​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 September 2014

சித்தன் அருள் - 194 - சாங்கதேவ சித்தர்!


அகத்தியரின் ஜீவநாடியை வாசிக்க தொடங்கியது முதல், தனிமை என்பது பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி அரிதாக கிடைக்கும் நேரங்களில், என்னுள் எழும் பல கேள்விகளுக்கும் பதில் கொடுப்பார், அகத்தியப் பெருமான். அப்படி அவர் பல கோவில்கள், சித்தர்கள், புண்ணிய ஸ்தலங்களை பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார். இந்த முறை ஒரு சித்தரை பற்றி கூறியதை தொகுத்து தருகிறேன்.

தமிழ்நாட்டில், "திருமூலர்" என்னும் சித்தரை அறியாதவர் யாருமில்லை. இதேபோல வடநாட்டில் "சாங்கதேவர்" என்னும் புகழ் பெற்ற சித்தர் ஒருவர் உண்டு.  கூடுவிட்டு கூடு பாயும்  மந்திரத்த்தை கற்று தேர்ந்தவர்.

இவரை இவரது சிஷ்யர்களே நேரிடையாக பார்த்தது கிடையாது. அசரீரி குரல் மூலம் சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த முதல் சித்தர் இவர்தான்.

தபதி ஆற்றங்கரையில் அருமையான  சூழ்நிலையில் பர்ணசாலை கட்டிக் கொண்டு ஆஸ்ரமம் நடத்தி வந்தார். நூற்றுக்கணக்கான சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்தார்.

அதே சமயம் தனது தவ வல்லமையால் யாருக்கும் தெரியாமல் வான வீதியில் பறந்து சென்று பண்டரிபுரம் வந்து, ஸ்ரீ பண்டரி நாதனை தொழுது பாடிச் செல்வார்.

எத்தனையோ பேருக்கு அசரீரி மூலம் தத்துவப் பாடல்களையும் ஆன்மீக சிந்தனைகளையும் அள்ளிக் கொடுத்த சாங்க தேவருக்கு ஒருநாள் அசரீரி மூலம் ஒரு தகவல் வந்தது.

"வெளியூரில் உன்னைவிட அதிக திறமைசாலியும், புத்தி கூர்மையும், ஆன்மீக விஷயத்தில் கரை கண்ட ஒருவர் இருக்கின்றார். அவருடைய பெயர் ஞானதேவன். மிகப்பெரிய சித்தராக விளங்கிக் கொண்டு வருகிறார். அவரை வரும் பௌர்ணமி அன்று மாலையில் தகுந்த மரியாதையோடு சென்று தரிசனம் செய்க" என்றது அந்த அசரீரி.

இதைக் கேட்டதும், சாங்கதேவருக்கு சற்று மனப்புண் ஏற்பட்டது. அவரை சந்திக்க மறுத்தார். "தான்" என்கிற திமிர் சாங்கதேவரை பிடித்துக் கொண்டது. யார் என்ன சொன்னாலும் கேட்க மறுத்தார். 

இந்த செய்தி ஞானதேவருக்கு போயிற்று. ஒருவேளை சாங்கதேவச் சித்தன் மனம் மாறி தன்னை பார்க்க வந்தாலும் வரலாம் என்ற நம்பிக்கையில் ஒரு சிறு குழந்தையோடு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார், ஞானதேவர்.

ஒரு கட்டத்தில் ஞானதேவரை சந்திப்பது என்று முடிவெடுத்தார், சாங்கதேவர். தன் தவ வலிமையினால் செயற்கை புலி ஒன்றை உருவாக்கினார், ஒரு கருநாகப் பாம்பை சாட்டையாக மாற்றினார். பின்னர் அந்த புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து கையில் (கருநாகப் பாம்பு) சாட்டையுடன் ஞானதேவரின் இருப்பிடம் நோக்கி படு வேகமாக வந்தார்.

ஞானதேவர் இந்த வேடிக்கையைக் கண்டு, தன் கையை இப்படி, அப்படியுமாக மூன்று முறை அசைத்தார்.

அவ்வளவுதான், சாங்கதேவரிடம் இருந்த சாட்டை, மாலையாக மாறியது, புலி பசுமாடாக உருமாறியது. தவசக்தி இழந்து தனிமரம் ஆனார் சாங்கதேவ சித்தர்.

தன்னை விட, ஆயிரம் மடங்கு தவவலிமை பெற்ற ஞானதேவரிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்த சாங்கதேவர், ஞானதேவரின் காலில் விழுந்தார். தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். ஞானதேவரும், சாங்கதேவரை மன்னித்தார். தனது சீடனாக சாங்கதேவரை ஏற்று பல்வேறு சித்துக்களை சொல்லித்தந்தார். ஞானப்பாடல்களை  உபதேசித்தார்.

ஞானதேவரை குருவாக ஏற்ற பின்னர், சாங்கதேவர் அடக்கமாய் தனது சித்து வேலைகளை செய்தார். தண்ணீரில் உட்கார்ந்தபடியே இக்கரைக்கும், அக்கரைக்கும் சென்று வந்தார்.

தண்ணீருக்குள் கால் வைத்தால், தண்ணீர் இரண்டு பிரிவாக பிரிந்து, சாங்கதேவ சித்தருக்கு வழிவிட்டது. இறந்தவர்கள் பலரை சிவபெருமான் துணை கொண்டு பிழைக்க வைத்துக் காட்டினார். ஏழைகளுக்கு பசியைப் போக்க அமுதசுரபியை வரவழைத்து கொடுத்தார். கூடு விட்டு கூடு பாயும் வித்தையைத் தவிர மற்ற அனைத்து வித்தைகளையும் தன் ஆச்ரமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த சாங்கதேவ சித்தர், பிற்காலத்தில் மனிதச் சித்தனாக மாறி, தனது உருவத்தை வெளிக் கொணர்ந்தார்.

இன்றைக்கும் சாங்கதேவச் சித்தர் தபதி நதிக்கரையில் இருந்து தன்னை நாடிவரும் அனைவருக்கும் அருளாசி வழங்கி, ஊழ்வினை நோய்களையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

சித்தன் அருள்....................... தொடரும்! 

2 comments:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete