​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 7 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 3

ஓம் அகதீசாய நமஹ!

எல்லோரும் மேல் ஏறி சென்றுவிட்டனர். ஒரே ஒரு நண்பர் மட்டும் என்னுடன் இருந்தார். நாங்கள் நின்ற இடத்தில், மண்டபம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், சற்று இளைப்பாறலாம் என்று தீர்மானித்து அமர்ந்தேன்.

மனதுள், "என்ன ஓதியப்பா! இப்படி சோதிக்கிறாய்? உன் வாசல் திறக்கும் பொழுது, அங்கே இருந்து முதல் தரிசனம் "நிர்மால்யமாக" இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டது தவறோ? அதில் என்ன தவறு இருக்கிறது? என்று உணர்த்து. உடனே சக்தியை கொடு, மேல் ஏறி வந்து உன் அருகில் அமரவேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கண் மூடி அமர்ந்தேன்.

கண் திறந்த பொழுது, நண்பர் போகாமல் நின்று கொண்டிருந்தார்.

பையில் சாப்பிடும் இனிப்பு பொருள் இருந்தது. அதிலிருந்து சிறிதளவு வாங்கி சாப்பிட்டுவிட்டு அமர்ந்தேன்.

சுமார் 10 நிமிடம் ஆகியிருக்கும். எங்களை காணவில்லை என்று தேடி, மேலே சென்றவர்களில் இருவர் இறங்கி வந்தனர். அதில் ஒருவர் என் கையில் இருந்த பையை வலுகட்டாயமாக வாங்கிக் கொண்டு, மேலே ஏறுவோம் வாருங்கள் என்று அழைத்து நடக்கத் தொடங்கினார். நடந்த பொழுது சற்று ஸ்ரமமாக இருந்தாலும், ஏற முடிந்தது.

ஒரு வழியாக மேலேறி சென்று முருகரை தரிசித்தால், முருகருக்கும், மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கும் பூசாரி அபிஷேக நிமித்தமாக, எண்ணை காப்பு போட்டுவிட்டார். சரி, நாம் நினைத்து வந்தது ஒன்று, நடக்கப் போவது வேறொன்றோ, என்று மனதுள் ஓடியது.

பூசாரி திரும்பி பார்த்து, "போய் குளித்துவிட்டு வாருங்கள்" என்றார்.

அவ்வளவுதான்! அதை கேட்ட மாத்திரத்திலே, ஓடிப் போய் 5 நிமிடத்தில் குளித்து மடி வஸ்த்திரம் உடுத்தி, ஓதியப்பர் முன் ஆஜர் ஆனேன். குளித்தவுடன், உடல் வலி, அசதி, பசி, தாகம் இவை எல்லாம் எங்குதான் போச்சு என்று தெரியவில்லை.

நண்பரிடமிருந்து "வெட்டி வேர் எண்ணை" தைலத்தை வாங்கிக் கொண்டு முருகர் சன்னதிக்குள் புகுந்து, சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்த பின், "உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?" என்று கேட்டு விட்டு, அந்த எண்ணையை வைத்து அவருக்கு எண்ணை காப்பு போடத்தொடங்கினேன். எண்ணைக் காப்பு தொடங்கிய உடனேயே பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் எப்பொழுது நின்றது என்று தெரியவில்லை. அத்தனைக்கு ஓதியப்பர் குளிர்ந்துவிட்டார் என்று தெரிய வந்தது. (நண்பர்களே! உங்கள் ஊரில் மழை பெய்யவில்லையா! ஓதியப்பரை குளிர வையுங்கள். உடனே மழை பெயவிப்பார். இது என் இரண்டாவது வருட பரீட்ச்சை. இதிலும் வேண்டுதல் நிரூபிக்கப்பட்டுள்ளது). அடுத்த விஷயத்துக்கு செல்லும் முன் ஒரு தகவலையும் கூறிவிடுகிறேன். சென்னைவாசிகளே! ஓதியப்பர் (5 முகம், 8 கையுடன்) உங்கள் ஊரில் குடிவரப் போகிறார். சென்னையில் உள்ள ஒரு அன்பர் அதற்கு ஓதியப்பரிடம் உத்தரவு வாங்கிவிட்டார். கும்பாபிஷேகம் விரைவில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. விரிவான தகவல் கிடைத்ததும், அதைப் பற்றி சொல்கிறேன்.

​சன்னதிக்கு வெளியில் இருக்கும் பிள்ளையாருக்கு அபிஷேக அலங்காரம் முடித்துவிட்டு, பூசாரி "பிரதோஷ கால" அபிஷேகத்துக்கு தயாரானார். ஓதியப்பருக்கு, வெட்டி வேர் எண்ணை அபிஷேகம் செய்த எனக்கு, திடீர் என்று ஒரு அவா தோன்றியது. அபிஷேகமோ பண்ணியாயிற்று. அந்த எண்ணையை ஒரு துணியினால் துடைத்து எடுத்து, வெளியே நிற்கும் ஓதியப்பர் பக்தர்களுக்கு, கையில் ஒரு சொட்டாவது பிழிந்து, "தலையில் தடவிக் கொள்ளுங்கள்" ​என்று கொடுத்தால் என்ன என்று.

அவ்வளவு தான், "ஓதியப்பா! நான் எடுத்துக்கிறேன். உன் அன்பர்களுக்கு கொடுக்க வேண்டும்! கோபப்படாதே! அருள் புரி" என்று விட்டு எண்ணை காப்பு போட்ட துணியினால், வழித்தெடுத்தேன். கொஞ்சம் தான் வந்தது.

"சரி! போதும்! எல்லோருக்கும் ஒரு சொட்டு!" என்று "யாருக்கெல்லாம் வேண்டுமோ, கை நீட்டுங்கள். இது ஓதியப்பருக்கு அபிஷேகம் பண்ணிய எண்ணை" என்று கூறி முடிப்பதற்குள், அனைவரும் கை நீட்டினர். ஒரு முப்பது பேர், ஆனந்தமாக அபிஷேக எண்ணையை பெற்றுக் கொண்டனர். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, திரும்பி சன்னதிக்குள் செல்ல நினைக்கையில், கையை பார்த்தேன். ஒரே எண்ணையாக இருந்தது. நிமிர்ந்து ஓதியப்பரை பார்க்க, ஒரு எண்ணம் தோன்றியது. முதலில் நின்று ஒதியப்பரை தரிசனம் செய்து கொண்டிருந்த அடியவரிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அவர் குழம்பிப் போய் நிற்க, நானே அவர் கையை பிடித்து இழுத்துவிட்டு, வலதுகை தோள் முதல் நுனி விரல் வரை நன்றாக தடவி விட்டு விட்டு, உள்ளே அபிஷேகத்துக்கு உதவி பண்ண சென்று விட்டேன். பின்னர் அந்த அன்பர் கூறியவுடன்தான் தெரிந்தது, ரொம்ப நாட்களாக அவர் அந்த கையை தூக்க முடியாமல் இருந்ததாகவும், எப்பொழுது ஓதியப்பர் எண்ணை தடவப் பட்டதோ, அப்பொழுது முதல் கை வலி போய்விட்டதாகவும், கையை நன்றாக உயர்த்த முடிகிறது எனவும் சொன்னார். எல்லாம் ஓதியப்பர் அருள், அதுவின்றி என்ன?

அபிஷேகம் தொடங்கியது. பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், இளநீர், வெல்லம், வித விதமான பழ வகை சாறு இவை அனைத்தும் முதலில் அபிஷேகம் செய்யப் பட்டது. ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொருவிதமான முக பாவம். அதை அருகில் இருந்து பார்த்ததால் சொல்கிறேன். புளிப்பான விஷயங்கள் நாக்கில் பட்டால் சின்ன குழந்தை முகத்தை சுளிக்குமே, அது போல் ஒரு பாவம் - பழச்சாறு அபிஷேகத்தின் பொது. தயிர் விட்ட போதும், கண்ணை மூடி திறந்தது போல். எல்லாவற்றுக்கும் மேல், சுத்தமான தண்ணீரை விட்ட பொழுது, ஆனந்தம். அடடா! அந்த ஐந்து முகமும் காட்டிய விஷமத்தனங்களை அருகில் இருந்து பார்த்த பொழுது, அவர் மாமன் கிருஷ்ணர் செய்த விஷமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. இதை பூசாரியிடம் கூறிய பொழுது, மந்திரத்தை நிறுத்திவிட்டு "கட கடவென" சிரித்துவிட்டு இவர் எப்படிப்பட்ட ஆளுன எனக்கு தெரியும், நீங்கள் இப்பொழுதுதான் பார்க்கிறீர்கள் என்றார். உண்மை தான். தோளில் கை போட்டு பேசுகிற உரிமை இருக்கிறவருக்கு, நிறைய அனுபவம் இருக்கத்தான் செய்யும் என்று தோன்றியது. இவரிடம் கேட்டு எல்லா விஷயத்தையும் கறந்து விடவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்தேன். பின்னர், 18 வகையான மூலிகைகள், திரவியங்கள், அரிசி மாவு, மஞ்சள் பொடி, என அபிஷேக வகைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தது.

சில அபிஷேகங்களை என் கையால் செய்யச் சொன்னார். அது ஒரு பெரும் பாக்கியம் என்று நினைத்தேன். அற்புதமாக இருந்தது. எல்லாம் அவர் அருள். அவர் அனுமதி இன்றி அந்த மலையில் அடி எடுத்து கூட வைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். என் வேலையோ, ஓதியப்பருக்கு இடது பக்கத்தில் தரையில் அமர்ந்து அவருக்கு அபிஷேகம் செய்து கீழே தவழ்ந்து வருகிற அபிஷேக நீரை கையால் எடுத்துவிட்டு தரையை அவர் சன்னதியை சுத்தமாக வைத்துக் கொள்கிற வேலை. அவர் பாதத்துக்கு அருகில் இடதுபக்கத்தில், ஒரு சிறிய சதுரவடிவ குழியில் இவை நிறையும் பொழுது, கையால் தள்ளி எடுத்து விட வேண்டும். பல நேரங்களில், அபிஷேகம் ஓதியப்பருக்கா, இல்லை இந்த அடியவருக்கா என்கிற நிலை. அத்தனையும் அடியேன் தலையில் விழும். அப்போதெல்லாம், ஓதியப்பரை நிமிர்ந்து பார்த்து, இதெல்லாம் உனக்குத்தான், அடியேன் அருகே அமர்ந்திருப்பதால், தலையில் விழுகிறது. தப்பாக எடுத்துக் கொள்ளாதே. அது உன் அருள், உன் மீது பட்டது, தெறித்து, இதன் மீதும் விழுகிறது என்று நினைத்துக் கொள்வேன். எல்லா அபிஷேகமும் முடிந்து, தீபாராதனை காட்டிவிட்டு, கடைசியில், உச்சியில், மேலும் அவர் பாதத்தில் விபூதியை வைப்பார், பூசாரி. அது ஒரு கண் கொள்ளா காட்சி. ஓதியப்பரும் மிக சந்தோஷத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

அந்த விபூதியை ஓதியப்பர் முதலில் அணிந்த பின், பூசாரி சிறிது எடுத்து பூசிக் கொள்வார். பின்னர் உள்ளே உதவி புரியும் அனைவருக்கும் நெற்றியில் பூசி விடுவார். அதன் பின்னர் பக்தர்களுக்கு கொடுப்பார்.

பூசாரி எடுத்துக் கொண்டதும், அவர் அனுமதியுடன் "ஓதியப்பா! எனக்கு கொஞ்சம் உச்சி விபூதி வேண்டுமே!" என்று கேட்டு கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டேன்.அதுதான் எனக்கு கிடைத்த, இந்த உலகத்தில் எங்கும் கிடைக்காத மிகப் பெரிய பரிசு என்று நினைத்தேன். அது போதும். மற்றவை எல்லாம் தேவை இல்லை.

பின்னர் திரை போட்டு அலங்காரத்தை தொடங்கும் முன், யாரும் பார்க்க முடியாத ஒரு அபிஷேகத்தை பூசாரி செய்வார். அதை உள் இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும். அது பச்சை கற்பூர அபிஷேகம். இதை வெளியில் இருப்பவர்கள் பார்க்க முடியாது. எல்லா அபிஷேகத்திலும் "தெரிந்தோ, தெரியாமலோ" இருக்கும் தோஷங்களை போக்க செய்கிற ஒன்று. அந்த தீர்த்தத்தை, சற்று எடுத்து அடியேன் தலையில் தெளித்துக் கொண்டேன்.

அலங்காரம் தொடங்கியது. அப்பா! அந்த பூசாரி அலங்காரம் செய்வதை பார்க்க வேண்டும். ஒரு கை தேர்ந்த சிற்பி போல் சந்தனக் காப்பு போட்டு, புருவம், இதழ், கண்கள் இழுத்துவிட்டு ஒரு நிமிடத்தில் மறுபடியும் ஓதியப்பரை குளித்துவிட்டு விட்ட சின்ன அழகான குழந்தையாக மாற்றினார். அவருக்கு பஞ்ச கச்சம் உடுத்துவதே ஒரு பெரிய விஷயம். எத்தனை இலகுவாக செய்தார்! கிரீடம் வைத்து, நெற்றியில் கல் வைத்து, கவசம் போட்டு, மாலை போட்டு, அருகில் தீபம் போட்டு, சற்றே நிமிடத்தில், ஓதியப்பர் ரெடி ஆகிவிட்டார், அடியவர்களுக்கு காட்சி கொடுத்து, அருள் புரிய.

திரை விலக்கி, மந்திர கோஷத்துடன் தீபாராதனை காட்டி விட்டு, அபிஷேக பூசை, நிவேதனத்துடன் நிறைவு பெற்றது. அங்கு இருந்த அடியவர்களுக்கு எல்லாம் அவர் அருள் கிடைத்தது, அப்படி ஒரு நிறைவு. எங்கும் இதை நான் உணர்ந்ததில்லை. இங்கு என் அப்பன் சன்னதியில் அதை உணர்ந்தேன். எல்லோரையும் ஆசிர்வதித்து, நின்று கொண்டிருந்தார்.


உள்ளே வந்த பூசாரி, அன்று வெள்ளிக்கிழமை ஆனதால், "யாருக்கேனும் உத்தரவு கேட்க வேண்டி உள்ளதா? வாருங்கள்" என்று கூறிவிட்டு, ஒரு கொத்து பூவை அவர் தலையில் வைத்துவிட்டு, தீபாராதனை காட்டிவிட்டு கை கட்டி நின்றார்.

ஒரு பக்தர் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு, கால் மடக்கி அமர்ந்து இருந்தார். மனதுக்குள் பிரார்த்தனை. ஓதியப்பர் பதில் கொடுக்கவேண்டும். எல்லோரும் காத்திருந்தோம்.

3 comments:

  1. Om Othiyappanae thiruvadigal potri potri.Om agatheesaaya namaha.

    ReplyDelete
  2. ஓதியப்பர் திருவடிகள் சரணம்
    .அகத்தியப்பெருமான் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  3. Ennakum dharisanam kidaikuma othiyappa ..?

    ReplyDelete