​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 2 September 2014

ஒதிமலை முருகர் பிறந்தநாள் - 2014 - 2

ஓம் அகதீசாய நமஹ!

ஒதிமலை பயணம் தொடர்கிறது!

ஒருவழியாக, வெயிலின் உக்ரத்தை தாங்கியபடி, வழியில் இருந்த மண்டபங்களில் அமர்ந்து ஓய்வெடுத்து, பாதி வழியில் இருக்கும் பிள்ளையார் சன்னதியை அடைந்தோம்.

இந்த சன்னதியை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். கதவு கிடையாது. அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பூசை செய்து வழிபடலாம். ஏற்கனவே அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு நான் பூசை செய்து வழிபட்டுவிட்டதால், வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். ஒரு நண்பரை அழைத்து, பூசை செய்யச் சொன்னேன். மிக நன்றாக அமைந்தது அந்த பூசை. எனக்குள் ஒரு வேண்டுதல் தான். "ஓதியப்பரின் பிறந்த நாள் விழாவை நன்றாக நடத்திக் கொடு" என்று வேண்டிக் கொண்டேன். கண் மூடி நிற்க, விநாயகர் வலதுகை உயர்த்தி ஆசிர்வதிப்பதை உணர்ந்தேன்.

"ஆஹா! இது போதும் எங்களுக்கு" என்று நினைத்து நன்றியை உரைத்துவிட்டு அமர கௌளி ஒலித்தது. நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டேன்.

பின்னர் மலை மேல் பூசாரியுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இந்த சன்னதியில் தனக்கு ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதையும் இங்கு கூறிவிடுகிறேனே.

அது ஒரு பிரதோஷ நாள். எல்லா பிரதோஷத்துக்கும், ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்வார். அன்று அவரால் போக முடியாதபடி மாலை 7 மணிவரை எங்கோ மாட்டிக் கொண்டுவிட்டார். வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது இரவு 9 மணி ஆகிவிட்டது. அபிஷேகம் பண்ணமுடியவில்லையே என்கிற எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. இரவு 10 மணி ஆனவுடன், என்னவானாலும் சரி, எத்தனை மணி ஆனாலும் மலை ஏறி, ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்துவிடுவது என்று தீர்மானித்து, வண்டியில் அடிவாரம் வந்துவிட்டார். வரும் வழியில் கண்ட மனிதர்களில் யாரேனும் ஒருவரை, துணைக்கு அழைத்துக் கொண்டு மலை ஏறிவிடலாம் என்று கேட்டால், யாரும் வரத் தயாராக இல்லை. "போங்கடா! நீங்க வரலைனா என்ன! நான் தனியாக மலை ஏறப் போகிறேன்" என்று, வீராப்பு கொண்டு, அடிவார விநாயகரிடம் பிரார்த்தனையை கொடுத்துவிட்டு மலை ஏறத்தொடங்கினார். ஒரே இருட்டு. படி கூட சில இடங்களில் தெரியவில்லை. பாதி வழியில் இந்த பிள்ளயார் கோவிலை அடைந்ததும், நிமிர்ந்து பார்த்தால், மிகப் பெரிய உருவத்தில், கரு நிறத்தில், கோவிலை விட உயரமாக, அவர் உட்கார்ந்து கொண்டு, இவர் சென்றதும், கை அசைத்து, கை தூக்கி ஆசிர்வதித்தார். அசந்து போன பூசாரி, கொண்டு வந்த பூசை சாமான்களை, அப்படியே தரையில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, மேலும் மலை ஏறத் தொடங்கினார். அன்றைய தினம், அபிஷேகத்துக்கு, ஓதியப்பரும், பூசாரியும் மட்டும் தான். தனி ஆளாக நின்று, மடப்பள்ளியையும் கவனித்து, ஓதியப்பர் சன்னதியில் அபிஷேக பூசையை முடித்த பொழுது காலை மணி 2.30. மிக அருமையாக, என்றும் இல்லாத அளவுக்கு, நிம்மதியாக அன்று பூசையை முடிக்க முடிந்தது என்று  கூறினார்.

மேலும் தொடருவோம். எப்படிப்பட்ட வெயில் அடித்தாலும், அந்த பிள்ளையார் சன்னதி மிக குளிர்ச்சியுடன் இருக்கும். அதை அனுபவிக்க வேண்டி அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுப்போம், ஒவ்வொரு முறையும். அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், போகர் குகைக்கு செல்லும் வழி தென்பட்டது. வெளியில் சொல்லாமல் அமைதியாக போகரை மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். சொல்லப் போக, யாருக்கேனும் இப்பொழுது அங்கே செல்ல வேண்டும் என்று ஆசை தோன்றினால், இந்த வெயிலில் எப்படி மறுபடியும் ஏறுவது? என்ற எண்ணம் தான் காரணம்.

பிள்ளையார் கோவிலில் இருந்து பாதை செங்குத்தாக ஏறும். கீழிருந்து வந்த வேகத்தில் ஏறமுடியாது. என்னுடைய ஸ்ரமமான மலை ஏற்றமே அந்த பகுதியாகத்தான் இருக்கும். ஒருவழியாக அகஸ்தியர் லிங்கத்தை அடைந்தோம்.

அகத்தியர்லிங்கம் இருக்கும் இடம் ரொம்ப அமைதியாக இருக்கும். ஒவ்வொருமுறையும் அங்கு அவருக்கு பூசை செய்து, உடலில் சக்தியை ஏற்றிக் கொண்டு, ஒரேடியாக நடந்து மலை மேல் ஏறிவிடுவோம்.

இந்த முறையும் அவருக்கு பூசை ஆரம்பமானது. அபிஷேகம், வஸ்திரம், அலங்காரம், மந்திர ஜபம், நிவேதனம், கர்ப்பூர ஆரத்தி என்று எல்லாம் மிக அருமையாக அமைந்தது. மிகுந்த திருப்தியுடன் நமஸ்காரம் செய்து நிமிர்கையில், "ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. தயாராக இரு" என்று யாரோ சொல்வது போல் தோன்றியது.  யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.


இறங்கி வந்த ஒருவர், இனிமேல்தான் பூசாரி வரவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். நல்லது, கோவில் சன்னதி திறந்ததும், முதலில் இருந்தே நாம் ஓதியப்பருடன் இருந்துவிடலாம் என்று எண்ணம் ஓடியது.

திரும்பி பார்க்க, பூசாரி வந்து கொண்டிருந்தார். அருகில் வந்தவுடன், மிகுந்த மகிழ்ச்சியில் அனைவரும் வணக்கம் சொல்ல, நேராக வந்தவர், அகத்தியர் சன்னதிக்குள் சென்று, நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கிருந்த விபூதி குங்குமத்தை எடுத்து நெற்றிக்கு இட்டுக் கொண்டிருந்தார்.

"நாங்கள், பூசை செய்துவிட்டோம். உங்களுடைய ஒரு வேலை மிச்சம்" என்றேன்.

"ஹ்ம்ம். நன்றாக செய்துள்ளீர்கள்" என்று கூறிவிட்டு, பிற விஷயங்களை பேசத்தொடங்கினார்.

சற்று நேரத்துக்குப் பின், எல்லோரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். அவருடன் நடந்து செல்வது என்பது ஒரு அனுபவம். சின்ன சின்ன நிகழ்ச்சிகளை, நம்முடன் பகிர்ந்து கொண்டு நடந்து வருவார். அடிக்கடி மலை ஏறி அனுபவம் உள்ளதால், வேகமாகவும் நடப்பார். என்னால் தான் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

நான் மெதுவாக நடப்பதை கண்டு, "நான் போய் முதலில் சன்னதியை திறந்து வைத்துவிட்டு இருக்கிறேன். நீங்கள் வந்து சேருங்கள்" என்று கூறிவிட்டு நடந்து சென்றார்.

"நல்லது சுவாமி! நீங்கள் போய் வாருங்கள்" என்று கூறி நான் என் இயல்பான நடையை தொடர்ந்தேன்.  தூரத்தில் வளைந்து செல்லும் பாதையில் அவர் சென்று மறைவதை கண்டு நான் சற்று தாமதித்தேன். என்னுடன் வந்த 4 பேர்கள் அவர் வேகத்துக்கு சரிசமமாக நடந்து சென்று விட்டனர். ஒருவர் மட்டும் எனக்கு துணைக்கு கூட நடந்து வந்தார்.

"ஏன் இப்படி? முன்பு போல் ஏற முடியவில்லையே!" என்று நினைத்து முடிப்பதற்குள், என் உடலில் சக்கரையின் அளவு, கிடு கிடுவென இறங்கத் தொடங்கியது. உடல் முழுவதும் உறைந்து போக, ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நெஞ்சு கூட்டுக்குள், ஏதோ ஒன்று அழுத்துவது தெரிந்தது. தலை உச்சி முதல் பாதம் வரை வியர்வை அப்படியே ஆறாக ஓடியது. இவை நடந்தது ஒரு நொடிக்குள். கூட வந்தவர் இதை கண்டு அசந்து போனார். நான் அப்படியே படியின் ஒருபக்கத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடடா! ஓதியப்பரின் அபிஷேகத்தை பார்க்க முடியாமல் ஆகிவிடுமோ - என்று தோன்றியது.

4 comments:

  1. Sir palli entha thisaiil entha nerathil oliththal nalla sakunam?

    ReplyDelete
  2. Dear Karthikeyan Sir

    Diabetic patients like you and me must always carry a chocolates with us. In a situation like yours the chocolate is a medicine and not a chocolate.

    Om Shri Agahtheesaya Namaha

    ReplyDelete
    Replies
    1. Sir, that's not me. My friend, who is writing his experience! I am alright!

      Delete
  3. Respected Karthikeyan Sir,
    Thanks from the bottom of my heart for publishing the Othimalai details given by your friend. That 'friend' is my friend and guide too!
    Pranams Sir.
    Mukundhan

    ReplyDelete