​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 26 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் 2014 - 6

எண்ணைகாப்பு போடும் பொழுதே ஒரு எண்ணம் உதித்தது. இவருக்கு அபிஷேகம் செய்தபின் அந்த எண்ணையை சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அதுவே எல்லோருக்கும் ஓதியப்பர் கவசமாக மாறும், என்று உள்மனது கூறியது. அவ்வளவுதான்,  நின்று கொண்டிருந்த இருந்த நண்பரிடமிருந்து ஒரு பாட்டிலை வாங்கி, எண்ணைகாப்பு போட்ட துணியினால் அவர் தலை முதல் கால் வரை துடைத்து எடுத்து பிழிந்து கொண்டேன். ரொம்ப கொஞ்சமாகத்தான் கிடைத்தது. ஒரு முறை ஓதியப்பரை நிமிர்ந்து பார்த்து "என்ன ஓதியப்பா! ரொம்ப கொஞ்சமாக திருப்பி தருகிறாய். எல்லோருக்கும் கொடுக்க இது போதாதே!" என்றேன். மேலும் ஒரு பாத்திரம் நிறைய எண்ணையை எடுத்து அவர் சிரசில் அபிஷேகம் செய்து விட்டு திருப்பாதத்தின் அருகில் அது ஒழுகி வந்து சேர காத்திருந்தேன். காத்திருந்ததுதான் மிச்சம். கொஞ்சமாக வந்து சேர்ந்தது. ஒரு லிட்டர் எண்ணை அபிஷேகம் செய்தாலும், 10 கிராம்தான் திருப்பி தருவார் போல. அபிஷேகம் செய்வதெல்லாம் எங்கு போகிறது என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் மூன்று, நான்கு முறை எண்ணை அபிஷேகம் செய்து ஒரு 200 கிராம் சேர்த்து வைத்துக் கொண்டேன்.

கையில் இருந்த எண்ணை காப்பு போடுகிற துணியில் ஓரளவுக்கு எண்ணை இருந்ததால், வெளியே வந்து அங்கு குழுமியிருந்த பக்தர்களை கை நீட்டச் சொல்லி, குறைந்தது ஒரு சொட்டு அவர்கள் கையில் பிழிந்து விட்டேன். அனைவருக்கும் ஆச்சரியம், ஆனந்தம். என்னவோ இது நாள் வரை இப்படி ஒரு அருள் கிடைத்ததில்லை போல.

சற்று நேரத்தில் யாகத்தை முடித்துவிட்டு பூசாரி உள்ளே வந்தார். ஓதியப்பர் எண்ணை காப்பில் சந்தோஷமாக இருப்பதை பார்த்து சிரித்துக்கொண்டே அபிஷேகத்தை தொடங்கினார். மறுபடியும் விரிவான அபிஷேகம். ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் ஓதியப்பர் பூரித்துப்போய் நின்றுகொண்டிருப்பதை உணர முடிந்தது. அடியேனுக்கு, அவர் இடது பாதத்தின் அருகில் இருந்து சுத்தம் பண்ணுகிற வேலை. ரொம்ப அமோகமாக இருந்தது. வந்தவர்கள் அனைவரும் கண் இமைக்காமல் பக்தியுடன் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைத்து அபிஷேகமும் முடிந்த பின், பூசாரி சென்று யாக மேடையில் வைத்திருந்த கலச தீர்த்தத்தை கொண்டு வந்தார். ஓதியப்பர் முன் நின்று மந்திரம் ஜெபித்து, முத்திரைகள் காட்டி, பாதத்தை வணங்கிய பின் அபிஷேகம் செய்தார். சட்டென்று உள்ளுக்குள் ஒரு அமோகமான மணம் பரவியது. வேலையில் கவனமாக இருந்த நான், அதை நிறுத்திவிட்டு, ஓதியப்பரை கவனித்தேன். ஒரு புன்முறுவலுடன், அபிஷேகத்தை ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிற நிலையில் நின்று கொண்டிருந்தார்.  அபிஷேகம் செய்த நீரை சற்று குடத்தில் பிடித்து, பூசாரி அனைவருக்கும் தெளித்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

திரை இடப்பட்டு, அலங்காரம் தொடங்கியது. நல்ல பட்டு வேஷ்டியை எடுத்து பூசாரி ஓதியப்பருக்கு உடுத்த முயல, நான் இடைமறித்தேன்.

"நான் காவி வேஷ்டி, அங்கவஸ்திரம் வாங்கி வந்துள்ளேன். ஞானத்தின் தலைவனுக்கு அவன் பிறந்தநாள் அன்று முதலில் காவி உடுத்துங்கள். அதன் பின் அதன் மேலேயே பட்டு வேஷ்டியை உடுத்துங்கள். காவி வஸ்த்திரம் அவர் உடலை தழுவவேண்டும். இதுவே அடியேனுடைய வேண்டுதல்" என்றேன்.

சற்று நேரம் கூர்மையாக என்னை பார்த்தவர், சிரித்துக் கொண்டே "சரி! அப்படியே ஆகட்டும்" என்று கூறி ஓதியப்பருக்கு காவி வேஷ்டியை உடுத்தினார். பின்னர் அதன் மேலே பட்டு வேஷ்டியை உடுத்தினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது, இருப்பினும் சிரிப்பு வந்தது. எனக்கு தெரிந்த ஒரு சாது, இரண்டு மூன்று ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்துதான் அமர்ந்திருப்பார். அவரை போல ஓதியப்பரையும் பூசாரி ஆக்கிவிட்டார் என்பதே அந்த சிரிப்புக்கு காரணம்.

பூசாரியின் கை வண்ணத்தில் ஓதியப்பரின் அழகு மேலும் மெருகேற,  கிரீடம் வைத்து, கவசம் வைத்து, பொட்டு வைத்து, மார்பில் அழகான மாலை சூட்டி, வேல், சேவல் கொடி போன்றவை அவர் கை அருகில் சார்த்தி, அழகு பார்த்தார், பூசாரி. ஒரு அன்பர் கொண்டு தந்த ஜவ்வாது, அரகஜா, புனுகு போன்றவை தடவி மணம் கமழ வைத்தார். அவர் நெற்றியில், ஒரு அன்பர் வாங்கி கொண்டு வந்திருந்த கல் பதித்த சுட்டியை பதித்திட, ஓதியப்பர் மிகுந்த அழகுடன் தயாரானார்.

தீபாராதனை நடந்த பொழுது, அப்படி ஜொலித்தார் ஓதியப்பர். அதை காண கண் கோடி வேண்டும். 


தீபாராதனை நிறைவு பெற்றதும், நான் ஓதியப்பரிடம் ஒரு பிராத்தனையை வைத்தேன்.

"உன் குழந்தைகள் எல்லாம் நேற்று, உன்னிடம் உத்தரவு கேட்ட பொழுது, ஒருவருக்கும் நீ பதில் கொடுக்கவில்லை. இன்று உன் பிறந்தநாள். உன் பரிசாக யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு உத்தரவு கொடுத்து ஆசிர்வதிக்க வேண்டும்!" என்றேன்.

பூசாரியிடம் "அய்யா! இன்று உத்தரவு கேட்டுப் பார்ப்போம்." என்றேன்.

அவரும் உடனேயே "சரி தொடங்கிவிடுவோம். யாருக்கேனும் உத்தரவு கேட்க வேண்டி இருக்கிறதா?" என்று கேட்டு ஓதியப்பர் தலையில் ஒரு கொத்து பூவை வைத்து தீபாராதனை காட்டினார்.

ஒரு அன்பர் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு பிரார்த்தனையுடன் அமர்ந்தார். ஒரு நிமிடத்தில் உத்தரவு வந்தது.

அடுத்த ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கும் அதே போல உத்தரவு.

ஒரு 15 நிமிடத்தில் உத்தரவு கேட்ட அனைவருக்கும் "நல்ல உத்தரவை கொடுத்து" மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

"இன்னிக்கு என்ன ஆச்சு ஓதியப்பருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் போல. இப்படி வாரி வழங்குகிறார்!" என்று நினைத்தேன்.

சரி! நாமும்தான் ஏதேனும் கேட்டுப் பார்ப்போமே! என்று நினைத்து, கடைசி ஆளாக நான் சென்று அமர்ந்தேன்.

பொதுவாக எப்பொழுது ஒதிமலைக்கு சென்றாலும், ஓதியப்பரிடம் எனக்கென்று எதுவுமே கேட்பதில்லை. எல்லாம் மற்றவர்களுக்குத்தான். சரி! இந்த முறை என்ன கேட்கலாம், என்று யோசித்து அமர்ந்தவுடன், வேண்டுதல் தானாகவே உள்ளிருந்து வந்தது.

"ஓதியப்பா! எப்பொழுதும் நீ என்னுள் இருந்து வழி நடத்தவேண்டும்!"

கேட்டு  முடிக்கும் முன், பூ விழுந்தது. ஆசிர்வாதம் செய்துவிட்டார், அது போதும் என்ற எண்ணத்துடன், நன்றி கூறிவிட்டு,

"ஓதியப்பா! உனக்கு, அடியேனுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறி எழுந்தேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

6 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  2. "ஓதியப்பா! எப்பொழுதும் நீ என்னுள் இருந்து வழி நடத்தவேண்டும்!" -- இந்த பிராத்தனையை வைக்கும் அனைவருக்கும் ஓதியப்பரின் ஆசீர்வாதம் கிடைத்ததாக நம்புகிறேன். நேரில் நின்று அனுபவித்தது போல் ஒரு சிலிர்ப்பு, நெகிழ்ச்சி. தொகுப்பிற்கு நன்றி கார்த்திகேயன்.

    ReplyDelete
  3. Aum Agattiya Maharishi Namah!!!

    ReplyDelete
  4. Dear friend Mr. V.karthikeyan sir,

    Can please tell us where is VETTIVER OIL is available?
    We like to offer to our LORD OOTHIAPPAR GURUJI when we go there.
    Also please give us the contact cell no; of the gurukkal and the temple also which is the right day to visit there.

    Please reply.

    Please help us

    yours

    g. alamelu venkataramanan.

    ReplyDelete
    Replies
    1. Madam,
      Please note
      Sri.Ganapathy - 9865970586, 04254-287418,
      Sri. Swaminathan alias Karthy - 9843044344
      The temple will be open on all Mondays, Tues Days, Fridays, Shashti, Kiruthigai,and Amavasai days.
      Chennai - Tiruppur- Avinasi- Puliyampatti - Irumparai - Othimalai.
      If required, For detailed route pl send a test mail to srichakra98@gmail.com.
      I am very much blessed if given chance to guide to Othimalai
      Ohm Sri Othiyangiri Siva Subramaniya Swamiye Saranam.
      Thanks to Karthikeyan

      Delete
  5. "வெட்டி வேர்" எண்ணை வாசனை திரவியங்கள் விற்கிற கடைகளில் கிடைக்கும். எந்த நாட்களில் கோவில் திறப்பார்கள் என்பதை, பூசாரியிடம் கேட்டு தெரிந்துகொள்வது உத்தமம். ஓதியப்பர் உத்தரவு "வெள்ளிக்கிழமை" மட்டும் தான் கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete