​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 18 June 2015

சித்தன் அருள் - 226 - "பெருமாளும் அடியேனும் - 10 - அகத்தியரின் தவவலிமை!


வேங்கடவன் திருஉருவத்தின் முன்பு நின்று "யாரைக் கேட்டு இங்கு குடி புகுந்தாய்? உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறு" என்று கோபத்தோடு கனைத்தார், ஹயக்ரீவர்.

திருமலைநாதன் அசையவே இல்லை.

"இன்னும் ஐந்து நாழிகை அவகாசம் தருகிறேன். அதற்குள் நீயும் இந்த இடத்தை விட்டு நகர வேண்டும். உனக்காக தோன்றிய இந்த ஏழுமலையும் இருக்கிற இடம் தெரியாமல் மறைய வேண்டும்" என்று மறுபடியும் ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் பூமியைத் தன் கால்களால் தோண்டியபடியே இங்கும் அங்கும் பரபரப்பாக நிலைகொள்ளாமல் அலைந்தார்.

ஆதிசேஷன், உஷ்ண மூச்சை சொறிய முன்வந்தான்.

ஹயக்ரீவரின் கோபத்தைக் கண்டு நதியோரத்து முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தவத்தைக் கலைத்துவிட்டு செய்வதறியாமல் நின்றார்கள்.

இதற்குள், எங்கோ சென்றிருந்த கலிபுருஷன் அங்கு வந்தான்.

"ஹயக்ரீவா! இப்படியெல்லாம் சொன்னால் யாரும் கேட்க்க மாட்டார்கள். அதோ அங்கு நதிக்கரையோரத்தில் மீளாத் தவத்தில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணுவின் பக்தர்களான ரிஷிகளை காலால் எட்டி உதை, எதிரில் பட்டவர்களைப் பல்லால் கடித்து நாசம் செய், மீறி உன்னை  வருபவர்களை சகட்டுமேனிக்கு மிதித்து தள்ளு. இப்படிச் செய்தால்  பெரும் சப்தத்துடன் "ஓ" வென்று தங்களையும் மறந்து கத்தி "நாராயணா" என்று கதறுவார்கள்.

பக்தர்களின் இந்தக் குரலைக் கேட்டு உன் இடத்தில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கும் வேங்கடவன், பக்தர்களுக்காக இங்கிருந்து போய்விடுவான். ஆதிசேஷனும் வாலைச் சுருட்டிக் கொண்டு பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவான். பிறகு உன் இஷ்டப்படி ராஜாங்கத்தை தொடர்ந்து நடத்தலாம்" என்று துர்போதனை செய்தான்.

இதை அப்படியே ஏற்றுக் கொண்ட ஹயக்ரீவர், நான்கு கால் பாய்ச்சலில் புறப்பட முயன்றபோது..................

"ஹயக்ரீவா............ நில் அங்கே!" என்று அதிகாரமாக ஒரு குரல் கேட்டது.

இந்தக் குரலைக் கேட்டதும் "கலிபுருஷன்" அடுத்த வினாடியே அங்கிருந்து மறைந்து போனான்.

வேகமாகப் பாயத் துடித்து ஹயக்ரீவர் எவ்வளவோ முயன்றும் அவரால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல், ப்ரமாஸ்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றுவிட்டார்.

அவருடைய வேகம், பலம், ஆத்திரம், கோபம், வீரம் எல்லாம் பலமற்று, பொடிப் பொடியாகியது.

தன்னை இப்படிக் கட்டுப்படுத்தியது யார்? என்று ஹயக்ரீவர் யோசித்து உணரும் முன்னர் அருகிலிருந்த செடி, கொடி மலைக் குன்றை தாண்டி கமண்டலத்தோடு அவர் முன் வந்து நின்றார் அகஸ்தியர்.

தெய்வத்தின் அவதாரம், ஹயக்ரீவர். இருந்தாலும் கோனேரிக் கரையில் ஒரு முரட்டுத்தனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, இஷ்டப்படி வலம் வந்தார். எனவே, தெய்வத்திற்குரிய கருணை என்பது அவருக்கு இயல்பாகவே இல்லாமல் போயிற்று. எங்கு தெய்வ சக்தி குறைகிறதோ, அங்கு துர்தேவதைகள் புகுந்து தங்களது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ளும், என்பது நீண்டகால மரபு! அதன்படியே கலிபுருஷன் ஹயக்ரீவருக்கு துர்போதனை சொல்ல, அதன்படி திருமாலுடன் போராட முன்வந்தார்.

ஹயக்ரீவருக்கு எவ்வளவுக்கெவ்வளவு வேகம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்ள்ளவு  விவேகம் இல்லை. இதனை மிக நன்றாக உணர்ந்தவர் பிரம்மா! ஹயக்ரீவர் மட்டும் சற்று விவேகமாகச் செயல்பட்டிருந்தால், கலிபுருஷன் அவர் பக்கம் நெருங்கியே இருக்கமாட்டான்.

எனவே, கலைவாணி மூலமாக ஹயக்ரீவருக்கு ஞானோபதேசம் செய்ய பிரம்மா, ஏற்பாடு செய்தார். அதன்படியே கலைவாணியும் ஹயக்ரீவரிடம் அறிவுரை கூற விரும்பினாள். ஆனால் ஹயக்ரீவர் ஏற்கவில்லை. முன்பு இருந்ததைவிட பன்மடங்கு வேகத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் கனைத்துக் கொண்டு கல் அவதாரம் எடுத்த திருமாலுடன் போர்புரிய, ஹயக்ரீவர் முன் வந்த பொழுது, அகஸ்தியர் தாங்க முடியாமல் ஹயக்ரீவரைத் தடுத்து நிறுத்தினார்.

யாருக்கும் கட்டுப்படாத வேகத்தோடு ஹயக்ரீவர் வந்தாலும், அகத்தியப் பெருமானின் சொல்லால் அங்குமிங்கும் அசைய முடியாதவாறு நின்று விட்டார். ஹயக்ரீவருக்கு தலையாயச் சித்தரான அகஸ்தியரைப் பற்றித் தெரியும். ஆனால்  பார்த்ததில்லை. இப்பொழுதுதான் அகத்தியரைப் பார்த்தார்.

அகத்தியரின் சொல்லுக்கே தான் அசையாமல் நின்றுவிட்ட நிலையை எண்ணிப் பார்த்த ஹயக்ரீவருக்கு தன் நிலை புரிந்தது.

அகத்தியரின் பலமும் புரிந்தது.

"ஹயக்ரீவரே! சற்று அமைதி கொள்க. தாங்கள் யார் என்பதை அடியேன் அறிவேன்.சாட்சாத் திருமாலின் சகலவிதமான நற்குணங்களுடன் அவதாரம் எடுத்த தாங்கள் முனிவர்களைப் பகைத்துக் கொண்டதால் குதிரையாக இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறீர்கள்.

முனிவர்கள், ரிஷிகள் சாபம் விரைவில் தங்களை விட்டு விலகப் போகிறது. கோடானு கோடி ஜனங்களும் தங்களுடைய கருணையினால் புத்திக் கூர்மை பெற்றுத் திளைக்கப் போகிறார்கள் என்று எனக்கு ஞானக் கண் மூலம் தெரிகிறது. இப்படியிருக்க, தாங்கள் கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு திசைமாறிப் போகலாமா?" என்று பவ்யமாகக் கேட்டார், அகஸ்தியப் பெருமான்.

தன்னை அசைய விடாமல் கட்டிப் போட்ட அகத்தியப் பெருமான் மேல் கடும் கோபம் கொண்டு 

"அகஸ்தியரே!" என்று படு பயங்கரமாக கனைத்தபடி "உங்களுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை. முதலில் என்னுடைய வேகத்தைத் தடுத்து நிறுத்தியது, என்னுடைய இடத்திற்கே வந்து எனக்கே உபதேசம் கூறி, திருமாலுக்கு    சாதகமாகச் செயல்பட்டது. இந்த இரண்டிற்கும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" என்றார் ஹயக்ரீவர், அகத்தியப் பெருமானிடம்.

சித்தன் அருள்.................. தொடரும்!

2 comments:

  1. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete