​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 15 March 2012

சித்தன் அருள் - 63

வெளிச்சம் என்பது நல்லதிற்கு மட்டும் பயன்பட வேண்டும்.  இருட்டு என்பது கெடுதல் செய்வதற்காக உண்டாக்கப்பட்டது என்பது மாமுனி அகத்தியரின் விளக்கம்.  எனவே நல்லது சொல்லும்போதும், நல்லது செய்யும் பொழுதும் வெளிச்சத்தில் செய்ய வேண்டும்.  கெடுதல் நினைப்பவர்கள், கெடுதல் செய்பவர்கள் இருட்டை தான் நம்புவார்கள் - என்பது பொது விதி.

செய்வினை என்பது கெடுதல் சொல்.  இதை வெளிச்சத்தில் படிக்க அன்றைக்கு அகஸ்தியர் விரும்பவில்லை.  எனவே தான் எல்லா விளக்கையும் அணைக்கச் சொன்னார்.

விளக்கும் அணைக்கப்பட்டது.

இருட்டாக இருந்தாலும் - அந்த ஓலைச்சுவடியில் அகஸ்தியர் ஒளி வடிவாக எதிர்கால அல்லது நிகழ்கால விளக்கங்களை எடுத்துக் கூறுவார்.  இது ஜீவா நாடி படிக்கிற சிலருக்கு மட்டும் கிடைக்கிற ஒரு புண்ணியம்.

எனவே, அந்த இருட்டில் படிப்பது ஒன்றும் கஷ்டமாக இல்லை.  இதோடு இம்மாதிரி இருட்டில் படிப்பது என்பதில் முன் அனுபவமும் உண்டு.

ஒரு நாள் இரவு ஒன்பது மணி இருக்கும்.

நானும் என் நண்பரும் வெளிநாட்டிலிருந்த ஒரு நண்பருக்காக ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருந்தோம்.  அப்போது மிக வேகமாக வந்த என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அவசர வேண்டுகோள் விடுத்தார்.

"என்ன?" என்று கேட்டேன்.

இன்றைக்கு ஒரு பரபரப்பான சம்பவம், சென்னையில் நடந்திருக்கிறது.  ஒரு பத்திரிக்கை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.  இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.  உங்களுக்குத் தெரியும்.  நான் வெகுநாள் வாசகன்.  எனக்கு அந்தப் பத்திரிக்கை எங்கு கிடைக்கும் என்பதை அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார் பதைபதைத்த குரலில்.

"இன்னொருவருக்கு நாடி படிக்கும் பொழுது இப்படிக் குறுக்கிடலாமா?" என்று அவரை கடிந்து கொண்டு, கொஞ்ச நேரம் அமைதியாக உட்காரச்சொன்னேன்.  இருந்தாலும் அவரது கையும், காலும், கண்களும் ஓரிடத்தில் நிலையாக இல்லை.  பரபரத்துக் கொண்டுதான் இருந்தன.

அந்த வெளி நட்டுக்காரருக்குத் தமிழ் மொழி தெரிந்திருந்தாலும் அகஸ்தியர் என்ன நினைத்தாரோ, தெரியாது.  வந்தவரிடமே ஓலைச் சுவடியைக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

முதலில் அவருக்காக நான் படித்தது அவருக்குச் சரியாக விளங்கவில்லை என்பதால், அவரிடமே கொடுக்கச் சொல்லி விட்டார் என்பது எனக்குப் பின்னால் தான் தெரிந்தது.

அந்த ஓலைச்சுவடியை பயபக்தியுடன் வாங்கி, கண்களில் ஒற்றி, அதைப் படித்தார்.  அவரது கண்களில் வியப்புக்குறி தோன்றியது.  சில நிமிடங்களில் அதை ஆனந்தமாகப் படித்துவிட்டு அதை மேஜை மீது வைத்து சாஷ்டாங்கமாக வணங்கினார்.

பின்பு அதை முத்தமிட்டு என் கையில் திருப்பிக் கொடுத்தார்.

"என்ன சொன்னார் அகஸ்தியர்?" என்று கேட்டேன்.

அவர் மலாய் நாட்டச் சேர்ந்தவர்.  அரை குரைத் தமிழில் நடந்ததைச் சொல்வார் என்று நினைத்திருந்த போது "நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.  எனக்கு முதலில் நீங்கள் சொன்ன செய்யுள் விளக்கம் சரிவரத் தெரியவில்லை.  ஆனால் அந்த ஓலைச் சுவடியைத் தங்கள் என்னிடம் கொடுத்த போது, எனக்கு மலாய் மொழியிலேயே அகஸ்தியர் மிக அற்புதமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்" என்று சந்தோஷப்பட்டுச் சொன்ன போது எனக்கே இது புது அனுபவமாக இருந்தது.

இப்படி பல தடவை தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் அகஸ்தியர் அருளியிருக்கிறார்.  எல்லாமே இந்த மலாய் மொழிக்குப் பின்பு நடந்த சம்பவங்கள்.

வந்தவரை அனுப்பிவிட்டு என் நண்பரை அழைத்தேன்.

"என்ன செய்வியோ! எது செய்வியோ! தெரியாது.  நான் எல்லா இடங்களிலும் அலைந்து பார்த்து விட்டேன் எனக்கு எப்படியாவது அந்த பத்திரிக்கை வேண்டும்.  எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை" என்றார்.

"அதற்கும் இந்த ஓலைச்சுவடிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

"எனக்கு அந்த பத்திரிக்கை எங்கு கிடைக்கும் என்று அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

"என்ன விளையாடுகிறாய்?" என்னால் படிக்க முடியாது.  நீ இப்படிக் கேட்பது சரியில்லை" என்று கோபித்துச் சொன்னேன்.

அவர் மன்றாடினார்.  லேசில் அங்கிருந்து போவதாகத் தெரியவில்லை.  மணியோ இரவு ஒன்பதரையத் தாண்டிக் கொண்டிருந்தது.

"இதெல்லாமா அகஸ்தியரிடம் கேட்பது" என்று அங்கிருந்த பலர் முணுமுணுத்தனர்.

"ஒரே ஒரு தடவை கேட்டுப் பார்.  அப்படி அகஸ்தியர் நல்ல பதில் தரவில்லை என்றால் போய் விடுகிறேன்" என்றார்.

யார் கேட்டாலும் ஓலைச் சுவடிவைப் படிக்க வேண்டியவன் என்றாலும் என் நண்பன் இப்படியொரு கடுமையான சோதனைக்கு என்னை ஆளாக்குவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவனுக்காக நான் படிக்கப் போய், அகஸ்தியரின் கோபத்திற்கு ஆளாகக் கூடுமே என்ற பயம் வேறு எனக்கிருந்தது.  எனவே வேண்டா வெறுப்பாக ஓலைச் சுவடியை தூக்கினேன்.

"இருக்கின்ற விளக்கெல்லாம் முதற்கண் அணைத்துவிடு.  என்ன விஷயம் இஸ்லாம் பெயர் கொண்ட ஏட்டுப் பிரதியில் இருக்கிறது என்பதைச் சொல்கிறேன்" என்றாரே பார்க்கலாம்.''

நானே அசந்து போனேன்.  நண்பன் அதிஷ்டசாலிதான் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அறை விளக்கெல்லாம் அணைக்கப்பட்டன.

"என்னப்பன் ராமனின் சிலைக்கு செருப்பு மாலை போட்டு வீதியில் வலம் வந்ததை அப்படியே படம் பிடித்துப் போட்டதடா அந்தப் பத்திரிக்கை.  அதனாலே இந்த அரசு தடை போட்டுப் பறிமுதல் செய்தது.  இருப்பினும் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை அப்படியே யான் உரைப்பேன்"  என்று அகஸ்தியர் மள மளவென்று ஒளி ரூபமாகச் சொல்ல ஆரம்பித்தார்.  சுமார் ஒன்றரை மணி நேரம் தலையங்கத்திலிருந்து சேலம் மாவட்ட நிகழ்ச்சியின் இந்துக் கடவுள்கள் மீது சொல்லால், செருப்பால் மாலையணிந்த நிகழ்வுகள் வீடியோ படம் போல் படம் பிடித்துக் காட்டினார்.

எல்லாம் முடிந்த பின்பு விளக்கு ஏற்ற சொன்னார் அகஸ்தியர்.  வெளிச்சம் வந்தது.

பத்திரிக்கை வாங்காமல், அதன் அன்றையச் செய்திகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய அகஸ்தியருக்கு ஆயிரம் நன்றியைச் சொன்ன அந்த நண்பர் "இதை எப்படிச் சரிபார்ப்பது?" என்று அடுத்த கேள்வியை எழுப்பினார்.

அகஸ்தியரிடம் இது பற்றி மறுபடியும் கேட்ட பொழுது "சென்னை தி நகரில் உள்ள ஒரு கடையைச் சொல்லி, அந்த கடையின் இரும்புப் பெட்டகத்தின் உள்ளே ஒரு பிரதி உண்டு.  அங்கு சென்று சரி பார்த்துக் கொள்க" என்று வழியும் காட்டினார்.

உடனே நாங்கள் அனைவரும் அந்தக் கடைக்குச் சென்ற பொழுது மணி இரவு பதினொன்றரை.

எங்களை கண்டதும் "காவலர்" என்று பயந்து என்னிடம் எந்தப் பத்திரிகையும் இல்லை என்று விரட்டி அனுப்புவதிலேயே விடாப்பிடியாக இருந்தார் அந்தக் கடை காரர்.

பிறகு நடந்தவற்றைச் சொல்லி, அவரை நம்பவைத்துக் கடைசியில் கடையைச் சாத்திவிட்டு அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்த அந்த பத்திரிகையைப் புரட்டினோம்.  நாடியில் சொன்ன அத்தனையும் அப்படியே இருந்தது.

இதை கண்டு அங்கு வந்திருந்த அத்தனை பேறும் வியந்து போனோம்.  "இனிமேல் இம்மாதிரி வேண்டுகோள்களை விடுக்கக் கூடாது" என்று அகஸ்தியர் மிகக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

என்னை பொறுத்தவரையில் இப்படியெல்லாம் ஓலைச் சுவடியைப் பயன்படுத்துவதை விட, அவரவர்கள் தாங்கள் செய்த கர்ம வினைகளைக் கண்டு பிடித்து, அதை அகற்றினால் நன்றாக இருக்கும் என்பது தான்.

இதற்கு பிறகு எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட, பிரயோஜனம் இல்லாத கேள்விகள் கேட்க அனுமதிப்பதில்லை.  குறுமுனி அகஸ்தியரும் இதற்குப் பதில் சொல்வது இல்லை.

இதில் என்ன விசேஷம் என்றால், இருட்டில் பத்திரிகையின் பக்கங்களை தொடர்ந்து படித்தது, புது அனுபவம்.  இதுவரை அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதில்லை.

அந்த சம்பவத்திற்குப் பிறகு இப்பொழுதான் "செய்வினை" என்பது என்ன? அது உண்மை தானா?" என்பதை அறிய அகஸ்தியரிடம் நான் கேட்டேன்.

சாதாரணமாக நான்கு வரிகளில் அகஸ்தியரிடமிருந்து பதில் வந்து விடும் என்று தான் எண்ணினேன்.  ஆனால் அவரோ "வெளிச்சத்தை போக்கு, விளம்புகிறேன் நான்" என்று சொன்னபோது சரிதான் அன்றைக்கு தந்த பத்திரிகையின் கதிதான் என்று எண்ணிக்கொண்டேன்.

அகஸ்தியர் விளக்க ஆரம்பித்தார்.

"செய்வினைப் பற்றிய உண்மைகளை நான் சொல்லும் முன்பு உங்களில் மனோதிடம் மிக்கவர் எதிர் வரும் அமாவாசைத் தினத்தன்று ஏகுக இங்கு" என்றார்.

பிறகு எதுவும் செய்தி வரவில்லை.  "யார் இங்கு வரப்போறீங்க?" என்று கேட்ட பொழுது செய்வினை பற்றிக் கேட்டவரும் பயந்து "நீங்களே கேட்டுச் சொன்னால் போதும்.  நான் எதுக்குங்க?" என்று நழுவினார்.

அங்கிருந்த ஒரு சிலரும் "எதுக்கு செய்வினை - மண்ணாங்கட்டியும் வேண்டாங்க.  நாம் நல்லதையே நினைப்போம்.  இதைப்போய் அகஸ்தியரிடம் கேட்டுட்டு" என்றனர்.  இதற்குள் நண்பர் "அகஸ்தியர் என்ன பேய் பிசாசையா? எதுக்காக அகஸ்தியர் இங்கு வரச் சொல்கிறார்னு அவர்கிட்டே கேட்டுவிடுவோமே" என்றார் தைரியமாக.

ஓலைச் சுவடியை எடுத்து இது பற்றி கேட்டதற்கு "செய்வினை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு நண்பர் சொன்னது போல் உங்களுக்கு ஆவியைக் காட்டவே யாம் அழைத்தோம்" என்றார்.  அவ்வளவுதான்! இதைக் கேட்டதும் பலருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

2 comments:

  1. வாழ்க்கையில் மிகுந்த மன வேதனையும் துன்பங்களும் அனுபவித்து இனி இருக்கும் காலமாவது நிம்மதியாக இருக்குமா என்று தெரிந்து கொள்ள அகத்தியர் ஜீவா நாடி பார்க்க ஆசைப்படுகின்றேன் உங்கள் சாதகமான பதிலை வேண்டும்
    சுதர்சன்
    email: sudarsan1951@gmail.com

    ReplyDelete
  2. உங்களை தொடர்பு கொள்வது எப்படி veeramani.pmc@gmail.com

    ReplyDelete