​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 11 May 2026

சித்தன் அருள் - 2210 - அகத்தியப்பெருமான் அருளிய எளிய மருந்து!

 
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சிலவேளை நடக்கிற நிகழ்ச்சிகள் ஏன் என்று புரியாது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றும். ஆயினும் அது நடக்கும் நேரத்தில் குருநாதர் ஏதேனும் ஒரு கர்மா கழிவை ஏற்படுத்துவார். அப்படி நடந்த ஒரு விஷயத்தை பற்றியும் அதன் பலனையும் இங்கு தெரிவிக்கிறேன்.

சுமார் ஒரு ஆறு மாதங்களுக்கு முன் எங்கெல்லாமோ அலைந்துவிட்டு (ஊர் ஊராக) வீடு வந்து சேர்ந்த பொழுது அங்கெல்லாம் இலவசமாக கிடைத்த கிருமிகளையும், வியாதியையும், ஜலதோஷம், இருமல், ஜுரம் என வித விதமான மெனுவுடன் வாங்கி வந்தேன். எந்த ஆங்கில மருந்தும் குணப்படுத்தவில்லை. அதுவரை படித்திருந்த மருந்துகளை எல்லாம் வாங்கி சாப்பிட்டும், ஜுரம் நின்றது, ஜலதோஷம் குறைந்தது, ஆனால் தொடர்ந்து வரட்டு இருமல் கூட வந்தது. இது மூன்று வாரத்துக்கு மேல் தொடரவே, சரி! குருநாதரிடம், இதை சரிப்படுத்த ஏதேனும் வழி உள்ளதா என்று வினவலாம் என நினைத்து ஒரு விண்ணப்பத்தை வைத்தேன்!

ஈமெயில், குறுஞ்செய்தியை விட வேகமாக பதில் வந்தது!

"போய் அனுபவியடா!" என்றார்.

சரிதான்! இத்தனை வேகமாக பதில் வந்ததால், சமீபத்தில் இதற்கு இனி பதில் கிடைக்காது என புரிந்து கொண்டு, இனிமேல் இதைப்பற்றி குருநாதரிடம் பேசுவதில்லை! நடப்பது போல் நடக்கட்டும் என்று தீர்மானித்தேன். 

நாட்கள் சென்று கொண்டு இருந்தது. இருமல் நிற்கவே இல்லை, குறையவும் இல்லை!

ஒரு மாதம் ஆயிற்று. ஒரு ஆன்மீக குழுவில் வாரத்தில் ஒருநாள் ஆன்மிகம் பற்றி பேசவேண்டும்! அதுதான் மிக சிரமமாக இருந்தது. கூடவே, குளிர்கால பனியும் தொண்டையை வரளச்செய்தது. என்னதான் நடந்தாலும் இதை பற்றி குருநாதரிடம் கேட்பதில்லை என்று வைராக்கியம் உள்ளுக்குள்.

நான்கு வாரங்கள் சென்றபின் ஒரு நிகழ்வு நடந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அது ஒரு வியாழக்கிழமை! தினமும் காலையில் கண்விழித்ததும் முதலில் லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானின் திரு உருவத்தை தியானித்து, "குருநாதா! இன்றைய தினம் நல்லபடியாக இருக்கட்டும்! உங்கள் அருள் கூட நிற்கட்டும்!" என எப்பொழுதும் போல் வேண்டிக்கொண்டேன்! அதனுடன், நாம் செய்கிற செயல்களால் கர்மா சேராமல் இருக்க அம்மாவை (அம்பாள்) நினைத்து சொல்லவேண்டிய மந்திரத்தை கூறிவிட்டு, படுக்கையை விட்டு எழப்போனேன்!

"இன்று செய்தி வரும்!" என்று குருநாதர் கூறினார்.

ஒரு நிமிடம் அவர் முகத்தை பார்த்து நின்றுவிட்டு, சென்றேன்!

இரவில் மாஸ்க் போட்டு வெளியில் நடக்க சென்று வருவேன். யாரையும் முகம் பார்க்காமல், பேசுவதை கவனிக்காமல், அமைதியை கடைபிடித்து என் நண்பர் நடத்துகிற இனிப்பு பலகாரக் கடையில அரை மணி நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பேன். அங்கு செல்வதே ஒருவித பயிற்சிக்காகத்தான்.

ஆம்! அவர் கடையில் குறைந்தது ஐம்பது விதமான இனிப்பு, கார வகை பொருட்கள் இருக்கும். நான் சும்மா சென்று நின்றாலே, சாப்பிடுங்கள் என்று ஏதேனும் ஒரு பொருளை தருவார். என்னிடமும் நிறைய பணமிருக்கும். எனக்கு பிடித்த இனிப்புகளும் நிறைய இருக்கும். ஆனால், எதையும் சாப்பிடக் கூடாது. மருத்துவர் விதித்த கட்டுப்பாடு. என்னால் என்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியுமா என்பதை அவர் கடைக்கு தினமும் சென்று சோதனை செய்து கொள்வேன். அதில் தினமும் வெற்றி பெற்று விடுவேன். இல்லாத சூழ்நிலையில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில் அர்த்தம் இல்லை. உண்மையாகவே, அனைத்தும் இருந்தும், கட்டுப்பாட்டை உடையவன் தன் முயற்சியில் நேர்மையாக இருப்பதினால் வெற்றி பெறுவான், என்பது என் எண்ணம்.

அன்றைய தினம் முழுவதும் கவனத்துடன் இருந்தேன். வெளியே அலைச்சலில் குறைவில்லை. வியாழன் ஆனதால் இருவர் சமாதிக்கு சென்று வந்தேன். அது ஒரு நீண்ட யாத்திரை. வீட்டிற்கு வந்து இரவு உணவருந்திவிட்டு, நடந்துவிட்டு வரலாம் என்று பத்மநாபா சுவாமி கோவில் வாசல் வரை சென்றேன். திரும்பி வரும் வழியில் நண்பரின் கடைக்கு சென்று பேசலாம் என்று நடந்த பொழுது, இருட்டிலிருந்து ஒருவர் வெளிப்பட்டு, நேரடியாக விஷயத்துக்கு வந்தார். என் மனம் திறந்து அவர் கூறியதை உள்வாங்கிற்று.

"நான் சொல்வதை குறித்துக்கொள். வீட்டில் தயாரித்து ஒரு டம்பளர் குடித்தால் போதும்! இருமல் நின்றுவிடும்!" என்றார்.

1. புதினா இலை - ஒரு பிடி அளவு.
2. கொத்தமல்லி இலை  - ஒரு பிடி அளவு.
3. தோல் சீவிய இஞ்சி - ஒன்று.
4. மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்.
5. மிளகு பொடி - அரை ஸ்பூன்.
6. உப்பு - அரை ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப.
7. அரை மூடி எலுமிச்சை சாறு.

1 லிருந்து 6 வரை உள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு டம்பளர் நீர்விட்டு நன்றாக அரைத்து, எடுத்து, பின் அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து, குடித்தால் எப்படிப்பட்ட ஜலதோஷம், இருமல், தொடர் வறட்டு இருமல் காணாமல் போய்விடும்! ஒருமுறை குடித்தவுடனேயே பலன் தெரிந்துவிடும். 21 நாட்கள் தொடர்ந்து தினம் ஒருமுறை குடித்து வந்தால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இருமல் வராது!" என்றார்.

எதுவும் பதில் சொல்லவில்லை. கைகூப்பி, மார்பு தொட்டு வணங்கினேன், அவர் எதிர் திசையில் நடந்து சென்றார். நான் திரும்பி பார்க்காமல் நண்பரின் கடையை நோக்கி நடந்தேன்.

மறுநாள், அவர் கூறியபடி, அந்த ரசத்தை வீட்டில் உருவாக்கி பருகிட, இரண்டே நிமிடத்தில் வறட்டு இருமல் நின்றது. ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ந்து வாட்டிய இருமல், ஒரு கப் ரசத்தில் நின்றது.

எல்லாம் அவர் செயல்! நீங்களும் தேவை வரும் பொழுது, முயற்சி செய்து பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

12 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    நன்றி அக்னிலிங்கம் ஐயா 🙏

    ReplyDelete
  2. தாங்கள் சொல்லும் மல்லி என்பது கொத்தமல்லி தானே

    ReplyDelete
  3. நன்றி குருதேவா நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  5. சுட வைக்க வேண்டுமா ஐயா?

    ReplyDelete
  6. நன்றிகள் ஐயா

    ReplyDelete
  7. Naan payan paduthinen udanadi palan iruku. Agathiyar appaku nanri

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  9. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete