​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 14 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 4


ஓம் அகதீசாய நமஹ!

எங்கும் அமைதி நிறைந்து நின்றது. அங்கு கூடியிருந்த பக்தர்களின் பார்வை ஓதியப்பர் மேல்தான் இருந்தது. "உத்தரவு கொடுப்பாரா? என்ன உத்தரவு கொடுப்பார்? எப்பொழுது கொடுப்பார்? என்ற கேள்விகளுடன் எல்லோரும் காத்திருந்தனர்.

மூன்று நிமிடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு பூ கூட கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் தானே தலையில் சூடி நின்று இருந்தார்.

பொறுத்திருந்து பார்த்த பூசாரி, கடைசியில் "எல்லாம் நிறைவா இருக்கு என்று தான் தோன்றுகிறது! அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறார் போல. சரி அடுத்தவர் வாருங்கள்!" என்று கூறிவிட்டு மறுபடியும் ஒரு கொத்து பூவை அவர் தலையில் வைத்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு காத்திருந்தார். அடுத்து வந்து அமர்ந்த பக்தர், வேண்டுதலை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார்.

அவருக்கும் அதே கதிதான்! ஹ்ம்ம்ஹும்! உத்தரவு தர மாட்டேன் என்று பிடிவாதமாக நின்று கொண்டிருந்தார் ஓதியப்பர்.

தொடர்ந்து எத்தனை பேர் நமஸ்காரம் செய்துவிட்டு அமர்ந்தாலும், அதே நிலை தான்.

இதை கண்ட நான் உண்மையிலேயே வெறுத்துப் போய்விட்டேன். 

"என்னடா இது! இதற்கு மேல் எப்படி இவரை குளிரவைப்பது? ஏன் ஒருவருக்கும் உத்தரவு கொடுக்க மாட்டேன் என்கிறார்? என்ன தவறு நடந்துள்ளது?" என்று யோசித்தபடி இருந்தேன்.

எத்தனை பேர் வந்தாலும் யாருக்கும் உத்தரவு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக ஓதியப்பர் நிற்பதை கண்டு, இனிமேல் கேட்டு பிரயோசனம் இல்லை என்று உணர்ந்து, "இனி இன்று யாரும் உத்தரவு கேட்கவேண்டாம்" என்று அறிவித்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு வெளியே வந்து விட்டார், பூசாரி.

வெளியே வந்த அவரிடம், "என்னங்க! உங்க ஓதியப்பர் ஏன் இன்று இப்படி முரண்டு பிடிக்கிறார்? இன்று வெள்ளிக்கிழமை தானே. உத்தரவு கொடுக்கிற நாள் தானே?" என்றேன்.

"யாருக்குத் தெரியும், அவன் லீலை. அவர் மனசுல என்னத்த வெச்சுண்டு இப்படி பண்ணறான்னு, பல வேளைகளில் புரிவதே இல்லை. இதைவிட ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல வந்து கேள்வி கேட்கிற பக்தனுக்கு, உத்தரவே குடுக்கமாட்டார். வந்த பக்தரும் டென்ஷன் ஆகி, நம்மளையும் ஒரு வழியாக்கி விட்டுடுவார், அவர்." என்றார் பூசாரி.

ஓதியப்பரின் பூசை முடிந்து, சுத்துவட்ட சாமி சன்னதிகளுக்கு பூசை செய்ய சென்றார் பூசாரி. அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரையும் பூசாரிக்கு உதவி செய்யச் சொல்லி, அனுப்பி வைத்தேன்.

எனக்கு ஓதியப்பரை தனியாக கிடைக்க வேண்டும். ஒரு சில கேள்விகளை கேட்கவேண்டும் என்ற அவா. எல்லோரும் சென்ற பின், ஒரு பக்தர் மட்டும் அமர்ந்திருந்தார். நான் நேராக ஓதியப்பரிடம் சென்று நின்றேன்.மனதுள் இருந்த கேள்வியை கேட்டேன்.

"என்ன அப்பனே! இன்று உனக்கு செய்த அபிஷேகத்தில் திருப்தி இல்லையா? எல்லோரும் உன் பக்தர்கள். உன்னை பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். ஏன் இப்படி சோதிக்கிறாய்? எல்லோருக்கும் அருள்புரியக்கூடாதா!" என்று கூறிவிட்டு அமர்ந்தேன்.

"சற்றே நேரத்தில் "நாளை அறிவாய்!" என்று ஒரு குரல் கேட்டது.  எழுந்து, நமஸ்காரம் செய்துவிட்டு, நன்றி கூறிவிட்டு வெளியே வந்து அமர்ந்தேன்.

சுத்து வட்ட பூசைக்கு போனவர்கள் திரும்பி வந்தவுடன், பூசாரி எல்லோரையும் "ஓதியப்பரின்" நிவேதன பிரசாதத்தை, உணவாக அருந்தி விட்டு செல்ல, வேண்டிக் கொண்டார்.

அனைத்து பக்தர்களும் அமர்ந்து ஓதியப்பர் போட்ட சாப்பாட்டை அருந்துவதை பார்க்க மிக சந்தோஷமாக இருந்தது. எங்களுக்கும் உணவு படைக்கப் பட்டது. மிகுந்த பசியாக இருந்ததினால், எல்லோரும் உணவருந்த உடனேயே அமர்ந்தோம்.

பசியாறிவிட்டு, மெதுவாக பூசாரியிடம் சென்றேன். 

"சுவாமி! நாளை ஓதியப்பரின் பிறந்தநாளை கொண்டாடுவது பற்றி பேசலாமா?" என்றேன்.

"சொல்லுங்கள்! உங்களுக்கு எப்படி நடத்த வேண்டும்?" என்றார்.

"அபிஷேகம், அலங்காரம், நிவேதனம் இவை முக்கியம். வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும், உண்ண உணவும், ஓதியப்பரின் பிரசாதமும் கொடுக்க வேண்டும். ஓதியப்பர் ஒத்துக் கொண்டால், நாளையும் என் கூட வந்திருக்கிற ஒரு சில நண்பர்களுக்கு, உத்தரவு கேட்க வேண்டும். ஓதியப்பருக்கு காவி வேஷ்டி, அங்கவஸ்திரம் வாங்கி வந்திருக்கிறேன். பிறந்த நாள் ஆடையாக அதைத்தான் அவருக்கு சார்த்த வேண்டும். இவைதான் என் வேண்டுதல்கள்" என்றேன்.

சற்று நேரம் யோசித்துவிட்டு பூசாரி கூறினார். "நாளை ஒரு "சத்ரு சம்ஹார ஹோமம்" நடக்க இருக்கிறது. ஒரு விஷயம் செய்வோம். காலையில் முதலில் சாதாரண அபிஷேகம் செய்து, சிம்பிள் ஆக அலங்காரம் செய்து விடுவோம். பின்னர் ஹோமத்தை நடத்தி, அந்த கலச தீர்த்தத்தால் ஒரு அபிஷேகம் கூட செய்துவிடுவோம். இரண்டாவது அபிஷேகத்தை, பிறந்த நாள் அபிஷேகமாக வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

நான் அசந்து போனேன். சின்னதா ஒரு வழி கேட்டா, மனுஷர் பெரிய ஹைவேயே போட்டு குடுத்துடுவார் போல இருக்கே. சத்ரு சம்ஹார ஹோமமா? அட! அதுவும் நல்லது தானே. என்று யோசித்து, "சரி பூசாரி! நீங்க சொல்ற மாதிரி பண்ணிடுவோம்!" என்றேன்.

நான் மிகுந்த சந்தோஷத்தோடு நண்பர்களுடன் சென்று அமர்ந்தேன்.

இரவுப்போர்வை போர்த்தி இருந்தது. எட்டிப் பார்த்தால், எங்கும் வைரத்தை வாரி இறைத்ததுபோல் மலையை சுற்றி மின்சார விளக்குகள், தூரத்தில் கிராமங்களை அழகூட்டியது. காற்று கூட, அமைதியாக நடந்து சென்றது என்று கூறலாம்.

எங்கும் அமைதி. போன வருடம் இருந்த ஆரவாரம், எங்குமே காணவில்லை. விடியற்காலையில்தான் வருவார்களோ, பெரியவர்கள்? என்று யோசித்தபடி, மனதுள் நாளைய அபிஷேக எதிர்பார்ப்புடன், உறங்க சென்றேன்.

பெரியவர்களின் ஆட்டம், கொண்டாட்டம் நடு இரவில், முதல் ஜாமத்தில் தொடங்கியது. உண்மையிலேயே சொல்கிறேன், இருதய நோய் உள்ளவர்கள் அந்த ஆட்டத்தை பார்த்தால், அந்த நிமிடம் இந்த உலகுக்கு வணக்கம் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு ஆட்டம் போட்டார்கள்.

4 comments:

  1. வியாழக்கிழமை முதல் தினமும் புதிய பதிவை எதிர்பார்த்து, இன்று காலை கூட பார்த்து ஏமாந்து, சஷ்டியும் கிருத்திகையும் சேர்ந்த திருநாளாம் இன்று ஒதிங்கிரியில் அருள்மிகு ஓதியப்பருக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பூஜையை மானசீகமாக நினைத்துக்கொண்டு, சித்தனருளை திறந்தால், இதுவரை பார்த்திராத வெள்ளிக்கவசத்தில் ஓதியப்பர் தரிசனம். அடிக்கடி தரிசித்தவர்களுக்கு உடனே புரியும் முகத்தின் மாறுபட்ட அழகு. ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி குமார சிவ சுப்ரமணிய சுவாமியே சரணம். நன்றி கார்த்திகேயன்.

    ReplyDelete
  2. Aum Agattiya maharishi namah!!! thank you sir..Amazing...

    ReplyDelete
  3. Brother, Sairam,

    Om Agatheesaya Namaha, Happy to see your post today, hope things are fine at your end by Guru's grace, feeling relieved awaiting for your post since Thursday, Thank You

    May Guru guide us always, SAIRAM

    ReplyDelete
  4. Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete