​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 17 November 2013

சித்தன் அருள் - நம்பிமலை முதல் கோடகநல்லூர் வரை

[அகத்தியர் சொன்ன சித்தர்கள் உறையும் புற்று!] 

[சித்தன் அருளை வாசித்து வரும் ஒரு அகத்தியர் அடியவர் தனக்கு நம்பிமலையிலும், கோடகநல்லூரிலும் கிடைத்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதை அப்படியே எந்த திருத்தலும் இன்றி அவர் அனுமதியுடன், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆனந்தமடையுங்கள்!]  

ஓம் அகத்தீசாய நமஹ!

உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒன்று தான் உள்ளது. "சித்தன் அருள்" தொடர் நிறையவே நல்ல விஷயங்களை வெளிப்படுத்தி என்னுள் பல செய்திகளை பதித்தது.

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது அறிவுரை எனக்கென்று சொன்னாற்போல் இருக்கும். அதுவும் உண்மை. கேள்வி எழுந்து, விடை கிடைக்காமல் குழம்பிய மன நிலையில் இருக்கும் போது, அந்த வார சித்தன் அருளில் நேரிடையாகவோ, அல்லது மறை முகமாகவோ அதற்கான விடை இருக்கும், அல்லது வழி காட்டல் இருக்கும். இது நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த உண்மை.

சித்தன் அருளில் "கோடகநல்லூர்" பற்றிய அகத்தியரின் தகவலை கண்டவுடன், அதில் குறிப்பிட்டிருந்த இந்த வருட நாளை (14/11/2013) மனதுள் குறித்து வைத்து, சென்று வரவேண்டும் என நினைத்தேன். அந்த தினம் தான் எல்லா தெய்வங்களும் ஒன்று கூடி அளவளாவி இருந்த நாள் ஆயிற்றே. கண்டிப்பாக ஏதேனும் ஒரு நல்லது நடக்கும், அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று என்னுள் ஒரு தூண்டுதல்.

"கோடகநல்லூர்" தொகுப்பு முடித்து திரு கார்த்திகேயன் அவர்கள் "நம்பிமலை" பக்கம் சென்ற போது ஆச்சரியம் இன்னும் பல மடங்காக உயர்ந்தது. அடடா! இத்தனை மகத்துவம் பொருந்திய இடங்களை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறான், ஏன் அதை உணராமல் இருந்தோம் என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுதுதான் உணரும் காலம் போலும்.

இரு இடங்களிலும் தவழும் நதிகள், இன்றுவரை சுத்தமாக இருக்கிறது, ஒரு முறை குளித்து எழுந்தாலே போதும், அத்தனை பாபங்களும் கழுவி விடப்பட்டு ஒருவன் சுத்தமாக்கப் பட்டுவிடுவான் என்று அகத்தியர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு முதலில் நம்பிமலையில் நீராடி தரிசனம் செய்து, அருள் பெற்று பின்னர் கோடகநல்லூர் செல்வோம் என்று தீர்மானித்தேன்.

என் நண்பரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை (10/11/2013) அன்று நம்பிமலை நோக்கி பயணித்தேன். போகும் வழியில் அகத்தியர் கோயிலில் இறங்கி தரிசனம் செய்யும் போது 

"அய்யா! உங்கள் வாக்கை ஏற்று இது இன்று நம்பிமலை செல்கிறது. அங்கு உங்கள் அருளுடன், உள்ளம் பூரித்து இறையை உணர வேண்டும். அதற்கு உங்கள் அருள் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.

வேண்டி முடிக்கும் முன்னரே, காலில் புகுந்த ஏதோ ஒரு மின்சார உணர்வு உடலெங்கும் பரவி தலையில் போய் சூழ்ந்து நின்றது. ஏதோ ஒரு கவசம் போட்டது போல் உள்ளுக்குள்ளே உறைந்தது.

"மிக்க நன்றி அய்யா! நல்ல ஆசிர்வாதம் கொடுத்துவிட்டீர்! இதுவே போதும்" என்ற படி அகத்திய பெருமானிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மேலும் பயணத்தை தொடர்ந்தோம்.

நம்பி மலை அடிவாரம். காலை 10 மணி இருக்கும்.

பொதுவாக நான் மலை ஏறும் பொழுது மெதுவாக இயற்கையை ரசித்தபடி, ஏதேனும் மனதிற்குள் ஜெபித்தபடி ஏறுவேன். அன்றும் அதே போல் தான். மனமும், செவியும் முழு உணர்வில் இருந்தது. சற்று விலகி, அமைதியாக நடக்கும் போது, யார் மீதோ மோதினது போல் ஒரு உணர்வு. திரும்பி பார்த்தேன்.  யாரும் இல்லை. உடனே, மனம் ஒன்றி கண் மூடி தியானத்தில், "அறியாமல் செய்த தவறு. மன்னித்தருளவேண்டும்" என்று பொதுப்படையாக கூறிவிட்டு நடந்தேன். அகத்திய பெருமான்தான் சொல்லியிருக்கிறாரே "மலை பாங்கான இந்த மாதிரியான இடத்தில்தான் சித்தர்கள் அரூபமாகவோ/ரூபமாகவோ காலாற நடந்து செல்வார்கள் என்று". பிறகு ஒரு நிமிடம் நின்று என்னையே உற்று நோக்கிய போது தான் உணர்ந்தேன், எனக்குள் ஏதோ உடல் வலிமை தர யாரோ சக்தியை புகுத்தியதுபோல் இருந்தது. உண்மையாகவே, அதிலிருந்து மலை மேல் சென்று சேரும் வரை அசதி என்பது வரவே இல்லை, தாகம் என்பதும் தோன்றவே இல்லை. என்ன அதிசயம்! காலாற எங்கேனும் நடந்து சென்ற சித்தன் யாரேனும், உடலுக்கு சக்தியை தந்து என்னை கை தூக்கி விட்டானோ? என்று தோன்றியது. அது தான் உண்மை.

போகும் வழியில் புற்றை கண்டதும் ஒரு நிமிடம் நின்று மரியாதையுடன் சித்தனை த்யானித்து வணக்கம் சொன்னோம். அகத்தியர், நாடியில் வந்து சொன்னது போலவே எல்லா புற்றும் 3 அடி உயரம் தான் இருந்தது.

கூட வந்தவர் ஏதோ ஒரு எண்ணத்துடன் என்னை பார்க்க,

"இல்லை! போகலாம் வா. அவர்கள் தபஸை நாம் கலைத்து விடக்கூடாது" என்று கூறி விலகி நடந்தோம்.

மழை காலமானதால் எங்கு நோக்கினும் தண்ணீர் ஒரு லயத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. சிறு பட்சிகளின் சப்தம், குரங்குகளின் கூக்குரல் மிக இனிமையாக இருந்தது. திடீரென்று கரடி கத்தும் சத்தம் கேட்க, அங்கிருந்த குரங்குகள் ஒவ்வொரு பக்கமாக சிதறி, மரத்தின் மேல் நின்று கொண்டு சப்தம் வந்த திசையை நோக்கி ஒரே நேரத்தில் அலறியது. என்ன நடந்தது என்று தெரியவில்லை.  ஆனால் இருமுறை கரடி சப்தத்தின் பின் எந்த சப்தமும் கேட்கவில்லை. பொதுவாக சுட்டெரிக்கும் வெயிலின் கடுமை கூட அன்று இல்லை. நல்ல இதமாக இருந்தது.

ஒரு வழியாக காலை 11.15 மணிக்கு கோயிலை சென்றடைந்தோம்.

முதலில் ஸ்நானம். பின்னர் தரிசனம் என்று தீர்மானித்து, நம்பியாற்றை நோக்கி நடந்தோம். நிறையவே தண்ணீர் ஓடுகிறது. நல்ல சில்லென்று தெளிந்து ஓடுகிற நீர். பெருமாள் குளிக்குமிடம், இங்கு சோப்பு, எண்ணை, சீயக்காய் தேய்த்து குளிக்க கூடாது என்று எழுதியிருந்தது. நல்லது என்று நினைத்து, ஆற்றின் கரை வழி நடந்து உள் சென்று சற்று பாதுகாப்பான இடத்தில், குளிக்க தீர்மானித்தோம்.

முதலில் "அருள் நிறைந்த வாழ்க்கைக்கு" என்கிற தொகுப்பில் சொன்னபடி, நம்பியாற்று நீரை தொட்டு வணங்கிவிட்டு, தலையில் நீரை தெளித்து பின், கால் கழுவிய பின்னர் நீரில் இறங்கினோம்.

"சில்லென்று" நீர் பட்ட இடம் முழுவதும் உடனேயே மரத்துப் போயிற்று. முட்டு வரை நீரில் நின்று கொண்டு, நம்பி இருக்கும் இடம் நோக்கி பிரார்த்தனை வைத்தேன்.

"நம்பி பெருமாளே! அகத்தியர் தந்த அருள்வாக்கை நம்பி, இன்று இங்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு உங்களை தரிசிக்கிறேன். இன்றுவரை செய்த, அறிந்தோ, அறியாமல் செய்த பாபங்கள் அனைத்தையும் இந்த ஸ்நானம் என்னிலிருந்து அகற்றட்டும். இனி எந்த வித விஷமும், கெடுதலும் என்னை அண்டாமல் இருக்கட்டும். இனி இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதே செய்கிற எண்ணம் இருந்தால் போதும். எப்பொழுதும், அகத்தியர், நம்பிபெருமான் பாதத்தை, இறைவன் அடியை சார்ந்தே இது இருக்கட்டும்" என்று கூறி மூச்சை பிடித்தபடி ஒரு முங்கு முங்கினேன். உடலின் மொத்த அக்னியும் அப்படியே தலைக்கு ஏறிற்று. ஒரு நிமிடம் கண் பார்வை போய் பின் வந்தது. ஐந்தே நிமிடத்தில் சுமுக நிலைக்கு உடல் வந்தது.

மெதுவாக உடலை உற்று நோக்க, ஏதேதோ உடலை விட்டு சென்று விட்டது போலவும், அப்பொழுது பிறந்த குழந்தையாய் உடலை உணர்ந்தேன்.  ஒரு 30 நிமிடம் நதி நீரில் நீராடிவிட்டு கரை ஏறி, துவட்டி நடக்கும் போது மிக சுகமாக இருந்தது. அத்தனை மூலிகைகளுடன் ஓடும் நம்பியாற்றில் குளித்தால் சும்மாவா! சுகம் இருக்கத்தான் செய்யும்.

குளித்து நெற்றிக்கு விபூதி குங்குமம் இட்டு நம்பி கோயிலுக்குள் சென்றோம். அன்று திருவோண நட்சத்திரம். பெருமானுக்கு ரொம்ப விசேஷமான நாள் என்றார்கள்.

காலை அபிஷேகம் முடிந்து பூ மாலை அலங்காரத்தில் பெருமாள் பெயருக்கு ஏற்றார் போல் மலையாக உயரத்தில் நின்று கொண்டிருந்தார். போய் நின்று முதலில் அவர் பாதத்தை பார்த்த உடனேயே, அகத்தியர் கோயிலில் ஏற்பட்ட மின்சார தாக்குதல் போல் ஏதோ உள்ளுக்குள் ஓடியது. ஒ! இதைத்தான் உணருதல் என்பார்களோ என்று நினைத்து, அவர் முகத்தை பார்த்தேன்.

தீபாராதனையின் அக்னி அவர் முகத்தருகே வந்த போது, இரு கருவிழிகள் உற்று நோக்குவதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் மின்னல் போல் ஒரு வெளிச்சம், அவர் கண்ணிலிருந்து. உள்ளுக்குள் யோசனை அப்படியே நின்றது. அதனுடன் அர்ச்சகர், மற்ற பக்தர்கள், சப்தம் அனைத்தும் அந்த ஒரு நிமிடத்தில் எங்கோ காணாமல் போயிற்று. அவர் மட்டும் எங்கும் நிறைந்து, வெளிச்சமாய், என்னுள்ளும், எல்லாவற்றிலும் பரவி நிற்பதை உணர முடிந்தது.

இது! இது ஒன்று மட்டும் போதும்! வேறெதுவும் தேவை இல்லை என்று மனம் தீர்மானித்தது. இவரிடம் என்ன கேட்க. கேட்காமலேயே உயர்ந்த விஷயத்தை உணர வைக்கிறார். எதை வாங்கி நான் வைத்துக்கொள்ள? வேண்டாம்! எனக்கென்று எதுவும் வேண்டாம்!

"பெருமாளே! எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எங்கும் நன்மையே நடக்கட்டும். எல்லோரையும், இது போல் நல்வழியில் கொண்டு செல்லும். எல்லோரையும் கரை ஏற்றி விடும்" என்று வேண்டிக்கொண்டு, அர்ச்சகர் தந்த துளசி பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, விலகி நின்று தரிசனம் செய்யலானேன்.

அந்த ஒரு நிமிட அனுபவத்தில், ஊறிப்போன மனது அடங்கி நின்றது.      

​த்யானம் என்கிற நிலையை விட்டு மெதுவாக கீழிறங்கி, சிந்தனை அகத்தியரை நோக்கி திரும்ப, கண் மூடி, மனம் யோசித்தது.

"சித்தன் அருள்" இத்தனை தருமா? கேள்வி கேட்ட நொடியில், அஹோபிலம் கண் முன் விரிந்தது. அந்த நாடி வாசித்தவர் மலையிலிருந்து படி இறங்கி வந்து கொண்டிருக்கிறார். ஒரு அர்ச்சகர் கையில் ஒரு தாம்பாளத்தை இலை போட்டு மூடி கொண்டு வந்து அவரிடம் கொடுக்கிறார். அவரும் இலையை திறந்து பார்க்க, அதில் தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல். பசி மயக்கத்தில் இருந்த அவர் அதை உண்டு பசியாறி, திரும்பி பார்க்க அங்கே அந்த அர்ச்சகர் இல்லை.

"நீ தான் நடந்ததை தெரிந்து கொண்டாயே! ஆசை மட்டும்தான் இன்னும் உன்னில் மிச்சம்! இல்லையா?" என்று யாரோ கூறுவது போல் கேட்டது.

கண் விழித்து ​சுற்று முற்றும் பார்க்க, நண்பர் மட்டும் அருகில் அமைதியாக கண் மூடி நின்று கொண்டிருந்தார்.

சரி பிரதட்சிணம் செய்து விட்டு எங்கேனும் அமைதியாக அமர்ந்து த்யானம் செய்வோம் என்று தீர்மானித்து ஒரு சுற்று சுற்றி பெருமாள் முன் வந்து நிற்க;

அர்ச்சகருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, என்னை பார்த்து கேட்டார்.

"என்ன சுவாமி, சாப்பிட்டீர்களா?"

"இல்லை சுவாமி! ஸ்நானம் பண்ணினேன், சுவாமியை தரிசனம் செய்தேன். இனி மேல் தான் கீழே இறங்கி போய் எங்கேனும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என்றேன்.

"நில்லுங்கோ!இப்ப வரேன்" என்று கூறியவர், மடப்பள்ளி நோக்கி சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் ஓவல் வடிவத்தில் வெள்ளி நிறத்தில் ஒரு தட்டு. அது நிறைய தயிர் சாதம், புளியோதரை, நெய் வழிய, முந்திரி பருப்பு போட்டு சர்க்கரை பொங்கல்.

"அப்படியே பெருமாளுக்கு பின்னாடி பிரகாரத்தில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்" என்று கூறி என் கையில் கொடுத்தார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டேன்.

கையில் தாம்பாளத்தை வைத்துக்கொண்டு நம்பி பெருமானை பார்த்தேன்.

"அன்று ஆசைபட்டாயே! அவருக்கு மட்டும் தான் நரசிம்மனாக வந்து கொடுப்பாயா! எங்களுகெல்லாம் யார் தருவார்? என்று. அதான் இன்று உன் முறை. போய் உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடு" என்று கூறுவது போல் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார்.

"ம்ம்! இனிமேல் எதுவுமே யோசிக்கவே, யாசிக்கவே கூடாது. கேட்டால் உடனே தந்து நம்மை திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். பெருமானே! ஆளை விடு! இனிமேல் இப்படி எல்லாம் நினைக்கவே மாடேன். அது சத்தியம்" என்று கூறி நண்பரை அழைத்துக்கொண்டு போய் பிரகாரத்தில் அமர்ந்து பகிர்ந்து உண்ண தொடங்கினேன்.

"இது ஒரு தொடக்கம் தான்! இன்னும் பரீட்ச்சை உள்ளது!" என்று மனம் உணர்ந்ததை கூறியது.

"சரி எதுவாகினும் பார்த்து விடுவோம்!" என்று தீர்மானித்து உண்டு முடித்ததும் அதை என்னவென்று உணர முடிந்தது. சரியாக இருவருக்கான ஒரு வேளை உணவு. புளிப்பில்லாத தயிர் சாதம் (எனக்கு ரொம்ப பிடிக்கும்), காரம் இல்லாத புளியோதரை, சின்ன வயசில் பெருமாள் கோயிலில் வாங்கி சாப்பிட்ட அதே சுவையில் சர்க்கரை பொங்கல், (அதற்குப் பிறகு இன்றுவரை ஒரு இடத்திலும் கிடைக்காத அந்த சுவை). எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தது போல் ஒரு உணர்வு.  தேவலோகத்தில், சாப்பாடு இப்படித்தான் இருக்குமோ. ருசித்துப் பார். என்னை விட நல்ல ருசியான சமையல் செய்யத் தெரிந்தவன் இந்த உலகில் உண்டோ? என்று நம்பி பெருமானே கேள்வி கேட்பது போல் தோன்றியது.   ​

​ஆசை தீர உண்டு, தாம்பாளத்தை கொண்டுபோய் நம்பியாற்றில் கழுவி மறுபடியும் அர்ச்சகரிடம் கொடுத்து, எம்பெருமானுக்கு நன்றி சொல்லி, எல்லோரிடமும் விடை பெற்று கீழே இறங்கத் தொடங்கினோம்.

நண்பர் நடப்பவற்றை எல்லாம் கண்டு திகைப்பில் இருந்தார். எனக்கோ உண்ட மயக்கம். நல்ல காற்று. கோவில் திண்ணையில் படுத்து உறங்கிவிடலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. ஆனால், இன்னொரு 'கோவிலை" கண்டு பிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என்கிற பிளான் முதலிலேயே இருந்ததால் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்.

இறங்கும் வழியில் ஒரு இடத்தில், கால் சறுக்கிவிட இரு கைகளையும் ஊன்றி கால் முட்டை மடித்து சமாளித்தேன். சட்டென்று ஒரு வலி பரவியது. பல்லை கடித்து அந்த வலியை கொன்று காலை உதறி நடக்கத் தொடங்கினேன். வலி லேசாக இருந்தது. மறுபடியும் லேசாக ஒரு இடத்தில் வழுக்கி விட, சமாளித்து தலைக்கு ஏறிய வலியை எங்கெல்லாம் செல்கிறது என்று கவனித்துக் கொண்டு இருக்கும் போதே "இவை எல்லாம் பரீட்ச்சை! நன்றாக எழுத தயாராக இரு" என்று தலைக்குள் யாரோ சொல்வது போல்.

வலி சற்று நேரத்தில் மறைய, மெதுவாக கீழே இறங்கி வந்து, "விஜய நாராயணம்" என்கிற ஊரில் இருக்கும் சிவ பெருமானை வணங்கி ஊர் வந்து சேர்ந்தேன்.

மறுநாள் எழுந்திருக்க முடியவில்லை. அத்தனை உடல் வலி. 

அன்று விடுப்பெடுத்துக் கொண்டு, மறுநாள் அலுவலகம் செல்ல, மதியம் ஒரு மணிக்கு, வலது கால் மேல் முட்டில் மெதுவாக வலி என்கிற ஒரு புயல் உருவாகத் தொடங்கி, கால் கீழே ஊன்ற முடியாமல் போனது. வலியை பொறுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து காலுக்கு மருந்து தடவ, வலி மேலும் அதிகரித்ததே அன்றி குறையவில்லை. கால் முட்டும் அதை சேர்ந்த பாகங்களும் வீங்கி விட்டது. 

இன்னும் இரண்டு நாளில் கோடகநல்லூருக்கு போகவேண்டும். இங்கோ படுத்த படுக்கை என்கிற நிலை. என் கோபத்துக்கு அளவில்லாமல் போனது.

கோடகநல்லூர் பச்சை வண்ணனை த்யானித்து ஒரு விண்ணப்பம் தான் கொடுக்க முடிந்தது.

"வரும் வியாழக்கிழமை எவ்வளவு முக்கியமான நாள்னு உனக்கு தெரியும். அதுக்கு முன்னாடி என் கால சரி பண்ணிடு. இல்லை, நான் ஆம்புலன்ஸ் வாடகைக்கு எடுத்தாகிலும், படுத்துக்கொண்டு வந்து உன்னை பார்த்துவிடுவேன். என்ன செய்யணும்னு நீ யோசிச்சுக்கோ!" என்றுவிட்டேன்.

புதன் இரவாயிற்று. வலி குறைந்தபாடில்லை. நானும் பொறுமையை இழக்காமல், ஏதேனும் வழி பிறக்கும் என்று காத்திருந்தேன்.

​சித்தன் அருள்........ தொடரும்!

6 comments:

  1. சித்தனருள் அகத்தியர் அடியவர்கள் அனைவருமே நண்பர் கார்த்திகேயன் போல தங்கத்தமிழில் துள்ளிவிளையடுகிரார்கள்.

    ReplyDelete
  2. Jai Sarguru. OM Agathisaya Namaha.wonderful...thx for sharing to us. Agathiyar arulal nagalum entha edathirku sella vendum.

    ReplyDelete
  3. அகத்திய பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், நன்றிகள்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது அறிவுரை எனக்கென்று சொன்னாற்போல் இருக்கும். அதுவும் உண்மை. கேள்வி எழுந்து, விடை கிடைக்காமல் குழம்பிய மன நிலையில் இருக்கும் போது, அந்த வார சித்தன் அருளில் நேரிடையாகவோ, அல்லது மறை முகமாகவோ அதற்கான விடை இருக்கும், அல்லது வழி காட்டல் இருக்கும். இது நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த உண்மை.
    same experience happen for me .idu sathiyum
    sivakumar

    ReplyDelete
  5. எங்க பெருமாள் நம்பி அப்பா

    ReplyDelete