அகத்தியர் தீபாராதனை காட்டி முடித்து வரும் வரை பொறுத்திருக்கத் தான் வேண்டும் என்று உணர்ந்து, குழுவாக அமர்ந்து இருந்த பலரும் சற்று ஆசுவாசப் படுத்திவிட்டு வரலாம் என்று பல திசையை நோக்கி யோசித்தப்படி நடந்து சென்றனர். ஒருவர், இதுதான் சமயம் என்று கோவிலை சுற்றி வரலாம் என்று போனார். யாரும் எதுவுமே பேசவில்லை. ஆனால் ஏதோ ஒரு யோசனையில் இருப்பது மட்டும் புரிந்தது. அவர்கள் யோசனை என்னவென்று அகத்தியர் மறுபடியும் நாடியில் வந்து உரைக்கத் தொடங்கியபின் புரியத் தொடங்கியது.
"கங்கை நீராடியத்தை பற்றி சொன்னபோது, இங்குள்ளோர் பலர் ஒரு கேள்வியை தங்களுக்குள்ளே எழுப்பினர். எல்லா தேவர்களும், தேவதைகளும் மறைமுகமாக ஆங்கோர் மஞ்சள் பந்தலிட்டு, மஞ்சள் ஒன்றை வைத்து, வாழை, தென்னை, பலா மரங்களை சுற்றி வைத்து நடுவிலே அமர்ந்து ஆனந்தமாக நீராடிய காட்ச்சியடா. ஒரு பெண்மை நீராடியத்தை அகத்தியன் பார்க்கலாமா என்ற கேள்வி எழுந்திருக்குமே? அகத்தியன் மட்டும் எப்படி பார்க்கலாம் என்று கேள்வி எழுந்திருக்குமே? ஏன் என்றால் நீங்கள் மனிதர்கள் பகுத்தறிவாளிகள். இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்டு அகத்தியனை சங்கடப்படுத்துவது உண்டு. ஒரு பெண்மை நீராடியத்தை அகத்தியன் பார்க்கலாமா?
அகத்தியன் நீராடியத்தை தான் சொன்னேனே தவிர, நீராடியதை பார்த்ததில்லை. ஆனால், அந்த மஞ்சள் துண்டு அங்கு கடைசிவரை இருந்தது. குளித்த பின் தொட்டு தொட்டு கும்பிட்டுப் போன கங்கை தாமிரபரணியிடம் கேட்டாள். அப்போது கங்கையை தாமிரபரணி அரவணைத்துக் கொண்டாள், ஆசிர்வதித்தாள், ஆனந்தப் பட்டாள். அப்போது கங்கை சொன்ன வார்த்தை "என் பாபத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாயே, இந்த பாபத்தை எல்லாம் எங்கு போய் கழிப்பாய் என்று எனக்கு கவலையாய் இருக்கிறது என்று". அப்படிக் கேட்ட நாள் தான் இன்றைய நாள். எத்தனை செய்திகளை அடக்கி வைத்து சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
அகத்தியன் நம்பிக்கு அபிஷேகம் பண்ணின காலம். ஆனந்தமாக பண்ணின காலம். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த மாதிரி காட்சி கிடைக்கும். அந்த 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற மாதிரி காட்ச்சியை தான் இன்றைக்கு அகத்தியன் செய்கிறேன். நீங்கள் எல்லோரும் வந்திருக்கிறீர்கள். அதே போல் 200 ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் அத்தனை பேரும் அகத்தியனுக்கு பணிவிடை செய்து கொண்டு இங்கு கூடியிருந்தீர்கள், உங்களை எல்லாம் வரவழைத்தேன் அன்று. ஆனால் உங்களுக்கு ஏதும் அறியாத நிலைமை.
ஆங்கோர் புளிய மரத்தடியில் படுத்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் சித்தர்கள் மடியிலே படுத்துக் கொண்டிருந்தீர்கள். வெறும் புளிய மரம் என்று எண்ணிவிடக்கூடாது. புளிய மரத்துக்கும், புற்றுக்கும் நடுவிலே, வெறும் தரையிலே, தலைக்கு அடியில் கையை வைத்துக்கொண்டு, எதுவும் அறியாமல், மனத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த நேரம். அதே நேரம் தான் இந்த நாள். 200 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை எல்லாம் ஒன்று சேர்த்திருக்கிறேன். இதற்குப் பிறகு இனி 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதே போல் நடக்கும். அத்தனை பேரும் இருப்பீர்களோ என்று அகத்தியன் யாம் அறியேன். எத்தனை பேர் மறுபடியும் பிறப்பார்களோ, அகத்தியன் யாம் அறியேன். ஆனால் இன்றைக்கு நீங்கள் அந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு அதே நாளில், அதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில் அகத்தியன் இங்குள்ள நம்பிக்கு அபிஷேகம் செய்த போது வந்த அஹோபிலத்து நரசிம்மன் இன்றும் வந்திருக்கிறான். முக்கண்ணன் வந்திருந்தான். "எல்லோரின் கண்ணையும் திறடா!" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
தமிழகத்தில் உள்ள மட்டுமல்ல, பாரத கண்டத்தில் உள்ள அத்தனை நதிகளையும் வரவழைத்து அகத்தியன் இங்கு நீராடியிருக்கிறேன். இன்றைக்கும் அத்தனை நதிகளும் இங்கு வந்து நின்று, தன் பங்குக்கு நம்பிக்கு பாலபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்கள். நம்பிமலை பெருமான் அவர்களை முழு அபிஷேகம் செய்ய விடவில்லை. அகத்தியன் அபிஷேகம் செய்த பிறகு, எந்த அபிஷேகமும் கிடையாது என்று கை காட்டியதால், மற்ற நதிகள் நம்பி பெருமானுக்கு பாதத்தில் தான் பாத பூசை செய்து கொண்டிருக்கிறது. அகத்தியன் செய்த அபிஷேகம் பலவிதம். அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்து, இந்த மண்ணுக்கே உரிய செண்பகப் பூவால் வாசனையுடன் அலங்காரம் செய்து, தூப தீபங்கள் காட்டி நிவேதனம் செய்து, மங்கள ஆரத்தியும் காட்டினேன். அங்கே இன்னமும் அமர்க்களம் நடந்து கொண்டிருக்கிறது.
அதை கீழே, இந்த புளிய மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டு, ஜமதக்னி, விஸ்வமித்ரர் போன்ற முனிவர்களும், இன்னும் வடபுலத்தை சேர்ந்த புண்ணியவான்கள், மகரிஷிகள் அத்தனை பேர்களும் அமர்ந்து ஆனந்தப் பட்டுக்கொண்டு அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் பார்க்த்தால், ஆதிசேஷன் அமர்ந்திருக்கிறார். அருகிலே கருடாழ்வார் அமர்ந்திருக்கிறார். இந்த கண் கொள்ளக்காட்ச்சி யாருக்கடா கிடைக்கும். ஏன் இதை மறுபடியும், மறுபடியும் அகத்தியன் இதை சொல்கிறேன் என்றால், இப்படிப் பட்ட காலம் கிடைக்காது. உங்கள் கற்பனைக்கு எட்டாத காட்ச்சியடா, இதெல்லாம். இந்த பாக்கியம் பெற்றவர்கள் இத்தனை பேர்கள் மட்டுமே. வேறு யாருக்கும் இல்லை. ஆக எத்தனையோ பேர் ஆசை பட்டாலும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.ஆக, இந்த பாக்கியம் எவர் எவருக்கு கிடைக்கும் என்று அகத்தியன் ஏற்கனவே எழுதி வைத்துவிட்டேன். அவர்களை மட்டும் தான் அழைத்திருக்கிறேன். அந்தக் கண்கொள்ளா காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட இரவு முழுவதும் அத்தனை தெய்வங்களும் இங்கு தான் இருக்கப் போகிறார்கள். வேறு எங்குமே கடவுள் இல்லை. எல்லா கோவில்களிலும் உருவம் இருக்கும். கடவுள் அல்ல. அந்த உருவங்களுக்கு அதிபதிகள் தான் இங்கு குழுமி இருக்கிறார்கள். இத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து பார்ப்பது என்பது வேறு எங்குமே கிடையாது.
அது மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை பேர்களும் எத்தனை பெரிய புண்ணியவான்கள் என்பதை எல்லாம் நான் சொல்லியே ஆகவேண்டும். தாங்கள் பாபிகள் என்போர், தகுதி இல்லாதவர்கள் என்று யாருமே எண்ணக் கூடாது. ஒவ்வொரு உயிர்களும் ஒரு புண்ணியம் செய்திருக்கிறது. அதை பட்டியல் போட்டு காண்பித்தால், உங்களுக்கே தலைகனம் வந்துவிடும். சித்ததன்மையிலிருந்து இறங்கி, நான் புண்ணியம் செய்துவிட்டேன் என்று இன்றைக்கு அகத்தியன் சொல்லிவிட்டான் என்று இறுமாப்புடன் சென்றுவிடுவீர்கள். ரத்தம் இருக்கிறவரை, வேர்வை இருக்கிறவரை நீ தப்பு செய்யக்கூடும். ஆகவே, அந்தப் புண்ணியத்தை கூட சற்று வடிகட்டி, லேசாக்கி, நீங்கள் அத்தனை பேர்களும் புண்ணியவான்கள் என்று கூறி அகத்தியன் உறுதியளிக்கிறேன்.
காலையிலேயே உங்களுக்கு உரைத்தேன். சந்திராஷ்டமம் என்பது இவர்களுக்கு இனி இல்லை. கவலை படாதே என்று சொன்னேன். சந்திரனுக்கு கைகொடுத்து, அனுமதி வாங்கிவிட்டேன். இவர்களுக்கு, சந்திரன் எந்த திசையில் இருந்தாலும், எந்த நோக்கில் இருந்தாலும், ராகுவுடன் கலந்திருந்தாலும், கேதுவுடன் களங்கப் பட்டிருந்தாலும், குருவோடு சந்தோஷப்பட்டிருந்தாலும், சனியுடன் சேர்த்து மங்கப்பட்டிருந்தாலும், இவர்களுக்கு எந்தவித தொந்தரவும் தரமாட்டான் என்று, சற்றும் முன் சந்திரன் எனக்கு கை கொடுத்து, வாக்கில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர்கள் அனைவருக்கும் அந்த புனிதமான வாக்குறுதியை சந்திரன் கொடுத்திருக்கிறானடா! வானத்தில் நடக்கின்ற அதிசயம் இங்கு பூமியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அற்புதமான மலைவாசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பாக்கியம் யாருக்கேனும் கிடைக்குமா? அதற்காக அகத்தியன் இங்கு வரச்சொல்லி, ஒவ்வொரு சொட்டுக்களாகத்தான் கொடுக்கிறேன். நாக்கை நீட்டுகிறார்கள் அத்தனை பேர்களும், அத்தனையையும் விழுங்கி விடவேண்டும் என்று. என்னென்ன நடந்திருக்கிறது. இது ஆன்மீக ஆசை. ஆன்மீக ஆசை வேறு, மற்ற ஆசைகள் வேறு. ஆன்மீக ஆசையை என் பேரப்பிள்ளைகள் கேட்பது போல் உரிமையுடன் கேட்பது என்பது தவறில்லை. கேட்பது போல் கேட்கிறார்கள். ஆனால் மனதுக்குள் ஆசை இருக்கிறது. அகத்தியன் என்ன சொல்லப்போகிறான்? அதை எடுத்து கை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நியாயம்தான். அகத்தியன் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கொடுமுடியிலும் வைத்து சொல்லியிருக்கிறேன். மறுபிறவி என்பது அத்தனை எளிதாக கொடுப்பதல்ல. கிடைக்காத ஒன்று. எத்தனையோ பாபங்களை செய்துவிட்ட, உங்களுகெல்லாம் ஒரு உண்மையை சொல்லுகிறேன்.
"உங்களுகெல்லாம் மறுபிறவி கிடையாது" என்று சொல்வதற்கு காரணம், உங்களுகெல்லாம் மறுபிறவியை ஈசன் எழுதிய தலை எழுத்துப்படி உங்களுகெல்லாம் ஒன்பது பிறவி இருக்கிறது. மனிதப் பிறவியாய் இருக்க வேண்டும் என்பதில்லை. மனித சமுதாயத்துக்கு உதவி செய்கிறீர்களோ இல்லையோ, ஆனால் மனிதனாக பிறக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது உங்களுகெல்லாம். உங்கள் கர்ம பலன் அப்படி. அந்த ஒன்பது வித பிறவியையும் தூக்கி எறிந்து விட்டு, அதை தாண்டி உங்களை முன்னிலை படுத்தி வைப்பேன். இப்படி இன்று சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. உங்களுக்கு மறு பிறவி கிடையாதென்பதால், சற்று அடக்கி வாசியுங்கள். நல்லதொரு வாழ்க்கையில் நம்பிக்கை வையுங்கள். தெய்வத்தின் மீது. என் மீதல்ல. அகத்தியன் தலையாய சித்தன் தான். ஆனால் நல்லதொரு வழியை நான் காட்டுவேன். உங்களது ஒன்பது பிறவியையும் தூக்கி எறிந்துவிட்டு உங்களை உட்கார வைப்பேன். அடுத்த பிறவி கிடையாது.
அதுமட்டுமல்ல, மிச்சம் இருக்கும் வாழ்க்கையை எப்படி நடத்தவேண்டும், எத்தனை துன்பங்கள் வரும், அதை எப்படி தாங்கிக் கொள்ளவேண்டும் என்கிற மன உறுதியையும் உங்களுக்கு தருகிறேன். முதலில் சந்திராஷ்டமத்தில் தான் அத்தனை தவறுகளும் நடக்கிறது."
........... இப்படி அகத்திய பெருமான் சொல்லிக்கொண்டிருக்கும் போது மழை தூறல் போடத்தொடங்கியது. அகத்தியரும் நாடியும் நனைந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு கோவில் உள்ளே சென்றோம். மழை விட்டதும் மறுபடியும் வெளியே வந்து உட்கார்ந்து படிக்கலாம் என்று தீர்மானித்தோம்.
ஒரு பதினைந்து நிமிடம் தூறல் போட்டது. அந்த நேரத்தில் இருந்த என் மன நிலையை புரிந்து கொண்ட அகத்தியர் மறுபடியும் நாடியை வாசிக்க தொடங்கிய உடன், முதலில் எனக்கு உரைக்கும் படி சரியாக தலையில் குட்டினார்.
சித்தன் அருள்........... தொடரும்!