​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 June 2012

சித்தன் அருள் - 75


சில சிவாலயங்களில் அர்த்த ஜாம பூசை என்பது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும்.  சிவராத்திரி அன்று ஆறுகால பூசை என்பது நிச்சயம் உண்டு.  பெரும்பாலும் சாதாரண நாட்களில் நள்ளிரவு நேரத்தில் சிவனுக்கு பூசை செய்வதில்லை.  ஆனால் இதையெல்லாம் தாண்டி அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஆறுகால பூசையும் செய்யமுடியாத அந்தக் கோயிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒரு முறை அகஸ்தியர் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள் அர்ச்சனை அபிஷேகம் செய்வதும், அதை மானசீகமாகக் கோயிலின் வெளியிலிருந்து கேட்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது என்பதை ஜீரணிக்க என்னால் முடியவில்லை.

இது ஒரு சித்து விளையாட்டு என்றுதான் முதலில் எண்ணினேன்.  அதன் உண்மையான சூட்ச்சுமத்தை அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அன்றைக்கு மாத்திரம் யாராவது ஒருவர் என்னுடன் அங்கு தங்கியிருந்தால் இந்த சந்தோஷத்தை விடிய விடியப் பங்கு போட்டிருப்பேன்.

ஆனால் யாரும் எனக்குத் துணையில்லையே என்பதால் அந்த சந்தோஷமான திகில் அனுபவம் மனதில் சோகத்தையும் ஏக்கத்தையும் கொடுத்தது.

இந்த அற்புதமான சம்பவத்திற்குப் பின் எனக்கு தூக்கமே வரவில்லை.  எப்பொழுது பொழுது விடியும், கீழே இறங்கி யாரிடத்திலேயாவது இதைப் பற்றிப் பெசமாட்டோமா என்ற ஆவல் உந்த, கூண்டில் அடைபட்ட புலிபோல் அந்தக் கோயிலையே நள்ளிரவில் வலம் வந்து கொண்டிருந்தேன்.

விடியற்காலை ஐந்து மணி அளவில் மிதமான குளிர்ந்த காற்று வீசியது.  அந்தக் காற்றில் புஷ்பங்களின் அன்றலர்ந்த மனமும் நாசிக்கு அபூர்வமாகச் சில மருந்துச் செடிகளின் வாசனையும் உடல் சோர்வை மெல்ல அகற்றியது.

சூரியன் நன்றாக உதிக்கும் வரை அந்த இயற்கையின் செழிப்பில் தன்னை மறந்து தூங்கினேன்.  முகத்தில் சூரியன் பட்டது.

வாரிச் சுருட்டிக் கொண்டு சிவபெருமானை வணங்கி விட்டு மெதுவாக அந்த மலையிலிருந்து கீழே இறங்கினேன்.  அப்படியே என் கண்கள் கீழே பார்த்த பொழுது, சுமார் இருபது அல்லது முப்பது பேர்கள் மலையடிவாரத்தில் கூட்டமாக நின்று கொண்டு என்னை நோக்கிக் கையைக் காண்பித்து தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"சரிதான்! சரியாக இவர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டோம்" என்ற பயம் மனதில் எழுந்தது.

இவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். வேறொன்றும் பொய் சொல்லவும் முடியாதே.  "அகஸ்தியர்" என்றால் இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ? அதுவுமின்றி, கிராமத்துக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி தண்டனை தரலாம்.  அது எந்த தண்டனையோ?  என்று பலவாறு சிந்தித்துப் பின்னர் "எது நடந்தாலும் என்ன? வருவதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்!

மலையடிவாரத்தில் "எப்படி திரும்பி வந்தான்?" என்று ஒருவர்கொருவர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள்.

சிலரது பார்வையில் என் மீது வெறுப்பு இருப்பது தெரிந்தது.  பலர் எனக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டுத் தான் போகவேண்டும் என்ற ஆத்திரம் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.  இன்னும் பலருக்கு மலையில் ராத்திரி என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதுபோல் தோன்றியது.

"ஏய்! தம்பி, இங்கே வாங்க"

ஒரு வயது முதிர்ந்த மீசைக்காரர் என்னைஅதிகாரத்தோடு தன் பக்கம் அழைத்தார்.  மௌனமாக அவரிடம் போனேன்.

"வணக்கம் சொல்லுங்க.  அவருதான் இந்த கிராமத்துக் கர்ணம்" என்று கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் எனக்கு உத்தரவிட்டார்.

கையோடு கொண்டு வந்த பையைக் கீழே வைத்துவிட்டு மரியாதைகாகக் கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

என்னைப் பற்றி அதிகாரத் தோரணையில் விசாரித்தார்.  அவரது இடது கை அடிக்கடி மீசையைத் தடவிக் கொண்டிருந்தது.  அதோடு அவரிடம் நான் சொன்னதை அவர் லேசில் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

"ஐம்பது வருஷமா இந்தக் கோயில்ல யாரும் ராத்திரி நேரம் தங்கறதே இல்லை.  அப்படியே தெரியாத்தனமாக இந்த மலையிலே தங்கினவங்க மறுநாள் செத்த பிணமாகத்தான் ஆகியிருக்காங்க.  இதுல நீ ஒருத்தன் தான் இப்போ உயிரோடு வந்திருக்கே" என்றார் கர்ணம்.

"எல்லாம் அகஸ்தியர் அருள்!" என்றேன்.

இது அவருக்கு துளியும் பிடிக்கவில்லை. கோபத்தோடு என்னை பார்த்தார்.

"சும்மா கதைவிடாதே.  நான் இதேல்லாம் துளியும் நம்பரவனில்லை.  ஏன் இந்த கிராமத்து ஜனங்களும் நம்ப மாட்டாங்க.  உன்னைப் பார்த்த சந்தேகமா இருக்கு.  கோயிலில் ஏதாவது நகை நட்டுக் கிடைக்கும் திருடிப் போகலாமுன்னு வந்திருப்பே" என்றார் கர்ண கடூரமாக.

"சத்தியமாக அப்படி இல்லை.  வேணும்னா என்னை நீங்க எல்லோரும் இங்கேயே சோதித்துப் பார்க்கலாம்" என்று சொன்னேன்.  என்றாலும் நிலைமை இப்படி விபரீதமாகப் போகும் என நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.  போகிற போக்கைப் பார்த்தால், அவசரத்திலோ அல்லது ஆத்திரத்திலோ அங்குள்ள மரத்தில்கட்டி வைத்து தொலை உரித்தாலும் உரிக்கலாம் என்றுதான் தோன்றியது.

குறிப்பாக நேற்றைக்கு என்னை வழிமறித்த கோயில் குருக்களுடைய பார்வை அவ்வளவு கடூரமாக இருந்தது.  போதாக் குறைக்கு அந்தக் கர்ணத்திடம் ரகசியமாக அடிக்கடி காதில் ஏதேதோ ஊதிக் கொண்டிருந்தார்.

"ஊர்ப்பஞ்சயத்தைக் கூட்டி அப்புறம் இந்த வெளியூர் ஆளுக்கு தீர்ப்பு சொல்லலாம்" என்றனர் சிலர்.

"அதெல்லாம் அப்புறம்.  முதல்ல இவன் பையை எல்லாம் சோதனை போட்டுப் பாருங்க.  அதற்கப்புறம் முடிவு செய்யலாம்" என்றார் அவர்.

"பையனைப் பார்த்தா கோயில்ல திருட வந்த மாதிரி தெரியல்ல.  தெரியாத்தனமாக வந்திட்டான்.  இரண்டு தட்டு தட்டி புத்திமதி சொல்லி அனுப்புங்க" என்றனர் பலர்.

"கர்ணம், தலையாரி அய்யா அவசப்பட்டு எந்த முடிவும் செய்திடாதீங்க.  பையன் மலையிலே தங்கி உயிரோடு வந்ததே, தெய்வத்தின் அருள்.  சட்டென்று தவறா மதிப்புப் போட்டு தெய்வக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம்.  மலையிலே என்ன நடந்துச்சுன்னு மொதல்ல விலாவாரியாக விசாரியுங்க" என்று பாதிப்பேர் ஒரே சமயத்தில் குரல் கொடுத்தனர்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தாங்கள் கருத்தைத் தலையாரி, கர்ணத்திடம் புட்டுப்புட்டு வைத்தனர்.

கால் மணி நேரம் கழிந்தது.

"என்னப்பா வெளியூர்ப் பிள்ளை.  அவங்கதான் கேட்கிறாங்கல்ல.  மலையிலே என்னதான் நடந்துச்சு சொல்லு" என்று உத்தரவிட்டார்.

நான் என்ன நடந்தது என்பதை ஒன்று விடாமல் சொன்னேன்.  இப்படிச் சொல்லும் முன்பு அகஸ்தியரிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டேன்.  ஏனெனில் இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே எனக்கு உத்திர விட்டிருந்ததால் அவரிடம் மனிப்புக் கேட்டபிறகு சொல்ல வேண்டியதாயிற்று.

சொன்னதை கேட்டுக் கொண்டார்களே தவிர, பெரும்பாலோர் இதை முழுமையாக நம்பவில்லை. எப்படி அவர்களை நம்ப வைப்பது என்று தெரியாமல் திகைத்த நான், தலையாரி, கர்ணம் ஆகியோரிடம் அகஸ்தியர் நாடியைப் பார்த்து விட்டுச் சொல்வதாகவும் ஆனால் அதற்கு முன்பு நான் பல் தேய்த்து, குளித்து முறைப்படி பூசை செய்ய வேண்டும்.  அதற்கு ஏற்பாடு செய்து தந்தால் அவர்கள் அத்தனை பேர்க்கும் அகஸ்தியர் அருளால் எனக்குக் கிடைத்த அதே அனுபவத்தை நான் பெற்றுத் தருவேன் என்று உறுதி கொடுத்தேன்.

அரை மணி நேரத்திற்குப் பின் அந்த கிராமத்து மக்கள் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், என்னைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்தத் தலையாரியே எனக்கு அவர் வீட்டில் தங்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

ஒரு மணி நேரம் கழிந்தது.

காலையில் வந்திருந்த அந்தக் கூட்டம் இப்படி அப்படி நகராமல் தலையாரி, கர்ணம் வீடு வாசலில் அப்படியே தரையில் துண்டு போட்டு ஏதோ ஒரு அரசியல்வாதியின் மீட்டிங் கேட்பது போல் உட்கார்ந்திருந்தது.

கொல்லைப்புறம் இருக்கும் வயல்காட்டு வழியாக நான் தப்பிச் சென்றாலும் சென்று விடுவேன் என்ற சந்தேகம் காரணமாக அங்கும் நான்கு பேர்கள் காவல் இருந்தார்கள்.

ஏதாவது பொய் சொன்னால் அந்தக் கிராமத்துப் பஞ்சாயத்தில் ஏதாவது தண்டனை கிடைத்திருக்கும்.  அவர்களிடமிருந்து லேசில் தப்ப முடியாது.  நல்லவேளை "கர்ணம்" மனம் இறங்கினார்.

பிரார்த்தனை முடிந்ததும் அகஸ்தியர் நாடியை எடுத்தேன்.

"என்னைப் பற்றி அகஸ்தியர் என்ன சொல்கிறார், முதல்ல சொல்லு.  இது உண்மையாக இருந்தால் போதும்.  மற்றது எதுவும் படிக்க வேண்டாம்" என்றார் அந்த கர்ணம்.

"அய்யா, படிக்கிறேன்" என்று படிக்க ஆரம்பித்தேன்.

"உங்கள் பெயர் அவினாசிலிங்கம்.  கூடப் பிறந்தவர் ஒரு சகோதரன்.  இளம் வயதில் நல்ல சொத்து சுகம் உள்ள குடும்பம்.  உங்கள் தந்தைக்கு இரண்டு மனைவிகள்.  இதனால் குடும்பம் பின்னால் உடைந்தது.  உங்களது தம்பி, திருமணம் செய்து கொண்டு ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார்.  பத்தாண்டுகளாக அவர் திரும்பி வரவே இல்லை.

தம்பி ஊருக்குத் திரும்பி வராததர்க்குக் காரணம் அவன் ஸ்ரீநகரில் நடந்த பாகிஸ்த்தான் யுத்தத்தில் மாண்டு விட்டதாகச் சொல்லி, அவனது சொத்தையும் அபகரித்துக் கொண்டீர்கள்.  அதோடு மட்டுமின்றி, அவனது மனைவியையும் வலுக்கட்டாயமாக உங்களுடைய காமக் கிழத்தியாகவும் மாற்றிக் கொண்டீர்கள்.  இதனால் உங்களது முதல் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.  இது உண்மை தானே?" என்று மளமளவென்று அகஸ்தியர் ஜீவ நாடி மூலம் சொன்னதை நிதானமாக அழுத்தம் திருத்தமாகப் படித்தேன்.

இந்தச் செய்தியை எதிர் பார்க்காத அந்தக் கர்ணம் வெலவெலத்துப் போனார்.  ஊர் ஜனங்களுக்கும் அந்த ரகசிய வாழ்க்கை ஏற்கனவே தெரிந்ததினால், அவர்களால் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று.

சுற்றுப்புறச் சூழ்நிலையை ஒரு கண்ணோட்டம் விட்டு "அய்யா! மேற்கொண்டு படிக்கலாமா?" என்று கேட்டேன்.

மௌனமாக தலையை ஆட்டினார்.

"இறந்து போனதாகச் சொன்ன உங்கள் தம்பி இன்னும் எட்டு மணி நேரத்தில் ஊனத்தோடு இங்கு வரப்போகிறான்.  இனி எப்படிச் சமாளிக்கப் போகிறீர்?" என்று அகஸ்தியர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு நிறுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அந்த கிராமத்து மக்களிடம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.  திண்ணையில் கால் மேல் கால் போட்டு அலட்ச்சியமாக என்னை ஏளனமாக முதலில் பார்த்தவர், அகஸ்தியர் நாடியைப் படிக்கப் படிக்க முகம் வெளுத்து, உடலில் பதற்றம் ஏற்பட குற்றவாளி போல் ஆனவர், தன் தோளின் மேல் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.  விருட்டென்று எழுந்து அங்குள்ள எல்லோரையும் பார்த்து சட்டென்று திண்ணையிலிருந்து கீழே இறங்கினார்.

இப்பொழுதுதான் எனக்கு உண்மையில் பயமேர்ப்பட்டது.  ஏதாவது இல்லாதது பொல்லாததைச் சொல்லி வசமாக மாட்டிக் கொண்டேனா? அகஸ்தியர் என்னைக் கை கழுவி விட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.  பிரார்த்தனை செய்து கொண்டேன்.

திண்ணையிலிருந்து கீழே இறங்கிய அந்தக் கர்ணம் கிராமத்து மக்களை நோக்கி ஒரு தடவை பார்த்து "அவசப்பட்டு நான் செய்த தவறுக்கு என் மனைவியைப் பறிகொடுத்து விட்டேன்.  எனது இரண்டாவது மனைவியும் பயங்கரமான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இப்பவோ அப்பவோ என்று சாகக் கிடக்கின்றாள்.  என் தம்பியைச் செத்து விட்டதாகச் சொல்லி, அவன் சொத்தை அபகரித்ததும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும்.  இதற்கெல்லாம் ஒன்று சேர்த்து நான் அணுஅணுவாக நொந்து கொண்டிருக்கிறேன்.  இந்தத் தம்பி நாடி மூலம் சொன்னதெல்லாம் உண்மை.  இப்போ என் தம்பி இந்த ஊருக்கு வரப்போகிறான்னு தம்பி சொல்லுது,  அது மட்டும் உண்மையாக இருந்தால் அகஸ்தியரை நம்புகிறேன்.  இந்த தம்பியையும் நம்புகிறேன்" என்றார் கர்ணம்.

ஊர் மக்களும் கர்ணம் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.

"அப்பாட தப்பித்தேன்!" என்று அப்போது நான் நினைத்து சந்தோஷப் பட்டாலும் மதியம் இரண்டு மணி வரை பதைபதைப்பாக இருந்தது.

அந்தக் கர்ணம் தன்னால் என்ன காரியம் எனக்குச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொடுத்தார்.

மதியம் மூன்று மணிக்கு ஒரு வில் வண்டியில் அவரது தம்பி வந்து இறங்கினார்.  ஊர் மக்களே அவரை வரவேற்க ஓடி வந்தனர்.

வண்டியிலிருந்து அவர் இறங்கச் ஸ்ரமப்பட்டார்.  நானும் ஆவலோடு வண்டி அருகே சென்று எட்டிப் பார்த்தேன்.

அவருக்கு ஒரு கால் இல்லை.  கால் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

பதறிப் போனார்கள் அவர்கள் அத்தனை பேர்களும்.  அவர்களோடு நானும் உண்மையில் நொந்து போனேன்.

அகஸ்தியரின் அருள்வாக்கு நல்லபடியாக நடக்கும் என்றாலும் இப்படியொரு சோகத்தைக் கர்ணத்திர்க்குக் கொடுத்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.

தம்பியைக் கட்டிப் பிடித்துத் தேம்பி தேம்பி அழுதுவிட்டுப் பின்னர் என்னை நோக்கி வந்த கர்ணம் "தம்பி நீங்க எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் இங்கே தங்கலாம்.  மலைக் கோயிலுக்குப் போகலாம்.  உங்களுக்கு துணையாக நானும் இந்த கிராமத்து மக்களும் இருப்போம்.  சரிதானா?" என்றார் என்கையைப் பிடித்துக் கொண்டு.

சித்தனருள்................. தொடரும்!

11 comments:

  1. சித்தனருள்..சிலிர்க்கவைக்கிறது..

    ReplyDelete
  2. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    எல்லாம் அவன் செயல் இருந்துவிட்டால் பேரானந்தத்தை அடையலாம் என்பதற்கு இது ஒரு சான்று. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று இல்லாமல், எனக்கு இன்னும் சோதனையை தா என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது. சோதனையின் பின்னர் இறைவனை தரிசிக்கலாமே! என்று தணியும் இந்த தாகம். இறைவா! எங்களுக்கும் உன் கடைக்கண் பார்வையை காண்பிக்க கூடாதா!

    இறை தாகத்தில்.....
    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

    ReplyDelete
  3. ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்
    இதுபோல் அபூர்வமான நிகழ்வை தொகுத்து வழங்கி வரும் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. sir,

    pls share ur contact number & info...my family suffering a lot......

    ReplyDelete
  5. ஐயா,

    தங்களின் முகவரி,மொபைல் நம்பர் தெரிவிக்கவும்.......எங்கள் தந்தை ஒரு தவ செய்பவரும்,எங்கள் குடும்பம் மிகவும் கஷ்ட பட்டுண்டு இருக்கோம்......நீங்கள் தான் அகத்தியர் அருளால் தீர்த்து வைக்க வேண்டும்....நன்றி!!!

    ReplyDelete
  6. வணக்கம்! நீங்கள் நினைப்பது போல் என்னிடம் நாடி கிடையாது. அது இருந்த ஒருவருடன் தொடர்பு இருந்து, அவர் மனம் மகிழ்ந்து என்னிடம் பகிர்ந்துகொண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கீழே இருக்கும் தொடுப்பில் உள்ள முகவரியில் திரு கணேசன் அவர்களை தொடர்புகொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார், அகத்தியர் அருளால்.

    http://siththanarul.blogspot.in/2012/03/blog-post.html

    ReplyDelete
  7. sir,

    any idea on what days Mr.ganesan read it???????his mobile switched off always....

    ReplyDelete
  8. Send an SMS. On seeing it he will call You!

    ReplyDelete
  9. om namashivaya om agathiyagurunatha jai sri ram

    ReplyDelete
  10. om namashivaya om agathiyagurunatha jai sri ramom namashivaya om agathiyagurunatha jai sri ramom namashivaya om agathiyagurunatha jai sri ramom namashivaya om agathiyagurunatha jai sri ramom namashivaya om agathiyagurunatha jai sri ramom namashivaya om agathiyagurunatha jai sri ramom namashivaya om agathiyagurunatha jai sri ram

    ReplyDelete