​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 24 May 2012

சித்தன் அருள் - 73


பொதுவாக சித்தர்களோடு தொடர்பு கொள்வது என்பது மிகவும் பெரிய விஷயம் தான்.  எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு.  அப்படிக் கிடைத்த வாய்ப்பை நிறைய பேர்கள் தவற விட்டிருக்கின்றனர்.  இன்னும் சொல்லப்போனால் இன்றும் கூட நிறைய பேர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தும் அலட்சியம் காரணமாகவோ அல்லது நம்பிக்கை இன்மையினாலோ தவற விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஊழ்வினை காரணமா? என்று கூட நினைப்பதுண்டு.  நிறைய பேர்கள் தங்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஏங்குவதையும் நான் பார்த்திருக்கிறேன்.  சித்தர்கள் தரிசனம் கிடைப்பது என்பது வேறு.  சித்தர்களோடு தினம் நாடி மூலம் பழகுவது என்பது வேறு.

சித்தர்கள் தரிசனம் சிலருக்கு நேரிடையாக கிடைத்துக் கொண்டிருந்தாலும், அவர்களது வழிகாட்டல் பலருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.  நாடி மூலம் சித்தரிடம் தாங்கள் எதிர் காலத்தைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் பெறும் பேறு பெற்றவர்கள் என்பது உண்மை.

சில சமயம் நாடி படிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட பாக்கியம் கிடைப்பதில்லை.  இது பலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்.  ஏனெனில், அன்றாடம் சித்தரிடம் தொடர்பு கொண்டிருப்பவர்கள் பலதடவை சித்தர்களின் கோபத்துக்கும், மன உளைச்சலுக்கும், அதிருப்திக்கும் ஆளாக வேண்டியது வரும்.

சித்தர்களின் அருள்வாக்கை நாடி மூலம் கேட்பவர்கள் சித்தர்களின் பரிபூரண அனுக்ரகத்தை மிக எளிதாகப் பெற்று விடுகிறார்கள்.  காரணம் அவர்கள் அந்த சித்தரின் மீது கொண்ட அளவற்ற பக்தி, நம்பிக்கை.

அதோடு நாடியில் வருவதை தெய்வ வாக்காக ஏற்று நடக்கிற தன்மை காரணமாக சித்தர்களின் பரிபூரண கடாட்சத்தைப் பெற்று விடுகிறார்கள்.

அதே சமயம்

நாடி படிக்கும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்து விடுகிறதா என்றால், சிலசமயம் உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது.

நம் தமிழ் நாட்டில் சித்தர்கள் எப்படியெல்லாம் நடமாடி மக்களை உய்வித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்க்காகத்தான் மேலும் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்.

ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் தனிப்பட்ட ஆலோசகராக இருந்தார் "பாணி" என்பவர்.

அவர், இப்போது நான் வைத்துக் கொண்டிருக்கும் ஜீவ நாடியை அப்போது வைத்து அகஸ்தியரின் சீடராக நாடி பார்த்துக் கொண்டிருந்தார்.  ஓமந்தூரருக்கு பாணியை மிகவும் பிடித்து விட்டது.  அவ்வப்போது நாடி பார்த்து எதிர்காலத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

சென்னை கடற்கரையில் ஓமந்தூராரும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் உட்கார்ந்து செட்டிநாட்டு முறுக்கு வகைகளை ருசி பார்த்துக் கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தனர்.  அவருக்குப் பக்கத்தில் நம்முடைய நாடி ஜோதிடர் பாணியும் கூட இருந்தார்.

அப்பொழுது இரண்டு இளம் சிறுவர்கள் கடலை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தனர்.  அந்த சிறுவர்களின் நடவடிக்கையைக் கண்டு, ஓமந்தூராரின் பாதுகாவலர்கள் சந்தேகப்பட்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.

இரவு ஆரம்பித்த நேரம் என்பது மட்டுமின்றி, அந்த சிறுவர்கள் சென்ற கடற்கரை ஓரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதால், ஓமந்தூராரின் பாதுகாவலர்கள் பயந்து "இந்த இரண்டு சிறுவர்களும் ஏதோ ஒரு தவறுதலான முடிவுக்குத்தான் போகப் போகிறார்கள்" என்று நினைத்து அவர்கள் கடலில் காலை வைத்தவுடன் ஓடிப் போய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

போலீஸ்காரர்கள் தான் மப்டியில் இருக்கிறார்கள் என்பதை அறியாத அந்த சிறுவர்கள் அவர்களிடமிருந்து திமிற முயன்றார்கள்.

"யார் நீங்கள் - எதற்காக இந்த இரவு நேரத்தில் இங்கே தனியாக வந்தீர்கள்?" என்று காவலர்கள் கேட்டனர்.

"எங்களை விட்டு விடுங்கள்.  நாங்கள் சாகப் போகிறோம்" என்று அழுகை கலந்த பிடிவாதத்தோடு அவர்கள் இருவரும் அந்தக் கடற்கரையிலிருந்து வர மறுத்து அடம்பிடித்தனர்.

காவலர்கள் அந்த இரண்டு சிறுவர்களையும் உடனடியாகக் குண்டு கட்டாகத் தூக்கி மணல்பரப்பில் மீது போட்டு விரட்டி அவர்களைப் பற்றி குலம், கோத்திரம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

இந்தக் காட்ச்சியை அருகிலிருந்தவாறே கண்டு கொண்டிருந்த அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார், அந்த சிறுவர்களை தம் பக்கம் அழைத்து வரச் சொன்னார்.

அந்தச் சிறுவர்களுக்கு ஓமந்தூரார் யார் என்பது தெரியாது.  ஏதோ பெரிய மனிதர், பந்தாவோடு கடற்கரையில் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  இவர் வந்து என்ன உதவி செய்யப் போகிறார்? என்று தான் நினைத்தார்கள்.

அதோடு, தாங்கள் எடுக்கும் அந்த முடியை இவர்கள் கெடுத்து விட்டார்களே என்ற கோபம் கலந்த வருத்தமும் இருந்தது.

"தம்பி உங்க பெயர் என்ன?" ஓமந்தூரார் கேட்டார்.

அவர்கள் இருவரும் தாங்கள் பெயரை சொன்னார்கள்.

"இங்கு எதற்காக வந்தீர்கள்?"

"தற்கொலை செய்து கொள்ள" என்று சொன்னாதும் ஓமந்தூரார் அதிர்ந்து போய் விட்டார்.

"என்னது? தற்கொலையா? இந்த வயசிலேயே?  அப்படி உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தது?" என்று விலாவாரியாக விசாரிக்க ஆரம்பித்தார்.

"நாங்கள் இருவரும் புடவை வியாபாரிகள்.  காஞ்சிபுரத்திலிருந்து புடவையை கடனுக்கு வாங்கி சென்னையில் வீதிகளில் விற்றுக் கொண்டிருந்தோம்.  வாங்கின புடவைக்கு காசு வரவில்லை.  கடன் ஆகிவிட்டது.  புடவையை கொடுத்த கடைக்காரர்களோ தினமும் எங்களை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டர்கள்.  யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன் வரவில்லை.  அதனால் தான் நாங்கள் இப்படியொரு முடிவுக்கு வந்தோம்" என்று தாங்கள் கதையைச் சொன்னார்கள் அந்தச் சிறுவர்கள் இருவரும்.

ஓமந்தூரார் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

"சிறுவர்களாகிய உங்களை நம்பி காஞ்சிபுரத்துக் கடைகாரர்கள் புடவையைக் கடனாகக் கொடுத்ததே ஆச்சரியம் தான்" என்றவர் "ஆமாம்? எவ்வளவு ரூபாய் கடன்?" என்று கேட்டார்.

"ஐம்பது ரூபாய்" என்றனர் அந்தச் சிறுவர்கள்.

"ஐம்பது ரூபாய்க்கா இப்படியோரு தற்கொலை முயற்சி" என்று யோசித்தவர், பக்கத்திலிருந்த நாடி ஜோதிடர் பாணியைப் பார்த்து

"இந்தச் சிறுவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.  கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  எனக்கு இவர்கள் மீது அளவுகடந்த பாசமும், அன்பும் ஏற்பட்டிருக்கிறது.  இவர்கள் சொல்வதில் பொய் எதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது" என்று யோசித்து விட்டு

"இவர்கள் பட்ட கடனை இப்பொழுதே அடைத்துவிடலாம்.  அது ஒன்றும் பெரிய காரியமாக இல்லை.  ஆனால் மறுபடியும் இவர்கள் புடவை வியாபாரம் செய்து கடன்பட்டு அதை அடைக்க முடியாமல் இந்தக் கடற்கரைக்கு வந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தால் என்ன செய்வது?  அப்போது நான் வந்து காப்பாற்ற முடியாதே" என்றார் ஓமந்தூரார்.

அப்பொழுது பாணி சொன்னார்

"ஒன்று செய்வோம்.  இவர்கள் எதிர்காலம் பற்றி அகஸ்தியர் நாடி மூலம் பார்ப்போம்.  நல்லபடியாக இவர்கள் வருவார்கள் என்றால் இப்பொழுதே இவர்கள் கஷ்டத்தை போக்கிவிடலாம்.  காஞ்சிபுரத்து கடைக்காரரை இங்கு வரவழைத்து இவர்கள் பட்ட கடனை அடைத்து, மறுபடியும் துணியைக் கொடுக்கச் சொல்லுவோம்.  இல்லை இவர்கள் எதிர்காலம் வேறு விதமாக இருக்குமேயானால் அது அவர்கள் விதி,  விட்டு விடலாம்" என்று யோசனை கூறினார்.

அப்போது கூட அந்தச் சிறுவர்களுக்கு தங்களுடன் பேசியது முதலமைச்சர் ஓமந்தூரார் என்பது துளிகூடத் தெரியாது.

நாடி ஜோதிடர் சொன்னதைக் கேட்ட ஓமந்தூரார் "அப்படியென்றால் அவர்களை நம்மோடு வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் அங்கு போய் நாடி பார்க்கலாமா" என்றார்.

"சரி" என்று நாடி ஜோதிடர் சொல்ல அந்த இரு சிறுவர்களும் ஓமந்தூராரோடு காரில், மிகுந்த மரியாதையோடு முதலமைச்சர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் மட்டுமல்ல, முதல் முறையாக அகஸ்தியரின் ஜீவநாடியை முதலமைச்சர் ஓமந்தூரார் வீட்டில் படிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது என்பது மிகச் சாதாரணமான விஷயம் இல்லை.

அதிர்ஷ்டம், அந்தச் சிறுவர்களுக்கு நல்ல வழியைக் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

இல்லை என்றால், அகஸ்தியர் ஜீவநாடியில் அந்த இளம் சிறுவர்களுக்கு "இவர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். திரைப்பட அரங்கு பல கட்டுவர்.  ஏன் இந்த அகத்தியனுக்கே ஒரு அற்புதமான குடில் ஒன்றையும் வியக்கத்தக்க அளவுக்குக் கட்டப் போகிறார்கள்" என்று அருள் வகைச் சொன்ன அகஸ்தியர், ஓமந்தூராருக்கு அன்புக் கட்டளையையும் சொன்னார்.  அகஸ்தியர் சொன்ன அந்த அன்புக் கட்டளையை ஓமந்தூராரும் ஏற்றார்.

இப்பொழுதுதான் அந்தச் சிறுவர்களுக்குத் தாங்கள் யார் வீட்டில் இருக்கறோம், என்ன நிலைக்கு உயர்வடையப் போகிறோம் என்பது லேசாகத் தெரிந்தது.

அடுத்த நான்கு மணி நேரத்தில்,

காஞ்சிபுரத்துப் புடவைக் கடைகாரர் கைகட்டி வாய் பொத்தி நிற்க ஓமந்தூரார் கொடுத்த பணத்தை பவ்யமாக வாங்கிக் கொண்டதோடு, மேற்கொண்டு அந்தச் சிறுவர்களுக்கு என்ன என்ன வசதிகள் செய்து தரவேண்டுமோ, அவை அத்தனையும் செய்து தந்தார்.

இப்படியாக உயர்வு தாங்கள் வாழ்க்கைக்கு வரும் என்று எதிர்பாராத அந்தச் சிறுவர்களுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை.

அகஸ்தியருக்காக தாங்கள் எதைச் செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறோம் - என்று உறுதி அளித்தனர்.

பின்னால் அதன்படி செய்தும் காட்டினர்.  இன்றைக்கும் சென்னையில் அகஸ்தியர் பெயர் அவர்களால் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இப்படி பற்பல அற்புதமான சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  அப்படிப்பட்ட தலையாய சித்தர் அகஸ்தியர்.  சில சமயம் மௌனமாகவும், பல தடவை கோபமாகவும், நிறைய தடவை ஆன்மீகக் குருவாகவும் இருந்து நிறைய பேர்களுக்கு வழி காட்டியிருக்கிறார்.

ஒரு சமயம்........

கோயம்பத்தூரை சேர்ந்த மிகப் பெரிய செல்வாக்குள்ள தொழிலதிபர் ஒருவர் தம் உறவினர் இருவரோடு அகஸ்தியர் நாடி பார்க்க வந்திருந்தார்.

"வந்திருப்பவர்கள் மூவரும் ஒரே லக்னத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் எதுவும் பதிலுரைக்க இயலாது.  அப்படி எதிர்கால பலன் கேட்க விரும்பின் வந்த மூவரில் ஒருவர் இந்த இடைத்தை விட்டு எட்டடி தள்ளி நிற்கட்டும்" என்று புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

விஷயத்தை அவர்களிடம் சொன்னேன்.  அவர்கள் மூவரும் நெருங்கிய உறவினர் மாத்திரமல்ல, அவர்கள் எதிர்பார்த்து வந்த விஷயம் அந்த மூவருக்கும் உரிய பொதுப் பிரச்சினை.

இதில் ஒருவரைத் தள்ளிவிட்டு இன்னொருவர் அமர முடியாது.  அகஸ்தியர் தான் சொன்ன சொல்லையே, திரும்பத் திரும்பச் சொன்னதால் மறுபடியும் குழம்பிப் போனோம்,  நான் உட்பட.

எங்கள் எல்லோருக்குமே, ஜாதகம் தெரியுமாதலால் ஒவ்வொருடைய ஜாதகத்தையும் மறுபடியும் அங்கேயே புதியதாக குறித்தோம்.  எல்லாமே அந்த மூவருக்கும் சரியாகத்தான் இருந்தது.

வேறு வழி இன்றி மீண்டும் அகஸ்தியரிடம் கேட்டேன்.

இது மூன்று ஜாதகங்களும் சரியாக குறிப்பிட்டு பார்த்த பொழுது வித்யாசம் தெரியவில்லை.  தாங்கள் தான் இதற்கு விடை தரவேண்டும் என்று கேட்ட பொழுது அகஸ்தியர் சொன்னார்.

"பிறந்த நேரம் வைத்து நீங்கள் குறித்தபடி அந்த குறிப்பு சாதகம் சரிதான்.  ஆனால் இந்த மூவரில் திருப்பூரைச் சேர்ந்தவர் பிறந்த நேரம் மட்டும் சரியில்லை.  அவர் பிறந்த போது லக்னம் வக்கிரமாக மாறிவிட்டது.  இப்பொழுது நான் சொல்லும் லக்னப்படி கணக்குப் போடு.  நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சரியாக இருக்கும் என்றவர், இந்த லக்ன வக்கிரம் சாதாரண ஜோதிடர்களுக்குத் தெரியாது.  சித்தர்கள் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

சித்தன் அருள் .................. தொடரும்!

7 comments:

  1. _/\_Om SivaSiva Om_/\_
    Om Shreem Hreem Sri Agathiya Siththa Swamiye Potri!

    Nice Informatin.

    ReplyDelete
  2. ///// அதே சமயம்

    நாடி படிக்கும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்து விடுகிறதா என்றால், சிலசமயம் உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது./////


    ஏன் சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை என அந்த பெரியவர் அகத்திய பெருமானாரிடம் கேட்டு, அதற்க்கு அகத்திய பெருமான் பதில் கொடுத்திருப்பின் அதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  3. வணக்கம்!

    இதுவரை அகத்திய சித்தர் சொன்னதிலிருந்து நான் புரிந்துகொண்ட வரையில் பதில் சொல்கிறேன்.

    பொதுவாகவே நாடி படிப்பவர்கள் வாங்கி வைத்துக்கொண்ட கெட்ட பெயர், இந்த மாதிரி நேர்மையாக இருப்பவர்களையும், நாடி பார்க்க செல்பவர்கள் தவறாக நினைப்பது. இந்த ஆள் காசுக்கத்தான் நாடி படிக்கிறார் என்கிற முதன்மையான என்னாம்.

    இரண்டாவது, சொல்கிற பரிகாரங்களை, அரை குறை மனதுடன் செய்வது, அல்லது செய்யாமல் இருப்பது, அல்லது மாற்றி தனக்கு தோன்றியது போல் செய்வது. நாடியில் வருகிற முறையில் செய்யாமல் இருப்பது. சிலவேளை, அவர்கள் பரிகாரம் செய்ய முயலும் பொது, செய்பவர் கர்ம விதிப்படி, யாராவது வந்து செய்யவேண்டிய முறையை மாற்றி அமைப்பது. உதாரணமாக, அகத்தியர் அறுபடை வீட்டிற்க்கும் சென்று வா என்றால், அவ்வாளவு சுத்துவானேன்,, சென்னை அடையாரில் அறுபடை வீடு இருக்கிறதே, அங்கேயே போய் வருவோம் என்று மாற்றி அமைப்பது.

    செய்கிற விஷயங்களில் பலரும் பங்கு பெறுவதால், ஏதேனும் தீட்டு பட்டால் (தெரிந்தோ, தெரியாமலோ) அதுவும் ஒரு காரணம்.

    எல்லாவற்றுக்கும் மேலே, நாம் பரிகாரம் செய்தாலும், அகத்தியர் விதி மகளிடமும், பிரம்மாவிடமும் சென்று மாற்றி அமைக்க சொல்லும் பொது, அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல். இதை அகத்தியரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். அவர்கள் வேலையில் தலை இடுவதை பிடிக்காமல் போன பல நேரங்களும் இருந்தது என.

    ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

    அகத்தியர் இவரிடம் கூறுகிறார்.

    "இத்தனை பேருக்கும் அனுமன் தரிசனம் கிடைக்க நான் எத்தனை பாடுபட்டிருப்பேன் என்று உனக்கு தெரியுமா?" என்று. யோசித்து பாருங்கள். சாதாரண பதராக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மனதர்களுக்காக அனுமன் தரிசனம் கிடைக்க தலையாய சித்தர் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார். என்னவெல்லாமோ தியாகம் செய்து அதை நமக்கு கொடுத்திருக்கிறார். ஒருவரும் அதை புரிந்துகொள்ளவில்லை. இதை வாசித்த பொது எனக்குள் கண்கள் குலமாகிவிட்டது.

    எல்லாம் அவர் திருவடிக்கே!

    ReplyDelete
    Replies
    1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

      தங்கள் கூறுவது மிகவும் சரி என நினைக்கிறன்! நான், ஜோதிடர் சொல்வது போல் சில தடவைகள் பரிகாரங்கள் செய்து இருக்கிறேன். ஆனால் எனக்கு இதுவரை எந்த முனேற்றமும் இல்லை. இதற்கும் கர்மா வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். எல்லாம் அவன் செயல் என்று நினைத்து கொள்வேன்.

      "அகத்தியர் விதி மகளிடமும், பிரம்மாவிடமும்" என்று எழுதி இருக்கிறேர்களே! அந்த மகள் என்பது யாரை குறிக்கிறது என தெரியபடுத்தவும்.

      தங்கள் தகவலுக்கும், பதில்களுக்கும் மிக்க நன்றி!

      _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
      ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

      வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

      Delete
  4. ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  5. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete