​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 4 November 2018

சித்தன் அருள் - 777 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 3

[கிரௌஞ்சகிரி ஓதியப்பர் சன்னதி]

[கிரௌஞ்சகிரி பார்வதி சன்னதி. இந்த சன்னதியில்தான் "பால் கட்டி" வைத்திருப்பார்கள். இலவசம்! யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.]

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

அகத்தியப்பெருமானின் பெருமாளுக்கான பூசை தினத்தன்று "முருகர் பிரசாதம்" என அகத்தியர் அடியவர்களால், கோடகநல்லூருக்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட "பால் கட்டி" கிரௌஞ்சகிரி என்கிற மலையிலிருந்து, ஓதியப்பரால் ஏற்பாடு செய்யப்பட்டு, தருவிக்கப்பட்டது, என்பதே உண்மை. இந்த கிரௌஞ்சகிரி, கர்நாடகா மாநிலத்தில், ஹோஸ்பெட் என்கிற இடத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ளது. செந்தூர் என்கிற கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது.


ஒருநாள், மாலை, வீட்டில் ஓதியப்பரின் அருகில் அமர்ந்து மனதில் தோன்றிய விஷயங்களை சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, இந்த கிரௌஞ்சகிரி பால் பிரசாதம் ஞாபகம் வந்தது. உடனேயே, ஓதியப்பரிடம் கீழ்கண்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.

"ஓதியப்பா! ஐப்பசி, உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று, பெருமாளுக்கு, அகத்தியப்பெருமான் அபிஷேக ஆராதனைகளை செய்வார். அன்றைய தினம், நிறைய அகத்தியர் அடியவர்கள் அங்கு வருவார்கள். அவர்களுக்கு கொடுப்பதற்கென்று, உன் பால் பிரசாதம் வேண்டும். அடியேனால் 1500 கீ.மீ பயணம் செய்து வர முடியாது. அது உனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, ஏதாவது, ஒருவரை தூண்டிவிட்டு, வரவழைத்து, உன் பிரசாதத்தை கொடுத்தனுப்பேன். தாமிரபரணி புஷ்கரமும், அந்த நேரத்தில் நடப்பதால், நிறைய பக்தர்கள் வருவார்கள். ஆதலால், உன் பிரசாதமும் நிறைய வேண்டிவரும். உனக்கு எது சரின்னு தோன்றுகிறதோ, அதை செய்து கொடு! ஆனால் இனிமேல் இதைப்பற்றி உன்னிடம் கேட்க மாட்டேன். அடியேன் எண்ணம் சரியானது என்றால், உதவி செய். உன் ஞானமும், அம்மையின் சக்தியும், அதை அருந்துபவர்களுக்கு கிடைக்க வேண்டும்" என்று முடித்துக் கொண்டேன். பின்னர், அதைப்பற்றி யோசிக்கவே இல்லை.

12/10/2018 அன்று அடியேனின் ஒரு நண்பர், வெளி நாட்டில் இருப்பவர், பெங்களூரு வந்து சேர்ந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், அவர் குடும்பத்துடன், திருப்பதி செல்வதாகவும், ஏதேனும் ஒரு முருகர் கோவிலுக்கும் செல்லவேண்டும் என விருப்பப் படுவதாகவும் தெரிவித்தார். ஏதேனும் ஒரு முருகர் கோவிலை காட்டித்தரும்படியும், வேண்டுதல் வைத்தார்.

அதைக் கேட்ட பொழுது, "ஹ்ம்! இவரை ஓதியப்பர்தான் ஏற்பாடு செய்து தந்துள்ளார். எதற்கும், கிரௌஞ்சகிரி வரை போய் வர முடியுமா? என விசாரிக்கலாம்" என நினைத்து விஷயங்களை கூறினேன்.

உடனேயே, அடியேன் நண்பர் போய்வருவதாக ஒத்துக்கொண்டார்.

ஒரு சின்ன உறுத்தல் இருந்தது. அதையும் அவரிடம் கூறினேன்.

"அங்கே போய் ஓதியப்பரை பார்த்ததும், எனக்கு வாழ்க்கையில் எதுவுமே வேண்டாம். ஓதியப்பா நீ மட்டும் போதும். நான் இங்கேயே இருந்து விடுகிறேனே" என கேட்கத் தோன்றும். அந்த எண்ணம் எல்லாம் கூடாது. உனக்கு குடும்பம் இருக்கிறது. தரிசனம் முடிந்ததும், அடம் பிடிக்காமல் கீழே இறங்கி வந்துவிட வேண்டும். சம்மதமா!" என கூறினேன்.

"ஓ! அப்படியா! அவ்வளவு அழகாக, ரம்மியமாக இருக்குமா. சரி நான் போகும் பொழுது, என் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு போகிறேன். எல்லோரும் கண்டு உணரட்டும்" என்றார்.

அவர் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்றதால், அந்த நெருடல், என்னுள் இருந்து விலகியது.

"பால் கட்டியை" பற்றி விவரித்தேன். எங்கே கிடைக்கும், என்ன செய்ய வேண்டும்? அடியேன் எவ்வளவு எதிர் பார்க்கிறேன்! என்பதையெல்லாம் கூறி, ஓதியப்பரிடம், ஒருவரை ஏற்பாடு செய்து தந்ததற்கு நன்றி கூறி, காத்திருந்தேன்.

குடும்பத்தோடு சென்றவர், திரும்பி வந்து தொடர்பு கொண்ட பொழுது, முதலில், "எனக்கு அந்த கோவிலை விட்டு வரவே மனசில்லை. அவ்வளவு அழகு, ரம்மியம். என் மனைவிதான் என்னை இழுத்து வந்தாள். கொஞ்சம் பொறு போகலாம், என்று கூறி குறைந்தது நான்கு மணிநேரம் முருகர் சன்னதி முன்னர் அமர்ந்திருந்தேன். இதுதான் சமயம் என்று உணர்ந்து, என் வேண்டுதல்களை அவரிடம் சமர்ப்பித்து விட்டேன்" என்றார். பிரசாதத்தை பற்றி எதுவுமே சொல்லவில்லை.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான், அந்த கோவிலைப்பற்றி விவரித்தேன். அசந்து போனார். அவராகவே சொல்லட்டுமே என்று அமைதி காத்தேன்.

"நீங்கள் சொன்ன பிரசாதம் கிடைத்துவிட்டது" என்றார்.

"ஹ்ம்! அப்புறம்!"

"ஒருமுறை போய் எடுத்துக் கொண்டு வந்தவுடன், இது போதாது என மறுபடியும் சென்று எடுத்துக் கொண்டு வந்து, பின்னரும் அதே போல் நான்கைந்து முறை போய் எடுத்துக் கொண்டு வந்தேன். இது போதும் என்று தோன்றிய உடன், எல்லாவற்றையும் எடுத்து பையில் கட்டி கொண்டுவந்துவிட்டேன்" என்றார்.

"ஹ்ம்! இதை எப்படி அடியேனிடம் சேர்க்கப்போகிறீர்கள்? இன்னும் 7 நாட்கள் தானே உள்ளது. அதற்கு முன் கிடைத்தால்தான், அனைவருக்கும் கொடுப்பதற்காக ஏதுவாக இருக்கும். குறைந்தது 4 நாட்கள் முன் கிடைக்க வேண்டும்" என்றேன்.

"அதற்கும் ஒரு வழி இருக்கிறது. என் மனைவியின் தாயார், அங்கு புறப்பட்டு வருவார். தாங்கள் அவர்களை  வீட்டில் சென்று சந்தித்து, பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

"சரி அவர்கள் கிளம்பி வர ரயிலில் டிக்கட் போட்டு விட்டீர்களா?" என்றேன்.

"இல்லை! இனிமேல்தான்! ஓதியப்பரிடம் ஒரு வேண்டுதல் வைத்து, அவர் ஏற்பாட்டால் ஒரு டிக்கட்டாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என பந்தை என் பக்கம் உருட்டிவிட்டார்.

"சரிதான் போ! எதுக்கெல்லாம் ஓதியப்பரை துணைக்கு/உதவிக்கு கூப்பிடவேண்டும் என்கிற ஒரு வரை முறை கிடையாதா? ரயில் டிக்கெட் வாங்க அவரை அனுப்பச்சொல்கிறாயே" என கிண்டலாக கேட்டேன்.

"அடடா! நான் அப்படி சொல்லவில்லை. அவரை கொஞ்சம் கருணை காட்டி அருள் புரிய சொல்லுங்க" என்றார்.

"சரி! நீங்க தட்காலில் முயற்சி செய்யுங்க. அவர் ஏற்பாடு செய்வார்" என்று முடித்தேன்.

அவரும் முயற்சி செய்தார். பெங்களூரிலிருந்து, அடியேனின் ஊர் வர, தட்காலில், ரெயிலில் இடம் கிடைத்தது. திங்கட்கிழமை மதியம் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை, அடியேன் ஊர் வந்து சேர்ந்தது, ஓதியப்பர் அருளிய "பால் பிரசாதம்".

அவர் வீடு தேடி யாத்திரை தொடங்க, சரியான பலத்துடன் மழை பெய்தது. கூடவே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஊர்வலம், மொத்தம் நகரத்தையும் அடைத்துக் கொண்டது. ஒரு முனையிலிருந்து அவர்கள் வீடு இருக்கும் இடத்திற்கு எங்கெல்லாமோ சுற்றி, எத்தனையோ சிரமங்களை கடந்து, சென்று சேர்ந்தேன்.

வண்டியில் செல்லும் பொழுது, "ஓதியப்பர்! எவ்வளவு கொடுத்துவிட்டிருப்பார்!" என்ற யோசனை வந்தது. அடியேனின் இரு கைகளையும் அகற்றி வைத்துக் கொண்டு, ஒரு சிறு குழந்தையை வாங்கி மார்பில் அணைப்பது போல, பிரசாத பையை வாங்கிக் கொள்வதுபோல் ஒரு உணர்வு வந்தது.

"சரி! ஓதியப்பர் எவ்வளவு கொடுத்தாலும், நிறைவாகத்தான் இருக்கும். எவ்வளவோ! அவ்வளவுதான்! என ஏற்றுக்கொள்வோம்" என தீர்மானித்து" சமாதானப்பட்டுக்கொண்டேன்.

அந்த அம்மா, உள்ளே பூஜை அறைக்கு சென்று பெரிய பொட்டலத்தை தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தவுடன், இருக்கைகளை அகற்றி வைத்து நீட்டி, ஒரு குழந்தையை வாங்கிக்கொள்வதுபோல்தான் வாங்க முடிந்தது. அவ்வளவு இருந்தது.

அப்படியே, ஓதியப்பர் முன்னரே காட்டியது அருளியது போல், மார்போடு அணைத்துக் கொண்டேன்.

"மிக்க நன்றி ஓதியப்பா!" என்றேன் கண் மூடி நின்று!

அடியேனால் நம்ப முடியவில்லை! நான் எதிர் பார்த்தது என்னவோ ஒரு கிலோ கொடுப்பார் என்று. ஆனால் பத்து கிலோ இருக்கும், அதன் எடை!

"இதைக் கொண்டு உன் வீட்டில், என் திருப்பாதத்தில் வை!" என கண் மூடி நின்றவுடன் உத்தரவு வந்தது.

அவர் கூறியபடியே செய்தேன்.

வியாழக்கிழமை அன்று விடுமுறையானதால், அகத்தியர் அடியவர்கள் மூன்று பேர் உதவியுடன், கோடகநல்லூருக்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கான பிரசாதமாக அது மாறியது.

[சரி! கோடகநல்லூருக்கு வர முடியாத அகத்தியர் அடியவர்கள், தங்கள் பெயர், விலாசம், மொபைல் எண், agnilingamarunachalam@gmail.com  என்கிற தொடர்புக்கு அனுப்பினால், தபால் வழியாக அனுப்பித் தருகிறேன். யாரோ முன் பின் பார்த்திராத ஒருவரிடம் இத்தகவலை தருகிறோமே என்கிற எண்ணம் வேண்டாம். உங்கள் தொடர்பை பகிர்ந்து கொள்ளவும் மாட்டேன், வெளியிடவும் மாட்டேன், குறிப்பாக மொபைலிலில் தொடர்பு கொள்ளவும் மாட்டேன், என்று உறுதி அளிக்கிறேன். இந்த பிரசாதம் அனுப்ப வேண்டிய தகவல்கள், பாரத தேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டில் வசிக்கும் அகத்தியர் அடியவர்கள், பொறுத்துக்கொள்க! நடைமுறை சாத்தியமில்லை.]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்....................... தொடரும்!

9 comments:

  1. Aum Sairam, Om Agatheesaya Namah;

    ஐயா நமஸ்காரம்

    பாக்கியம் பெற்றோம் தங்களுடைய சேவையினால்

    படத்திலே மயங்கினோம் நேரில் அங்கேயே மனம் லயித்துவிடும்

    விரைவில் தரிசனம் கிடைக்க குருவிடம் விண்ணப்பிக்கிறோம்

    நன்றி

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  4. ஒம் லோபமுத்ர சமேத அகத்திசாய நமக!

    ReplyDelete
  5. Hi Ayya,
    Othiayppar temple address and map details from Google, Please confirm
    https://www.google.co.in/maps/dir/13.0232204,80.175312/Kumara+Swamy+Temple,+Sandur,+Karnataka+583119/@13.8075358,76.5968167,392673m/data=!3m1!1e3!4m17!1m6!3m5!1s0x3bb7689bf194dacd:0x430f641724f1d7da!2sKumara+Swamy+Temple!8m2!3d15.0713119!4d76.6476754!4m9!1m1!4e1!1m5!1m1!1s0x3bb7689bf194dacd:0x430f641724f1d7da!2m2!1d76.6476754!2d15.0713119!3e0

    ReplyDelete
  6. Received the Prasadam today. Thank you very much. Tomorrow we plan to go to Sevalaperi to have a dip in Tambiraparani and dharshan at Sundararaja Perumal and Seevalaperi Durga.

    Kindly let me know how to use the two packets of prasadams sent to me. Again Sorry for the disturbance caused to you in this regard.

    ReplyDelete
  7. Murugarin arulinalum , thangalin karunaiyalum prasadham kidaikka petrom, mikka nandri ayya.- M S Ravi.

    ReplyDelete