​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 February 2014

சித்தன் அருள் - 164 - பாபநாசம் - அருள் நிறைந்த ஸ்நானம்!

[ பொதிகையில் அகத்தியப் பெருமானின் இரு வேறு தோற்றம்]

ஏன் என்றால், அங்கு திருக்குறும்குடியின் பக்கத்தில் கூட, சில விந்தை மிகு மலைகள் எல்லாம் இருக்கிறது. விந்தை மிகு நீர்வீழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறது. இதுவரை யாருமே கண்டிராத சில அருவிகள் எல்லாம் இருக்கிறது. அந்த அருவியில் மட்டுமே ஏறத்தாழ 147 மருந்துகள் ஒன்றாக கலக்கினால் அருவி எப்படி வருமோ, அந்த மாதிரி அருவி கூட திருக்குறும்குடி பக்கத்திலே இருக்கிறது. ரகசியாமான இடம். சொட்டு சொட்டாக விழும் இடம் அல்ல. அருவி போல கொட்டாது. ஆனால் ஆனந்தமாக, ஒரு சிறு ஓலையில் பட்டு திரிந்து விழுந்து கொண்டிருக்கும். அந்த அருவியில்தான் உங்களை எல்லாம் நீராடச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அதை விட இது முக்கியம். ஏன் என்றால், எல்லா தேவதைகளும் வந்திருக்கிறார்கள். அகத்தியனும் இங்கு வந்திருக்கிறேன். முதலில் இந்தப் புண்ணியத்தை உங்களுக்கு வாங்கித் தருகிறேன். ஆகவே, இன்று மூன்று மணிக்குள் யாரெல்லாம் நீராடுகிறார்களோ, அது தான் உண்மை. இங்கு நீங்கள் மட்டுமல்லடா, மனிதர்கள் அத்தனை பேரும், யாரெல்லாம் நீராடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் அந்த புண்ணியம் கிடைப்பதோடு, பாபம் போவதோடு, அவர்களுக்காக இப்பொழுது நீராடுவதற்காக அல்ல, உங்கள் வீட்டார்களுக்காக, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, புண்ணியத்தை வாங்கி கொடுப்பதற்க்காகத்தான் உங்களை எல்லாம் வரச் சொல்லியிருக்கிறேன். இதுவரை நீங்களே புண்ணியத்தை சம்பாதித்தால் எப்படி? என்ற எண்ணம் வரக்கூடாதல்லவா. ஆகவே, வீட்டுக்குச் சென்றவுடன், உனக்கும் புண்ணியம் வாங்கித் தந்திருக்கிறேன் என்று தைரியமாகச் சொல்லலாம். கோபித்துக் கொள்ளமாட்டார்கள், நம்பினால் நம்பட்டும், நம்பாமல் போனால் போகட்டும். அந்த நல்லதொரு காரியத்தைச் செய்வதற்காகத்தான் வரச் சொல்லியிருக்கிறேன். 

ஆக இப்பொழுது 8 நதிகளைச் சொன்னேன். 8 நதிகளின் தேவதைகளும் இங்குதான் அமர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் நீராடும் போது மட்டும் அவர்கள் வந்து ஆசிர்வாதம் பண்ணுவார்கள். அகத்தியனும் கடைசியாக, கும்பமுனி, உங்களை எல்லாம். வாழ்த்தி, வரவேற்று, நீராடச் சொல்லி, உங்கள் மனைவிக்கெல்லாம் ஒரு புண்ணியத்தை தேடி தரவேண்டும் என்பதற்காகத்தான், நான் இங்கு வரச்சொன்னேன். நீராடி விட்டு, நீங்கள் நேராக, கரும்குளம் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். கரும்குளம் வழியாக என் அப்பன் முருகன் சன்னதிக்கு செல்லுக. போகின்ற வழியில் ஏதேனும் புண்ணிய தலங்கள் தென்பட்டால், நேரம் இருந்தால், அதையும் எட்டிப் பார்த்துவிட்டு, அந்த புண்ணியத்தையும் வாங்கிக் கொள்ளலாம். இனிமேல் நீங்கள் சம்பாதிப்பது எல்லாமே புண்ணியம் தான். பாவமே அல்ல. இன்றைக்கும் நாளைக்கும், அந்த புண்ணியத்தை தேடிக் கொள்வீர்கள். ஆகவே, இந்த புண்ணியங்கள், 27 ஆண்டுகள் உங்களை, எந்த வித பாபம் செய்தாலும், காக்கும். இன்றைக்கு நீராடியது, காலையில் நீராடியது, நீராடப் போவது, சேர்த்துப் புண்ணியம் தான். ஆகவே நீ எத்தனை கொடிய பாபங்களை செய்திருந்தாலும், எத்தனை பொய்களை சொல்லியிருந்தாலும், எத்தனை தவறுகளை மனித நேயத்திற்கு எதிராக செய்திருந்தாலும், அதில் அத்தனைக்கும் ஏதேனும் விட்ட குறை, தொட்ட குறை இருக்கும் என்றாலும், அந்த குறையும் விலகி, உங்களை மிக மிகப் புனிதவானாக, பிறந்த குழந்தை எப்படி பூமிக்கு விழும் போது, எப்படி புனிதமிகு குழந்தையாக விழுகிறதோ, அது போல் இங்கு நீராடி விட்டுச் செல்லும் போதெல்லாம், நீங்கள் அத்தனை பேர்களும், ஒரு புனிதமிகு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள், புனிதவனாக மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது உண்மை. 

அது மட்டுமல்ல, அடிக்கடி சொல்வேனே, லோபமுத்திரை என்பது வரவே இல்லை என்று. பல முறை அகத்தியனே ஆதங்கப் பட்டிருக்கிறேன். எல்லோரும் அகத்தியனுக்கு சிலை வைக்கிறார்கள். லோபமுத்திரைக்கு சிலை வைப்பதில்லை. ஏன் லோபாமுத்திரையை எட்டிக் கூட பார்ப்பதில்லை. ஒவ்வொரு முறையும் அகத்தியன் வாய் திறந்து பேசும் போதெல்லாம், யாரேனும் ஒருவராவது, லோபமுத்திரை எப்படி இருக்கிறாள், என்று ஒரு வார்த்தை கேட்டார்களா என்பதில் ஆதங்கம் எனக்கும் உண்டடா! ஆனால் நான் சன்யாசிதான், சித்தன்தான். சித்தனுக்கு தலையாய சித்தன்தான். ஆனால் எதற்கென்றால், ஆவலோடு அல்ல. ஆதங்கத்தோடு கேட்க்கிறேன். எல்லோருமே என் அருமை குழந்தைகள் நீங்கள். நீங்கள், லோபாமுத்திரை என்ன ஆயிற்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா?  கேட்கவே இல்லையே. என்னடா பாரபட்சம்? உன் வீட்டிற்கு ஒருவன் வந்தால், உன் மனைவி வரவில்லையா என்று கேட்கிற உலகத்திலே, எந்த திருமண நிகழ்ச்சிகளுக்கும், எந்த சுபகார்ய நிகழ்ச்சிகளுக்கும்  நீங்கள் சென்றாலும், உங்களை கண்டவுடன், "உங்கள் மனைவி வரவில்லையா?" என்று ஆதங்கத்துடன் கேட்பார்களே, அப்போது நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அது போலத்தான் இன்றைக்கு நான் இங்கு இருக்கிறேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, தாமிரபரணியே லோபாமுத்திரை என்று சொன்னேன். காவிரியும் லோபாமுத்திரை என்று சொன்னேன். தாமிரபரணி நதிக்கரையும், நேற்று இரவு, நள்ளிரவிலே அங்கு நீராடிவிட்டு, உங்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு, இப்பொழுது அவளும் வந்திருக்கிறாள். ஆக, அகத்தியன் தன் குடும்ப சமேதராக எழுந்தருளியிருக்கிற இடம் இது. ஆக, தம்பதிகளை காண்பது ரொம்ப புண்ணியம், என்று பொதுவாக வரலாறு உண்டு, புராணங்களும் சொல்வது உண்டு. சிவனை தனியாக தரிசிப்பது என்பது வேறு. சிவனை பார்வதியுடன் சேர்ந்து தரிசிப்பது என்பது வேறு. வள்ளி தெய்வயானையை முருகப் பெருமானுடன் தரிசிப்பது என்பது மிகப்பெரிய புண்ணியம், கிருஷ்ணனும் அப்படித்தான், பாமா ருக்மணியோட தரிசிப்பது என்பது அவ்வளவு விசேஷம். ராமனைப் பொருத்தவரை சீதா தேவியுடன் சேவித்தால் தான் புண்ணியம் என்று கணக்கு. எல்லோருமே தம்பதிகளாக உட்கார்ந்து ஆசிர்வாதம் பண்ணும் பொழுது, அகத்தியன் என்னடா பாபம் செய்தான் என்று எனக்கே தோன்றும். ஆகவே, தெரிந்தோ, தெரியாமலோ, லோபாமுத்திரையாக, தாமிரபரணி இங்கே இருக்கிறாள். ஆகவே யாமும் குடும்ப சகிதம் இங்கே அமர்ந்திருக்கிறேன். என்னை சுற்றி 8 நதிகளும் அமர்ந்திருக்கிறது. ஆகவே, நீராடி, சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு, ஏகுக, கரும்குளம் வழியாக. வேறு புண்ணிய தலங்கள் இருந்தால், அதையும் தரிசித்துவிட்டு, இன்று இரவு என் அப்பன் முருகன் சன்னதியில் தங்குக என்று அருளாசி."

அகத்தியப் பெருமான் ஆசிர்வதித்ததும், அனைவரும் அருவியில் குளிக்கும் ஆவலில் உற்சாகமானோம். "இதை விட பெரிய பாக்கியம் யாரால் தரமுடியும்?" என்றார் ஒரு நண்பர்.

நான் சிரித்துக் கொண்டே, "இந்த முறை அகத்தியர் நிறையவே அள்ளித் தந்துவிட்டார் எல்லோருக்கும். இனி என்ன சொல்லப் போகிறாரோ?" என்பதுதான் என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அருவியிலிருந்து வழிந்த நீர் ஓடி மறையும் இடத்தில் வேகம் கூடி நதியாக மாறுகிற அருமையான காட்ச்சியை ஆனந்தமாக ரசித்தபடி அருவிக்குள், நுழைந்தோம். அருவிநீர் "சில்" என்று இருந்தது. இத்தனை வெயில் அடித்தும் குளிரின் தன்மை உடலை ஊடுருவி, மொத்த சூட்டையும் தலைக்கு ஏற்றியது. ஒரு நிமிடம் தலை சுற்றினாலும், அடுத்த நிமிடம் அந்த சூட்டையும் ஓடும் நீர் எடுத்து செல்வதை உணர முடிந்தது. சற்று நேரம் அருவியில் குளித்தவுடன், தூரத்தில் நதியாக ஓடுகிற இடத்தில் முங்கி குளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நண்பர்களிடம் சொன்ன போது, "இங்கேயே சுகமாக இருக்கு! அது போதுமே!" என்றனர்.

"சரி நீங்கள் அருவியிலே குளியுங்கள்! நான் போய் நதியில் குளித்துவிட்டு காத்திருக்கிறேன். பிறகு நீங்கள் அங்கே வாருங்கள்!" என்று சொல்லி நடக்கத் தொடங்கினேன்.

ஏன் இப்படி தோன்றியது என்று புரியவில்லை. நதியாக ஓடும் இடத்தில் ஓரளவுக்கு முங்கி குளிக்குமிடத்தை தெரிவு செய்து இறங்க நினைத்தவுடன், திரும்பி பார்த்தால், அனைவரும் கூடவே வந்திருந்தனர்.

"என்ன? அதுக்குள்ளே அருவி ஸ்நானம் ஆயிடுத்தா? உடனேயே வந்துவிட்டீர்கள்?" என்றேன்.

"இல்லை சாமி! நீங்க சொன்ன அதில் ஒரு விஷயம் இருக்கும் என்று உணர்ந்தோம். அதனாலத்தான் உடனே வந்துவிட்டோம்" என்றனர்.

நான் சிரித்துக் கொண்டே, "சரி நான் முதலில் இறங்கி பார்க்கிறேன், பின்னர் நீங்கள் ஒவ்வொருவராக வாருங்கள். எல்லோருக்கும் இடம் இருக்கிறது" என்று கூறி தண்ணீரில் இறங்கினேன்.

நதி நீர் இதமாக இருந்தது. குளிர் இல்லை. எங்கு இப்படி குளிரிலிருந்து, இதமாக மாறுகிறது என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை. நீரில் நின்றபடியே அகத்தியரையும், எட்டு நதி தேவதைகளையும், வேண்டிக் கொண்டபின் நீரில் மூழ்கினேன். நீரிலிருந்து வெளியே வரவே தோன்றவில்லை. ஏதோ ஒரு பஞ்சு படுக்கையில் கவிழ்ந்து படுத்தது போல் ஒரு மென்மை தோன்றியது. நின்று கொண்டே குனிந்து வளைந்து மூழ்கினாலும், முதுகில் ஓடும் நீர், யாரோ தன் கரத்தால் அன்பாக வருடிக் கொடுப்பது போல் தோன்றியது. ஒவ்வொரு முறையும் ஒரு தாயின், தகப்பனின் கனிவான வருடலை உணர முடிந்தது. எத்தனை நேரம் அப்படியே இருந்தேன் என்று புரியவில்லை. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், குளிக்கிறார்களா என்று தோன்ற, நீரை விட்டு வெளியே வந்தேன். அத்தனை பேரும் கரையில் நின்று கொண்டு காத்திருந்தனர்.

"என்ன சுவாமி! இத்தனை நேரம் தண்ணீருக்கடியில், மூச்சு தாக்கு பிடிக்க முடிந்ததா?" என்று ஆச்சரியத்துடன் வினவினர்.

நானும் சிரித்துக் கொண்டே "நீங்களே வந்து மூழ்கி பாருங்கள்! அப்போது புரியும்" என்றேன்.

அதற்குத்தான் காத்திருந்ததுபோல், அப்படியே ஓடி வந்து எல்லோரும் நீரில் மூழ்கினர்.

நேரம் போய் கொண்டே இருந்தது. மூழ்குவதும், வெளியே வருவதும், மறுபடியும் மூழ்குவதும், யாரும் கரை ஏறுவது போல் தெரியவில்லை. இன்னும் அகத்தியப் பெருமான் சொன்ன படி கரும்குளம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள்.

"போதும் மேலே ஏறி வாருங்கள்", என்று அழைத்தாலும், சின்ன குழந்தைகள் போல், நீரில் மூழ்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

நானோ போதும் என்ற திருப்தி நிலைக்கு வந்து, கரை ஏறிவிட்டேன். தலை துவட்டி உடை அணிந்து திரும்பி பார்க்க யாரும் கரை ஏறுவதாக தெரியவில்லை.

"இப்படியே குளித்துக் கொண்டிருந்தால், அகத்தியர் நாம் கரும்குளம் வரும் வரை அங்கு காத்திருக்க மாட்டார். உங்களுக்கெல்லாம் அவர் ஆசிர்வாதம் அங்கேயும் கிடைக்க வேண்டுமா இல்லையா?" என்று சற்று அதிகாரமாக சொன்ன உடன் அனைவரும் கரை ஏறி அடுத்த ஐந்து நிமிடத்தில் தயாராகி விட்டனர்.

மனதுக்குள் சிரித்தபடி, அகத்தியர் சொன்ன அருள் வாக்கை விவாதித்தபடி, கரும்குளம் கிராமத்தை அடைந்து, முருகர் சன்னதியில், தரிசனம் செய்தோம். தரிசனத்துக்குப் பிறகு, ஒரு ஓரமாக அமர்ந்து நாடியை பிரிக்க,

ஒரு தகப்பனின் அதிகாரத்துடன், அகத்தியப் பெருமானின் "செம" திட்டு வந்து விழுந்தது, எனக்கு.

[அகத்தியர் அடியவர்களே!இருவார இடைவேளைக்குப் பின் மறுபடியும் சித்தன் அருளில் உங்களை சந்திக்கிறேன்]

சித்தன் அருள்.............. தொடரும்!

9 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  2. Om Agaththeesaaya Namaha. Two weeks wait appears to be a long gap for us.

    ReplyDelete
  3. Jai Sarguru OM Agathisaya Namaha Sarguru Patham Saranam Patham Agathiyar Thiruvadigal Potri... Agathiyar muguntha karunai niranthavar... Nan Pothigal Poga mudiyathu enru theriyum. last sunday 1 ayya mulam pothigalyul agathiyar prasatham and photo kedaithathu... Sarguruve Saranam....

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய போற்றி.
    என் பிரபு உமது பூரண ஆசி கிடைத்தது போன்றிருக்கிறது.உமது ஆசி என்றென்றும் கிடைக்க எமக்கருள் புரிவீர் பிரபு.நன்றி.

    ReplyDelete
  5. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய போற்றி.

    ReplyDelete
  7. குருவழியே ஆதிஆதி
    குரு மொழியே வேதம் வேதம்
    குரு விழியே தீபம் தீபம்
    குரு பதமே காப்பு காப்பு...
    ஓம் அகத்தீசாய போற்றி.
    ஓம் அகத்தீசாய போற்றி.
    ஓம் அகத்தீசாய போற்றி.
    ஓம் அகத்தீசாய போற்றி.

    ReplyDelete
  8. intresting welcome to know more

    ReplyDelete