​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 2 August 2018

சித்தன் அருள் - 764 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"முதலில் கர்மா என்பது ஒருவன் செய்கிற செயலினால் விளைவது. அது நல்ல செயலினாலும் உருவாகும், கெட்ட செயலினாலும் உருவாகும். பின்னர், அந்த கர்மாவின் பலனை, எப்பொழுது, எந்த ஜென்மத்தில், எப்படி அந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிவரும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறார். ஒரு ஆத்மாவின் கர்மாவானது இரு விதங்களில் கரையும். ஒன்று கர்ம பரிபாலனம். இரண்டாவது கர்ம பரிவர்த்தனம்."

"கர்மபரிபாலனம் என்பது அந்த ஆத்மாவே கர்ம பலனை அனுபவித்து தீர்ப்பது. அனுபவித்து தீர்ப்பதால் கர்மா குறைகிறது. கர்ம பரிவர்த்தனம் என்பது ஒரு ஆத்மாவின் கர்மாவை இன்னொரு ஆத்மா ஏற்றுக்கொண்டு அனுபவிப்பது. இங்கும், ஒரு ஆத்மாவின் கர்மா கரைகிறது. தானே அனுபவிப்பதற்கு, உதாரணம் தேவை இல்லை. எல்லோருக்கும் சந்தேகம் வருவது இரண்டாவது முறையில். அதெப்படி முடியும்! என்கிற எண்ணம் வரும். உனக்குத் தெரிந்த எந்த பெரியவர்களின் வாழ்க்கையை பார்த்தாலும், அது புரியும். உதாரணமாக, ஒரு சிலரை கூறுவதென்றால், இராமலிங்க அடிகளார், ரமண மகரிஷி, ராம்  சூரத்குமார் போன்ற பெரியவர்களை கூறலாம். இவர்கள் இந்த மனித குலத்துக்கு என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியாது. இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த கர்மபூமியில். அதனால்தான் மனிதகுலம் எத்தனையோ பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது, என்பது உண்மை" என்று நிறுத்தினார்.

"சரி! விஷயத்துக்கு வருவோம். கர்மாவின் இரண்டு வகை கரைதலை பார்த்தோம்.ஒரு மனிதனின் மொத்த கர்மாவில் 95 சதவிகிதம் பிறருக்கு கொடுப்பதினால், பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதினால் வருகிறது என்று முன்னரே பார்த்தோம்.  இந்த 95இல் பாதிக்குப் பாதி உணவினால் வருகிறது. மீதி அவன் செயல்களினால். செயலும், உணவும் சிறந்தால், அவன் சிறப்படையலாம். உணவை சமைக்கிற சூழ்நிலை, உணவு பொருட்களை தருவிக்கிற சூழ்நிலை, உணவை அளிக்கும் சூழ்நிலை, உண்பவன் மனநிலை, இப்படி எத்தனையோ சூழ்நிலைகளில் உருவகப்படுகிற கர்மாவானது, உணவு வழி ஒருவனுக்கு சென்று, அவன் செயல்களை/எதிர்காலத்தை/ அவனின் புண்ணிய/பாவக் கணக்கை  தீர்மானிக்கிறது. தவறான உணவு, உதாரணமாக, அசைவ உணவு, மிருகத்தன்மையைத்தான் ஒருவனுக்கு வளர்த்தும். ஏன் எனில், எந்த உடல் சமைக்கப் பட்டதோ, அதனுள்ளும் ஒரு ஆத்மா இருந்து, தன்னால் இயன்றவரை தன்னை காத்துக்கொள்ள கடைசிவரை போராடியிருக்கும். அந்த போராட்டத்தின்/திணறலின் வீச்சத்தை அந்த உடல் பதிவு செய்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவை ஒருவன் உண்பானேனில், அவனுக்கு சாத்வீக உணர்வு எப்படி வரும். முதலில் சாத்வீகத்தை அடைந்து, அங்கேயே நின்றால்தானே, தெய்வம், தெய்வீக உணர்வை அவனுள் புகுத்தும். பிறகுதானே அவனுக்கு வாழ்வில் முன் செல்ல இயலும்? இன்னொன்றை புரிந்து கொள்! நீ  சாப்பிடுகிற உணவானது சைவமாக இருந்தாலும், அதை சமைத்தவன் அல்லது பரிமாறுகிறவர், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்கள் அசைவம் சாப்பிட்ட தோஷத்தின் பங்கு, அவர்கள் தயார் செய்து, சைவ உணவை மட்டும் சாப்பிடுகிற உனக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இங்கு நடப்பது கர்ம பரிபாலனம்" என்றார்.

இதைக் கேட்ட அடியேன் ஒரு நொடி அதிர்ந்து போனேன். எங்கெங்கோ பயணம் செய்து, சைவ உணவை தேடிப்போய் உண்டு, புண்ணிய தல யாத்திரைகளை செய்த வேளை, தெரியாமலேயே பாபங்களை சேர்த்துக் கொண்டிருக்கலாம். அதெப்படி அவ்வளவு நுணுக்கமாக பார்த்து, இந்த காலத்தில் வாழ முடியும்? எனத்தோன்றியது. அதை கேள்வியாக்கினேன்.

"மன்னிக்கவும், அடியேனின் கேள்வியில் தவறிருந்தால். இத்தனை வளர்ந்து போய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூரம் இதை பார்த்து நடப்பது. சரி! அப்படியே ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் சேர்ந்த உணவா, இல்லையா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் சொல்கிற சாத்வீக வழி, நடைமுறையில் சாத்தியமா?" என்றேன், நிதானமாக.

"நடைமுறைக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

என்னென்னவோ நல்ல வழிகளை ஆராய்ச்சி செய்து நடை முறைப்படுத்தி அனுபவம் பெற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தனை திடமாக, கேள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்தேன்.

"சரி! நம்புகிறேன்! ஆனால் அதை தெளிவு படுத்துங்களேன்!" என்றேன்.

"சித்தர்கள் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. "கருவாட்டைக்கூட, கத்திரிக்காயாக மாற்றத் தெரிந்தவன், சித்தன்" என்று. அது மாயாஜாலத்தை குறிப்பதல்ல. அதை பற்றி முடிந்தால் பிறகு பார்ப்போம். "ஆசாரம்" என்கிற ஒரு வழக்கத்தை மேன்மை பொருந்திய மனிதர்கள் தொடர்வதை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார்.

"ஆம்! இறை வழியில் செல்பவர்கள், ஒரு பொழுதும் நிலை தடுமாறாதிருப்பவர்கள் ஒரு சில முறைகளை தொடர்ந்து செல்வதை "ஆசாரமான மனிதர்கள்" என்று கூறக்கேட்டிருக்கிறேன்" என்றேன்.

"ஆ" என்றால் இறைவனை குறிக்கும். "சாரம்" என்பது "சார்ந்திருத்தலை" குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே "ஆசார முறை" ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும் செய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசார முறைதான், இல்லையா."

"ஆமாம்!"

"உண்பவன், வாங்குபவன் இருந்தால் தானே, தவறு செய்பவன்/கொடுப்பவன் வளர்ந்து கொண்டே இருப்பான். உண்பவனே, தன்னை திருத்திக் கொண்டுவிட்டால், தவறு செய்பவன், திருந்தத்தானே வேண்டும்? மனிதர்கள் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில், தீர்மானித்து, தன்னை திருத்திக் கொள்ளாதவரை, சைவம் என்று உண்பவர்கள் கூட, தவறு செய்பவரிடமிருந்து தெரிந்தோ/தெரியாமலோ பாபத்தை பங்கு போட்டுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையா?" என்று நிறுத்தினார்.

"சமூகத்தை திருத்த முடியாது! தனிப்பட்ட மனிதர் திருந்தினால் அன்றி, ஒரு சமூகம் சுத்தமடையாது. சுத்தமில்லாத சமூகம், அடுத்த நல்ல தலைமுறையை எப்படி கொடுக்கும்?" என்றேன்.

"இப்பொழுது புரிந்ததா? மனிதருடன், கை சேர்த்து வாழ்ந்த சித்தர்கள் ஏன் திடீரென அவர்களை விட்டு விலகினார்கள் என்று? மனிதருடன் சேர்ந்தாலே பாவம் என்று அவர்கள் தீர்மானித்ததினால். ஆனாலும், என்றும் நம்பிக்கையை கைவிடாமல், மனிதன் என்றேனும் ஒரு நாள் உணர்ந்து திருந்துவான் என காத்திருக்கிறார்கள்" என்றார்.

சித்தன் அருள்........................ தொடரும்!

17 comments:

  1. படித்து விட்டு பயம் வருகிறது...
    உணவு முறையில் இவ்வளவு பிரச்சினை இருந்தால் இன்னும் எண்ணம் சொல் செயல் இவற்றால் என்னென்ன பாவங்களோ..
    அகத்தியர் தான் அருள வேண்டும்..

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha._/\_.

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம! மிக அருமையான தகவல். அகத்தீசா எம்மை வழி நடத்திச் செல்லவேண்டும் தாயே!

    ReplyDelete
  5. மனிதர்கள் தனக்குள்ளே மூதாதையர்களுக்கு தர்பணம் செய்ய முடியுமா? மந்திரம் சொல்லி செய்யலாம் என்று படித்தேன் ஐயா ஆனால் நேரில் சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.... தங்களின் விளக்கம் வேண்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ​வணக்கம்!

      சற்று காத்திருங்கள். உங்கள் கேள்விக்கான பதில் இனி வரும் "எளிய அறிவுரையில்" வரும்.

      அக்னிலிங்கம்!

      Delete
    2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

      Delete
    3. மிக்க நன்றி ஐயா

      Delete
  6. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  7. நமஸ்தே,

    ஓம் அகத்தீசாய நமஹ,

    பெரியவர்கள் சாப்பிடுவதற்கு முன்னால் "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி சாப்பிடவேண்டுமென சொல்லி கொடுத்தார்கள்... அதை பின் தொடர்ந்தால் புதிதாக வருகிற பாவ கர்மாவை விலக்கி விடலாம் தானே ஐயா,

    இது சரிதானே?... தங்களது பதிலை கூறுங்கள் ஐயா,....

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றது. இனி வரும் தொடர்களில் அதை நீங்கள் படிக்கலாம்.

      Delete
  8. ஐயா! நீங்கள் சொல்வது ஓரளவுக்கு அடியேனுக்குத் தெரியும். நான் சைவ உணவை மட்டுமே உண்டு இந்த உடலை வளர்த்திருக்கிறேன். அது ஒரு பிரச்னை அல்ல.

    ஆனால், அசைவ உணவு உண்பவர்கள் வீட்டில் சைவ உணவைச் சாப்பிடாமல் இருப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி சமாளிப்பது என்று தயவு செய்து அறிவுறுத்துகிறீர்களா? இப்பொழுது பிரச்சினையைக் கூறுகிறேன்.

    எனக்கு ஜாதி, மத வேறுபாடு கிடையாது. இறைவன் அருளில் நான் இந்த அளவிற்காவது மனிதனாக இருக்கிறேன். 'சித்த வித்தியார்த்தி'-யாக இருந்துகொண்டு படு மோசமாக இருக்கக் கூடாதல்லவா!

    அசைவ உணவு உண்பவர்கள் அளிக்கும் சைவ உணவைச் சாப்பிட மாட்டேனென்று கூறினால், நான் அவர்களைத் தாழ்ந்த ஜாதியினராகக் கருதுவதாக அடியேன் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

    முன் காலத்தில் பிராமண வகுப்பில் பிறந்த பலர் (இப்பொழுதும் சிலர் அப்படி இருக்கலாம்) தீண்டாமையைக் கடைப்பிடித்ததால், என்னையும் அவர்கள் கூட்டத்தில் ஒருவனாகத் தான் பார்க்கிறார்கள்.

    நான் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேன்.

    தங்கள் அறிவுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

    நன்றி, வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      நீங்கள் செல்லும் பாதை சரியானது என்று உணர்ந்தவர் ஆனால், யாரைப்பற்றியும், எந்த விமர்சனங்களையும் பற்றி கவலைப் படாமல் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ (தர்மத்துக்கு உட்பட்டது) அதன் படி நடந்து கொள்ளுங்கள். கீழ் நிலைக்கு வழி வகுக்கும் எண்ணங்களும், செயல்களும் குறை கூறுபவர்களைத்தான் தாக்கும். உங்கள் கெட்ட கர்மாவை அவர்கள் தானே வலியவந்து சுமப்பார்கள். நேர் வழியில் நீங்கள் திடமாக செல்வதென்றால், நிச்சயம் சித்த ஒருசார், கைபிடித்து அழைத்து செல்வார்கள். ஆனால் உங்களுக்கு, எதற்கும் கலங்காத மனது வேண்டும்.

      அக்னிலிங்கம்!

      Delete
  9. தங்கள் தெளிவுபடுத்தலுக்கு நன்றி!

    ReplyDelete