​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 8 November 2011

சித்தன் அருள் - 55


‘சூது வாது தெரியாத என் கணவரை அநியாயமாக வேலையிலிருந்து நீக்கிட்டாங்கய்யா. நீங்க தான் அகத்தியரிடம் சொல்லி, மறுபடியும் அவருக்கு வேலை வாங்கித் தரணும்’ என்று கண்ணீர் மல்க ஒரு இளம் பெண் என்னிடம் வந்தாள். கூடவே அவளது கணவனும் வந்தார்.

“வேலையிலிருந்து நீக்கிட்டாங்களா? அல்லது சஸ்பெண்ட் செய்துட்டாங்களா? எது சரி?” என்று கேட்டேன்.

இதற்குள் அவள் கணவரே, ‘சஸ்பெண்ட் தான் செய்திருக்காங்க. ஆனா அவங்க மறுபடியும் வேலைக்கு எடுத்துப்பாங்கன்னு எனக்குத் தோணல’ என விரக்தியோடு சொன்னார்.

‘எத்தனை நாளாயிற்று?

‘மூன்று வருஷமாச்சு.

‘மூன்று வருஷமா யார் கிட்டேயும் போய் சோதிடம் பார்க்கவில்லைய?’

‘பார்த்தேன். யார் யாரோ எதை எதையோ சொன்னார்கள். அத்தனையும் செய்துட்டு வந்தேன். ஆனா இது வரை எந்த பலனும் கிட்டவில்லை’ என்று நொந்துப் போய்ச் சொன்னார்.

‘அப்படியென்ன தப்பு செய்து விட்டதாக உங்கள் மீது புகார் கொடுத்தாங்க?’
‘அதை எப்படி சொல்ல முடியும்? மானேஜ்மெண்டிற்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை. பலமுறை என்னை மிரட்டிப் பார்த்தாங்க. நானாகவே வேலையை விட்டுட்டுப் போனா நல்லதுன்னு சொல்லிப் பார்த்தாங்க. நான் அதற்கெல்லாம் பிடி கொடுக்காம நடந்தேன். கடைசியிலே ஒரு பொய் புகார் கொடுத்து சஸ்பெண்ட் செய்துட்டாங்க.”

இவ்வாறு அவர் சொன்னாலும் ஏதோ ஒன்றை மறைப்பது போல் எனக்கு தோன்றிற்று.

‘சரி… நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’

‘எனக்கு எப்போ மீண்டும் வங்கியிலே வேலை கிடைக்கும்னு அகத்தியரைக் கேட்டு சொல்லணும்’ என்றார்.

அகத்தியரை வணங்கி விட்டு நாடியைப் புரட்டினேன்.

‘இன்னவன் பதுக்கி வைத்திருக்கும் ரூ.5 லட்சம் பணத்தை, ஈரோடு மாவட்டம் அருகில் இருக்கும்…. ஒரு கிராமத்தில் குடியிருக்கும் வயதான கண்பார்வையற்ற பெண்மணியிடம் ஒப்படைத்து விட்டால் – வங்கியில் மீண்டும் பணி கிடைக்கும். இதனை இன்னும் 22 நாட்களுக்குள் செய்யாவிட்டால் இவனுக்கு வேலை கிடைப்பது கஷ்டம். வேறு விதமான தண்டனையும் பெறக் கூடிய அவலம் ஏற்படும்’ என்று அகத்தியர் முடித்தார்.

இதைக் கேட்டதும் அவன் அதிர்ந்து போனான். அவன் மனைவியோ ‘குய்யோ முறையோ’ என்று புலம்ப ஆரம்பித்தாள்.

‘இதோ பாருங்க ஐயா! எங்கிட்ட இப்போ இருக்கிறது இந்த மஞ்சள் கயிறு ஒண்ணுதான். கையிலே அஞ்சுபைசா கிடையாது. எல்லா நகை நட்டு, வீடு வாசல் எல்லாத்தையும் வித்து ஒரு வேளை கஞ்சி குடிச்சிட்டிருக்கோம். என் கிட்ட சல்லி காசு கிடையாதுங்க…. எங்களை போய் அந்தக் கிழவிக்கு பணம் கொடுக்கச் சொல்றாருங்களே, என்னங்க நியாயம்?’ என்று கத்தினாள் அவள்.

‘இதோ பாருங்க, நீங்க யாரு, அந்த கிராமத்துப் பெண்மணி யாருங்கிறது எனக்குத் தெரியாது. இது உங்களுக்கும், அகத்தியருக்கும் உள்ள தொடர்பு. நீங்க கேள்வி கேட்டீங்க. அகத்தியர் பதில் சொல்லிட்டாரு. மத்தபடி ஏதும் எங்கிட்டே கேட்காதீங்க’, என்று சொன்னேன்.

அதெப்படி பதுக்கி வைக்கப்பட்ட பணம்னு சொல்றாரு. நாங்க என்ன கொள்ளையா அடிச்சோம். எங்கிட்டே போய் இப்படியொரு நிபந்தனை விதிச்சிட்டாரே. இது அகத்தியர் ஜீவ நாடியா இல்லை உங்கள் சொந்தக் கதையா?’ என்று சற்று முறைத்தபடியே கேட்டான் அந்தப் பெண்ணின் கணவன்.

நான் ஒன்றும் பேசவில்லை. கட்டை மூடி பைக்குள் போட்டு விட்டேன்.
‘சரியான ஆளுயா இவன். இங்கே சோத்துக்கே வழியில்லைன்னு ஒவ்வொரு நாளும் திண்டாடிக்கிட்டிருக்கோம். எங்கோ இருக்கிற கிழவிக்கு 5 லட்சம் கொடுக்கணுமாமே. எங்கோ இருக்கிற கிழவிக்கு 5 லட்சம் கொடுக்கணுமாமே. ஒரு வேளை இந்த ஆளுக்கும், அந்த கிழவிக்கும் ஏதேனும் சம்பந்தமிருக்குமோ? இல்லைன்னா எல்லா வேலையையும் விட்டுட்டு அந்தக் கிழவிக்குப் போய் பணத்தை கொடுக்கணும் என்று சொன்னா, ஏதோ ஒரு கமிஷன் வியாபாரம் போல தானே இருக்குது’ என்று அவர்கள் சப்தமிட்டு கேலி செய்தது என் காதில் விழுந்தது.

இதைவிடக் கேவலம் எதுவும் உண்டா? பேசாம நாடி படிக்கிறதை விட்டு விட வேண்டியதுதான் என்று எனக்கு வெறுப்பு தோன்றியது. இருந்தாலும் ‘சர்வமும் அகத்தியருக்கே அர்ப்பணம்’ என்று அமைதி காத்தேன்.

இரண்டு நாட்கள் கழிந்தது.

அந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி நபர், பம்மியபடியே வந்தார். சாதாரணமான நிலையில் இருந்தால் அவரை ‘வாங்கோ’ என்று முக மலர்ச்சியோடு வரவேற்றிருப்பேன். ஆனால் அவரைப் பார்த்ததும் இரண்டு நாட்களுக்கு முன்னால் காதில் விழும்படியான விஷமான பேச்சு தான், என் நினைவுக்கு வந்தது. எனவே அமைதி காத்தேன்.

‘ஐயா, அகத்தியர் சொல்றபடி கடனோ – கிடனோ வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமத்து பெண்மணிக்கு கொடுக்கலாம்னு நெனைக்கிறேன். இதற்கு அகத்தியர் ஒத்துக் கொள்வாரா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. என்னைக் கோபிக்காதீங்க சார்’ – என்று பவ்யமாக கேட்டார்.

இந்த மாதிரி நபர்களுக்கெல்லாம் நாடி படிக்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘பெருந்தவறை செய்து விட்டு ஒண்ணும் தெரியாதவன் போல் வேஷம் போடுகிறாயா? முதலில் அகத்தியன் இட்டதொரு கட்டளையை தலைமேல் ஏற்க. இருக்கிற பணத்தின் ஐந்தில் ஒரு பகுதியைத்தான் அந்த கண் பார்வை குறைந்த பெண்மணிக்கு கொடுக்கச் சொன்னேன். பணமா இல்லை உன்னிடம்? அகத்தியனை சோதிக்க வேண்டாம். இன்னும் இருபது நாளுக்குள் அகத்தியனது இந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் போனால் இருபத்தியோராம் நாள் அன்று பதுக்கி வைத்திருக்கும் பணமெல்லாம் கறையானுக்கே உணவாகும். பின் அகத்தியனைப் பழித்துப் பயனில்லை’ என்று சட்டென்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

எந்தப் பதிலும் சொல்லாமல் தலை குனிந்தபடியே வெளியேறினார் அவர்.
ஒண்ணறை மாதம் கழிந்தது.

அந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி ஊழியரோ அல்லது அவனது வாயாடி மனைவியோ என்னைப் பார்க்க வரவில்லை. என் உள் மனதில் ஓர் அரிப்பு இருந்தது.

‘அகத்தியரோ பணம் இருக்கிறது என்கிறார். இவனோ பணம் இல்லை என்கிறான். இதில் எது நிஜம் என்பதை அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.,என்றைக்காவது ஒருநாள் இதற்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டேன்.”

திடீரென்று அன்று மாலையில் ‘அவன்’ மட்டும் என்னைப் பார்க்க காத்திருந்தான்.

‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

‘நீங்க சொன்னபடி எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு சென்றேன். அகத்தியர் சொன்ன அந்த விலாசத்தில் தேடி பார்த்தேன். அந்த மாதிரி பெண்மணி யாரும் அங்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் திரும்பி வந்து விட்டேன். மேற்கொண்டு என்ன செய்யலாம்?’ என்ற பரிதாபமாகக் கேட்டான்.

நாடியைப் பார்த்து விட்டு சொல்கிறேன் என்று அகத்தியரைப் பிரார்த்தனை செய்து விட்டுக் கேட்டால்-

‘அகத்தியனிடமே நாடகமாடும் இவனை என்ன செய்வது? இவன் அங்கு போகவும் இல்லை. அந்தப் பெண்மணியைப் பார்க்கவும் இல்லை’ என்றார்.
பின்னர் என்னிடம் மட்டும் தெய்வ ரகசியமாக சில தகவல்களை சொல்லி விட்டு பின்னர் வேறுவிதமாக நாடகமாடினார்.

‘….. கிராமத்துக்குச் சென்று அந்தப் பெண்மணியை காணாமல் திரும்பியதை அகத்தியன் முற்றிலும் நம்புகிறோம். உனக்குப் பணம் மீண்டும் கிடைக்க, செய்த பாவத்தைப் போக்க வழி பலவற்றை காட்டினோம். இங்கு உன்னைப் பொறுத்தவரையில் அகத்தியன் கூற்று தப்பாகி விட்டது. எனவே இனி அகத்தியனை நாடி வரவேண்டாம். வேறு சித்தர் நாடி ஏதாவது ஒன்றைப் பார்த்துக் கொள்’ என்று முடித்துக் கொண்டார்.

இதைக் கேட்டதும் இரட்டிப்பு சந்தோஷத்தோடு அவன் போனான். எனக்கு இது புதிதாக இருந்தது.

இந்த நபர் கிராமத்து பெண்மணியைத் தேடிப் போகவில்லை. அந்த பெண்மணியையும் பார்க்கவில்லை என்று அகத்தியர் சொன்னாரே, பின்னர் வேறு விதமாக வாக்கு சொல்கிறாரே? என்ன தான் இவன் வாழ்க்கையில் அப்படியொரு ரகசியம் இருக்கிறது? என்று மனம் பதை பதைத்தது.
‘கொஞ்சம் பொறுத்திரு. சென்றவனே இரண்டு நாளில் அகத்தியனை நாடி திரும்புவான். அப்போது அவனுக்கு என்ன நடந்தது என்பதை யாம் உரைப்போம்,’ என்று அடுத்த புதிரைப் போட்டார்.

இதைக் கேட்டதும் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இனிமேல் நாமாக இது பற்றிக் கேட்கவே வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

மூன்றாம் நாள் காலையில்…

‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று ஓடி வந்து காலில் விழுந்தான் அந்த வங்கி ஊழியன்.

அகத்தியர் நாடியைப் பிரித்தேன். வேகவேகமாக வார்த்தைகள் வந்து விழுந்தன. அகத்தியர் சொன்ன தகவல்கள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தன.

அந்த தகவல்கள்…..


நான் வேறு எதுவும் பேசவில்லை. அவன் வாய் திறந்து கேட்கும் முன்பு நானே நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

‘யுவராஜ் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு வேலைக்குப் போனான். தான் சம்பாதித்த தொகையில் ஒரு பகுதியை ஆத்தூரில் உள்ள தன் தாய்க்கு மாதாமாதம் வங்கியின் மூலம் அனுப்பினான்.

எல்லாப் பணத்தையும் கொடுத்தால் தாயால் அதை வைத்துக் காப்பாற்ற முடியாதே என்று நினைத்து அதே வங்கியில் தன் பெயருக்கென்று பெருந் தொகையை ரகசியமாக சேர்த்துக் கொண்டிருந்தான். இந்தப் பணம் குறித்த தகவல் யுவராஜுக்கும் அந்த வங்கியின் மானேஜருக்கும் மட்டுமே தெரியும்.
இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் வெளிநாட்டில் அவன் மரணமடைந்து விட்டான். இதனை புரிந்து தெரிந்த ‘இவன்’ அந்த யுவராஜின் ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி அவன் சேமித்து வைத்திருந்த 25 லட்சம் ரூபாயை போலி கையெழுத்து இட்டு சிலர் துணையோடு அப்படியே கையாடி விட்டான்.

பையன் இறந்து விட்டதால் பணம் வருவது நின்று போனது. யுவராஜின் தாயை உறவினர்களும் கைவிட்டு விட்டனர். இதனால் ஒரு வேளைச் சோற்றுக்கு கூட வழியின்றி, கண்பார்வையும் இழந்த நிலையில்., பட்டினியால் தவித்துக் கொண்டிருந்தாள் யுவராஜின் வயதான தாயார்.

அவர் வறுமையில் வாடிக் கொண்டு நாள்தோறும் உயிரோடு போராடிக் கொண்டு ஆத்தூரில் துடியாய் துடிக்க…..

இங்கு….

அந்த வங்கி ஊழியனும், அவரது நண்பர்களும் சுக போகமாக தினமும் குடியும் கூத்துமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால் வெளியில் வேஷம் போட்டான் இந்த வங்கி ஊழியன். ஒரு சமயம் இந்த வங்கி ஊழியனுக்கும் அவன் நண்பர்களுக்கும் குடிபோதையில் வாக்கு வாதம் வர, ‘எங்களுக்கும் அநத் 25 லட்சத்தில் பங்கு கொடு. இல்லையெனில் போலீசில் புகார் கொடுப்போம்’ என்று மிரட்டினார்கள்.

இது அந்த வங்கி ஊழியனுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘குடும்பத்தை விட்டு கையாடின அந்தப் பணத்தைக் கொண்டு வேறு எங்கும் சென்று விடலாமா?’ என்று கூட அவனுக்குத் தோன்றிற்று.

இதற்குள் விஷயம் வெளியே வரக்கூடாது என்பதற்காக கூடுதல் பணத்தை அந்த கெட்ட நண்பர்களுக்கு கொடுத்து சமாதானம் செய்து கொண்டிருந்தான். எத்தனை நாளைக்கு அவனால் மூடி மறைக்க முடியும்?

எப்படியோ இந்த ‘மோசடி’ வங்கி அலுவலக மேலதிகாரிகளுக்குத் தெரிந்து போயிற்று. இவனைக் கூப்பிட்டு விசாரிக்க இவனும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். வங்கித் தலைமை இவனை தற்காலிக பணி நீக்கம் செய்தது. இவன் பேரில் கோர்ட்டில் வழக்கும் போட்டது.

இவன், தான் கையாடிய பணத்தை ஒரு துணிப்பையில் சுற்றி, வீட்டிற்குப் பின்புறமுள்ள சாக்கடைத் தொட்டிக்கு அடியில் குழி தோண்டி அதில் புதைத்துவிட்டு, ஒன்றும் தெரியாத மாதிரி சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடுகிற மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறான்.

இவன் உண்மையிலே குற்றமற்றவன் என்று இவனது வீட்டாரையும் நம்ப வைத்தது தான் மிகப் பெரிய ஆச்சரியம். கையாடல் செய்த பணத்தை எல்லாம் செலவழித்து விட்டேன் என்று நாடகம் ஆடுகிறான். மேலும் வங்கி அவன்மீது போட்ட கிரிமினல் வழக்கு கடந்த மூன்று ஆண்டாய் நடந்து கொண்டிருக்கிறது இல்லையா?’ என்று அகத்தியர் ஒரு பெரிய அதிர்ச்சித் தகவலைத் தந்தார்.

இத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டானே தவிர வாய் திறந்து எதிர்த்தோ அல்லது மறுத்தோ எதுவும் பேசவில்லை அவன்.

மீண்டும் தொடர்ந்தார் அகத்தியர்.

‘இதையெல்லாம் அன்றே அகத்தயன் யாம் அறிவோம். அந்த ஆத்தூர் பெண்மணிக்கு அவள் மைந்தன் பணம் சேரட்டும் என்று தான் யாம் நினைத்து, இவனை அங்கு பணத்தை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னோம். கேட்கவில்லை.

மறுமுறை ஆத்தூருக்குப் போனதாகவும், அந்தப் பெண்மணியைக் காணவில்லை என்றும் பொய் சொன்னான். அகத்தியனும் இதைக் கேட்டு நாடகம் ஆடினேன். இவனும் நம்பிப் போனான். இப்பொழுது ஏன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தான் தெரியுமா? அதை இவன் தன் வாயால் சொல்லட்டுமே என்றார் அகத்தியர்.

அவனால் வாய் திறந்து பேசமுடியவில்லை. விசும்பி விசும்பி அழுதான்.

கடைசியில், கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்னது இதுதான்.

‘சாக்கடைக்கு பக்கத்தில் குழி தோண்டி புதைத்திருந்த அத்தனை பணமும் கரையானால் ஒரே நாளில் பெரும்பாலும் அரிக்கப்பட்டு போயிற்று. அது மட்டுமா? அவனுக்கு கல்லீரலில் புற்று நோய் ஆரம்பமாகியிருக்கிறது.
இந்த தகவலை அவனே சொன்னாலும், முதலில் யாரும் நம்பவில்லை. பின்னர் ஆதாரத்தோடு எடுத்துக் காண்பித்த பின்பு தான் எல்லோரும் நம்பினோம். எல்லோரும் அதிர்ச்சியால் உறைந்து போனோம். இருந்தாலும் அந்த ஆத்தூர் பெண்மணிக்கு என்ன வழி என்று கேட்டேன் அகத்தியரிடம்.

‘இன்னும் சிலகாலம் நீதிமன்றத்தில வழக்கு நடக்கும். செய்த தவறுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று இவனுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அப்பொழுது இந்த மூன்றரை ஆண்டுக்கான ஊதியம் கிடைக்கும். இதை ஆத்தூர் பெண்மணிக்கு அப்படியே கொடுக்கட்டும்.

பின்னர் அந்த அம்மா உயிரோடு இருக்கும் வரை இவன் தன் சம்பளத்தில் இருந்து ஒரு சிறு தொகையை மாதந்தோறும் கொடுத்து வந்தால் இவனுக்கு வந்த பொல்லாப்பிணி விலகிவிட்டும் என்று ஒரு நூதனமான வழியைக் காண்பித்தார்.

இதையெல்லாம் கேட்டபிறகு ‘வழக்கு முடிய தாலதாமதமானால் அது வரை அந்த ஆத்தூர் பெண்மணி உயிரோடு இருப்பாளா?’ என்று ஒரு சந்தேகம் வந்தது.

இதை எப்படி அவன் புரிந்து கொண்டானோ தெரியாது. சட்டென்று ஒன்றைச் சொன்னான்.

‘அகத்தியர் உத்தரவு இட்டால் இப்பொழுதே அந்த பெண்மணியை தேடிப்பிடித்து என் வீட்டில் வைத்து சோறு போடுகிறேன். அவளை என் பெற்ற தாய் போல் காப்பாற்றுகிறேன்’ என்றான் மிகுந்த துடிப்போடு.

அகத்தியரும் உத்தரவு கொடுத்தார். ஆனால் இதை அவனது மனைவி ஏற்கவில்லை. எதிர்த்துப் பேசினாள்.

‘எம் புருஷன் நல்லவன்னு நெனைச்சு பெருமை பட்டுக் கொண்டிருந்தேன். என் தாலியை அடமானம் வைச்சு இந்த மூணு வருஷம் வயிறார சோறு போட்டேன். இப்ப எனக்கே இப்போது தானே தெரிகிறது.
இனிமேல் இவன் எனக்கு புருஷனும் இல்லை. நான் இவனுக்கு பெண்டாட்டியும் இல்லை. இந்த ஆளை நான் வீட்டிற்குள்ளே சேர்க்கவே மாட்டேன்’ என்று கொடி பிடித்தாள் ஆக்ரோஷமாக.

பிறகு அகத்தியரிடம் என்ன செய்வது என்று கேட்டேன்.

‘அவன் வழக்கில் விடுபட்டு மீண்டும் பணியில் சேரும் வரை ஆத்தூரிலே இருந்து அந்த யுவராஜாவின் தாயாருக்கு பணிவிடை செய்து வரட்டும். வழக்கு சாதகமாகி மீண்டும் வேலைக்குச் சேர்ந்த பிறகு அந்தப் பெண்மணிக்கு கொடுக்க வேண்டிய பெருந்த தொகையைக் கொடுத்து விட்டு, மீண்டும் மனைவியோடு குடித்தனம் செய்யட்டும்,’ என்பதுதான் அகத்தியரின் கட்டளை.

இதை அவனும், அவன் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

வழக்கில் ஜெயித்து விட்டான். ஆனால் ‘டிபார்ட்மெண்ட் ஆக்ஷன்’ மூலம் அதே பதவியில் தொடரவிடாமல், மிகக் குறைந்த பதவியை கொடுத்து நீலகிரி பக்கம் அவனை அனுப்பி விட்டனர்.

இப்பொழுது, அவனுக்கு வந்தது புற்றுநோய் இல்லை. சாதாரண வயிற்றுப் புண் என்று மருத்துவர் சொல்லிவிட்டதால் மகிழ்ச்சியோடு உலா வருகிறான்.
ஆத்தூர் அம்மணியும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து இறந்து போனதாக தகவல்.

மற்றவர்கள் பணத்தை ஏமாற்றி தட்டிப் பிடுங்கி வாழ்வோருக்கு இந்த வங்கி ஊழியரின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும்.

இதைப் படித்த பிறகாவது மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் மனம் திருந்தி வாழ்ந்தால் சரி தான்.

1 comment:

  1. ஐயா வணக்கம்

    எனது பெயர் ரவீந்திரன். நான் தற்பொழுது வசிப்பது பிரான்சில், அகத்திய பெருமான் அருளாள் உங்களிடம், எனகாக ஐுவ நாடி படிக்க விரும்புகின்றேன் ஐயா. உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது? நீங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் உங்குடைய தொலைபேசி எண்ணை கொடுத்து உதவ முடியுமா. எப்போது உங்களுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளவது உங்களுக்கு வசதி ஜயா?
    My E*mail : arjoon@hotmail.fr
    அடியேன் தவறாக ஏதும் கேட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா

    ReplyDelete