​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 May 2012

சித்தன் அருள் - 74 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை!


"லக்னம்" வக்கிரமாகும்.  இது சித்தர்களுக்கு மட்டும்தான் தெரியும் - என்று அகத்தியர் சொன்னது, இதுவரையிலும் நான் கேட்டிராத செய்தி.

பொதுவாக ஜாதகம் பார்க்கிறவர்களுக்கு சனி, புதன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வக்கிரமாகும் என்பது தெரிந்த விஷயம்.  ஆனால், பிறந்த நேரமே வக்கிரமாகும் என்பதை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.  காரணம், அது அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.  அந்த அளவுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் எங்கும் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

இதுவரையிலும் பலன் சொல்லி வந்தாலும் - அந்தப் பலன் பெருமளவு பலிக்காமல் போவதர்க்குச் சோதிடர்கள் "வாக்கு" சரியில்லை என்று சொல்ல முடியாது.  ஏனெனில் அவர்களால் "லக்னம்" வக்ரமாயிருப்பதக் கண்டு கொள்ள முடியாது என்பது ஒன்று.

இன்னொன்று, பிறந்த எல்லோருக்கும் லக்னம் வக்ரமாயிருக்கும் என்பதும் இல்லை.  எனவே உண்மையான தெய்வ பக்தியோடும், ஒழுக்கத்தோடும் உள்ளவர்கள் வாக்கில்  ஜோதிட பலனை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.  இயற்கையாகவே லக்னம் வக்ரமாகியிருக்கிறதா இல்லையா என்பதைக் கூட நாசூக்காக தெய்வம் எடுத்துக் காட்டும் என்கிறார் அகஸ்தியர்.

இருப்பினும் எனக்கு உள்ளூர ஒரு ஆசை.  லக்னம் வக்ரமானத்தை எப்படியாவது அகஸ்தியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலதடவை முயன்றேன்.

"இதெல்லாம் சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் பெற்ற தெய்வபலத்தால் கிடைக்கக் கூடியது.  சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.

அப்படி தெரிந்து பலன் சொன்னால் அது தெய்வ பலத்திற்கு இணையானது.  விதியின் தன்மையை மாற்றக்கூடிய வலிமை வந்து விடும்.  இது மனிதர்களுடைய பிரார்த்தனைகளையும் தாண்டி நிற்கக்கூடியது.  அந்தப் பக்குவம் பெறப் பல நாட்களாகும்.  அதற்குரிய தகுதி உனக்கு இல்லை என்று சொன்னவர், எதற்கும் ஓரிரு தேவ ரகசியத்தை உனக்குச் சொல்லித் தருகிறேன்.  அதை எப்படிக் காப்பாற்றப் போகிறாய் என்பதைப் பொறுத்துதான் லக்ன வக்கிர விஷயம் சொல்வேன்" என்றார்.

இந்த அளவுக்ககாவது அகஸ்தியர் என்னை மதித்தாரே என்று சந்தோஷம்.  ஆனாலும் முழுமையாக என்னை நம்பவில்லை என்ற ஏமாற்றமும் இருந்தது.  அவர் சொன்ன சில தேவ ரகசியம் எனக்குப் புதுமையாக இருந்தது.  அந்த ரகசியத்தைப் பின்பற்றி நான் சொன்ன சில ஜாதகப் பலன்கள் முதலில் சரிவர பலிக்கவும் இல்லை.

அகஸ்தியருக்கு என்றைக்கு மனது வருகிறதோ அன்றைக்கு எனக்கு லக்ன வக்கிர நிலையைப் பற்றிச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்!

திடீரென்று ஒருநாள், எனக்கு ஒரு உத்திரவு வந்தது.

"சட்டென்று ஏகுக" என்று ஈரோட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு என்னைப் போகச் சொன்னார்.  யாருடைய துணையும் இல்லாமல் நானும் புறப்பட்டேன்!

மறுநாள் காலையில் ஈரோட்டை அடைந்ததும் அங்கிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தக் கிராமத்தை அடைந்த போது மதியம் மூன்று மணியாகிவிட்டது.

ஏனெனில் அந்தக் காலத்தில் இந்த சிறிய கிராமத்திற்கு செல்ல அவ்வளவு வசதியில்லை.  கட்டை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்.  ஆள் நடமாட்டம் அவ்வளவு இல்லாத கிராமம்.

அந்த கிராமத்தில் தலையாரி, கிராம அதிகாரிகள் கூட இல்லை.  வசதி காரணமாகப் பக்கத்துக் கிராமத்தில் தங்கி இருந்தனர்.  சாப்பிடுவதற்கு மட்டும் ஒரு புளிய மரத்திற்கு அடியில் பெஞ்ச் போட்டு டீக்கடை நடத்திக் கொண்டிருந்தார் ஒருவர்.  பொதுவாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை இயற்கை அற்புதமாக இருந்தது.

டீக்கடைக்காரர் முன்பு கட்டை வண்டியிலிருந்து இறங்கிய என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்.  அந்தக் கிராமத்தில் பேன்ட் ஷர்ட் சகிதம் கட்டை வண்டியிலிருந்து இறங்கிய நபர் நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் என்னை அப்படி வியப்புடன் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

வண்டிக்காரருக்குக் காசு கொடுத்தேன்.  மரியாதை நிமித்தம் வாங்கிக் கொள்ள மறுத்தார்.

டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்தேன்.  பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.  தயிர் சாதத்தை வாங்கிச் சாப்பிட்டேன்.  அதுவரை நான் யார் எதற்காக அங்கு வந்திருக்கிறேன் என்பதை அவரும் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் அந்தக் கிராமத்து மலைக் கோயிலைப் பற்றி மெதுவாக விசாரித்தேன்.

"இது பழமையான கோயிலுங்க, காலையிலே, மத்தியானம் மட்டும் நைவேத்தியம் செய்துவிட்டு அய்யரு வந்திருவாரு, ராத்திரி யாரும் அங்கே தங்கறதில்லை" என்றார்.

"ஏன் ராத்திரி தங்குவதில்லை?"

"தங்கினா யாரும் உயிரோடு வருவதில்லைங்க.  இதுவரைக்கும் ஏழெட்டு பேர் அங்கு தங்கிப் பார்த்து மறுநாள் பொணம் ஆகத்தான் வந்தாங்க" என்று ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டார்.

"ஏன்? என்ன ஆச்சு அவர்களுக்கு?"

"புலியோ, கரடியோ, காட்டு மிருகங்களோ கிடையாதுங்க.  ஆனால் அந்த தெய்வம் சக்தி படைச்சதுங்க.  யாரும் ராத்திரி அங்கு தங்கக் கூடாதுன்னு கிராமத்துப் பஞ்சாயத்து உத்தரவுங்க.  எதுக்கு அந்தக் கோயிலைப் பத்திக் கேட்கறீங்க?" என்று சந்தேகமாக இப்படியொரு வார்த்தையைக் கேட்டார்.

"இல்லை.  அந்த மலைக் கோயில்ல மூணு நாளைக்கு நான் ராத்திரி தங்கணும்.  அதுக்குத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கேன்" என்று நான் தயங்கித் தயங்கிச் சொன்னதும் தான் தாமதம், இடி விழுந்தார் போல் பதறிப் போனார் அந்த டீக்கடைக்காரர்.

"அய்யா, நீங்க ஊருக்குப் புதுசு.  வேண்டாங்க.  அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்க.  நல்லபடியா ஊர்போய்ச் சேருங்க.  பார்க்க சின்ன வயது, படிச்ச பிள்ளையாட்டம் இருக்கீங்க.  உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு.  பேசாம வந்த வழியைப் பார்த்துப் போங்க" என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.

அகஸ்தியர் எனக்கிட்ட உத்திரவே மூன்று நாளைக்கு அந்த மலைக் கோயிலில் இரவில் தங்க வேண்டும் என்பதுதான்.  இதை நேரடியாகச் சொல்லாமல் மறைத்துச் சொன்னேன்.  அதுவே அந்த டீக்கடைக்காரருக்கு தாங்கவில்லை. 

இதற்கிடையில் அங்கு வந்து சேர்ந்த அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம், டீக்கடைக்காரர் என் விருப்பத்தை சொன்னபோது, "பைத்தியக்காரப் பிள்ளையாக இருக்காரே" என்று ஒட்டு மொத்தமாக ஒன்றாகச் சேர்ந்து என்னை அங்கிருந்து விரட்டியடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

நான் தனி ஆளாக நின்று கொண்டிருந்தேன்.  எனக்கு உதவி செய்ய யாரும் அங்கு முன் வரவில்லை.

என்னடா இது தர்ம சங்கடத்தில் அகஸ்தியர் நம்மை மாட்டி வைத்துவிட்டாரே என்று வருத்தமாகவும் இருந்தது.  கடைசியாக் உள்ளூர்ப் பெரிய மனிதர் யாரிடமாவது நேரிடையாகப் பேசிப் பார்த்தால் காரியம் வெற்றியடையுமே என்று முயற்சி செய்தேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த ஊர் தலையாரி, கிராம முன்சீப் போன்ற ஒருவர் கூட அந்தக் கிராமத்தில் இல்லை.

அகஸ்தியரிடம் இது பற்றிக் கேட்க நாடியை எடுத்துப் பார்த்தேன்.

"அஞ்சற்க.  தடையின்றி மலை மீது ஏறுவாய் -  ஆங்கொரு அதிசயத்தைத் தொடர்ந்து மூன்று நாள், நள்ளிரவில் நீ காணுவாய்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.

நாடியில் உத்திரவு கிடைத்ததும் எனக்கு மனம் மிகவும் தெம்பாக மாறிவிட்டது.  நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்தேன்.  அவர்கள் சொன்னதைக் கேட்க்காமல் அந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையைக் கண்ணால் அளவெடுத்துக் கொண்டேன்.  இரவில் பசி எடுத்தால் என்ன செய்வது என்பதை யோசித்து அந்த டீக்கடையில் இருந்த காய்ந்துபோன பன், கன்னிப் போயிருந்த சில பழங்களையும் வாங்கிக் கொண்டேன்.

பொழுது சாய ஆரம்பித்தது.

சட்டென்று அவர்களிடம் சொல்லாமலேயே, அந்த கிராமத்தின் வட கோடியிலிருந்த மலைக் கோயிலை நோக்கி தைரியமாக நடக்க ஆரம்பித்தேன்.  மனதில் தைரியம் இருந்தாலும், ஊர் பெயர் தெரியாத இந்த கிராமத்து மலைக் கோயிலில் மூன்று இரவு கழிக்க வேண்டுமே என்று நினைக்கும் பொழுது - வயிற்றைக் கலக்கத்தான் செய்தது.  ஒரு வேளை அந்த கிராமத்து மக்கள் பயந்தபடி நான் உயிரோடு திரும்பாவிட்டால்? என்ற நினைப்பும் அடிக்கடி வரத்தான் செய்தது.  அவ்வளவு தூரத்திற்கு அவர்கள் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தனர்.

அந்தக் குன்றை அடைந்து அகஸ்தியரை வணங்கி நான் படி ஏற ஆரம்பித்தேன்.  பெரிய மலை ஒன்றும் இல்லை.  படிக்கற்கள் தாறுமாறாக இருந்தன.  இடையில் நிறையச் செடி, கொடிகள் வழியில் பின்னிக் கிடந்தன.

கண்ணுக்கு தெரிந்த தூரத்தில் பாம்பு சட்டை உரித்துப் போட்டிருப்பதும் தெரிந்தது.  மனிதனுக்குப் பயப்படா விட்டாலும் இந்த விஷ ஜந்துக்களுக்குப் பயந்து பாதி தூரம் ஏறி இருப்பேன்.

"யாரது அப்படியே நில்லுங்கோ, மேலே வராதீங்கோ" என்று சன்னமான குரல் திடீரென்று கேட்டது.

குனிந்து கொண்டே மலை ஏறிக் கொண்டிருந்த நான் சட்டென்று நின்று நிமிர்ந்து பார்த்தேன்.  வயதான ஒருவர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.  நெருங்கி வந்த பொழுது, அவர் அந்தக் கோயிலின் குருக்கள் என்று தெரிந்தது.

இறைக்க இறைக்க வந்தவர் என்னைப் பற்றி விசாரித்தார்.  நிதானமாக எல்லாவற்றையும் சொன்னேன்.

"அகஸ்தியர் அனுபிச்சாரோ - இல்லை அந்த சர்வேஸ்வரன் தான் அனுப்பிச்சாரோ எனக்குத் தெரியாது.  நீங்க அங்கே சாயரட்ச்சைக்கு மேல் போகக் கூடாது.  தங்கவும் கூடாது" என்றார் பதறியபடி.

நான் சொல்வதை அவர் கேட்பதாகத் தெரியவில்லை.  கொஞ்சம் அசந்தால் என்னைத் தரதரவென்று இழுத்துக் கீழே கொண்டு வந்து நான்கு சாத்துச் சாத்தியிருப்பார் போலிருந்தது.

அவரைச் சமாளிப்பது கஷ்டம் என்பதைப் புரிந்து கொண்டு, சட்டென்று அவரைத் தாண்டி மலைமீது ஏறினேன்.

அவர் என்னை நோக்கி நிறைய சாபம் இட்டது எதிரொலியாக அங்கு கேட்டது.

சில நிமிஷம் என்னையே வெறுத்துப் பார்த்துவிட்டு பின்பு மள மளவென்று கீழே இறங்கிவிட்டார்.

அடுத்த இருபத்தி ரெண்டாவது நிமிடம் நான் அந்த மலைக் கோயிலை அடைந்தேன்.  சின்னப் பிரகாரம், செங்கல், சுண்ணாம்பு, கற் தூண்கள் கொண்டு பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் இது.

உட்கார கல் திண்ணை இருந்தாலும் அவ்வளவு அழுக்கு.  தூசி.  எந்த மனித நடமாட்டமும் இல்லை.  ஒன்றிரண்டு வௌவால்கள் பறந்து பறந்து அமர்ந்தன.  சுற்றிலும் நோக்கினேன்.  இருட்டுகிற நேரம் என்பதால் அந்தக் கிராமப் புறமே அமைதியாகக் கிடந்தது.

மலைக் கோயிலில் எந்தவித வெளிச்சமும் இல்லை.  கர்ப்பக் கிரகத்திற்குள் தூங்க விளக்கு ஒன்று அரைகுறையாக எரிந்து கொண்டிருப்பதைக் கதவின் சாவித் துவாரத்தின் வழியாகப் பார்த்தேன்.

தாகம் எடுத்தால் அங்கு தண்ணீருக்குக் கூட வழியில்லை என்பது அப்புறம் தான் எனக்கே தெரிந்தது.  சரிதான் இதுவும் அடுத்த ரண மண்டல மலை கேஸ்தான் என்று புரிந்தபோது மனம் லேசாய் பதறியது.

கொஞ்ச நேரம் கழிந்தது.  இருட்டு நன்றாகக் கூடியதும் ஏராளமான மின் மினிப் பூச்சிகள் அந்தக் கோயிலின் பக்கவாட்டில் இருந்து வெளிவருவது தெரிந்தது.  அங்கு சென்றுதான் பார்ப்போமேன் என்று தட்டுத் தடுமாறிச் சென்ற பொழுது......

அந்தப் பாறையிலிருந்து மெல்லியதாகத் தண்ணீர் கசிந்து சிறு குட்டை போல் தேங்கிக் கிடந்தது.

இதைக் கண்டதும் எனக்குப் பாதி உயிர் திரும்பி வந்தது.

அப்பாடா, காய்ந்து போன அந்த பன்னை இந்த நீரில் முக்கி உண்டுவிட்டால் இன்றைய இரவு நல்லபடியாக கழியும்.  அந்த தண்ணீர் நல்ல தண்ணீரோ அல்லது கெட்ட தண்ணீரோ.  அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதை உண்டு விட்டால் இன்னும் பன்னிரண்டு மணி நேரத்தை நல்லபடியாகக் கழித்துவிடலாம்.  பொழுது விடிந்த பிறகு, பின்பு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் ஏற்ப்பட்டது.

நேரம் நள்ளிரவு ஆகிக் கொண்டிருக்க அகஸ்தியர் என்ன அதிசயத்தை எனக்கு இங்கு காட்டப் போகிறார்? என்ற ஆவலுடன் காத்திருந்தேன்.

இரவு மண் பன்னிரண்டைத் தாண்டியிருக்கும்.

சட்டென்று அந்தக் கோயிலின் கருவறையிலிருந்து வேதகோஷம் அற்புதமாகக் கேட்டது.

பதினெட்டுப் பேர்கள் ஒன்றாக அமர்ந்து முறையாக சொன்ன அந்த வேத மந்திரங்கள், மனதுக்கு உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் தந்தன.

ஆலயமணி அடிப்பதும், வாசனைத் திரவியங்களால் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடப்பதும், அபிஷேகம் நடக்கும் பொழுது நம் நோயில்களில் என்னென்ன நடக்குமோ அத்தனையும் முறையாக, அழகாக, தீப தூபத்தொடு கருவறையில் நடப்பது போல் தோன்றியது.  மேளம் முழங்கியது.  வாத்திய கோஷம் ஒலித்தது.  புஷ்பங்கள், சந்தானம், பத்தி, அகில் புகை, சாம்பிராணிப் புகை அத்தனையும் அந்தக் கருவறைக் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து என் மூக்கைத் துளைத்தன.  ஆனந்தத்தின் உச்சிக்கே நான் போனேன் என்று சொல்வதைவிட ஆண்டவனின் சந்நிதானத்தில் இருந்து இந்த அழகான அபிஷேக ஆராதனைகளை அந்த நள்ளிரவிலும் ரசித்தேன் என்பதே பொருந்தும்.

எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்.  வேதகோஷம் புஷ்பாஞ்சலியோடு ஆனந்தமாக அரை மணி நேரத்தில் முடிந்தது.  பிறகு கருவறையிலிருந்து எந்த சப்தமும் வரவே இல்லை.

இதுவரை என்காதில் விழுந்தது உண்மையான வேத கோஷமா அல்லது கற்பனையா என்று நான் நினைத்துப் பார்த்த பொழுது எனக்கே ஒன்றும் தெரியவில்லை.

மனப் பூர்வமாக அகஸ்தியருக்கு நன்றி சொல்லி - நாடியைப் பிரித்தேன்.

"இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்ச்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்ச்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு" என்றார் அகஸ்தியர்.

நான் வெலவெலத்து மெய் மறந்து போனேன்.  பகவானே! இதெல்லாம் உண்மை தானா? என்று அடிக்கடி கேட்டேன்,  ஏனெனில் அப்படிப்பட்ட பாக்கியம் அவ்வளவு எளிதாக எனக்குக் கிடைத்திருக்குமா? என்பது எனக்கே சந்தேகமாகப் பட்டது.

அதே சமயம் இதை வேறு யாரிடத்திலேயும் மனப் பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியாதே!

சித்தன் அருள் .................. தொடரும்!

23 comments:

  1. அதிசியமாகவும் அற்புதமாகவும் உள்ளது. சித்தர்கள் மேல் பயமும், பக்தியும், மரியாதையும் வருகின்றது. நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்காதா என்று ஏக்கமாகவும் உள்ளது. என்ன காரணத்திற்காக இந்த பூஜை, என அகத்திய பெருமான் விளக்குவார்கள் எனவும் நம்புகிறேன்.
    http://agatiyaradimai.blogspot.com/என்ற இந்த இணைய தளத்தில், அகத்தியரின் 108 நாமாவளி இருக்கின்றது.
    மற்றும் தங்களிடம் ஒரு கேள்வி , தமிழ்நாட்டில், அகத்தியருக்கென்று தனி கோயில்கள் உள்ளனவா? இருந்தால் தெரிய படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. அகத்தியருக்கு தமிழ் நாட்டில் நிறைய கோயில்கள் உள்ளது. கூகிளில் முயற்சி செய்யுங்களேன்!

      Delete
    2. I already did at Google. But its shows very few results. One in Maravakkadu near Mannarkudi. The another one is Vadukanpattu near kanyakumari. ( Some temples are named Agathiyartemple, But I hope those one has Agathiyaperuman Sannithanam.) I want to know is it any specific temple for Agathiyar as i mentioned before? ( If you find a time please answer this.) Thank you and also thank you for your priceless service. Thanks. Valli.

      Delete
    3. அம்பாசமுத்திரத்தில் அகஸ்தியர் கோவில் உள்ளது .

      Delete
    4. அகத்தியருக்கு நிறை கோயில்கள் உள்ளது,. சமீபத்தில் அரசாங்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட சென்னை பாண்டி பஜார் அகத்தியர் கோயில், மிக பிரபலமானது. நாகர்கோயில் அகதீஸ்வரத்தில் ஒரு கோயில் உள்ளது. அகத்தியரை முழுமையாக உணர்ந்து தரிசனம் செய்ய வேண்டுமென்றால் "பொதிகை" செல்லுங்கள். அதுவே மிக சிறந்த இடம்!

      Delete
  2. _/\_ ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    மெய் சிலிர்க்க வைத்தது. என்ன ஒரு ஆனந்தம்! படிக்கும் நமக்கே இப்படி என்றால், அதை அனுபவித்த அந்த ஆத்மா எவ்வளவு சந்தோஷ பட்டிருக்கும்.
    எல்லாம் அவன் செயல். ஈரோடு பக்கத்தில் எந்த கிராமம் என்று தெரிவிக்கலாமே!

    நன்றி!

    வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

    ReplyDelete
    Replies
    1. நேரடியாக அவரை சந்தித்தபோது பலமுறை கேட்டும், கோவிலின் இருப்பிடத்தை சொல்ல மறுத்துவிட்டார். அந்தக் கோவிலில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது தெரியாததாலும், அதே படி இருந்தால் நாம் பிரச்சினையில் மாட்டிக் கொள்ள கூடாது என்பதாலும், மறுத்திருக்கலாம். ஆனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் என்பது மிகப் பெரியது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் வரும் போது அது அனைவருக்கும் புரியும்!

      Delete
    2. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
      ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

      தங்கள் பதிலுக்கு நன்றி! அவன் அருள் இருந்தால் ஐயன் அகத்தியர் நம்மை அழைத்து செல்வார். இதேபோல் 18 சித்தர்கள் பூஜை செய்யும்போது இதற்க்கு
      முந்தைய சிருங்கேரி சுவாமிகள் "சதுரகிரி" மலையில் கலந்து கொண்டு வந்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன். தூய ஆத்மாக்களை தரிசிப்பது புண்ணியம் என்கின்றனர், அந்த வகையில் நீங்கள் ஆசீர்வாதம் பெற்றவர்தான். பார்த்தும், பேசியும் அவரது அனுபவங்களை கேட்டும் இருகிறிர்கள், உங்கள் மூலம் நாங்களும் தெரிய வேண்டியிருக்கிறது, இது ஆண்டவன் கட்டளை.
      வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

      _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
      ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

      Delete
    3. என் செயலாவது எது? எல்லாம் அவன் செயல் அன்றோ!

      Delete
    4. கூடுவாஞ்சேரி அகத்தியர் தரிசனம் இங்கே பெறலாம் -https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html
      குருவடி சரணம்
      நன்றி
      ரா.ராகேஷ்
      தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு

      Delete
  3. ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்

    மெய் சிலிர்க்க வைக்கிறது.
    அருமையான உணர்வு .

    ReplyDelete
  4. idhanudaya adutha thodarchiya padikka migaum avalaga ullom. please adutha padhive seekirama podunga - Om agatheesaya namaha - nandrigal

    ReplyDelete
  5. குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக வியாழக்கிழமை அன்று தொகுப்பை பதிவு செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  6. மிக அருமையான பாக்கியத்தை தங்களின் மூலம் உணர்ந்த ஆத்மாக்கள் பாக்கியவான்கள். தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குவதைவிட, படித்து அதை உணர வைத்ததற்கே குருமுனிக்கு நன்றி நல்கிடவேண்டும்.

    ReplyDelete
  7. படித்ததற்கே இவ்வளவு பரவசம் என்றால் அனுபவித்த அவருக்கு எப்படி இருந்திருக்கும்.அவரின் திருப்பாதங்களுக்கு அடியேனின் வணக்கங்கள்

    ReplyDelete
  8. படித்த நமக்கே இவ்வளவு பரவசம் என்றால் அனுபவித்த அவருக்கு எப்படி இருந்திருக்கும் .போற்றிஊம் நமசிவாய.

    ReplyDelete
  9. சித்தர்களை சந்திக்கும் வழிமுறைகளை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,விழுப்புரம் ரவி

    ReplyDelete
  10. சித்தர்களை சந்திக்கும் வழிமுறைகளை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,விழுப்புரம் ரவி

    ReplyDelete
  11. ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம் ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்

    ReplyDelete
  12. இது அவர்களின் சூட்சும சரிரம்

    ReplyDelete
  13. Om agathesaya namaga om namsivaya jai sri ram om sai ram

    ReplyDelete
  14. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete