகச் சரியாக செய்கின்றது என்பதே. ஆம்! மனிதனாக இவ்வுலகில் பிறந்து, ஆறறிவு பெற்றதால் மட்டுமல்லாமல், சரியாக சிந்தித்து, தர்மமே செய்து வந்தால், நவக்ரகங்கள் ஆசிர்வதிக்குமே அன்றி ஒரு பொழுதும் ச்ரமங்களை கொடுக்காது என்றும் கூறுகிறார்.

அப்படிப்பட்ட நவக்ரகங்களின் விரிவான விஷயங்களை பற்றி கூறியதை இன்று சூரியனிலிருந்து பார்ப்போம்.

இந்த அற்புதமான பூமிக்கு அனுதினமும் கண்கண்ட தெய்வமாக காட்சி அளித்து, கஷ்டங்களை நீக்குபவன் சூரியன், வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் சூரியனுடைய புகழையும், வரலாற்றையும் பலவகையில் எடுத்துச் சொல்லுகின்றன. ரிக் வேதத்தில், அக்னிகள் மூன்று என்றும், அவற்றில் தலையாய அக்னியாக சூரியன் விளங்குகிறான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

சூரியனுக்கு ஏழு பெயர்கள் உண்டு.  அந்த ஏழு பெயர்களும், காரணப் பெயர்கள். 
  1. இருளை அழிப்பதால் "சவிதா"
  2. ஒளியை எல்லா உலகங்களுக்கும் விழச் செய்வதால் "பகன்"
  3. ஒளியைக் கொடுத்ததோடு மட்டுமின்றி அந்த ஒளியின் காரணமாக பூமிக்கு உயிரையும் நல்ல உரத்தையும் தருவதால் "பூஷா"
  4. வானம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று லோகங்களையும் தன் ஒளிக்கற்றையைக் கொண்டு அளப்பதால் "விஷ்ணு"
  5. இரவில் தன் ஒளிப்பிழம்பைச் சுருட்டி, மடக்கி அமைதியாக மாறிவிடுவதால் "கேசி"
  6. எல்லா மக்களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய ஒரே கண்கண்ட தெய்வம் போல் பவனி வருவதால் "வைசுவானரன்"
  7. சிகப்பு நிறக்கதிர்களைத் தன்னிடமிருந்து வெளிபடுத்துவதால் ஒரு துடிப்பு மிக்க காலைக்குரிய வீரியத்தைப் பெற்று வலம் வருவதால் "வ்ருஷாகபி" என்று இப்படி ஏழு பெயர்களை உடையவர் சூரிய பகவான்.

சூரிய உதயத்திற்கு முன்பு "உஷாவை" மனைவியாகக் கொள்கிறான், நண்பகலில் சூர்யாதேவியையும், மாலை நேரத்தில் அல்லது சந்த்யாகாலத்தில் "வ்ருஷாக்"பாயினையும் சூரியன் மனைவியாகக் கொள்கிறான் என்பது ஐதீகம்.

  1. ரிக் வேதத்தில் "நம்மை காப்பாற்றும் கண்கண்ட ஒரே கடவுள் சூரியன்தான். யாரை மறந்தாலும் பரவாயில்லை, தினமும் காலையில் சூரியனை வழிபட மட்டும் மறந்து போனால் அவனுக்குச் சொர்க்கம் கிடையாது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  2. யஜுர் வேத காலத்தில் சூரியனைப் பற்றி சொல்லும் பொழுது "எல்லா உலகையும் ஒளிமயமாக ஆக்குபவன் நீ; உனக்கு தோல்வி என்பதே கிடையாது. நீ மகான், ஆதித்யன், உனக்கு சமமானவர் யாரும் இல்லை, இந்த உலகில்" என்று கூறப்பட்டுள்ளது.
  3. சாம வேதத்தில் "உன்னிடம் நோய்களை குணப்படுத்தும் மகா சக்தி இருக்கிறது. துன்பத்தை ஒட்டுவாயாகா! பகையை விரட்டுவாயாக! எங்களை காப்பாற்றுவாயாக" என்று பல இடங்களில் சூரியனைப் பற்றி பெரிதும் சொல்லியிருக்கிறது.
எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரம் ஒன்றுண்டு. அந்த மூல மந்திரத்திற்கு "தாயாக" விளங்கக் கூடியவள் "காயத்ரி". அந்த காயத்ரிக்குத் தெய்வம் "சூரிய பகவான்" என்பதை பார்க்கும் பொழுது சூரிய பெருமானின் மகிமை நமக்கு புலனாகும்.

சூரிய பெருமான் காச்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவன். அதிதிக்குப் பிறந்த காரணத்தினாலோ என்னவோ அதிதியின் புத்திரன், ஆதித்தியன் என்று பெயர் விளங்கலாயிற்று.

பாரதத்தில் இன்னொரு கதையும் சொல்வதுண்டு.  காச்யப முனிவருக்கும் அதிதிக்கும் பன்னிரண்டு குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் பன்னிரண்டு பேரும் பன்னிரண்டு விதமாகக் காணப்பட்டனர்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி சொந்தமாயிற்று. அதனால் தான் பன்னிரண்டு ஆதித்தியர்கள் பன்னிரண்டு விதமாக நமக்கு அருள் பாலித்து வருகின்றனர். இவர்களில் தலையாய குமாரர் "சூரியன்".

தேவர்களுக்காக அமுதம் கடைந்த போது, ராகு பகவான் மறைவாக வந்து அந்த அமுதத்தை உண்டான். இதைக் கண்டு வெகுண்டு எழுந்தனர் அனைவரும். சூரியனும், சந்திரனும் "ராகு அமுதத்தை உண்கிறான்" என்று மற்றவர்களுக்கு காட்டினார்கள். மற்றவர்கள் கோபத்தால் ராகுவைத் துண்டித்துவிட்டனர்.

தன்னை காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் பழி வாங்கத் துடித்தான் ராகு. அதற்கேற்ற சமயத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தகுந்த காலம் வந்ததும் ராகு, சூரியனை கவ்விப்பிடித்துக் கொண்டான். சூரியனது பலம் மறைந்தது. ஒளி மங்கியது. உலகம் இருண்டது.

அப்பொழுது சூரியன் நினைத்தான், "நான் தேவர்களுக்காகத் தானே அன்றைக்கு ராகுவைக் காட்டிக்கொடுத்தேன். இன்றைக்கு ராகுவின் கோபத்திற்கு ஆளாகி, துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு தேவராவது என்னை வந்து விடுவிக்க முயலவில்லையே! மரியாதைக்கு கூட ஏனென்று கேட்கவில்லையே! சே! என்ன நன்றி கெட்ட தேவலோகம்?" என்று வருந்தினான்.

சில மணி நேரம் கழித்து ராகு தன் கோபத்தை விட்டுவிட்ட பின், சூரியன் கடும் கோபம் கொண்டு "இனிமேல் எனது வெப்பம் இந்த அகிலத்தையே அழிக்கும், அதில் தேவர்களும் தப்ப முடியாது" என்று சொல்லிவிட்டு மறைந்து கொண்டான்.

சூரியன் மறைந்த போது உண்டான வெப்பத்தையே மூவுலகமும் தாங்க முடியவில்லை, இன்னும் சூரியன் நேரில் வந்து வெப்பத்தைக் காட்டினால் சர்வமும் சாம்பலாகப் போய் விடுமே" என்று பயந்தனர் தேவர்கள்.

சித்தன் அருள் ............ தொடரும்!

4 comments:

  1. Iniya putthaandu nalvaalthukkal...
    On Agatheesaaya namaha...

    ReplyDelete
  2. Iniya putthaandu nalvaalthukkal...
    On Agatheesaaya namaha...

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete