​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 22 January 2015

சித்தன் அருள் - 208 - நவக்ரகங்கள் - சந்திரன்!


சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, உலகிற்கு ஒளியைத் தருபவர் சந்திரன். இதனால் சந்திரனுக்கு "தண்கதிரேசன்" என்று பெயர்.

இவருடைய சொரூபம் பால்போல் வெளுத்த நிறம்.  வெண்மையான ஆடை. வெண்பூ, முத்துமாலையை அணிந்தவர். பத்து வெண்குதிரை பூட்டிய தேரில் வெண்குடையின் கீழ் அமர்ந்து மேருவை வலம் செய்பவர் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு அதிதேவதை வருணன். ப்ரத்யாதி தேவதை "கௌரி". இதைத்தவிர இன்னும் பல குட்டி தேவதைகளும் உண்டு.

"சந்திரக்காந்த கல்" என்று ஒரு விசேஷமான கல் உண்டு. இந்தக் கல்லில் சந்திரன் ஒளி பட்டவுடன் அதிலிருந்து நீர் வரும்.

பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது அவதரித்தவர் சந்திரன். இவர் தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். ஆனாலும் சந்திரன் பெண்பால் குணத்தோன்.

பசு, பால், ஔஷதம், புஷ்பம், பயிர், மது, கீர்த்தி இவைகளை விருத்தி செய்பவர். இவர் சூரியனுக்கு அருகே செல்லும் பொழுது அமாவாசை ஆகிறார். சூரியனை விட்டு எதிர் பக்கம் போகும் பொழுது பௌர்ணமியாக காட்சி தருகிறார்.

பாற்கடலை கடைந்தபோது லக்ஷ்மியுடன் தோன்றியவர் என்பதால் லக்ஷ்மியின் சகோதரர் என்று வேதங்களால் போற்றப்படுகிறார்.

சிவபெருமான் தலையிலும் அம்பிகையின் சிரசிலேயும் இடம் பெற்ற புண்ணியவான். இவரை வளர்த்தவர் அத்ரி மகரிஷி.

குருபகவானது கருணைக்குப் பாத்திரமானதால், இவருக்கு குருவும் சேர்ந்து ஔஷதிகளுக்கு அரசனாக இருக்கும் பதவியைக் கொடுத்தார்கள்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் "2" என்கிற எண்ணை இவர் ஆளுமைக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது.

சதபதப் ப்ராம்மணத்தில் சந்திரனைப் பற்றிக் கூறும்பொழுது "வானத்தில் இருந்த சோமனை காயத்திரி தேவியின் அருளினால் தேவர்கள் பூமிக்கு கொண்டு வந்தார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது.

சோமன் என்னும் அரசன் கந்தர்வனிடம் இருந்தான். அவனை கந்தர்வன் நண்பனாகப் பெற்றதால் முனிவருக்கும் தேவர்களுக்கும் பயம் ஏற்ப்பட்டது. எனவே ஒரு பெண்ணை அனுப்பி கந்தர்வனை மயக்கி, சோமனை, கந்தர்வனிடமிருந்து பிரித்து தாங்கள் பத்திரமாக வைத்துக் கொண்டார்கள் என்று ஐதரேயத்தில் கூறப்பட்டுள்ளது.

சந்திரனை சிவபெருமானின் இடது கண் என்று கூறுவார்கள்.

தைதீர்யத்தில், பிரஜாபதிக்கு முப்பத்து மூன்று பெண்கள். இந்த பெண்கள் அனைவரையும் பிரஜாபதி சோமனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவர்களிடம் சோமனுக்கு "ரோகிணியிடம்" மாத்திரம் அன்பு பிறந்தது. மற்றவர்களை புறக்கணித்தான்.

பிரஜாபதியிடம் சென்ற மற்ற பெண்கள், முறையிட்டனர்.  அதனால் சந்திரன் ப்ரஜாபதியின் கோபத்துக்கு ஆளானான். அதன் காரணமாக உடல் குறைந்து தேய்ந்து போனான். பின்னர், சந்திரன் தன் தவறை வருந்தி, சூரியனிடம் உதவி கேட்க, சூரியன், சந்திரனை உடல் வலிமை உடையவனாக மாற்றினான்.

இன்னொரு கதையில், ஔஷதிகளுக்கு அரசனாக சந்திரன் இருந்த பொழுது ராஜ சூய யாகம் செய்தான். அப்பொழுதுதான் தக்ஷப் பிரஜாபதி என்பவர் தனது 27 குமாரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். சந்திரன் ரோகிணியைத் தவிர மற்றவர்களை விரும்பவே இல்லை. மற்ற பெண்களின் கவலையை அறிந்த தக்ஷப் பிரஜாபதி, சந்திரனை அழைத்துச் சாபமிட்டார்.  அதனால்தான் தேய்ந்து போனான் சந்திரன்.

பரமசிவன், சந்திரனுடைய துர்பாக்கிய நிலையை கண்டு, வருந்தி, பதினைந்து நாள் தேய்பிறையாகத் தேய்ந்து போனாலும் அடுத்த பதினைந்து நாட்களில் வளர்பிறையாக மாறுவாய் என்று அனுக்ரஹித்தார்.

அதனால் தான் சந்திரனுக்குப் பதினைந்து நாள் தேய்பிறை, பதினைந்து நாள் வளர்பிறை வருகிறது.

சந்திரனின் மனைவிகளில் ஒருத்தி சுவாதி. நட்சத்திரமாக ஜொலிப்பவள். இந்த நட்சத்திரத்தன்று, சமுத்திரத்திலுள்ள மீன் வர்க உயரினம் ஒன்று வாய் திறந்து மேல் நோக்கி இருக்கும் சமயத்தில் மழைத்துளி விழுமாயின் அந்த மழைத்துளி முத்தாக வளரும் என்பது நடைமுறை செய்தி.

ஏன் சந்திரனுக்கு இத்தனை மனைவிகள்? என்பதற்கு காரணம், முன்பொரு சமயம் பூர்வத்தில் ப்ரஹஸ்பதியான குருவிடம் சிஷ்யனாக இருந்து த்யானயோகத்தில் யாரும் அடைய முடியாத சித்தியை பெற்றவன்.

எனவே, அவன் யாரை நினைத்தாலும் அவளை மணந்து கொள்ளலாம்; அல்லது சந்திரனைப் பார்க்கின்ற அத்தனைப் பெண்களும் அவன் மீது ஆசைப் படுவார்கள். அதனால் தான் சந்திரனுக்கு இத்தனை மனைவிகள் என்று கூறப்படுகிறது.

சந்திரனை பெண் ஸ்வரூபமாக வர்ணிக்கிறார்கள். சூரியன் புருஷனாகவும் சொல்லப்படுவதுண்டு. பூமி மாதாவால் விரும்பப்படுபவன். அதனால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே காந்த சக்தி உண்டு என்பார்கள்.

செடி, கொடி, தாவர வளர்ச்சிக்கு சந்திரன் வேண்டும்.

எல்லா ஜீவராசிகளின் காதல் உணர்ச்சி, சந்திர கிரணங்களை நம்பித்தான் இருக்கிறது.  சமுத்திரத்திலிருந்து "ஆவி" உண்டாகவும் சந்திர ஒளி தேவை. பிறைசந்திரனை தொழுது வந்தால் நமக்கு ஆயுள் அதிகரிக்கும்.

சந்திரன் தலையைச் சுற்றி ஒளி வட்டமாகிய ப்ரபை திகழும். பல்வகை அணிகள் அணிந்திருப்பான். பன்னீர் மலர் மாலையை அணிந்தவன். வெண்மை ஆடையை அணிந்த அவன், குமுதத்தை ஏந்திய இரண்டு திருக்கரங்களை உடையவன். திருமார்பில் பொன்னூல் இழையும்.

ராமர் சூரிய குலத்தில் தோன்றியவர். அது போல பாண்டவர்கள் சந்திர குலத்தில் தோன்றியவர்கள்.

மனிதர்களின் சரீர பலத்துக்கு காரணமே இவர் தான். கடல் பயணம் நன்றாக அமைய வேண்டும் என்றால், ஒருவருக்கு சந்திரன் நன்றாக் ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

ராகு, கேது கிரகங்களை தவிர யாரும் பகைவர்கள் கிடையாது. குரு, சுக்கிரன் இவர்களோடு சந்திரன் சேர்ந்தால், அல்லது சுப பார்வை பார்க்கப்பட்டாலும், அவர் மிகப்பெரிய அதிர்ஷடசாலியாக பிற்காலத்தில் மாறுவார்.

ரிஷபம் சந்திரனுக்கு உச்ச வீடு. கடகம் சொந்த வீடு. விருச்சிகத்தில் நீசனாக மாறிவிடுவார்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். நவரத்னங்களில் "முத்து", உவர்ப்பு சுவை, இனிமையான குணம், வடமேற்கு திசை இவைகளை கொண்ட சந்திரன் பொதுவாக சுபக்ரகம்.

நிம்மதியாக தூங்க வேண்டும் என்றாலோ, அரசாங்கத்திடமிருந்து விருது பெறவேண்டும் என்றாலோ, ஒருவருக்கு சந்திரன், ஜாதகத்தில், நல்ல இடத்தில் இருக்க வேண்டும்.

காதல், கவித்துவம், மென்மை, இன்பம், இதயம் என்ற நளினமான பல விஷயங்களுக்கும் காரணமானவன்.

இறைவனது திருவிழிகளில் ஒரு விழியாக விளங்கும் இவனைத்தான் மூலிகைகளுக்கு அதிபதியாக பிரம்மா நியமித்திருக்கிறார்.

ஆலயங்களில் பரிவார தேவதையான சந்திரன், இரண்டு சக்கரங்கள் கொண்ட தேரில் இருப்பவன். சதுரமான் பீடத்தில் அமர்பவன். கார்த்திகை மாதம் சோமவாரத்தில் இவர் அவதரித்ததாக கூறப்படுகிறது.

"பத்மத்வஜாய வித்மஹே ஹேமா ரூபாய தீமஹி 
தன்னோ சோம ப்ரசோதயாத்"

என்ற இவரது காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபித்து வந்தால், எல்லோரும் அதிர்ஷ்டம் அடையலாம்.

சித்தன் அருள்.................. தொடரும்!

5 comments:

  1. Brother Sairam

    Om Agatheesaya Namaha, Thanks to guru for bringing you this week, Thank you

    ReplyDelete
  2. Om agatheesaya namaha !!! Om agatheesaya Namaha !!!

    ReplyDelete
  3. Brother Sairam,

    Unable to open the PDF link which you had compiled 1 -200 Episodes, Kindly check when time permits.

    AUM Agatheesaya Namaha:

    ReplyDelete